கடிதங்கள்
கடிதங்கள்
நவீன தமிழ் கவிதை உலகில் எனக்கான பங்களிப்பை இனி மெய்யாகவே என்னால் செய்துவிட இயலும் என உள்ளம் உறுதிகொள்ளும் தருணம் இது.
காலச்சுவடு நவீன தமிழிலக்கியத்தின் தோரண வாயில். இதில் முதலடி வைத்ததன் மூலம் முழுமையான நம்பிக்கை அடையப் பெற்றவனாகிறேன்.
வ. அதியமான்
‘எதிரிலா வலத்தினாய்’ தலையங்கம் ஆழம். கேரளத்தில் 2020 டிசம்பரில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் பெருமளவில் இளைய தலைமுறையினரின் பங்கு அபரிமிதமாக இருந்தது. அரசியல் நோக்கர்களாலும் ஊடகங்களாலும் பொதுமக்களாலும் உற்றுக் கவனிக்கப்பட்டதையும் இளைஞர்களின் ஈடுபாடு, வேகம் வாக்காளர்களுக்குப் புத்துணர்வையும் புது நம்பிக்கையையும் தந்ததையும் சிறப்பித்து எழுதியிருப்பது பாராட்டுக்குரியது. தமிழக இளைஞர்கள் இன்னும் சினிமா மயக்கத்தில் திளைத்துவருவதை மடைமாற்றத் தெரியாமல் பெரும்பாலான சமூகச் செயற்பாட்டாளர்கள் சிந்தித்து வருகின்றனர்.
மக்கள் மேம்பாட்டைவிட, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிடத் துடிக்கும் அரசியல் தலைவர்களே அதிகம். அதற்காக மக்கள் மத்தியில் அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நடக்குமா எனும் சந்தேகத்தை மக்களிடையே உருவாக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. இளந்தலைமுறையினர் பலருக்கு, அரசியல் தலைவர்களைப் பகுத்தறியும் சிந்தனை முழுகிப் போய்விட்டதோ என்ற சந்தேகமும் கூடவே எழுகிறது.
வேலையின்மையால் விரக்தியில் இருக்கும் இளைஞர்களை எளிதாகத் தங்கள் பக்கம் ஈர்த்துவிடவும், அவர்களுக்குத் தேவையானவற்றை ஏதோ ஒரு வடிவில் அளிக்கவும் சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளன. அகவுரையில் ஆசிரியர் குறிப்பிடுவதைப் போன்று கடற்கிழவர்களைப் போல கட்சிப் பதவிகளிலும் அதிகார நாற்காலிகளிலும் அமர்ந்திருக்கும் புராதன மனிதர்களின் பழைய சிந்தனைகளை இளைய தலைமுறை முறியடிக்க வேண்டும் என்ற கருத்து கவனிக்கத்தக்கது. அந்தக் காலம் விரைவில் வர இயற்கையை இறைஞ்சுவோமாக...
நவீன்குமார்
நடுவிக்கோட்டை
மார்ச் இதழில் வெளியான கோ. ரகுபதியின் ‘கமுக்கக் காதல், கொலைகள் 1863-1950’ கட்டுரை சற்று வித்தியாசமானது. பிரித்தானிய ஆட்சிக் காலத்து இந்தியச் சமூகச்சூழல் தொடர்புடையது என்றாலும், மனிதச் சமூகத்தில் தொன்றுதொட்டு அங்கிங்கெனாதபடி அவ்வப்போது அந்தரங்கமாக நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வாழ்வியல் தொடர்புடையதே அது. இவ்வாறான ‘கமுக்கங்கள்’ பல்வேறு இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளன, “ஒட்டுமொத்த மனித வாழ்வும் நூறு சதவீதம் பரிசுத்தமானதே” என்ற முடிவிற்கு எளிதாக வரஇயலாத இயல்புடைய ஷேக்ஸ்பியரது ‘ஹாம்லெட்’, ‘ஒத்தல்லோ’ காவியங்களின் கருப்பொருளே இதுதான். இதுபோன்ற இருபாலரின் அத்துமீறல் உறவுமுறையை மனித சமூகம் எப்பொழுதும் தன்னகத்தே கொண்டுள்ளதுதான் என்றாலும், இந்த முறைப்பிறழ்வுக் குரூரங்கள் பல குடும்பக் கட்டமைப்புகளைச் சிதைத்து, பதம்பார்த்து மானுட வர்க்கத்தை மிகவும் கொச்சைப்படுத்தி விடுவதும் உண்மைதான்.
ஆனால் கட்டுரை ஆசிரியர், விளக்கும் இவ்விதக் கமுக்கக் கொலைகளுக்குச் சூழ்நிலை, உளவியல் சார்ந்த விபரீத உணர்வு வெளிப்பாடுகள், குடும்பங்கள் சார்ந்த ஒடுக்குமுறைகள் ஆகியவை காரணங்களாக உணரப்பட்டாலும், தற்காலச் சூழலில் இந்நிகழ்வுகள் வெவ்வேறு பரிமாணங்களில் நிகழ்ந்துவருகின்றன. எதிர்கால மனித சமுதாயம் எத்தன்மை பூணுமோ பராபரமே!
சி. பாலையா
புதுக்கோட்டை
அருமையான ஒரு சிறுகதையைப் பத்திரப்படுத்தி வைத்து எழுத்தாளரின் மறைவுக்குப் பிறகும் அவரைக் கொண்டாட வாய்ப்பளித்த எழுத்தாளர் நஞ்சுண்டனின் துணைவியாருக்கு நன்றி.
மூன்று அல்லது நான்கு தலைப்புகளில் தனித்தனியான கட்டுரைகளாக வர வேண்டியவற்றைச் சுவைமிகு சிறுகதையாக மாற்றும் அற்புதத்தை ‘நேரெதிர்’ கதையில் நிகழ்த்தியுள்ளார் நஞ்சுண்டன்.
பலகாரங்கள் வைத்துத் தரப்படும் காகிதங்களில் உள்ளவற்றையும் படிக்க வேண்டும் என்ற ஆசிரியரின் கருத்து ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அப்பழக்கத்தை மேற்கொண்டு வருபவன் என்ற நிலையில் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.
“சுவரை வைத்தே சித்திரம் எழுத வேண்டும் என்பது போன்ற தேய்வழக்குகள்...” என ஆசிரியர் குறிப்பிடுவது இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகும். கதையின் நடை பிசிறில்லாமல் ஆற்றொழுங்குடன் சீராகச் செல்கிறது. முடிவு எதிர்பாராததே.
தெ. சுந்தரமகாலிங்கம்
வத்திராயிருப்பு -626132