‘மனசுக்குப் பிடித்ததை எழுதுங்கள்’
நேர்காணல்: ஆர். ஷண்முகசுந்தரம் / க. நாராயணன்
‘மனசுக்குப் பிடித்ததை எழுதுங்கள்’
க. நாராயணன்
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாவல் மறுமலர்ச்சிப் பணியில் பெரும்பங்காற்றியவர்களில் பிரபல எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம் அவர்களும் ஒருவர். பிரபல வங்க நாவலாசிரியர் சரத் சந்திரரின் அருமையான பல நாவல்களை தமிழில் பெயர்த்து, தமிழ் மக்களுக்கு அளித்ததன் மூலம், தமிழிலக்கிய ரசிகர்களின் இதயத்தில் சண்முகசுந்தரமும் இடம்பெற்றார். அவர் மொழிபெயர்த்து, சக்தி வை. கோவிந்தன் அவர்களால் வெளியிடப்பட்ட ‘அசலா’ என்னும் நாவல் அந்தக் காலத்தில் தமிழ் நாவல் உலகில் பெரும் பரபரப்பையும், ரசிகர்களிடையே விவாதத்தையும் ஏற்படுத்தி, ஒரு சில மாதங்களில் அந்தப் புத்தகம் விற்றுத் தீர்ந்ததை பலர் அறிவர். விளம்பரமில்லாமல் அடக்கத்துடன் இலக்கியப் பணியாற்றும் அவரை நூலகம் வாசகர்களக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் சென்று சந்தித்தேன். இதோ எனது கேள்விகளும், அவர் அளித்த பதில்களும்:
கேள்வி: எழுத்துத் துறையை நீங்கள் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமென்ன?
பதில்: நானா தேர்ந்தெடுத்தேன்? எழுத்தே இழுத்து வந்துவிட்டது எழுத்துத் துறைக்கு.
கே: நீங்கள் எழுதிய முதல் சிறுகதை எது? எப்போது, எந்தப் பத்திரிகையில் வெளிவந்தது?
ப: நான் எழுதிய முதல் சிறுகதை “பாறையருகே” என்பதாகும். அது 1937இல் ‘மணிக்கொடி’யில் பி.எஸ். ராமையா போன்றவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது வெளிவந்தது.
கே: நீங்கள் எழுதிய முதல் நாவல் எது? எப்போது வெளியாயிற்று?
ப: என்னுடைய முதல் நாவல் “நாகம்மாள்”. கொங்கு நாட்டு கிராமியக் கதை அது. 1939ல் அதை எழுதினேன். அப்போது ‘பாரத ஜோதி’ என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய கு.ப. ராஜகோபாலன் தான் என்னை உற்சாக மூட்டி எழுதத் தூண்டினார். ஆனால் அந்த நாவல் 1942ல்தான் வெளிவந்தது.
கே: நீங்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியான முதலாவது வங்காளி நாவல் எது?
ப: சரத்சந்திரர் எழுதிய ‘அசலா’ என்ற நாவலைத்தான் நான் முதன்முதலாக மொழிபெயர்த்தேன். ஆனால் அது நூல் வடிவில் வெளிவருவதற்கு முன்பே, நான் அடுத்து மொழிபெயர்த்த “சந்திரநாத்” என்ற நாவலை ‘கல்கி’ அவர்கள் விரும்பிப் பெற்று ஆனந்த விகடனில் வெளியிட்டார்.
கே: உங்களுடை நூல்கள் ஏதாவது பரிசு பெற்றிருக்கிறதா?
ப: என்னுடைய நூல்களை எந்தப் பரிசுக்கும் நான் இதுவரை அனுப்பியதே இல்லை.
கே: நீங்கள் எந்தெந்ந மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள்? அந்த நூல்களின் ஆசிரியர்கள் யார்?
ப: இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து சரத்சந்திரர், பங்கிம் சந்திரர், ரமேஷ் சந்திரதத், தாராசங்கர் பானர்ஜி, தாகூரின் சிறுகதைகள் ஆகியவற்றை மொழிபெயர்த்திருக்கிறேன்.
கே: சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலைக்கும், இன்றுள்ள நிலைக்கும் ஒப்பிடும்போது எழுத்தாளரின் படைப்புத்திறன் உயர்ந்திருப்பதாக கருதுகிறீர்களா?
ப: அன்று படித்தவர்களின் தொகை இவ்வளவு அதிகம் இல்லை. இத்தனை எழுத்தாளர்களும் அன்று கிடையாது. அன்று வாசகர்கள் குறைவாக இருந்தாலும் அன்றைய எழுத்தாளனின் மனத்திருப்தி இன்று இல்லை. அதற்குக் காரணம் அன்றைய எழுத்தாளர்கள் சிறந்த படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற உன்னத சிந்தனையை தவிர, வருவாயை அதிகமாக எதிர்பார்க்கவில்லை. ஆனால் இன்று வருவாயை எதிர்பார்த்தே எழுத வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் எழுத்தாளர்கள். இதனால் தரத்திலும் மாறுபாடு காணப்படுகிறது.
கே: வாசகர்களிடையில் இலக்கிய ரசனை இன்று வளர்ந்திருப்பதாகக் கருதுகிறீர்களா?
ப: ரசனை வளர்ந்திருக்கிறது என்ற நிச்சயம் கூறுவேன்!
கே: பொது நூலகங்கள் இல்லாத அந்தக் காலத்தில் வாசகர்களின் தொகை குறைவாக இருந்தும் பதிப்பாளர்கள் வெளியிட்ட நூல்கள் உடனுக்குடன் விற்பனை ஆயிற்று. ஆனால் வாசகர்களின் தொகை பெருகியிருக்கும் இன்று, அந்த விகிதத்தில் நூல்கள் விற்பனையாவதில்லை என்ற பதிப்பாளர்கள் குறைபட்டுக் கொள்ளுகிறார்கள். இதற்குக் காரணம் கூறமுடியுமா?
ப: பதிப்பாளர்கள் விலையை அதிகமாக வைத்து விற்க முயலுகிறார்கள். அதனால் ஒரு நூல் ஆயிரம் பிரதிகள்கூட சரியாக விற்பனையாவதில்லை. அதற்காக ரசிகர்கள் இல்லை என்று கூறிவிட முடியுமா? உதாரணமாக “ராணிமுத்து” போன்ற பத்திரிகைகள் குறைந்த விலையில் பல்லாயிரக்கணக்கான பிரதிகளை வெளியிட்டு விற்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோமே. பொதுமக்களின் புத்தகங்கள் வாங்கும் சக்தியையும் பதிப்பாளர்கள் உணர வேண்டும். இல்லந்தோறும் சென்று தங்கள் வெளியீடகளை விற்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
கே: 1944ல் முதுன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் பெருமபங்கு ஏற்று, கோவையில் முதலாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டையும் நடத்தி வைத்த நீங்கள், இப்போதெல்லாம் சங்கத்தில் பங்கு பெறாததற்குக் காரணமென்ன?
ப: தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. காரணம் எழுத்தாளர்களுக்குள் ஒற்றுமையில்லை. ஒத்துப்போகும் குணமும் கிடையாது.
கே: இன்று புதிதாக எழுத ஆரம்பித்திருக்கும் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி தங்கள் கருத்து என்ன?
ப: இன்றைய எழுத்தாளர்களின் நடையும், தரமும் உயர்ந்திருக்கிறது. அன்று ஒரு ‘புதுமைப் பித்தனை’ப்பற்றித்தான் சொல்லிக் கொண்டிருந்தோம். இன்று இலக்கிய உலகில் எத்தனையோ புதுமைப் பித்தன்களைப் பார்க்கிறோம்.
கே: நாடகங்கள் ஏதாவது எழுதியிருக்கிறீர்களா?
ப: ரேடியோ நாடகங்கள் எழுதியிருக்கிறேன். ‘பூவும் பிஞ்சும்’ என்ற என் நாவலை ‘புதுப்புனல்’ என்ற தலைப்பில் நாடகமாக்கியுள்ளேன். அந்நூலை இன்பநிலையத்தார் வெளியிட்டிருக்கிறார்கள்.
கே: கட்டுரைகள் ஏதாவது...?
ப: “ஆலோலம்“ என்ற புனைபெயரில் அரசியல் கட்டுரைகள் ‘சுதேசமித்திர’னிலும், ‘நவசக்தி’யிலும் நிறைய வெளிவந்திருக்கிறது.
கே: அன்றைய பதிப்பாளர்களுக்கும், இன்றைய பதிப்பாளர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் காண்கிறீர்களா?
ப: சில பதிப்பாளர்கள் அன்றும் இன்றும் ஒரே மாதிரிதான். சிலர் மாறியிருக்கிறார்கள்.
கே: இன்றையப் பொது நூலகங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?
ப: நூல் நிலையங்கள் சீராகச் செயல்படவில்லை. காரணம் தேவையான புத்தகங்கள் ஒழுங்காகக் கிடைப்பதில்லை. நூல் தேர்வு செய்யத் தெரியாதவர்கள் ஆணைக்குழுக்களில் அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் தேர்ந்தெடுக்கும் நூல்கள் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.
கே: பத்திரிகைகளில் யார் யாரோ எழுதுகிறார்கள்; எழுத்தையே தொழிலாகக் கொண்டவர்களுககு அதில் இடம் கிடைப்பதில்லை என்று பல எழுத்தாளர்கள் குறை கூறுகிறார்களே? அது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
ப: பத்திரிகைகளில் யார் வேண்டுமானலும் எழுதலாம். எழுத்தாளன்தான் எழுத வேண்டும் என்பது கிடையாது. எழுத்தாளர்களை பத்திரிகைகாரர்கள் எப்போதுமே மதிப்பதில்லை. பத்திரிகை அதிகம் விற்பதற்கு எப்படி எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படித்தான் அவர்கள் செய்து வருகிறார்கள். அதற்காக சில நிபந்தனைகளுககு இணங்கி யார் எழுதினாலும் வெளியிடுவார்கள். அவர்களுக்குப் பிடித்தமிருந்தால் எழுத்தாளர்களின் படைப்புக்களையும் வெளியிடுவார்கள்.
கே: அன்று இருந்ததைவிட இலக்கியத் தரம் இன்று உயர்ந்திருக்கிறதா?
ப: நிச்சயமாக உயர்ந்திருக்கிறது. அன்றைய ‘மணிக்கொடி’யின் தரத்தைவிட உயர்ந்திருக்கிறது.
கே: நீங்கள் சொந்தமாக நடத்திய பத்திரிகை எது? அது ஏன் நிறுத்தப்பட்டது?
ப: காலஞ் சென்ற எனது சகோதரனும் சிறந்த எழுத்தாளனுமான ஆர். திருஞானசம்பந்தமும், நானும் “வசந்தம்” என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தி வந்தோம். புதுமலர் நிலையம் என்ற பெயரில் புத்தகங்களும் வெளியிட்டோம். நிறைய சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசையால் எங்களுககு அனுபவமில்லாத வேறு ஒரு தொழிலில் ஈடுபட்டு, நஷ்ட மேற்பட்டதால், பத்திரிகையும், பதிப்பகமும் பாதிக்கப்பட்டு விட்டது. ஜெயகாந்தன் எழுதிய முதல் சிறுகதை ‘வசந்த’த்தில் தான் வெளிவந்தது. பல எழுத்தாளர்களை உருவாக்கிய வசந்தத்திற்கு எனது சகோதரர் திருஞானசம்பந்தம்தான் ஆசிரியர். ரசிகமணி டி.கே.சி. ஆர்.கே. சண்முகம் செட்டியார் ஆகியோர் வசந்தத்தில் தொடர்ந்து எழுதி வ்நதார்கள்.
கே: இடையில் சில ஆண்டுகள் நீங்கள் ஏன் எழுதாமலிருந்தீர்கள்?
ப: மேலே கூறியபடி வேறு தொழிலில் ஈடுபட்டதுதான் காரணம். ஆனால் திரு. க.நா. சுப்பிரமணியம் அவர்கள் என்னை எழுதும்படி அடிக்கடி தூண்டிக் கொண்டேயிருந்தார். 1949க்குப் பிறகு ‘அறுவடை’ என்ற நாவல் எழுதினேன். அதற்குப் பிறகு 25 நாவல்கள் கொங்கு நாட்டு இலக்கியமாகவே எழுதி விட்டேன்.
கே: இளம் எழுத்தாளர்கட்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?
ப: இளம் எழுத்தாளர்களே! எழுதுங்கள்! நன்றாக எழுதுங்கள்! ஆர்வத்துடன் எழுதுங்கள்! எதை எழுதினாலும் மனப்பூர்வமாக எழுதுங்கள்! மனசுக்குப் பிடித்ததை எழுதுங்கள்!
நூலகம், மார்ச் 1971