எதிர்பார்ப்பைக் கடந்து...
அனுஷ், பதிப்பாளர், எதிர் வெளியீடு
எதிர்பார்ப்பைக் கடந்து...
உலககெங்கிலும் உள்ள ‘பதிப்பாளர்களின் மெக்கா’ என்று பிராங்க்பர்ட் புத்தகச் சந்தையைக் கூறுவதுண்டு. தமிழகப் பதிப்பாளர்களின் மெக்கா என்றால் அது சென்னை புத்தகக் கண்காட்சிதான்.
கொரோனா பெருந்தொற்று முடக்கத்தால் 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சென்னை புத்தகக் காட்சிக்குப் பிறகு அந்த ஆண்டு முழுவதும் எந்தவொரு பெரிய புத்தகக் காட்சியும் தமிழகத்தில் நடைபெறவில்லை. தமிழகப் பதிப்புத்துறையைப் பொறுத்தமட்டில் பதிப்பகங்களின் மொத்த வருமானத்தில் ஆண்டு முழுவதும் நடைபெறும் புத்தகக் காட்சிகள் கணிசமான பங்கு வகிக்கின்றன. நாற்பது முதல் ஐம்பது சதவிகித விற்பனை இந்தப் புத்தகக் கண்காட்சிகளை ஒட்டியே நடைபெறுகிறது. அதுவும் இத்தகைய நிகழ்வுகளில் மிகப்பெரியதும் உலகம் முழுமையும் உள்ள தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒன்றாகவும் மாறியுள்ளது சென்னை புத்தகக் கண்காட்சி.
ஓராண்டாகத் தொடர்ந்த தேக்கத்துடன் புதிய புத்தகங்கள் பதிப்பிக்காமலும் கடந்த நிலையில், 2021 பிப்ரவரி மாதம் இறுதியில் சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்ற அறிவிப்பு பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தினை ஏற்படுத்தியது. சோம்பலை முறித்துப் புதிய வெளியீடுகளைப் பதிப்பிக்கத் திட்டமிடத் தொடங்கினர். மிகக்குறுகிய காலமே எஞ்சியிருந்ததால் தாங்கள் கொண்டுவர நினைத்த புத்தகப் பணியினை முடுக்கிவிட்டனர்.
பெருந்தொற்றுக் கால அரசின் பொதுமுடக்க விதிமுறைகளுக்கு உட்பட்டுப் புத்தகக் காட்சி நடைபெறும் என பபாசி அறிவித்தது. ஓர் அரங்கிற்கு நான்குபேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். முகக்கவசம் கட்டாயம். சானிடைசர்களைப் பயன்படுத்திய பிறகே வாசகர்கள் அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவர் போன்ற அறிவிப்புகள் பிரதானமாக இருந்தன. வாசகர்களுக்கான அனுமதி நேரம்கூட இரவு எட்டுமணிவரை எனச் சுருக்கப்பட்டது.
கோவிட் காலத்தில் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்தான் என்றாலும் இவை விற்பனையில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கணிக்க முடியாமல் இருந்தது. எனவே சென்ற ஆண்டுடன் ஒப்பிட்டு ஐம்பது சதவீத விற்பனையை எதிர்பார்த்துதான் அரங்கமைத்தோம்.
ஆனால் நிச்சயமாக நாங்கள் எண்ணியதைவிட பெருந்திரளாக வாசகர்களின் வருகை இருந்தது; மட்டுமில்லாமல் விற்பனையிலும் அது எதிரொலித்தது. இதற்குக் காரணமாக நான் பார்ப்பது சென்னை புத்தகக் கண்காட்சியானது சென்னையின் பண்பாட்டு அடையாளமாக மாறியுள்ளது. வாசகர்களுடன் ஒரு பெரும் பிணைப்பை அது ஏற்படுத்திக்கொண்டுள்ளது. இக்கண்காட்சியை ஒட்டிப் பதிப்பகங்கள் வெளியிடும் புதிய புத்தகங்களை அறிந்துகொள்ளவும் வாங்கவும் வாசகர்கள் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
பதிப்பாளர்களுக்கும் மற்ற நகரங்களில் நடைபெறும் புத்தகக் காட்சிபோல் இல்லாமல் வேறுபல அனுகூலங்களையும் வழங்குகிறது. எழுத்தாளர்கள் சந்திப்பு, அரங்கிற்குள்ளேயே நடைபெறும் புத்தக வெளியீடுகள், வாசகர்களின் நேரடி வருகை என ஒரு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்துகிறது.
இந்தப் புத்தகக் காட்சியின் மிகப்பெரிய அனுகூலத்தில் ஒன்று பணச்சுழற்சிக் காலதாமதமின்றி நேரடியாகப் பதிப்பாளருக்குக் கிடைப்பது. இது பலவகையிலும் அவர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியது. மேலும் ஊடகங்கள் தொடர்ந்து கொடுக்கும் முக்கியத்துவம், அவை காட்சி ஊடகங்களானாலும் அச்சு ஊடகங்களானாலும் ஒன்றை நீங்கள் கவனித்திருக்கக் கூடும். கண்காட்சி நடக்கும் நாட்களில் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து புத்தகத்துடன் இருப்பது போன்றோ புத்தக வெளியீடு நிகழ்வோ புகைப்படங்களோ பகிரப்பட்டு வந்திருக்கும். இவை கண்காட்சியைத் தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் வைத்திருக்க உதவக்கூடியவை. மற்ற புத்தகக் கண்காட்சிகளில் காணக்கிடைக்காத ஒரு கொண்டாட்ட நிலையை இங்கே நீங்கள் தரிசிக்கலாம். இவை அனைத்தும் சூழலைப் புத்துணர்ச்சியுடன் இயங்க அனுமதிக்கும்.
இந்த சென்னை புத்தகக் காட்சிக்காக ‘எதிர் வெளியீடு’ இருபது புதிய நூல்களைப் பதிப்பித்தது. அரசியல், வரலாறு, தத்துவம், புனைவு, கட்டுரை, கவிதை எனப் பல்வேறு தலைப்புகளில் இவை அமைந்திருந்தன. வழக்கம் போலவே வாசகர்களின் அமோக வரவேற்பு இந்தப் புதிய நூல்களுக்குக் கிடைத்தது. பெரும்பாலான புதிய புத்தகங்களின் வெளியீட்டையும் அறிமுகங்களையும் எதிர் வெளியீடு அரங்கிலேயே நடத்தினோம். நிறைவான நிகழ்வுகளாக அவை நடந்து முடிந்தன.
மாறிவரும் உலகப் பதிப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு மாற்றங்களுக்குத் தயாராக வேண்டியிருப்பதும் நமது கடமையாகும். அச்சுப் புத்தகங்கள் மட்டுமே அல்லாமல் பல்வேறு வடிவங்களைப் புத்தகங்கள் எடுத்துவிட்டன. மின் புத்தகம், ஒலிப் புத்தகம் என வருங்காலத்தில் கோலோச்சும் வடிவங்களாக இவற்றை ஏற்றுக்கொள்வதா என்ற குழப்பம் நிறைய பதிப்பாளர்களிடம் இன்னமும் இருக்கிறது. எழுநூறு அரங்கங்களும் அச்சுப் புத்தகத்திற்கான இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள நிலையில் ஒன்றிரண்டு ஒலி, மின் புத்தகங்களுக்கான அரங்கினையும் காண முடிந்தது.
சென்னை புத்தகக் காட்சிக்கே உரிய பல நிறைகள் இருந்தாலும் குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. பல வருடங்களாக ஒரே மாதிரியான அரங்க வடிவமைப்புகள் வாசகர்கள் மத்தியில் பெரும் சலிப்பை உண்டாக்குபவை. தில்லி, கேரளா, மேற்கு வங்கம் போன்ற இடங்களில் நடைபெறும் புத்தகக் காட்சிகளை மாதிரியாகக் கொண்டு வருங்காலங்களில் இவற்றைச் சரிசெய்யலாம். எழுநூறு அரங்கங்களை ஒரே கூரையின் கீழ் ஒதுக்காமல் துறைவாரியாக அவற்றைப் பிரிக்கலாம். குழந்தைகள் நூல்கள், துறைசார்ந்த நூல்கள், ஆங்கில நூல்கள் என எத்தனை சாத்தியங்கள் உள்ளனவோ அத்தனையையும் முயற்சி செய்யலாம். இவற்றைச் செயல்படுத்தும்போது வாசகர்களுக்கு நேரமும் நூலைத் தேர்ந்தெடுக்க கொடுக்கும் உழைப்பும் மிச்சமாகும். போதிய காற்றோட்ட வசதிகள் செய்துதரப்பட வேண்டும். இவை வாசகர்கள் கூடுதல் நேரத்தை அரங்கினுள் செலவிட உதவிபுரியும். எழுத்தாளர்கள், வாசகர்கள் சந்திப்பு நிகழ்வுகளைத் திட்டமிடலாம். வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்களின் புத்தகத்தைக் கையொப்பத்துடன் வாங்குவது அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது போன்றவற்றைச் செயல்படுத்த பபாசி பரிசீலிக்கலாம்.
ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கவுள்ள நன்கொடை சென்னை புத்தகக் காட்சிக்குக் கிடைத்துள்ளது உண்மையில் மிக மகிழ்ச்சிகரமான செய்தி. இன்னும் அரசாங்கத்திடம் இருந்து என்ன வகையான உதவிகளைப் பெற்று உள்ளதைவிட மேம்பட்டதொரு கண்காட்சியாக நடத்திட முடியும் என பபாசி திட்டமிடவேண்டும். அரசு நூலகங்களுக்கு நூல்களைக் கொள்முதல் படுத்துவதில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். நூலகங்களும் புத்தகக் காட்சிகளும்தான் நூல்களை மக்களிடையே கொண்டுசேர்க்கும் முதன்மையான நிறுவனங்கள். அதுபோலவே சென்னை மட்டுமல்லாமல் மாநிலத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இதுபோன்ற புத்தகக் காட்சிகளை நடத்த உறுதியான நடவடிக்கைகளை பபாசி எடுக்க வேண்டும் என்பதே அனைத்துப் பதிப்பாளர்களின் வேண்டுகோள்.
மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com