நூல் நாடி, நூலின் முதல் நாடி...
றாம் சந்தோஷ்
நூல் நாடி, நூலின் முதல் நாடி...
எனக்கு Bibliomania. வாசிக்கிறேனோ இல்லையோ, வாங்கி வரிசையாய் அடுக்கி வைத்துப் பார்த்துக்கொண்டிருப்பேன். என்னிடம் இல்லாத புத்தகங்கள் வேறு யாரிடமாவது பார்த்தால் பொறுக்காது; ஒன்று அதை எப்படியோ வாங்கிவிட வேண்டும்; கிடைக்கவே கிடைக்காது எனும்போது வாசித்துவிட்டுத் தருகிறேன் என்று அவர்கள் அதை மறந்துவிடும் மட்டும் என்னிடமே வைத்துக்கொள்ள வேண்டும் அல்லது திருடவாவது வேண்டும். அதேசமயம், என்னுடைய சேமிப்பில் உள்ள புத்தகங்கள் களவு போவதை என்னால் துளியும் ஏற்றுக்கொள்ள முடிந்ததில்லை. பஷீரின் முழுத்தொகுப்பு களவு போனபோதெல்லாம் முகநூலில் ஒப்பாரி வைத்திருக்கிறேன். ஆக சுருங்கச் சொன்னால் நானொரு புத்தகப் பைத்தியம்; வேறுவகையில் சொன்னால், புத்தகக் கண்காட்சிக்குச் சென்றும் அப்பளக்கடைக்குச் செல்லாமலேயே வீடு வந்துசேரும் அதிசய ஜீவிகளில் நானும் ஒருவன். எனவே எனக்குப் புத்தகக் கண்காட்சி எவ்வளவு பிடிக்கும் என்பதை நான் சொல்பவற்றையும் தாண்டி நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.
சதா இணையம் வழிப் புத்தகங்களை வாங்கினாலும், நேரில் சென்று வரிசை வரிசையாய் அமைக்கப்பட்டிருக்கும் அரங்குகளின் ஒருவாயிலில் நுழைந்து மறுவாயிலில் வெளியேறி அல்லது அதற்கு எதிரே இருக்கும் அரங்கில் நுழைந்து அப்படியே அதற்குப் பக்கத்தில் இருக்கும் அரங்கின் ஒரு வாசலில் நுழைந்து மறுவாசலில் வெளியேறிப் பார்த்தால் கடைசியில் முதலில் சென்ற கடைகளின் வரிசையிலேயேதான் சுற்றிக்கொண்டிருப்போம். பூங்காக்களில் கண்ணாமூச்சி விளையாடுவதைப் போல வேடிக்கையானது, சுவாரசியமானது புத்தகக் கண்காட்சி அரங்குகளில் உள்ளே புகுந்து புகுந்து வெளியேறுவது. இன்னும் நண்பர்களைத் தொலைத்துவிட்டால் வேடிக்கை கூட; வழக்கம்போல அங்கே தொலைத்தொடர்பு வசதி கிடைக்காது; அதுவும் இந்தமுறை சொல்ல வேண்டியதில்லை. அரங்கு எண்கள் பட்டியல் முதல் நான்கு நாட்கள் விநியோகிக்கப் படவில்லை. எனக்கு ஒரே கூத்தாய்ப் போனது.
வழக்கமாக அதிகபட்சம் இரண்டு நாட்கள் கண்காட்சியில் இருப்பேன். புத்தகப் பட்டியலையும் அரங்கு எண்கள் கொண்ட பிரசுரத்தையும் கைகளில் வைத்துக்கொண்டு அலையோ அலையென அலைவேன். இந்த முறை தங்கவும் திங்கவும் உதவி கிடைத்ததால் நான்கு நாட்கள் இருக்க முடிந்தது. (உதவியர்தம் குடி வாழ்க; கொற்றம் வாழ்க!)
நான், றாம் சந்தோஷ் (அதுவும் நான்தான் – ஒரு ஹாய் சொல்லி அறிமுகம் செய்துகொள்ளுங்கள் ஹாய்…) அப்புறம், வே. நி. சூர்யா, பெரு. விஷ்ணுகுமார், கனிமொழி. ஜி, அன்புவேந்தன் ஆகியோருடன் இந்தப் புத்தகக் காட்சி வளாகத்தில் ஒன்றாகச் சுற்றிக்கொண்டிருந்தோம். நண்பர்களைச் சந்திப்பது புத்தகக் கண்காட்சிக்கான குணங்களில் ஒன்றுதான் என்றாலும், சென்னைக்கு மிக அருகில் வசிக்காத வெளியூர் எழுத்தாளர்களாகிய நாங்கள் அந்தச் சடங்குகளில் பெரிதாகக் கவனம் செலுத்தமுடியாது. எங்கள் கவனம் பூராவும் காமன் போக்ஸ் தரும் 15% கழிவைவிடவும் அதிகம் தரும் பதிப்பகங்களின் பட்டியலில் இருக்கும் நூல்களை வாங்கிக் குவித்துவிட வேண்டும் என்பதுதான். கண்காட்சிக்கு முன்பே கொரானா காலத்திலேயே சிறப்புச் சலுகைகளை அறிவித்த காலச்சுவடு, பாரதி புத்தகாலயம், NCBH, நற்றிணை, எதிர் போன்ற பதிப்பகங்களில் ஏற்கெனவே நிறைய வாங்கி இருந்ததால் அப்பதிப்பகங்களின்மீது எனக்குத் தனிப்பட்டமுறையில் பெரிதாகக் கவனம் செல்லவில்லை.
‘நட்சத்திரவாசிகள்’ நாவல், பா. வெங்கடேசனின் கட்டுரைத் தொகுப்பு (இரண்டாவது முறை - நண்பனுக்காக), (காலச்சுவடு), கையா (பாரதி புத்தகாலய வெளியீடு), சீனிவாச ராமாநுஜம் மொழிபெயர்த்த ‘விரிசல் கண்ணாடி’ (எதிர் வெளியீடு), ‘குரு’ (நற்றிணைப் பதிப்பகம்) இவையே உடனடியாக வாசிக்க வேண்டியவை என வாங்கிவந்தவை.
மற்றபடி உயிர்மை, அடையாளம், க்ரியா, யாவரும், தமிழினி, எழுத்து, நூல்வனம் ஆகிய பதிப்பகங்களில் நிறைய புத்தகங்களை வாங்கினோம்; சலுகையளித்து உதவினார்கள். நான்கு நூல் வாங்கப்போன என்னை உயிர்மையில் ஒரு இளைஞர் பேசிப் பேசி (விஜய குமார்!?) நிறைய நூல்கள் வாங்கவைத்துவிட்டார்; இதுபோன்று இரண்டாண்டுகளுக்கு முன்பு ‘அடையாளம்’ கடையில் தம்பி என்பவர் அப்படி என்னிடம் விற்றிருக்கிறார். இவர்களைப் போன்றவர்களைத்தான் பதிப்பகங்கள் உற்சாகப்படுத்த வேண்டும்; அதேசமயம் என்னைப் போன்றவர்கள் அடுத்தமுறையிலிருந்து இவர்களிடம் கவனமாக இருக்க வேண்டியுள்ளதையும் குறிப்பிடுகிறேன்.
சில பதிப்பகங்களில் இருப்பவர்களிடம் அந்தந்தப் பதிப்பகங்களின் ஆஸ்தான எழுத்தாளரின் பெயரைச் சொன்னால்கூட, அடுத்த நொடி இல்லை என்று சொல்லிவிடுபவர்கள்தான் இருக்கிறார்கள்; அதனால்தான் இவர்களைப் பெயர்ச்சொல்லிப் பாராட்டுகிறேன்.
அலைகள், மெய்யப்பன், விடியல், கருப்புப் பிரதிகள், சந்தியா, தன்னறம் அரங்குகளில் சில நல்ல நூல்களை வாங்கிவந்தேன். ஜே. கிருஷ்ணமூர்த்தி டிரஸ்டின் அரங்கொன்றை இந்த முறைதான் புதிதாகப் பார்த்தேன். உ.வே.சா. நூலகம், உலகத்தமிழாராய்ச்சி நூலகம் இரண்டும் புதிய நூல்களை அதிகம் வெளியிடாததால் அவற்றிற்குச் செல்லவில்லை. வழக்கமாக நான் செல்லும் சாகித்ய அகாதெமி, நேஷ்னல் புக் டிரஸ்ட் வெளியீடுகளுக்கும் இந்த முறை ஏனோ செல்லவில்லை.
முழுத் தொகுப்பு வெளியிடும் பழைய பிரபலப் பதிப்பக அரங்கினுள் வழக்கம்போல சென்றதும் ஒரு முழுத் திரட்டு நூலை எடுத்து, வழக்கம் போல் விரலால் அதன் பக்கங்களைத் துடைக்கவும், வழக்கம் போல மை கையோடு வந்தது. வழக்கம்போல் அதே அதிக விலைக்கு இவ்வளவு மோசமான பதிப்பா என்று வழக்கம்போல கோவத்தில் நானும் வெளியேறிவிட்டேன். வழக்கம்போல அப்பதிப்பகத்தின் பழைய – தொன்ம காலத்தியவை - நல்ல அச்சுப்பிரதிகள் பழைய கடையில் கிடைக்கவும், வழக்கம்போல் இல்லாது பத்து இருவதுகூடக் கொடுத்து அவற்றை வாங்கிவந்தோம். இனி வழக்கம்போல் அடுத்தமுறை அவை கிடைக்குமோ கிடைக்காதோ.
பரிசல் அரங்கிற்குச் செல்லும்போது, ‘பாலைநிலவனின் கதைகள்’ என்ற பதிப்பில் இல்லாத நூலை முதலில் கண்டுபிடித்தேன். அடுத்து, அது சூர்யாவுக்குக் கிடைத்தது. விஷ்ணுவும் கேட்க, தேடி ஒரு பிரதியைக் கண்டுபிடித்தோம். கடைசியாய் இருந்த மூன்றுமே தீர்ந்துவிட்டன என அவர் ஒரு பதிவு போட்டார். அதேபோல, நீண்ட நாட்களாய்த் தேடிக்கொண்டிருந்த, எழுத்தாளரையும், போனை எடுக்காத பதிப்பாளரையும் நச்சரித்தும் கிடைக்காத ராணிதிலக்கின் விமரிசனக் கட்டுரைகளின் திரட்டான ‘சப்தரேகை’ எனக்கு மட்டும் ஒரு படி கிடைத்தது. ‘நீ எதை விரும்புகிறாயோ அதை அடைவாய்’ என்கிற வரி நினைவுக்கு வரவும் நான் மனம் பூரித்துப்போய் அடுத்த அரங்குக்குள் நுழைந்தேன்.
பெரிய எழுத்துப் பதிப்பக நூல்கள் விற்பனைக்கு இருந்த ஒரு அரங்கிற்குச் சென்று பார்த்தோம். ஆனால் அடுத்த நாள் வாங்கிக்கொள்ளலாம் என்று வந்துவிட்டோம். கடைசிவரை வாங்கவில்லை. பெருமாள் முருகனின் மனத்தில் நிற்கும் மாணவர்கள் நூலை வாங்கலாம் என்றிருந்து அதையும் மறந்தாகிவிட்டது. அடுத்து, குயர் மக்களுக்கான அணியம் அறக்கட்டளை வெளியிட்ட பால்மணம் மின் இதழ் திரட்டு நூலையும், நக்கீரனின் ‘சூழலும் சாதியும்’ நூலையும் அவசரத்தில் வாங்க மறந்துவிட்டேன். ‘பால்மணம்’ நூலை மட்டும் இரண்டு நாட்களில் இளையர்கள் (Juniors) வாங்கிவந்து கொடுத்தனர்.
கொரானாவில் வீடடைந்து தொடர்ந்து மனிதர் களைப் பார்க்காமல் இருந்ததால் புத்தகக் கண்காட்சியின் துவக்க நாட்களிலேயே செல்ல வேண்டும் என நண்பர்களை நச்சரித்தவன் நான்தான்; பிப்ரவரி 14 அன்று என்று வேறு மனத்தில் பதிந்திருந்தேன். அப்புறம் பிப்ரவரி 24 வரை காத்திருக்க நேர்ந்தது. ஆனால் புத்தகங்கள் முதல் நாட்களில் அச்சாகி வராது என்று சொன்னதால், 26 அன்று கிளம்பினோம். மார்ச் 1ஆம் தேதிவரை அங்கு இருந்தேன். சில நூல்கள் நாங்கள் கிளம்பும் கடைசி நாளில்தான் வெளியாகின. ‘தனுமையின் இக்கணம்’ என்ற படைப்பிலக்கிய மொழியாக்கக் கட்டுரைத் திரட்டு நூல் (பாதரசம் வெளியீடு), எஸ். சண்முகத்தின் ‘மறதியின் புகைநிறம்’ அவ்வகையில் நாங்கள் கிளம்பும்போது வெளியானவை.
இதில் முதலாவதை வாங்கிக்கொண்டு அடுத்த நூலை மற்ற நூல்களோடு சேர்த்துப் பிறகு அனுப்பிவிடுங்கள் என்று அவற்றின் பதிப்பாளரிடம் சொல்லிவிட்டு வந்தேன். நூல்வனம் கொண்டுவந்த ‘பத்து இரவுகளின் கனவுகள்’ நண்பர்களுக்குக் கிடைத்து, எனக்குக் கிடைக்கவில்லை. இந்நேரம் அந்நூல் வீடுவந்து சேர்ந்திருக்கும். சஃபி மொழிபெயர்த்த ‘1001 அரேபிய இரவுகள்’ நூலிற்காக ரொம்ப நாளாய் ஆர்வமோடு காத்திருந்தவர்கள் என்கிறமுறையில், அதன் மூன்றாம் பாகம் கண்காட்சி முடியும் மட்டும் வெளியாகாமல் இருப்பது வருத்தமே. எனக்கு மூன்று தொகுப்புகளும் மொத்தமாய் வாங்க விருப்பம். ஆனால் அதற்குள் முதலிரு பாகங்கள் அச்சில் இருக்க வேண்டியது அவசியம்; குறைந்தபட்சம் என்னை மட்டுமாவது கர்த்தர் ரட்சிக்கட்டும். எனக்கு அவர் மொழிபெயர்த்த ‘முல்லா கதைகள்’ அவ்வரங்கில் கிடைத்ததில் சந்தோசம். பா. வெங்கடேசனின் சிறுகதைத் தொகுப்பு வருமென முன்பு எப்போதோ பதிவு போட்டிருந்தார்; வரவில்லைபோல.
பல சந்திப்புகள் நான் விரும்பி நிகழ்ந்தன; பல சந்திப்புகள் படுமோசம். வழக்கம்போல சந்திக்க விரும்பிய ஆளுமைகள், நண்பர்களிடம் நேரம் கேட்டுக் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். சிலரைச் சந்திக்க முடிந்தது; சிலரைப் பார்க்க முடியவில்லை. சிலரை எதேச்சையாய்ச் சந்திக்க நேர்ந்த போதும் அவை சிறப்பான சந்திப்பாய் அமைந்தன. சில சந்திப்புகள் நன்றாக இருந்தாலும், திடீரெனத் தர்மப் பிரதிகளுக்காக மாடலாக நிற்க வேண்டியிருந்தது கொஞ்சம் சங்கோஜமாய்ப் போனது. ஒரு தொகுப்பை வெளியிடவும் நேர்ந்தது; மகிழ்ச்சி.
அருகே வந்துநின்ற அடுத்த நொடியே நம்மோடு போட்டோ எடுத்துக்கொண்டு விடைபெறுபவர்கள் முகநூலிற்குப் போய் “உரையாடினேன்” என்ற சொல்லோடு வாக்கியத்தை முடித்துப் பதிவு போடும்போதுதான் நமக்குத் திகிலாக இருக்கும்.
நான் ஆதர்ஷிக்கும் இரண்டு ஆளுமைகளுடனான முதல் மோசமான சந்திப்புகள் பற்றியும் கூற வேண்டும். ஒருவர் எதிரிலிருப்பவனுக்குக் காது மட்டும்தான் இருக்கிறதென்று நினைத்து அவர்பாட்டுக்குப் பேசிக்கொண்டிருந்தார். உலகத்திலேயே தான்தான் அறிவாளி மற்றவனெல்லாம் ஹைகோர்ட் என்று ஆஹோ ஓஹோ என்ற தொனியில் இருந்தது அவர் ராமா…யணம். தப்பித்தோம், பிழைத்தோம் என்று மீண்டு வந்தேன்.
அடுத்தவர், சந்திக்க வேண்டும் என்று கூறிவிட்டுக் கண்ணைப் பார்த்துக் கூட பேசாமல், இரண்டொரு வார்த்தைகளோடு கிளம்புறேன் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். எனக்கோ அவ்வளவு அவமானமாக இருந்தது. வழக்கம்போல இவர்களை எழுத்தில் மட்டும் ஆகர்ஷிப்பதில் எனக்குப் பிரச்சினை இல்லை; ஆனால் இவர்களைத் திரும்பவும் சந்திக்கும் துணிவு இருக்கிறதா என்றுதான் தெரியவில்லை.
நான் வாங்கிவந்த எல்லாப் புத்தகங்களுமே எனக்கு முக்கியம்தான்; மூன்றாம்நாள்வரை வாங்கி முடித்ததை கேபிஎன்னில் தகுந்தமுறையில் பார்சல் செய்து போட்டுவிட்டு (பெரிய அட்டைப்பெட்டி. அதை கூரியரில் போட்டிருந்தால் கஷ்டப்பட்டுச் சேமித்த சலுகைத் தொகை விரயம் ஆகியிருக்கும்) கடைசி நாள் வாங்கியவற்றைக் கையோடு எடுத்துவந்தோம். அடுத்த நாளே சில நூல்களை 15% தள்ளுபடியில் இணையத்தில் ஆர்டர் செய்ததும் நடந்தது. இன்னும் வாங்கி முடியவில்லை. தொடர்ந்து வாங்கிக் கொண்டுதான் இருப்பேன். ஆனால் வாசிக்கவும் வேண்டும். ப்ச்...
மின்னஞ்சல்: aishavimall@gmail.com