மொழிபெயர்ப்பது எப்படி?
கட்டுரை
மொழிபெயர்ப்பது எப்படி?
ஆர். ஷண்முகசுந்தரம்
‘ஆய கலைகள் அறுபத்து நான்கு’ என ஆன்றோர் கூறினார்கள். ‘அது அந்தக் கணக்கிற்குள் அடங்காது’ என்று அடித்துப் பேசுவார், ரஸிகமணி டி.கே.சி. அவர்கள். ‘தூக்கணாங்குருவி கூடு கட்டுவது ஓர் அற்புதமான கலை அல்லவா?’ என்று அவர் கேட்பார். ஆம், தூக்கணாங்குருவி கூடு கட்டுகிற விந்தையைச் சொல்லிமுடியாது. எவ்வளவு அருமையாகத் ‘தலைகீழா’க மழை குளிர்வாடையே கூட்டுப் பக்கம் தலைகாட்டாதபடி அழகுற அமைத்துவிடுகிறது! “வேஷ்டி துவைப்பதும் ஒரு கலைதான்! ஆற்று வெள்ளத்திலே வேஷ்டியை மிதக்கவிட்டு, ஓடிவிடாமல் கெட்டியாகப் பிடித்து, நனைத்து மடித்துப் பாறையில் துவைத்து, பிழிந்து நேர்த்தியாகக் காயப்போடுவது கலையல்லாமல் வேறு என்னவாம்?” என்று ரஸிகமணி வினவும்போது, ‘ஆஹா! எத்தனை கலைகள் இத்தரைமீது!’ என நாமும் அதிசயிக்கிறோம்.
மொழிபெயர்ப்புக் கலையை எண்ண எண்ண என்னுடைய நினைவுச் சுழலில் ஏதேதோ வந்து மோதுகிறது! மொழிபெயர்ப்பும் ஒரு கலை என்பதாக முன்னோர்களுக்குத் தெரிந்திருந்தால், ஆதியில் கூறிய பாடலில் அதனையும் சேர்த்திருப்பார்கள். ‘புவிச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்க்கும்’ முயற்சி தற்காலத்தில் விரிந்து பரவி வருதலைப் போன்று முற்காலத்தில் ஏது? ‘கம்பன் என்றொரு மானுடன்’ வாழ்ந்ததும், ‘எல்லையொன்றில்லை என்னும் குறி’களை அவன் காட்டிட முனைந்த கதையே வேறு! வான்மீகியைக் கம்பன் ‘தழுவினான்!’ பல இடங்களில் சொந்தமாகவே எழுதினான்! அந்த விஷயம் அலாதியானது. நம்மைக் கவியரசர் எட்டுத் திக்கிற்கும் ஏவிவிட்டாரே, ‘செல்வங்’களைக் கொண்டுவந்து சேர்ப்பதற்காக-மொழிபெயர்க்காமல் ‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்க’ளை அறிந்துகொள்வது எப்படி? ஆகவே மொழிபெயர்ப்பதெப்படி என்பதைக் கொஞ்சம் பார்க்கலாம்.
பண்டை வீரர்கள் போர்க்களத்தே யுத்தம் செய்யப்புகு முன் சில வீர வசனங்களை அள்ளி வீசிக்கொள்வது வழக்கம். இந்தக் காலத்திலும் பழைய ‘பந்தா’வில் மல்யுத்த வீரர்கள் ‘பரம்பரை’ப் பெருமையை எடுத்துக் கூறிக்கொள்வது உண்டல்லவா? மற்போருக்கு முதலில் சொற்போர் ஆரம்பமானால்தான் பார்க்கின்றவர்களுக்குப் பரவசம் ஏற்படும்!
மொழிபெயர்ப்புச் செய்வதெப்படி என்பதை நுணுகி ஆராயுமுன்னர் பொதுவான சில விஷயங்களை - அடிப்படை அஸ்திவாரம் அது என்றுதான் வைத்துக்கொள்வோமே அப்படிப்பட்ட சேதிகள் இரண்டொன்றை ஆரம்பத்திலேயே ஞாபகப்படுத்திக்கொள்ளலாம். நினைவில் நிற்க வேண்டிய விஷயங்கள் அவை.
சொந்த பாஷையில் நன்கு எழுதக்கூடிய ஆற்றல் பெற்றவராக இருந்தால் அவர் செய்கின்ற மொழி பெயர்ப்பும் நன்றாக இருக்கும்.
மூல பாஷையில் – எந்தத் துறையிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்கிறாரோ- அத்துறையில் உள்ள புத்தகங்ளை அவர் ஏராளமாகப் படித்திருக்கவேண்டும். கவிதைகளை மொழிபெயர்க்கின்றவர் நிச்சயம் கவிஞராகத்தான் இருக்கவேண்டும். விஞ்ஞான நூல்களை, அத்துறையில் ஈடுபாடும் பயிற்சியும் பெற்றவர் செய்தால்தானே சிறப்பாக இருக்கும்? சும்மா ‘மேதை’ ஒன்றையே நம்பிச் செய்கிற காரியம் அன்று இது. தன்னிடமிருக்கும் அபார எழுத்துத் திறன், சக்தி எல்லாக் கட்டங்களிலும் கைகொடுக்காது! அதே மாதிரி நாவலை - ஒரு நாவலாசிரியரே மொழிபெயர்க்கும்போது எங்கெங்கே என்னென்ன பொதிந்திருக்கின்றன, எந்த இடத்தில் நயமும் நளினமும் கொட்டிக் கிடக்கின்றன, எந்தப் பாத்திரம் எப்படிப் பேசும்–பேசி இருக்கும் என்கிற உண்மைகளையெல்லாம், ‘உள்ளது உள்ளபடி’ கொண்டுவந்து சேர்க்க இயலும். பரிபூரண ஈடுபாடும் அனுபவமும் இல்லாத எந்தக் காரியமும் அரைவேக்காடாகத்தான் இருக்கும்!
வாசகருக்கு மொழிபெயர்ப்பு என்ற உணர்வே ஏற்படாமல் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட ‘நிறை’வை நிரப்புவது எப்படி? தாய்மொழியில் மொழி பெயர்ப்பாளருக்கு நல்ல ஞானமும் இனிய நடையும் எதையும் சரளமாக எடுத்துக் கூறும் ஆற்றலும் அவசியம் வேண்டும்.
இனி, மொழிபெயர்ப்பு செய்வதெப்படி எனும் விஷயத்திற்குள் செல்லலாம்.
ஒரு மொழிபெயர்ப்பாளர் தமக்குப் பிடித்தமான ஒரு நாவலைத் தேர்ந்தெடுக்கிறார். மற்றவர்களுக்கு அந்த நாவல் பிடித்தமானதாக இருக்கும் என்ற எண்ணத்தில்தான் அதைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். சில சமயங்களில் ‘கொடுத்ததை’ச் செய்யவேண்டி இருக்கிறது! இன்னும் சில சமயங்களில் ‘கருத்து’களைப் புகுத்த வேண்டியும் ‘பெயர்க்க’ வேண்டியும் இருக்கிறது! அது விரிக்கிற் பெருகும்; இங்கு அவை நமக்குத் தேவையற்ற சமாச்சாரங்கள். பிற மொழி நூலைத் தாய்மொழிக்குக் கொண்டுவருவது எப்படி? அதை மாத்திரம் இங்கு கவனிக்கலாம்.
மொழிபெயர்ப்பாளர் ஒன்றுக்கு மூன்று தரம், எடுத்துக் கொண்ட நாவலைப் படித்துப் பார்க்கிறார். வார்த்தைகள் சில விளங்கவில்லையா? அகராதி இருக்கவே இருக்கிறது. என்ன தான் ‘புலமை’ பெற்றிருந்தாலும், அனுபவம் ஏற்பட்டிருந்தாலும், சூடத்திற்கும், கொய்யாப்பழத்திற்கும், அணிலுக்கும், பாசிப்பயறு வடைக்கும் - இப்படி எவ்வளவோ ‘வார்த்தை’களைப் பார்க்க அகராதியின் துணை அவசியம் தேவை. அதை முதலிலேயே பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பக்கத்திலும், ‘நின்று நின்று’ வார்த்தைகளுக்குச் சரியான பொருளைக் கண்டுபிடிப்பதிலேயே நேரத்தைச் செலவிட்டுக்கொண்டிருக்கக்கூடாது!
மூல ஆசிரியர், இடையே சில இடங்களில் கவிமழை பொழிந்திருக்கிறார். கவிகளை மொழிபெயர்க்கும் திறமை இல்லாவிட்டால் - பெரும்பாலானவர்களுக்கு அது இருக்காது - அப்பேர்ப்பட்டவர்கள் அந்தப் பக்கம் தலை வைத்தே படுக்கக் கூடாது! உதாரணத்திற்கு என்னையே எடுத்துக்கொள்ளுவோம். கிட்டத்தட்ட நூறு நாவல்களை மொழிபெயர்த்திருக்கிறேன். எனக்குக் ‘கவிதா நெஞ்சம்’ கிடையாதா? இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே சில கவிகள் யாத்திருக்கின்றேன்! யானே ‘உரைநடை’க் கவிகளும் எத்தனை எத்தனையோ சமைத்ததுண்டு! ஆனால், அழகான கவிதைகள், நாவல்களில் ஆங்காங்கு வரும் இடங்களில் நான் கைவைக்க அஞ்சுவேன்! நம்முடைய முக்காலே மூணுவீசம் கவிராயர்களைக்காட்டிலும் சிறப்புற என்னால் கவி ‘பண்ண’ முடியும். ஆயினும், பாடலின் பொருளைக் கூறித் ‘தக்காரை’க் கொண்டே அப்பணிபுரிதல் என் வழக்கம். ரவீந்திரரின் ‘கீதாஞ்சலி’யைக் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் அற்புதமாகத் தமிழில் தந்திருக்கிறார்கள் என்றால் எல்லோராலும் அவ்விதம் செய்துவிட இயலுமா? பாரதியாரே ஒரே கவியை இரண்டுதரம் செய்திருக்கிறார். இரண்டு விதங்களில் மொழிபெயர்த்திருக்கிறார். அவை இரண்டுமே அழகாக இருக்கின்றன. சிறுகதையும் அப்படித்தான். ரவீந்திரருடைய ‘ஆசாபங்கம்’ எனும் சிறுகதையைப் பாரதியார் பெயர்த்திருப்பதற்கும், அதே கதையை வேறு இரண்டொருவர் செய்திருப்பதற்குமுள்ள வித்தியாசம் துலாம்பரமாகத் தெரிகிறது. எழுதும் மனத்தின் ‘முத்திரை’ எழுத்தில் வராமல் இருக்குமா?
சமூக நாவல்களில், கிராமிய நாவல்களில் கதாபாத்திரங்கள் பேசும்போது ‘கொச்சை’ச் சொற்களை மூல ஆசிரியர் கொட்டி இருக்கிறார். ‘கொச்சை’ வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிய வேண்டுமே! எந்த அகராதியைப் புரட்டினாலும் பயனில்லை! பொருள் விளங்கா. அதற்காகத்தான் மெய்யான ஈடுபாடு தாம் இறங்கும் துறையில் மொழிபெயர்ப்பாளர் பெற்றிருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறவேண்டி இருக்கிறது. நிறைய படிக்கப்படிக்க – ஏராளமான நாவல்களுக்குள் நுழைந்து ஊடாடிக்கொண்டே இருந்தால் – தானாக அவற்றிற்கு அர்த்தம் கண்டுகொள்ளலாம். அனுபவம் ஒன்றுதான் கைகொடுக்கும்! இல்லாவிட்டால் அர்த்தம் யாவும் அனர்த்தம் ஆகிவிடும். பிறகு கலைக் கொலைதான்! மூல ஆசிரியருக்குச் செய்கின்ற அபசாரந்தான்!
இருமொழியிலும் ‘புலமை’ இருக்கின்ற காரணத்தால், தமிழில் எழுதிவிட்டால் மட்டும் அது தமிழாகிவிடாது! மொழிபெயர்ப்பும் ஆகிவிடாது! சரியான ‘உணர்ச்சி’களைக் கொண்டுவந்துவிட்டதாகவும் கூறிக்கொள்ள முடியாது!
ஒரே நாவலை நான்கு பேர் மொழிபெயர்ப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த நான்கும் ஒரே மாதிரியாக இரா. அதாவது ‘ஈ அடிச்சான் காப்பி’யாக அமையாது. அப்படி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. சில இடங்களில் கீழ்க்கண்ட மாதிரியாக வந்துவிடுதல் சகஜம்.
அதாவது - “அவன் சென்றுகொண்டிருக்கும்போது ஆற்றில் நீர் நிறைந்து வருவதைக் கண்டான்” என்று மூலத்தில் உள்ளது. அந்த வரிகளை - “அவன் போய்க்கொண்டிருக்கும்போது நதியில் தண்ணீர் நிறைந்து வருவதைப் பார்த்தான்” என்று ஒருவர் பெயர்க்கலாம். இன்னொருவர், தண்ணீரை நீராக்கிவிட்டார் என்றோ, வெள்ளமாக்கிவிட்டார் என்றோ – சென்றான், ‘பார்த்தான்’ என ஆகிவிட்டதே - இல்லை அது ‘கண்டான்’ என்று மாறிவிட்டதே என மயங்க வேண்டியதில்லை. யாரும் அதற்காக ‘மயங்கி’ விடவும் மாட்டார்கள்!
ஆனால் -
“உன்னை இத்தனை நாளும் வளர்த்தியதற்கு நீ செய்யும் கைம்மாறு இதுதானா?” என்ற வரியை -
“உன்னை இதுகாறும் ஆளாக்கியதற்கு நீ புரியும் பிரதிபலன் இவ்வளவுதானா?”
“உன்னை இவ்வளவு காலம் போஷித்தேன். அதற்கு நீ கொடுத்த பரிசு இதுதான் போலும்!”
“இவ்வளவு நாளாக வளர்த்தேன். ஒரு நொடியில் மண்ணாக்கிவிட்டாயே!”
இப்படிப் பலவிதங்களில் - அந்த நால்வரும் ‘உணர்ச்சி’யை வடித்துத் தரலாம்.
“எத்துணை ஆண்டுகளாக வளர்த்தேன். அந்தோ! யான் உன்னிடமிருந்து பெற்றது இதுவேயோ?” என்றும் குமுறலாம். பாசமும் பரிவும் ‘எதில்’ சரியாக வந்திருக்கிறதென்பதை வாசகர்களும் விமரிசகர்களும்தாம் கூறவேண்டும். அதற்குத்தான் தாய்மொழியில் மொழிபெயர்ப்பாளருக்குள்ள ‘சக்தி’தான் மொழிபெயர்ப்பிலும் பிரதிபலிக்கும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது! உயிர்த்துடிப்பும் மூர்ச்சனையும் பெயர்ப்பில் கும்மாளமிடவேண்டும். இல்லையெனின் நண்பர் ‘தீபன்’ வேடிக்கையாக விளம்பியதைப் போல, ‘மொழிபெயர்க்கும் கையை ‘முழி’ பெயர்க்கவேண்டும்!’
சில சேதிகள் இதயத்தின் மூலமே தெரியப்படுவன. அன்பை இன்னதென இனம் காட்டமுடியுமா? தொட்டுக் காட்ட இயலுமா? மூல ஆசிரியரின் உள்ளக் கிடக்கையை முதலிலேயே கண்டுகொள்ள வேண்டும். எந்த நோக்கத்திற்காக எழுதி இருக்கிறார், எந்தக் கருத்தை வலியுறுத்துகிறார், அந்த நாவலின் மூலமாக அவர் சொல்ல முயன்றது என்ன, அவர் நினைத்தவற்றையெல்லாம் - எழுத்தில் சேமித்து வைத்திருப்பதைத்தான் - மொழிபெயர்ப்பிலும் கொண்டுவந்துவிட்டோமோ என்பதை ஒரு கணம் ஆற அமர பெயர்ப்பாசிரியர் சிந்தித்துப் பார்த்து - திருப்தி அடைந்தால் - அது தெளிவான மொழிபெயர்ப்பாக இருக்கும் என நம்பலாம்.
எக்காரணம் கொண்டும், இஷ்டம்போல் எழுதியோ, கதை விட்டோ, ஒதுக்கியோ, கூட்டிக் குறைத்தோ மூல ஆசிரியருக்குத் ‘துரோகம்’ செய்துவிடக்கூடாது, மொழிபெயர்ப்பாளர்.
சரித்திர நாவல்களை மொழிபெயர்க்கும்போது எவ்வாறு செய்யவேண்டும், சமூக நாவல்களைப் பெயர்க்கும்போது எப்படிச் சொற்களைக் கையாளவேண்டும் என்பன தெள்ளத் தெளியத் தெரிந்திருக்கவேண்டும். ‘பராக்’கென்று கூறுமிடத்தில் ‘நமஸ்காரம், வணக்கம்’ என்று போட்டுவிட்டால் நாசந்தான்! மகாராஜாதிராஜனுக்குரிய பக்தியைச் செலுத்த வேண்டாவா? தெள்ளிய தேனில் ஒரு சிறிது நஞ்சையும் சேர்த்தபின் - அது தேனாக இனிக்குமா? இல்லை, ‘தேன்’ என்றுதான் அதைச் சொல்லலாமா?
எல்லாத் தொழில்களுக்கும் எல்லாத் துறைகளுக்கும் பெரும்பாலும் ‘பயிற்சி’ உண்டு. பயிற்சி பெற்றால்தானே சிறப்பாகச் செய்யமுடியும். இன்னதெனத் தெரிந்துகொள்ளவும் இயலும். நடிப்புக்கும் நாட்டியத்திற்கும் பயிற்சிக் கூடங்கள் இருக்கின்றன. மொழிபெயர்ப்புச் செய்வதெப்படி என்பதற்கும் பயிற்சி அளிக்கிறார்கள். ஆனால் இவை யாவும் ‘சொல்லிக் கொடுத்த சொல்லும், கட்டிக் கொடுத்த கட்டுச்சோறும் எவ்வளவு தூரத்திற்கு வரும்?’ என்கிற கணக்கில்தான் முடிகின்றன. வாட்பயிற்சி பெறுவோரெல்லாம் மாவீரர்களாகத் திகழ்வதில்லை. குறிப்பாக, இலக்கியத் துறையில் ‘இரண்டும் இரண்டும் நான்கு’ என்ற புள்ளி விவரம் உதவுவதில்லை. அறிந்துகொள்வதால் மட்டுமே அதை எட்டிப்பிடித்துவிடல் ஆகாத சங்கதி! இதயத்தின் மூலம் உணரவேண்டும். அதற்கான அரிய நெஞ்சம் வாய்த்திருக்கவேண்டும். கணிதத்தைப் பல்லாண்டு அனுபவத்திலிருந்து எளிதாகப் பெயர்த்துவிடலாம். விஞ்ஞானமும் இதர துறைகளும் அவ்விதமேதான். ஆனால் இலக்கியத்துறையில் ஏனோ இது எடுபடுவதில்லை. சிலர் செய்யும் மொழிபெயர்ப்புகளில்தாம் மூல ஆசிரியரை ‘முழுமை’யாகக் காண்கிறோம். இவ்விதம் கூறுவதிலிருந்து இதில் ‘சிதம்பர ரகஸியம்’ மண்டிக்கிடப்பதாக யாரும் எண்ண வேண்டா! ‘பாண்டித்யம்’ மட்டும் போதாது என்பதை எடுத்துச் சொல்லவே இவ்வளவு விவரிக்கவேண்டி இருக்கிறது.
எனக்குச் சொந்த நாவலும் ஒன்றுதான், மொழிபெயர்ப்பும் ஒன்றுதான். சொந்த நாவலை எப்படி என் விருப்பப்படி வேகமாக எழுதிச்செல்வேனோ அம்மாதிரியே மொழிபெயர்ப்பும் செய்கிறேன். மூல நூலைப் பார்த்து காபி பண்ணுவது போல் ‘மளமள’வென்று செய்துகொண்டு போகிறேன். அதில் சிரமம் இருப்பதாகவோ கஷ்டம் இருப்பதாகவோ எனக்குத் தோன்றவில்லை.
தாய்மொழியில் நல்ல ஞானம் வேண்டும் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டேன். அப்போதுதான் நன்றாகச் செய்ய இயலும். எல்லா நூல்களிலும் தேக்கித் திளைத்திருந்தால் பெரிதும் பயன்படும். சங்க இலக்கியங்களிலிருந்து அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவரை நமக்கு ஓரளவு பரிச்சயம் இருந்தால் - உண்மையான ஆர்வம் இருந்தால் நிச்சயம் பரிச்சயம் ஏற்படத்தானே செய்யும் - மூல ஆசிரியர் எப்படி ‘விந்தை’கள் புரிந்திருந்தாலும் சுவையாகக் கொண்டு வந்துவிடலாம். பிறமொழியை - மொழிபெயர்ப்பாளரை மனத்தில் வைத்துக்கொண்டு எந்த மூல ஆசிரியரும் இலக்கியம் படைப்பதில்லை. பெயர்ப்பாளருக்குச் ‘சிரமம்’ தரவேணும் என்று கனவிலும் அவர் கருதி இருக்கமாட்டார். தமக்குத் தோன்றியதை எழுதி இருப்பார். அதில் தத்துவக் கருத்துகள் வரலாம். வேதாந்த விஷயங்கள் - பெரிய பெரிய ‘சர்ச்சை’கள் நிறைந்திருக்கலாம். ‘ஆன்மிகம்’ பொதிந்துள்ள இடங்களில் சாமான்ய வார்த்தைகளைப் போட்டுச் சாரமற்றதாகக் குழப்பிவிடக்கூடாது.
சாதாரணமாக இரண்டு கதாபாத்திரங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது - ஒரு பெரியவருக்கும் இளைஞனுக்கும் வாக்குவாதம் முற்றி அது உச்சக் கட்டத்தை அடைந்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். புது உலகக் கருத்துகளோடு மோதிச் சமாளித்துக் கடைசியில் அவர் கடவுளை இழுக்கிறார். சரத்சந்திரர் இம்மாதிரி வாதங்களில் “இனிக் கடவுளை இழுத்துவிட்டார். சத்தம் அடங்கிவிடும்!” என்று நையாண்டி பண்ணுவார். இப்போது பெரியவரைப் பின் தொடரலாம். “அடே அப்பனே! இந்த மரத்திலும் மண்ணிலும் ஆண்டவன் இல்லை என்கிறாயா?” என மூல ஆசிரியர் பெரியவர் வாயிலாக இளைஞனிடம் கேட்கிறார். இந்த இடத்தை நான் பெயர்ப்பதாக இருந்தால், “தூணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான் என்றார் பெரியவர்” என்று தைரியமாக எழுதுவேன். “அப்படிச் செய்வது பிழை அல்லவா? மரமும் மண்ணும் மறைந்து தூணும் துரும்பும் எப்படி வந்தன?” என வினவலாம். தமிழ் வாசகர்களுக்குப் பழக்கப்பட்ட சொற்கள் இவை நரசிங்க மூர்த்தியையும் இரண்யனையும் எவ்வளவோ முறை சந்தித்தவர்கள் அல்லவா நம்மவர்கள்?
“சரி ஐயா, இதைத் தழுவல் என்றுதானே சொல்ல வேண்டும்?” என்ற கேள்வி அடுத்ததாக எழும். அது எனக்குத் தெரியும்! ஆனால், இது தழுவல் ஆகாது. தழுவலில் வேண்டியவற்றைத் ‘தழுவி’க்கொண்டு வேண்டாதவற்றை மூலத்திலேயே விட்டுவிடலாம்; கூட்டலாம் குறைக்கலாம். இஷ்டம் போல் மாற்றவும் செய்யலாம். மூல ஆசிரியர் தமிழில் எழுதி இருந்தால் அந்தக் கட்டத்தில் எவ்வாறு கையாண்டிருப்பார் என்பதைத்தான் சிந்தித்துப் பார்க்கவேண்டும். மெய்ஞ்ஞானத்திற்குப் பதில் அஞ்ஞானம் வந்துவிடும்படி செய்துவிடக்கூடாது.
பிற மொழி நாவலில் பழமொழி வந்துவிடுகிறது. அந்தப் பழமொழியின் அர்த்தத்திற்கு இணையாகத் தமிழில் உள்ள பழமொழியைப் போட்டால் நன்றாக இருக்கும். எக்காரணம் கொண்டும் லேசாக ஒதுக்கிவிட்டு அர்த்தத்தை மாத்திரம் பெயர்த்துவிடல் – அந்த இடத்திற்குப் பொருந்தாது.
மேலே சொன்னதைப் போல் இருபொருள் தொனிக்க மூல ஆசிரியர் எழுதி இருக்கிறார் அல்லது கதாபாத்திரங்கள் அவ்விதம் பேசுகின்றன. அந்த நாவலில் உள்ள வாக்கியங்களையே அந்த இடத்தில் தமிழிலும் போட்டுவிட்டால் ஒரு ரஸத்தை – மூல ஆசிரியர் விரும்பித் தந்துள்ள ஓர் இனிய ரஸத்தை நாம் வற்றச்செய்தவர்கள் ஆவோம். ‘நாம்’ என்பது இங்கே மொழிபெயர்ப்பாளர்களாகிய ‘நாம்’ எனக் கொள்க. எந்த ஆசிரியரும் நம்முடைய காளமேகப் புலவரை மிஞ்சிவிட முடியாது. ஆனால் காளமேகத்தை எண்ணத்திற்காகப் பிற மொழிக்காரர் தேடிப்பிடித்து மொழிபெயர்க்கப்போகிறார்? முதல்தர நாவலாசிரியர்களுடைய சொந்த நாவல்களே, தமிழிலிருந்த மற்ற மொழிகளுக்குப் போகாமல் இருக்கும்போது சித்தர் பாடல்களைப் போன்ற ‘நெரடான’ பாதைகளுக்குள் பிறர் ஏன் காலை வைக்கப்போகிறார்கள்? மன்னிக்கவும்; ஓஹோ! மொழிபெயர்க்க ‘கை’யை அல்லவா வைக்கவேண்டும்!
மொழிபெயர்ப்புச் செய்வதே ஒரு தனிக்கலை! மொழிபெயர்ப்புச் செய்வதெப்படி என்பதை எழுதிக் காட்டுவது அதனிலும் நுட்பமான கலை! அன்பை எழுதிக் காட்டுவது சிரமமான காரியம் ! இதயத்தின் மூலந்தான் அறிந்துகொள்ள வேண்டும். மணிக்கணக்கில் பேசலாம். பக்கம் பக்கமாக எழுதலாம். எழுத்தாளன் எதற்கும் அஞ்சான்! எதையும் சொல்லிவிடும் ஆற்றல் பெற்றவன்தான். நமது நெஞ்சமே நமக்குத் தெளிவாகத் துலங்காமல் இருக்கும்போது பிறமொழி ஆசிரியரின் மனத்தை எவ்வாறு படம் பிடிப்பது என்றுதான் நானும் கேள்வி ரூபத்தில் ஒரு கேள்வியைக் கேட்க ஆசைப்படுகிறேன்.
சிலர், நாள் ஒன்றுக்கு நாலு பக்கந்தான் மொழி பெயர்க்கலாம் என்று கணக்கு வைத்திருப்பதாகக் கேள்வி! யோசித்து யோசித்துச் சிந்தித்துச் சிந்தித்துச் சிறிது சிறிதாக எழுதினால்தான் மொழிபெயர்ப்பு சரியாக அமையும் என்ற கருத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. தினசரி நாற்பது பக்கம் மொழிபெயர்க்கவேண்டும் என்றாலும் நான் செய்து கொண்டுதான் போவேன். அதனால் அணுவளவும் அழகு குறைந்துவிடாது; மூலத்தில் சுவை குன்றிவிடாது என்பதே என் அபிப்பிராயம். திருத்தித் திருத்தி மேலும் திருத்த வேண்டும் என்பது எனக்கு உடன்பாடு அல்ல. அடித்து அடித்து வேறுவேறு வார்த்தைகள் போடுவதனால் மூலத்தை அப்படியே கொண்டுவந்துவிட முடியுமா என்ன? குருடும் குருடும் குருட்டாட்டமாடின கதையாகத்தான் அது முடியும். சட்டியில் இருந்தால் அகப்பையில் வருகிறது. அதற்கு என்ன ஆட்சேபணை?
சுருக்கமாகச் சொல்லப்போனால், மூல ஆசிரியரே மொழிபெயர்க்கப்படும் மொழியில் எழுதி இருப்பாரேயானால், குறிப்பிட்ட ஒரு கருத்தை எம்மாதிரி எழுதி இருப்பாரோ அம்மாதிரிதான் மொழிபெயர்ப்பு இருக்கவேண்டும்.
மகரம் தொகுத்த ‘எழுதுவது எப்படி’ நூலில் இடம்பெற்ற கட்டுரை.
வெளியீட்டாளர்: பழனியப்பா பிரதர்ஸ், 1969.