நான் என்ன படிக்கிறேன், ஏன்?
கட்டுரை
நான் என்ன படிக்கிறேன், ஏன்?
ஆர். ஷண்முகசுந்தரம்
சிறுவயதில் என் தாயாரின் மடியில் படித்து விளையாடிக் கொண்டிருந்தது இன்னும் என் மனசில் பசுமையோடு ஞாபகத்தில் இருக்கின்றது. அப்போது எனக்கு நாலைந்து வயதிருக்கும். சதா புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் என் தாயைவிட்டு நான் பிரிய மாட்டேன். என்னுடைய அம்மாவுக்கு நாவல்கள் என்றால் அத்தனை ஆசை. என்ன புத்தகத்தை என் அன்னை வாசித்துக் கொண்டிருப்பார்களோ அதை இப்போது என்னால் நினைவுபடுத்திச் சொல்ல முடியாது. ஒருவேளை ஆரணி, வடுவூரார், கோதைநாயகி அம்மாளுடைய நவீனங்களாக இருக்கலாம். அது எப்படி இருந்தாலும் சிறு வயதிலேயே தாயை இழந்துவிட்ட எனக்கு என் அம்மாவிற்குப் பிரியமான காரியம் புத்தகம் படிப்பது என்கின்ற எண்ணம் வயது ஆக, ஆக என்னுள்ளே வட்டமிட்டு வளர்ந்தது.
குழந்தைகளுக்குப் பொதுவில் கதைகள் கேட்பதில் எப்போதுமே ஆவல்தான். என்னுடைய பாட்டியைக் கதைகள் சொல்லச் சொல்லி அரித்துக்கொண்டே இருப்பேன். என்னுடைய பாட்டனார் ஒருவர் கொஞ்சம் உல்லாசப் பேர்வழி. பாரதத்தில் வரும் வீரர்களைப் பற்றி, ராமாயணத்தில் வரும் தீரர்களைப் பற்றித் தினசரி சொல்லுவார். அந்த நாளில் மதுவிற்கு ‘கன்ட்ரோல்’ கிடையாது. லேசாக தண்ணீர் போட்டுவிட்டு நிலவிலோ, இருளிலோ தன்னருகே என்னைப் படுக்கை வைத்துக்கொண்டு புத்தகத்திலிருந்து படிப்பது மாதிரி கதைகள் சொல்லுவார். கொஞ்சம் என்னுடைய பால பருவத்து லீலைகளை வர்ணிப்பதன் காரணம் ஒரு நல்ல தலைப்பு நல்ல கேள்வி இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஏன் படிக்கிறேன், என்ன படிக்கிறேன், என்ற தலைப்புகள் கருத்துச் செறிவு நிறைந்தது. ஏன் சாப்பிடுகிறீர்கள், ஏன் மாமனார் ஊருக்குப் போகிறீர்கள் என்று கேள்வி கேட்டால் சுலபமாகப் பதில் சொல்லிவிடலாம். ஆனால் நாம் படிப்பதையும், அதன் காரணத்தையும் எளிதில் விளங்கவைக்க முடியாது. நான் முடியாது என்று சொல்லும்போது ஏதோ சிக்கல் நிறைந்தது என்று நண்பர்கள் நினைத்துவிடக்கூடாது. எனக்குத் தெரிந்த ஒரு அன்பர் ஏட்டுச் சுவடிகளை பரிசோதித்துக் கொண்டிருந்தார். ஏடும் அன்பரும் தேடும் விஷயம் என்னவென்று ஒரு கணம் திகைத்துவிட்டேன். சில வேளைகளில் இரவு நேரத்தில் தூக்கம் வராவிட்டால் துப்பறியும் கதைகள் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டு இருப்பவர் அவர். அப்பேர்ப்பட்ட ரசிகசிகாமணி ஏட்டுச் சுவடிக்குள் ஏன் புகுந்தார்? விசாரித்தபோது அது வைத்திய சுவடிகள் என்றும் கீரை வகைகளைப்பற்றி அதில் விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது என்றும் தெரிய வந்தது. அவரிடம் என்ன படிக்கின்றீர்கள்? ஏன் படிக்கின்றீர்கள் என்று கேட்டால் ஒரு கணத்தில் பதில் சொல்லிவிடுவார் அல்லவா?
இந்த இடத்தில் பல வருஷங்களுக்கு முன் படித்த ஒரு சீனக் கதை நினைவிற்கு வருகிறது. இரண்டு நண்பர்கள் விளையாட்டாகப் போட்டி போட்டார்கள், வாழ்க்கையையே ஒருவன் பணையமாக வைத்தான். நண்பர்களில் ஒருவன் லட்சாதிபதி, மற்றவன் சாதாரண ஆள். இந்தப் பணம் இல்லாத இளைஞன் இருபது ஆண்டுகள் மனிதர் கண்களிலே படாத ஓர் தனி அறையில் வாசம் செய்யவேண்டும். வேளாவேளைக்குச் சாப்பாடு மற்ற எல்லாம் ஜன்னல் வழியாக உள்ளே படைக்கப்படும். அந்தத் தனிமையில் இருபது ஆண்டுகளை அவன் கழித்துவிட்டு வந்தால் ஐந்து லட்சம் பரிசு. முடியுமென்று துணிந்து இறங்கிவிட்டான். பொழுதைப் போக்க படிப்பதைத் தவிர வழி என்ன? முதலில் வேடிக்கை விநோதங்கள், துப்பறியும் கதைகள் படித்தான். பிறகு புராணங்கள் அப்புறம் கற்பனைக் கதைகள். பின்னர் வேதாந்தம் தத்துவம். கடைசியாக அவன் படிக்க வேண்டிய விஷயங்களே ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. உள்ளம் நிறைவு பெற்றுவிட்டது. இதற்கிடையில் போட்டாபோட்டி லட்சாதிபதி தன் செல்வத்தை இழந்துவிடுகிறான். நாளைக்கு நிபந்தனையின் கடைசி நாள். உள்ளே இருப்பவன் வெளியே வந்தால் எஞ்சியிருக்கும் தன் பொருட்களை வாக்குப்படி அவனுக்குத் தத்தம் செய்துவிட வேண்டும். பிறகு லட்சாதிபதி சபதப்படி ஓட்டாண்டியாகி வீதியில் அலையவேண்டியதுதான். அந்த நிலையை அவன் விரும்பவில்லை. கூண்டுக்குள் இருக்கும் அன்பனைக் கூண்டுக்குள் இருக்கும் பறவையை ஒரு நொடிக்குள் குரல்வளையை நெரித்துக்கொன்று தீர்ப்பதுபோல் தனது நண்பன் உயிருக்கு உலைவைத்துவிட்டால் என்ன என்று நினைத்தான். செய்கையில் இறங்கினான். இருட்டில் பளபளக்கும் கத்தியோடு உள்ளே பிரவேசித்தான். ஆனால் அங்கே ஐந்து லட்சத்தைப் பெறவேண்டிய அந்த உருவம் இல்லை. நிறைகுடம் தளும்பாது. பணத்தின்மேல் உள்ள பற்றுதல் பறந்துவிட்டது. ஆசாமியும் ஒருவருக்கும் தெரியாமல் வெளியேறிவிட்டான்.
இந்தக் கதை என் இதயவானில் சில வேளைகளில் மின்னும். மீண்டும் என் பிள்ளைப் பிராயத்துப் பெற்றிகள் சில கூற பணிவன்புடன் உங்களிடம் விழைகின்றேன். புரிந்துகொள்ளும் பருவம் வந்ததும் நானாக அல்லி அரசாணி மாலையிலிருந்து அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து வரை படித்தேன். கவிதைகளிலே எனக்கு இயல்பாக ஒரு காதல், சங்க இலக்கியத்திலிருந்து தற்கால வெற்றுச் செய்யுட்கள்வரை ஒரு நோட்டம் விட்டிருக்கின்றேன்.
பார்சீ, உருது இலக்கியங்களிலே அரிய பொக்கிஷங்கள் மண்டிக்கிடக்கின்றன என்று என் நண்பர்கள் சொன்னார்கள். அதற்காகவே உருது, பார்சீ மொழிகளைக் கற்றுக்கொண்டேன். ஒரு முஸ்லிம் பெரியார் முறைப்படி எனக்குச் சொல்லித் தந்தார். கற்றது கைமண் அளவுதான் அதிலும் பார்சி மொழியை அடிக்கடி பழக்கப்படுத்திக் கொள்ளாத காரணத்தால் இப்போது கொஞ்சம் மறக்கிறது. ஆனால் உருதுவும் ஹிந்தியும் அப்படி அல்ல. ஒரு ஐம்பது புத்தகங்கள் ஹிந்தியிலிருந்து மொழி பெயர்த்திருக்கிறேன். ஆங்கிலத்திலிருந்து பலப்பல!
நான் மூன்றாவது பாரம் படித்துக்கொண்டிருக்கும்போது ஈரோட்டு வாசகசாலையிலுள்ள புத்தகங்கள் அனைத்தையும் கரைத்துக் குடித்துவிட்டேன். முக்காலே மூணுவீசம் நாவல்கள்தான். ஏன்படித்தேன் என்றால் எனக்கு இன்பத்தை அவைகள் கொடுக்கின்ற காரணத்தால் அப்போது படித்தேன்.
டாக்டர். ஆர்.கே. ஷண்முகம் செட்டியாரோடு ஒரு பதினைந்து வருஷங்கள் நெருங்கிப் பழகினேன். தனிப்பட்டவர் வைத்திருக்கும் நூல் நிலையத்தில் அவருடைய நூல் நிலையம் மிகப்பெரியது. உலகத்தின் தலை சிறந்த புத்தகங்கள் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நாடகம், சிறுகதை, கவிதைகள், மனோதத்துவம், பொருளாதாரம், விஞ்ஞானம் - இப்படி எண்ணற்ற துறைகள் உண்டே அவ்வளவிலும் உன்னதமான ஆசிரியர்களின் நூல்களை அங்கே காணலாம். அந்தப் புத்தகங்கள் எனக்குப் பெரும் விருந்தளித்திருக்கின்றன.
தமிழ் எழுத்தாளர் உலகில் என் பெயர் அடிபட ஆரம்பித்தபோது அதில் ஜாம்பவான்கள் என்று பெயர் பெற்றோர், நீங்கள் அதைப் படித்தீர்களா, இதைப் படித்தீர்களா என்று கேட்பார்கள். அவர்களுக்காகவும் நான் பலவற்றைப் படித்தேன். நான் படிக்காதவற்றைப் படிக்கவில்லை என்று ஒப்புக்கொள்ளுவதில் வெட்கம் என்ன இருக்கிறது?
இன்னொரு முக்கியமான காரணம் சிறுவயதிலிருந்தே நான் புத்தகங்கள் படிப்பதற்கு இயற்கையாக அமைந்திருந்தது. என்னுடைய தம்பிக்காகப் பல கதைகளை படித்துக்காட்டுவேன். அவன் கேட்டுக்கொண்டு இருப்பான். வயது வந்த பின்னரும் அவனுக்காகப் பல புத்தகங்களைப் படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஒரு குறிப்பிட்ட நாவலைப் படித்துவிட்டு அதிலுள்ள உருக்கமான கட்டங்கள், உன்னதமான கட்டங்கள் உயிரோட்டம் இவற்றைத் தம்பிக்கு எடுத்துச் சொல்லுவேன். அவன் ரேடியோவில் அல்லது பொதுக்கூட்டத்தில் சிற்பத்தைப் பற்றியோ கிராமங்களின் உயிர்நாடியைக் குறித்தோ, அல்லது சிபார்சு தொல்லை, நாகரீக எல்லை இப்படி என்னத்தைப் பற்றியாவது பேசுவதற்கு ஒப்புக்கொண்டிருப்பான். தம்பிக்கு நேரமிருக்காது, பொறுமையிருக்காது! அவனைத் தேடிப் பல பிரமுகர்கள் வருவார்கள். தம்பியும் சில பிரபலஸ்தர்களைப் பேட்டி காணச் செல்வான். சுருங்கக் கூறின் என் தம்பி ஒரு பெரிய மனிதன். இவனுடைய பெரிய மனுஷத்தனத்தை நிலைநாட்ட வேண்டி நான் பல புத்தகங்கள் படிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஒரு நாளைக்கு ஆறுமணி வீதம் நூறு ஜென்மங்கள் எடுத்தாலும் (ஒரு ஜென்மத்திற்கு நூறுவருடம் என்றே வைத்துக்கொள்ளலாம்) ரஷ்ய வாசகசாலையிலுள்ள புத்தகங்களைப் படிக்க முடியாது என்று ஒரு விமர்சகர் விமர்சனம் செய்தார். ஒரு நூல் நிலையத்தில் பல லட்சம் புத்தகங்கள் இருக்க, ஒரு ஜென்மத்தில் எத்தனை புத்தகங்களை இந்த அல்பஆயுசு பிராணி வாசித்து விட முடியும்?
முடிவாக சில வார்த்தைகள். இப்போதெல்லாம் எனக்காக நான் படிப்பது வேதாந்தப் புத்தகங்கள். மகான்களுடைய மணிவாசகங்களுக்குள் என்னை மறந்து ஈடுபடுவதிலே ஒரு இனிமை தென்படுகின்றது. மற்றதெல்லாம் லேசாகத் தோன்றுகிறது.
என்ன படிக்கிறேன் என்ற கேள்விக்கு நேராகப் பதில் சொல்லிப் பார்க்கலாம். பிரசுரகர்த்தர் மொழி பெயர்த்துக் கொடுங்கள் ஐயா என்று கொடுக்கும் புத்தகங்களை இப்போது படிக்கிறேன். ஏன் படிக்கிறேன் என்ற கேள்விக்கு பதில் ரொம்பவும் பணம் கிடைக்கிறது. ஆதலால் அதைப் படிக்கிறேன். மொத்தத்தில் கையில் காசில்லாவிட்டால் எனக்கு எதையும் படிக்க மனசே வராது.
எழுத்து-44, ஆகஸ்ட் 1962