அரசதிகாரத்தின் அங்கமாகும் எதிர்ப்பரசியல்
தலையங்கம்
அரசதிகாரத்தின் அங்கமாகும் எதிர்ப்பரசியல்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கூட்டணி முடிவாகி ஏறக்குறைய ஐந்து பிரதான அணிகள் களத்தில் நிற்கின்றன. தொகுதிகள் பங்கிடப்பட்டுப் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. கடந்த இரு ஐந்தாண்டுகளாகத் தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சியே நடந்துள்ளது. மத்தியிலும் பாஜக ஆட்சி இரண்டாவது முறையாக நீடிக்கிறது. இவ்விரண்டு ஆளுங்கட்சிகளும் இத்தேர்தலில் கூட்டணி அமைத்து ஓரணியாக நிற்கின்றன. எதிர்க்கட்சியாக இருந்துவந்த திமுக தலைமையிலான அணி எதிரில் நிற்கிறது.
இரண்டு அணிகளிலும் நிறைய சிறிய கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. பெரிய கட்சிகளால் கண்டுகொள்ளப்படாத, அவை காண விரும்பாத பிரச்சினைகளைக் கள எதார்த்தத்தோடு எதிர்கொண்டவை பெரும்பாலும் சிறிய கட்சிகளே. இடதுசாரி கட்சிகள், தலித் அமைப்புகள் போன்றவற்றை இந்தவகையில் குறிப்பாகச் சுட்ட முடியும். ஆனால் அவற்றின் சாதகங்கள் அப்போராட்டங்களோடு தொடர்புகொண்டிராத கூட்டணிக்குத் தலைமையேற்கும் பெரிய கட்சிகளுக்குப் போய்ச் சேருகின்றன. தவிர்க்க இயலாமல் கூட்டணி அரசியலுக்காகச் சிறிய கட்சிகள் செய்யும் தியாகங்கள் இவை எனலாம். இந்நிலையில் தேர்தலில் ஈடுபடாத சிறிய கட்சிகளை விடவும் தீவிரமாகச் செயல்பட்டு வந்திருக்கிற பொதுநல அமைப்புகளின் நிலையும் அவற்றின் செயற்பாட்டாளர்களின் நிலையும் என்னவாக இருக்கின்றன என்கிற கேள்வியையும் நாம் எழுப்பிப் பார்க்க வேண்டியுள்ளது. பெரும்பாலும் இவ்வமைப்புகள் ஏதாவது குறிப்பான பிரச்சினையொன்றின் அடிப்படையில் எழுந்து அதில் மட்டும் தொடர்ச்சியைப் பேணி வருபவை. இந்த அமைப்புகள் இத்தேர்தலை எவ்வாறு அணுகியிருக்கின்றன, அவற்றின் பங்கு என்னவாக இருக்கிறது என்றறிவது அவசியம்.
கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் பல்வேறு அரசியல், சமூக, பண்பாட்டுப் போராட்டங்கள் எழுந்துள்ளன. அவற்றில் பல பிரச்சினைகள் அரசின், கட்சிகளின் கவனத்தைப் பெற்றுள்ளன. அதன் காரணமாக அரசு கொணரவிருந்த- நடைமுறைப்படுத்த இருந்த திட்டங்கள் சில நிறுத்திவைக்கப்பட்டன; சில பாதியிலேயே கைவிடப்பட்டன. ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட், கூடங்குளம், எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்களையும், ஜல்லிக்கட்டுக்கான தடை போன்ற பண்பாட்டுப் பிரச்சினைகளையும் இவ்வாறு கூற முடியும். இதையொட்டித் திட்டங்களைக் கொண்டு வந்த ஆட்சி, கொண்டுவர ஆதரவளித்த கட்சிகள் ஆகியவை பின்வாங்கியுள்ளன. இதற்கு ஒரே காரணம் அக்கட்சிகள் தேர்தல் காலத்தில் மக்களைச் சந்திக்க வேண்டியிருப்பதுதான். தேர்தல் ஜனநாயகத்தின் பலங்களில் இப்பண்பு பிரதானமானதாகும். கட்சிகளுக்கு இத்தகைய அழுத்தங்களைத் தந்தவை இப்போராட்டங்களேயாகும்.
குறிப்பிட்ட விஷயத்திற்கு எதிராகவே இக்குரல்கள் எழுந்தன என்ற முறையில், சமூகத்தின் புதிய பிரச்சினைகள் அவை என இனங்காட்டுவதாகவும் அப்போராட்டங்கள் அமைந்தன; போராட்டங்கள் தானாக நடப்பதில்லை. அவற்றை உருவாக்கிய, வழிநடத்திய அமைப்புகளும் ஆளுமைகளும் உண்டு. தமிழகத்தில் இவ்வாறு பல அமைப்புகளை / செயற்பாட்டாளர்களைச் சொல்ல முடியும். இப்போராட்டங்கள் ஏதோவொரு வகையில் அரசை எதிர்த்தோ வலியுறுத்தியோ உருவானவை. ஆதலால் இந்த ஆளுமைகளும் அமைப்புகளும் இயல்பாகவே அரசியல் பேசுபவர்களாகவும், அரசியல்மீது தாக்கம் செலுத்துபவர்களாகவும் இருந்தனர். அத்தகையவர்களின் பங்கு இத்தேர்தலில் இருக்கிறதா? இருக்கிறது எனில் எந்த அளவிற்கு இருக்கிறது? தேர்தல் வாக்குறுதிகளிலோ, தேர்தல் அறிக்கைகளிலோ இப்பிரச்சினைகள் எந்த அளவிற்குப் பிரதிபலித்துள்ளன?
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் கூர்மையடைந்திருக்கும் விஷயங்களில் ஒன்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு. பத்தாண்டுகளில் அரசியல் தளத்தில் எழுந்த கூடங்குளம், ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் போன்ற போராட்டங்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கான நியாயத்தைச் சேர்த்திருக்கின்றன.
இதையொட்டி இவ்விழிப்புணர்வைக் கட்சிகளும் கணக்கில் எடுத்துக்கொண்டன. திமுக சுற்றுச்சூழல் அணி ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறது.இது வரவேற்கத்தக்கது. அதேவேளையில் கட்சிக்கு வெளியே செயல்பட்டுக்கொண்டிருந்த செயல்பாட்டாளர்களையும் அது உள்ளிழுத்திருக்கிறது. இது வேறு தளங்களில் செயற்பட்டவர்களுக்கும் பரவலாம். அடிப்படையில் இதனை நபர்கள் பிரச்சினையாகப் பார்க்க வேண்டியதில்லை.
அக்கட்சிகள் இதுபோன்ற விழிப்புணர்வை எந்த அளவிற்குக் கணக்கில் கொள்கின்றன? எந்த அளவிற்கு வளர்த்தெடுக்கப் போகின்றன? இவற்றைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இந்நிலையில் இச்செயற்பாட்டாளர்கள் வெளியே அழுத்தக் குழுக்களாக இருப்பதால் ஏற்படும் விளைவுகளுக்கும், கட்சிக்குள் இருப்பதால் ஏற்படப்போகும் மாற்றங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் எத்தகையவை? ஒரு கட்சி ஆட்சியை வழிநடத்தும் கட்சியாக இருப்பதிலும், எதிர்க்கட்சியாக இருந்து திட்டங்களை அணுகுவதிலும் பாரிய இடைவெளிகள் இருந்திருக்கின்றன.
அந்நிலையில் ஆதரவு நிலைப்பாடு எடுத்த இயக்கங்களின், உள்ளே சென்ற செயற்பாட்டாளர்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? மீண்டும் அந்த ஆட்சியை எதிர்ப்பது, பிறகு அடுத்த ஆட்சியை ஆதரிப்பது என்றாகுமா? கட்சிக்குள் இருக்கும்போது முந்தைய அளவிற்கு எதிர்க்க முடியுமா?
இவையெல்லாம் இன்றைய மக்கள் நல இயக்கங்களின், செயற்பாட்டாளர்களின் முன்னே நிற்கும் கேள்விகள். அரசுக்கு வெளியேதான் நிற்க வேண்டும் என்ற அறுதியிட்ட முடிவைச் சுமத்துவது இக்கேள்விகளின் நோக்கமல்ல. குறிப்பான பிரச்சினைகளையொட்டி எழும் மக்கள் நல இயக்கங்கள், கட்சிகள் விஷயத்தில் உறுதியான அரசியல் பார்வையை எழுப்பிக்கொள்ள வேண்டிய அவசியமும் இருப்பதாலேயே இவை சொல்லப்படுகின்றன. பிறகு அதனடிப்படையில் ஓர் அரசை ஏற்பது, மறுப்பது, உள்ளே செல்வது, அதிலிருக்கும் வரையறையை இனங்காண்பது என்று அமையலாம்.
ஒருவர் எந்தப் பிரச்சினையைப் பேசிக் கட்சிக்குள் செல்கிறாரோ அவர் பிறகு அக்கட்சிக்குள்ளோ கட்சி தலைமையிலான ஆட்சியிலோ அக்குறிப்பிட்ட பிரச்சினைக்கு மட்டும்தான் பொறுப்பேற்பாரா, பிற விசயங்கள் பற்றியும் கருத்துத் தெரிவிப்பாரா அல்லது கட்சியில் / ஆட்சியில் நடக்கும் பிற கெடுதிகள் பற்றியும் பேசுவாரா? பேச முடியுமா?
ஜல்லிக்கட்டுப் போராட்டத்தையொட்டி அடையாளம் பெற்ற ஒருவர் தேர்தலிலேயே போட்டியிடுகிறார். சுற்றுச்சூழல் தவிர்த்துத் தேர்தலின் கெடுதிகளான பணம், சாதி என்கிற வரையறைகளை ஏற்றே போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.