சில பரிந்துரைகள்
ஜீவகரிகாலன், பதிப்பாளர், யாவரும் பப்ளிகேஷன்ஸ்
சில பரிந்துரைகள்
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் அரசின் அனுமதி பெற்றுக் சென்ற மாதம் நடந்தேறிய சென்னை புத்தகக்காட்சி பலவிதத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒருபக்கம் முழுமையான வெற்றி, மற்றொரு பக்கம் தோல்வி என்று இருசாரார்கள் பேசி வந்தார்கள். எப்போதும் இரண்டு அரங்குகளை எடுக்கும் நாங்கள், முடங்கிப்போன இக்காலத்தில் செலவுகளைக் குறைக்கும் பொருட்டு இரண்டிற்குப் பதிலாக ஒற்றை அரங்கை மட்டும் எடுத்தோம். ஆனால் எங்களது முடிவைக் கேள்வி கேட்கும் விதமாக வாசகர்கள் படையெடுத்தனர்.
பதிப்புத்துறையின் நிலை:
ஏற்கெனவே பதிப்புத்துறை நலிவுற்ற துறை என்று அழைப்பதில் குறைந்தபட்சம் ஒரு பத்தாண்டுகளாவது யாருக்கும் ஆட்சேபம் இருக்கவில்லை. நூல்களுக்கான தயாரிப்புச் செலவு கூடுவது, நூலக ஆணை உள்ளிட்ட இதர அரச உதவிகள் முறைப்படுத்தப்படாமல் முறைகேடுகளுக்கு இடம் தருவதாக இருப்பது, ஒலிப் புத்தகங்களின் வரவோடு திருட்டுத்தனமாக மின்புத்தகங்கள், தரவிறக்கம் செய்யப்பட்டுக் குற்றவுணர்வின்றிப் பகிரப்படுவது என இடர்களைத் தாங்கித் தாக்குப்பிடித்து வந்த தமிழ் பதிப்புத்துறை கோவிட் ஊரடங்கு காலத்தில் சொல்லமுடியாத அளவு இழப்புகளைச் சந்தித்தது. பல நிறுவனங்களுக்கும் தங்கள் தொழிலை மேற்கொண்டு நடத்துவது மிகவும் கடினமாகிப் போனது. பல சிறு கடைகள், கிளைகள் மூடப்பட்டன.
நாங்களும் ஓர் ஆறு மாத காலமாக அலுவலகம் இல்லாமல், புத்தகங்களை விற்பனை செய்ய இயலாமல் பெட்டியில் கட்டிப் பரண் மேல் போட்டு வைத்திருந்தோம்.
வாசிப்பு இயக்கங்களின் முன்னெடுப்பு:
இந்தப் புத்தகக்காட்சி, வெற்றி என்று சொல்பவர்களுக்கு அவர்களது கோவிட்காலத் தயாரிப்புதான் காரணமாக அமைந்தது என்று சொல்ல முடியும். கேளிக்கைப் பூங்காக்கள், விடுதிகள், மைதானம், திரையரங்கு என்று எல்லாமே மூடப்பட்டிருக்க புதிதாகவோ அல்லது விட்டுப்போன பழக்கமாகவோ மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருந்தார்கள். வாசிப்பவர்கள் மேலும் தீவிரமாயிருந்தார்கள். ஊரடங்கு காலத்தில் யூட்யூப், ஸ்டோரி டெல் உள்ளிட்ட காணொளி, ஒலிப் புத்தகங்கள் வாயிலாகவும், பரவலான முறையில் இணைய இதழ்கள் வாயிலாகவும் எப்போதும் இல்லாத எண்ணிக்கையில் நூல்களை நோக்கி மக்கள் கவனம் குவிந்திருந்தது.
பதிப்பகங்கள் பலவும் இதுவரையில்லாத அளவிற்கு மிகக்குறைந்த விலையில் தங்கள் நூல்களை வாசகர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்ததும் வாசிப்புப் பழக்கத்தை அதிகரித்தது. இந்தச் சம்பவங்கள் நடந்தேறவில்லையென்றால், புத்தகக் காட்சியில் அதுவும் கோவிட் தொற்றின் இரண்டாவது அலை பரவல் குறித்த அச்சம் மிகுந்த நாட்களில் காணும் பொங்கலுக்கு இணையான கூட்டத்தைப் புத்தக அரங்குகளில் கண்டிருக்க முடியாது.
ஆக ஊரடங்கு காலத்தில் வாசகர்களோடு எவ்விதத்திலாவது தொடர்பு வைத்திருந்தவர்கள் x வைக்காதவர்கள் எனப் பிரித்துக்கொண்டால் சென்னை புத்தகக்காட்சி வெற்றி x தோல்வி என்கிற முடிவுகளைப் பொருத்திப் பார்க்க முடியும். அது இல்லாமலும் சில முக்கியக் காரணங்கள் இருக்கவே செய்கின்றன.
புதிய தலைப்புகள்:
கண்காட்சியின் வெற்றியில் புதிய நூல்கள் வைத்திருப்பவர்கள் ஓரளவு நல்ல விற்பனையைச் செய்திருந்தார்கள். புத்தகக்காட்சிக்கு வாசகர்கள் வர நிறையவே தடைகள் இருந்தன. மார்ச் மாதம் தேர்வுகளின் மாதம், ஏற்கெனவே ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்று ஊருக்குச் சென்றவர்கள், பணத் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணத்தாலும் வராமல் இருக்கும் கூட்டம் ஒரு விதம். தீவிரமாக கோவிட் காலங்களில் வாசிக்க ஆரம்பித்தும், சமூக ஊடகங்கள் வாயிலாகப் பதிப்பக, புத்தகக் கடைகள் தொடர்பில் இருக்கும் வாசகர்களின் படையெடுப்பு என்று இந்த வெற்றியைக் கணக்கிடும்போது புதுவரவுகள்மீது மக்களுக்குக் கவனம் இருந்தது. நாங்கள் வெளியிடும் புதிய நூல்களோடு புதிய வெளியீடுகளில் பெரும்பாலானவற்றைக் காட்சிப்படுத்தியிருந்தோம். எதிர் வெளியீடு, தமிழ்வெளி, எழுத்து பிரசுரம் உள்ளிட்ட பதிப்பகங்கள் வெளியிட்டிருந்த புதிய வெளியீடுகள் கண்காட்சியில் கவனம் பெற்றன. எங்களுக்குச் சென்ற வருடத்திய கணக்கோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் புதிய நூல்களின் (ப்ரொமோஷன் குறைவான நூலுக்கும் பொருந்தும்) விற்பனை விகிதம் பத்துமுதல் இருபது சதவீதம் கூடியிருந்தது.
பிக்பாஸ் பரிந்துரை
ஊடகங்களில் வரும் செய்தியைப் பின்பற்றியே நூல்களை வாங்குபவர்கள், புத்தகக் காட்சியின்போது கையில் நூல் விமர்சனங்கள் இடம்பெற்ற நாளிதழ்களின் வெட்டிய பகுதிகளைக் கொண்டு வருபவர்கள் என இந்த வருடம் புதிய வாசக இனம் உருவானது. அவர்கள் பிக்பாஸ் பரிந்துரைகளைத் தங்களது செல்பேசியின் மெசெஞ்சர்களில் குறித்துவைத்திருந்தார்கள். பெரிய அளவில் இந்தப் பரிந்துரைக்கான விற்பனை புத்தகக் காட்சியில் தாக்கம் பெற்றிருந்ததை மறுக்க இயலாது.
யூட்யூப்-வீலாக்-இன்ஸ்டாக்ராம் பரிந்துரைகள்
இது தவிரவும் நிறைய வாட்ஸப் அட்மின்களே பிக்பாஸாக உருமாறிப் பல்வேறு குழுக்களில் புத்தகப் பரிந்துரை செய்துவந்தார்கள். அப்படியான குழுக்களில் வெவ்வேறு எழுத்தாளர்களின் பரிந்துரைகளும் பட்டியல்களும் நூல்கள் வாங்கிய முகப்புப்படமும் என நூல்களை வாங்கத் தூண்டும் அம்சங்களாக இருந்தன. ஸ்ருதி டீவி உள்ளிட்ட ஊடகங்கள் கண்காட்சி தொடங்கிய நாளிலிருந்து படம்பிடித்துக்கொண்டிருந்தன. இந்த வருடம் நிறையவே சுயாதீன யூட்யூப் சேனல்கள் நூல்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தமை மேலும் ஆரோக்கியமான வாசிப்புச் சூழலை உருவாக்கும் என நம்புவோம்.
க்ளாஸிக் புத்தகங்கள், அரசியல் புத்தகங்கள் போன்ற நூல்களுக்கு எப்போதுமிருக்கும் வரவேற்பு சற்றும் குறையவேயில்லை.
கண்காட்சியில் ஒருபுறம் நஷ்டம் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் மேற்சொன்ன எந்த வகையிலுமான புத்தகங்களையும் பதிப்பித்தவர்களாகவோ / விற்பனை செய்யாதவர்களாகவோ இருப்பார்கள் என்று புரிந்துகொள்ள முடியும்.
இத்தனைக்கும் புத்தகக்காட்சி குறித்த பபாஸியின் விளம்பரங்கள் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இன்னும் பாரிய அளவில் இருந்திருக்க வேண்டும். சமூக ஊடகங்களை ஓரளவிற்குச் சரியாகப் பயன்படுத்தியது இந்த வெற்றியை வலுப்படுத்தும் காரணமாக அமைந்துள்ளது. (கடந்த ஆண்டுகளில் அப்பளக்கடை வணிகமே புத்தகங்களைவிட மிகுதி என்று தொடர்ந்து மீம்கள் உலவி வந்ததை இங்கு நினைவுகொள்ள வேண்டும்). இந்த விளம்பரங்களுக்கு முக்கிய காரணமாகத் துணை முதல்வர் கண்காட்சியைத் திறந்துவைத்தது ஊடகங்களின் கவனயீர்ப்பிற்குக் காரணமாகியது. குறிப்பாக பபாஸியின் வேண்டுகோளின்படி ஒவ்வொரு நாளும் புத்தகப் பரிந்துரைகள் வாயிலாக நூல் விற்பனையைத் தூண்டிவிட்ட நடிகர் / மக்கள் நீதி மைய நிறுவனர் கமலஹாசனின் ஈடுபாடும் குறிப்பிடப்பட வேண்டியவை.
எந்தவிதத்திலும் ஒத்துவராத மார்ச் மாதத்தில், அதுவும் ஊரில் பெரும்பாலான ஆட்கள் இல்லாத காலத்தில், எல்லாவற்றையும்விட நவம்பரில் இருந்து பிப்ரவரி வரை குறைந்தது 15 முதல் 20 வரை புத்தகக்காட்சிகளை வெவ்வேறு திருமண மண்டபங்களில், திடல்களில் நடத்தப்பட்ட புத்தக்காட்சிகளைக் கடந்தும் பபாஸி நடத்திய புத்தகக்காட்சித் தகவல் அறிவியல் பார்வையில் வெற்றிகரமாகக் கொள்ள இதுவே காரணம்.
சென்னையிலேயே வருடத்திற்கு இரண்டு புத்தகக்காட்சி, ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தகக்காட்சி என்று எல்லாவற்றைக் கடந்தும் பபாஸி புத்தகக்காட்சி சிறப்புடனே இருக்கும். அதுவும் எங்களைப் போன்ற சிறு பதிப்பகங்களுக்கு ஒரு நூலிற்குக் கூட நூலக ஆணை என ஏதுமற்ற நிலையில் புத்தகக்காட்சி ஒன்றே வரம். மேலும் திருட்டுப் புத்தகங்களை வாசிப்பது, சட்டத்திற்கு புறம்பான முறையில் பி.டி.எஃப் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்வது, பகிர்வது தொடர்பான துறையைக் காப்பாற்ற வேண்டிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுக்கான இடத்தை உறுதி செய்ய வேண்டும். இதற்காகவாவது புதிய தலைமுறையைச் சேர்ந்த பதிப்பாளர்களையும் பபாசி அரவணைக்க வேண்டும்.
வருங்காலத்தில் நடைபெறப்போகும் புத்தகக்காட்சியானது சிறப்பான அரங்கமைப்பு, கழிவறை வசதி, உணவுக்கூட ஏற்பாடு (இந்த வருடம் சிறப்பாக இருந்தது) எழுத்தாளர்களுக்கான அரங்கங்கள், ஏனைய மொழிகளில் பதிப்பிப்பவர்களைக் கௌரவ வருகையாளர்களை அழைப்பது என முன்னெடுப்புகள் நிகழ நிகழ சென்னை புத்தகக்காட்சி, கலாச்சாரத் திருவிழாவாக, உலகளாவிய தமிழர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வாகப் பரிணமிக்கும் சாத்தியங்கள் இருப்பதை உணர்ந்து அதற்கான பயணத்தைத் தொடங்க வேண்டிய காலமிது.
இத்தகைய பயணத்திற்கு உலகளாவிய அளவில் மொழி சார்ந்து இயங்கிவரும் நிபுணர்கள், பதிப்பாளர்கள், தமிழ்ச்சங்க நிர்வாகிகள், படைப்பாளர்களை ஆலோசனைக் குழுவில் வைத்திருக்க வேண்டும். அது மற்ற மாநிலங்களைவிட அறிவுத்துறையில் தமிழகத்தை முன்னிறுத்தும் தலையாயச் செயலாக மாற்றும்.
மின்னஞ்சல்: jeev.karikalan@gmail.com