புத்தகங்கள் தற்கொலைக்குத் தூண்ட வேண்டும்
சிவராஜ் பாரதி
புத்தகங்கள் தற்கொலைக்குத் தூண்ட வேண்டும்
அசாதாரண சூழலுக்குப் பிறகு மக்கள் சற்று சுதந்திரமாக கூடியிருக்கும் இந்தப் புத்தகக் காட்சி குறித்துத் தொடர்ந்து பலரது கருத்துகளைப் பதிவுசெய்யும் முயற்சியில் இன்று, கவனிக்கத்தக்க படைப்புகளைத் தந்த இளம் எழுத்தாளர் ஒருவரைச் சந்திக்கவிருக்கிறோம். இனி அவருடனான உரையாடல்…
பொதுவாக முதலில் கேட்கும் கேள்வியை உங்களிடம் கடைசியாகக் கேட்கலாம் என்று நினைக்கிறேன். எனவே இரண்டாவது கேள்வியிலிருந்து தொடங்கலாம். கொரோனா காலகட்டத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்து கொஞ்சம் வெளிவரத் தொடங்கியதற்குப் பிறகான புத்தகக் காட்சி இது. கொரோனா காலத்தையும், இந்தப் புத்தகக் காட்சியையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?
கொஞ்சம் புதுசுதான். அச்சம், பதற்றம், குதூகலம், ஆர்ப்பரிப்பு, வெறுமை எனக் கலந்துகட்டிப் பந்தாடியது. அனுபவமாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். வேறொன்றும் செய்வதற்கில்லை. இது நடுத்தர, மேல்தட்டு வர்க்கத்தினருக்குத்தான். உழைக்கும் அடித்தட்டு மக்களுக்கு கொரோனா காலத்திலும் யதார்த்தம் மாறவில்லை. உழைப்புச் சுரண்டல் இன்னும் அதிகமாகவே இருந்த காலகட்டம் இது. மற்றபடி, தீண்டாமையின் கொடுமையைப் பிற சமூகத்தினரும் கொஞ்சம் உணர்ந்திருக்கிறார்கள். என்னளவில் அதுவொரு நல்ல விஷயம். கொரோனா காலகட்டப் புத்தகக் காட்சி, பதிப்பாளர்களுக்கு எப்படியென்று தெரியவில்லை. இலக்கியத்திற்கு மிகவும் நன்மையாக அமைந்துவிட்டது. கிட்டத்தட்ட ஆறுமாத காலம் வீட்டுக்குள்ளேயே இருந்ததால் பலதரப்பட்ட புத்தகங்களை மக்கள் வாசித்திருப்பார்கள். இலக்கியச் செறிவும் தேர்வும் மேம்பட்டிருக்கும். இனிவரும் புத்தகக் காட்சிகள் பெரும் திருவிழாவாக இருக்கும்.
வாசகர்களின் இலக்கியத் தேர்வு எந்த அளவு மேம்பட்டிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
எளிமையாகச் சொல்வதென்றால், கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்தை நோக்கிய அளவில் மேம்பட்டிருக்கும்.
சரி, உங்களது இலக்கிய தேர்வு எந்…
என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். முதலில் சுஜாதா, பாலகுமாரன் என்றுதான் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் அவர்கள் எனக்குப் போதவில்லை. எனவே சுந்தர ராமசாமியிடம் வந்தேன். அவர் மூலமாக நகுலன், பிரபஞ்சன், சுகுமாரன், தேவிபாரதி என்ற மரபு வரிசை ஒருபக்கம், மறுபுறம் நானாக கண்டடைந்த தோப்பில் முஹம்மது மீரான், சூடாமணி என இவர்கள் எல்லாருமே எதிர்காலம் நோக்கி நகர்த்திய வழியில் சிவசங்கர் எஸ்.ஜே., ராணிதிலக், மௌனன் யாத்ரிகா, பஹீமா ஜஹான் போன்றோர் தொடர்ந்து வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள். இளைப்பாறுதலுக்காகத் தோப்பிலிடம் நின்றால்கூட, ‘இளைப்பாறியது போதும்’ என்று இழுத்துப்போகிறார்கள். இதுதான் முக்கியம். கொரோனா காலத்தில் இந்தப் பரப்பு இன்னும் விரிந்திருக்கிறது. மொழிபெயர்ப்புகள் இலக்கியத் தேர்வை மேம்படுத்தியிருக்கின்றன. ஸ்டாலின் ராஜாங்கம், டி. தர்மராஜ் போன்றோரது அ-புனைவு சார்ந்த படைப்புகள் சமூக அரசியல் தெளிவை ஏற்படுத்தியிருக்கின்றன.
புத்தகக் காட்சிகள் என்ன மாதிரியா...
முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம், வலதுசாரியாகவும் இருக்கலாம். புத்தகக் காட்சிக்கு வரும்போது, உங்கள் கருத்துக்கு ஒவ்வாத பல புத்தகங்களையும் முகங்களையும் நீங்கள் தொடர்ச்சியாகப் பார்க்க நேரும். அப்படிப்பட்ட நிலையில் இயல்பாகவே மாற்றுக்கருத்துக்களையும் வாசிக்கலாமே என்று தோன்றும்; விவாதிக்கத் தோன்றும். அப்படி நடந்துவிட்டால் அதுதானே புத்தகங்களின் வெற்றி. இடதுசாரிகளுக்கும் இது பொருந்தும். தீவிரப் பற்று என்றுமே ஆபத்துதான். இடதும் வலதும் அல்லாத மத்திமப் பாதைதானே ஆசான் புத்தரின் வழி. ஆனால் புத்தகக் காட்சிகளில் இதுபோன்ற விவாதங்களுக்கு வசதியான இடம் இல்லை. எழுத்தாளர் – வாசகர், எழுத்தாளர் – எழுத்தாளர் கலந்துரையாடலுக்குத் தனியிடம் ஒதுக்கியிருக்கலாம். இவ்வளவு பெரிய இடம் இருக்கிறதே. தாராளமாகச் செய்யலாமே. கதாபாத்திரங்கள் – வாசகர்கள் உரையாடல் நடந்தால் கூட மிகச்சிறப்பாய் இருக்கும். 43 ஆண்டுகளாக இந்தப் பண்பாட்டுத் திருவிழாவைப் பாராட்டத்தக்க வகையில் நடத்தும் பபாசியின் மீதுள்ள உரிமையிலேயே சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறோம்.
இதுபற்றித்தான் நானும் கேட்க நினை...
அதுதான். இன்னும் சொல்வதென்றால், இவ்வளவு நீண்ட அரங்கு அமைப்புகளில் குழந்தைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கு ஆங்காங்கே இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கலாம். நுழைவாயில் முதல் வெளியேறுவதுவரை நடந்துகொண்டே இருப்பது சிரமம்தான். மேலும் சொந்த முயற்சியில் பதிப்பித்துக்கொண்ட எழுத்தாளர்களுக்கென ஒன்றிரண்டு அரங்குகள் வழங்கியிருக்கலாம். பிற பதிப்பாளர்களிடம் இரவல் கேட்கவோ, ஓரமாக நின்று புத்தகங்கள் வழங்கவோ தேவையிருக்காதல்லவா! ஒலி நூல்களுக்காகவும் தனி அரங்குகள் வழங்கியிருக்கலாம். முந்தைய சில புத்தகக் காட்சிகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வாசகர்களை, முக்கியமாக இளைஞர்களை பபாசி எப்படி ஈர்தததென்று நாம் அறிவோம். அப்படியான சூழலில் இதுபோன்ற குறைகளைக் களைவது எளிமையானதே.
சார் நாம் அடுத்த கேள்விக்குப் போகலாமா?
ஆங். போலாம். கேளுங்க.
இந்தமுறை என்னென்ன புத்தகங்கள் உங்கள் கவனத்தை ஈர்த்தன. வாசகர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் எவையெவை?
தொ.ப.வின் நூல்கள் பெரிய அளவில் விற்பனையாகின என்று நினைக்கிறேன். குறைந்தது அவருடைய ஒரு நூலையாவது வாசகர்கள் வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது. வெற்றிமாறனின் புண்ணியத்தால் ‘வாடிவாசல்’ பெரும்பாலான வாசகர்களின் பணத்தைச் சுரண்டிவிட்டது. அரசியல்ரீதியாகச் சொல்ல வேண்டுமென்றால் தமிழ் – சமஸ்கிருதம் தொடர்பான நூல்கள், வலதுசாரிகளின் வளர்ச்சி பற்றிய நூல்கள், இடதுசாரி தத்துவ நூல்கள் போன்றவை விரைவாக விற்றுத் தீர்ந்ததாகச் சில பதிப்பாளர்கள் சொன்னார்கள். அனார் புத்தகம் ஏதும் இம்முறை வெளிவராதது வருத்தமாக இருக்கிறது.
ஓய், நீ என்ன வாங்குனன்னு சொல்லு?
வெல்… நான் ஒன்லி ட்ரான்ஸலேஷன்தான் நிறைய வாங்கினேன். அருந்ததி ராய் எழுதிய ‘பெருமகிழ்வின் பேரவை’, சூரிய நாராயணன் எழுதிய ‘அகதியின் துயரம்’, சிவசங்கர் எஸ்.ஜே. மொழிபெயர்த்த ‘இது கறுப்பர்களின் காலம்’. அப்புறம் நீண்ட காலமாகத் தேடிக்கொண்டிருந்த இரண்டு நூல்கள் இம்முறை கிடைத்தன. இரண்டுமே சுகுமாரன் மொழிபெயர்ப்புதான், ‘அஸீஸ் பே சம்பவம்’, ‘பட்டு’. ஸ்டாலின் ராஜாங்கம் எழுதுன ‘வைத்தியர் அயோத்திதாசர்’ புத்தகமும் முக்கியமான முயற்சி. இன்னும் நிறைய இருக்கிறது. சட்டென்று சொல்ல முடியவில்லை, வாங்கப் பணமும் இல்லை. இதையும் சொல்ல வேண்டும்! பல நல்ல புத்தகங்கள் கையடக்க விலையில் கிடைப்பதில்லை. எங்களைப் போன்றவர்களுக்காகச் சில நல்ல புத்தகங்களைக் குறைந்த விலையில் விற்றால் நன்றாயிருக்கும். சாணிக் காகிதத்தில் அச்சடித்தால்கூடப் போதுமானது. சின்ன நப்பாசைதான்.
இந்தப் புத்தகக் காட்சியில் சிறப்பம்சமாக எதைக் கருதுகிறீர்கள்?
நீங்கள் தடாகம் அரங்குக்குச் சென்றீ்ர்களா? அதுதான் சிறப்பம்சம். ஒரு படைப்பு என்ன செய்யும் என்பதற்கு அதுவொரு சான்று. ரோஹிணி மணிக்கு ஆயிரம் நன்றிகள். அந்த நாவலை நான் வாங்கவில்லை, தோன்றவுமில்லை. அந்தச் சிற்பமே கதையைச் சொல்லிவிட்டது. எனக்கு இதுபோன்று யாரும் செய்யவில்லையே என்ற ஏக்கம் எனக்குள்ளது. நிச்சயம் நான் நல்ல கதாபாத்திரம்தான், என் எழுத்தாளர் எந்த வகையிலும் என்னைச் சிதைக்கவில்லை. ஆனால் இன்னும் எழுத்தாகவோ வாசகர்களின் கற்பனையாகவோதான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இது கொடுமைதானே. ஒரு ஓவியமாகக்கூட என்னால் உருமாற முடியவில்லை. ஆனால் இந்த ஹசனுக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவன் வாசகர்களுடன் நேரடியாகவே உரையாடுகிறானே. வெறும் எழுத்துகள் மட்டும்தான் இலக்கியமா? ஒன்று சொல்கிறேன். ஒரு படைப்பு உங்களை அதன் வசம் ஈர்க்க வேண்டும். வண்ணங்களாக, துகள்களாக, எழுத்துகளாக, ஓசைகளாக உங்களை மாற்ற வேண்டும். இவ்வாழ்வை விடுத்து வேறொன்றாக மாற உங்களைத் தூண்ட வேண்டும். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் தற்கொலைக்குத் தூண்ட வேண்டும்.
இளம் வாசகர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் எழுத்தாளர்கள் அல்லது புத்தகங்கள்?
நான் யாருக்கும் ஆசானாகவோ தரகராகவோ இருக்க விரும்பவில்லை. உங்களைக் கொலை செய்பவர்களை நீங்களே கண்டடையுங்கள்.
முதல் கேள்வி, உங்களைப் பற்றிய அறிமுகம்...
நாளை சாக விரும்பி, இன்று பலரைக் கொல்லும் சாதாரண எழுத்தாளன்.
மின்னஞ்சல்: sivaraj53.sb@gmail.com