பாடகி
கதை
பாடகி
ஆர். ஷண்முகசுந்தரம்
என்னைத் தவிர அங்கு யாருமில்லை அப்பொழுது. ஏகாந்தமான அந்த விடத்தில் உட்கார்ந்துகொண்டு, அலைகள் ஒன்றோடொன்று மோதிக் கலந்து தழுவிக்கொள்வதையும், சந்திரனை மறைத்துச் செல்லும் மேகக்கும்பல்களையும், வெண்மணல் திட்டுக்களையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அந்த மங்கின சந்திர வெளிச்சத்திலே தூரத்தில் புகைபோன்று தெரியும் கடலும், என் தலைக்கு மேலாகக் கத்திக் கொண்டு சென்ற பறவையின் அலறல் குரலும், சற்றுத் தூரத்தில் யாரோ உள்ளம் உருகிக் கரைந்தழுகும் சோக இசையும் என் மனதை என்னவோ வெளியிட்டுச் சொல்ல முடியாத நிலைமைக்குக் கொண்டுபோய்விட்டன.
அந்தக் குளிர்ந்த இரவின் மௌனத்தைப் பிளந்துகொண்டு புறப்பட்ட பாட்டு என்னவோ? கவனமாகக் கேட்டேன்.
“காசினிக்கு மெட்டாது
கருநீலம் பாய்ந்து கத்தி,
வீசும் கடலுக்கும்
விளங்காத ரகசியங்காண்...”
பிற்பகுதியின் சொற்கள் தெளிவாக எனக்குக் கேட்கவில்லை.
இயற்கையின் வனப்புகளைக் கண்டு ஆனந்தத்தால் புறப்பட்ட பாட்டாயிருக்கலாம் என்று நான் எண்ணவில்லை-
------ -------
அந்தக் குரலிலிருந்து அதைப் பாடியவர் பெண்ணாய்த்தா னிருக்க வேண்டுமென்று ஊஹித்துக்கொண்டேன். என்னை ஒரு சக்தி உந்தித் தள்ளியது. அந்த விடத்திற்குப் போகும்படி, எழுந்து நடந்தேன். கொஞ்ச தூரம்தான் போயிருப்பேன். கரை யோரத்தில் யாரோ குனிந்து உட்கார்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. தலை முதல் கால்வரை ஒரு பச்சைக் கம்பளியைப் போர்த்தியிருந்தது. யாரோ ஒரு மனிதன். ‘அவனிடம் பேசு’ என்று என் உள்ளத்திலிருந்து ஒரு குரல் கூறிற்று.
“யாரோ நீ இந்நேரத்தில் இங்கு தனித்து உட்கார்ந்திருப்பது! மனிதக் கும்பலின் கூட்டுறவை விரும்பாமல் வந்தவனா நீ!” என்று என்னுள்ளே எண்ணிக்கொண்டு அவர் அருகே போய் உட்கார்ந்தேன். அவர் தன் முகத்தைத் திருப்பி என்னை ஒரு தரம் பார்த்துவிட்டால் போதும் என்றுகூட என் மனம் நினைக்க ஆரம்பித்துவிட்டது நீண்ட நேரத்திற்குப் பிறகு.
எவ்வளவு நேரம்தான் பேச்சுக் கொடுக்காமல் ஒரு அன்னியன் பக்கலில் உட்கார்ந்திருப்பது. எழுந்து அப்பால் போய்விடலாமா என்று நினைத்தேன். ஆனால் ஏனோ அவ்வாறு போக முடியவில்லை.
நடுக்கடலில் ஒரு நிலையில்லாமல் அசைந்தாடிக் கொண்டிருந்தது சந்திர பிம்பம். அவருடைய பார்வை நீரைப் பிளந்துகொண்டு உட்செல்வதைப்போல் தோன்றியது. கவிழ்த்த தன் தலையை நிமிர்த்தவேயில்லை அவர். ஒரு வேளை சமுத்திரத்தின் அடியில், குதித்து விழும் அலைகளுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்துக்கொண்டிருந்தாரோ என்னவோ.
இந்த ஆசாமிதான் அப்படி அபூர்வமாக பாடியவர் என்று என்னால் நம்பமுடியிவில்லை. மௌனத்தின் எல்லையைக் காண்பதற்காக, ஒரு கோடிக் கரையிலிருந்து மறுகரைவரை பிரயாணம் செய்யும் வழிப்போக்கன் போலக் காணப்பட்டார் அவர். ஏன் இவரிடம் நான் பேச்சுக் கொடுக்கக் கூடாது. அவர் எதை நினைந்து உருகுகின்றாரோ? எந்த தேவதை அவருக்கு எப்படிப்பட்ட துர்க்கேடு விளைவித்து விட்டதோ. அதை நான் அறிவதில் என்ன தவறு? மெதுவாகப் பேசவாரம்பித்தேன்.
“நீங்கள்தானே பாடினீர்கள்?”
“ஆமாம்.” திடீரென்று பேச ஆரம்பித்தார். நான் திடுக்கிட்டுப் போனேன்.
“என்னுடைய அந்தியகாலத்தின் கடைசிப் பாடலையும் பாடியாகிவிட்டது. என்னுள்ளத்தின் எதிரொலி இனி எங்கும் கேட்கப்போவதில்லை.”
“என்ன! ஐயோ! இப்படி அபூர்வகானம் படைத்த சங்கீத வித்வானாகிய தாங்களா வாய்திறக்கப் போவதில்லை!”
“அதைச் சொல்லி ஆவதென்ன” என்று சொல்லிக்கொண்டார் மிகமிக மெதுவாக. அவரது குரல் வெகுகாலம் துன்பத்தில் வருந்திய ஏழைத் தொழிலாளியினுடையதைப் போலிருந்தது. அந்த அமைதியான இரவில், கடல்கூட தன் இயற்கைச் ‘சஞ்சல’ சுவபாவத்தை விட்டுச் சலன மற்றுக் கிடந்தது. சிறிது நேரம் சென்று அவர் பேசினார்.
“நான் லய சுத்தமாகப் பாடுகிறேனோ இல்லையோ, அது எனக்கே தெரியாது. ஆனால் என் பாட்டு எல்லோரையும் வசப்படுத்துகிறது. சாமான்ய ஜனங்கள் முதல், மேதாவிகளான பண்டிதர்கள் வரை எல்லோரும் என்னைப் புகழ்ந்தே பேசினார்கள். உங்களைப் போல்தான் இந்த இன்னிசைக்காக என்னைத் தேடிக்கொண்டு எவ்வளவோ பேர் வந்தார்கள்.
“என்னைச் சுற்றிலும் சிரிப்பு, சந்தோஷம், வேடிக்கை நிறைந்திருந்தது. இந்த உலகத்து இன்பங்கள், ‘நாடகத்தில் நடிப்பதும், வேண்டிய மட்டும் குடிப்பதும்’ இவைதான் என்னுடைய சித்தாந்தமாயிருந்தது அந்தக் காலத்தில்.
“வாழ் நாளில் மிகவும் சிரேஷ்டமானதாகக் கருதப்படும் யுவதிப் பருவத்தை நான் வீணாக்கி விட்டேன்.”
நான் திடுக்கிட்டுத் தலைநிமிர்ந்து பார்த்தேன்.
“ஏன் ஆச்சர்யப் படுகிறீர்கள். இதில் வியப்படைய ஒன்றுமில்லையே” என்று சொல்லிவிட்டுத் தான் போர்த்தியிருந்த சால்வையைக் கீழே எடுத்து வைத்தாள்.
அவள் முகம். அதை என்னவென்று சொல்வேன். பாதுஷாவின் அந்தப்புர இராஜ கன்னிகளில் ஒருத்திபோல விளங்கினாள் அவள்.
அவள் தன் கதையை மேலும் சொன்னாள்: “என் இன்பநாட்களில் துன்பத்தின் சாயை எப்பொழுது விழுந்தது என்றா கேட்கிறீர்? ஆமாம். அதைத்தான் சொல்லுகிறேன். எனக்கு ஒரு மகன் இருந்தான். அந்தப் பாலகனுக்கு வயது ஐந்து இருக்கலாம். ஆனால் அந்த ஐந்து வருஷத்தில் ஒருநாளாவது அவன் தன் அன்னையின் மடியில் உட்கார்ந்திருப்பானா?
“ஒரு நாளாவது அவன் தன் தாயின் கையைப் பிடித்துக் கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றிருப்பானா?
“அந்தக் குழந்தை என்னுடையதுதானென்று சொல்ல அப்பொழுது லஜ்ஜைப் பட்டேனே. அது ஏன்?
“என்னை அன்புடன் நேசிப்பதாக என் அருகேயிருந்துகொண்டு நடித்தார்களே, அவர்களா அவ்வாறு செய்துவிட்டார்கள்? அந்தக் குழந்தை தன் துர்ப்பாக்கிய நிலைமையை உணர்ந்து பரிகாரம் தேடிக் கொண்டது போலும்.”
கொஞ்சநேரம்பேசாமல் இருந்துவிட்டு மறுபடிப் பேசலானாள்:
“ஒரு வாரத்திற்கு முன்பு மதுரைக்குப் போயிருந்தேன். போவதற்கு முன்தினம் இது நிகழ்ந்தது. என்னுடைய நடிப்புத் திறமையைப் பிரமாதமாகப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார் நண்பர். அந்தச் சமயத்தில் வீட்டிற்குள்ளிருந்து ஓடிவந்த குழந்தை என்னைப் பார்த்துக் கேட்டது” ‘அம்மா, நானும் உன்னோடு வர்ரேன்’ என்று. நாங்கள் பேசிக்கொண்டிருந்ததிலிருந்து, எங்கோ போகின்றோம் என்பதைத் தெரிந்து கொண்டுதான் அந்தக் குழந்தை அவ்வாறு கேட்டது. ஆனால் நான் என்ன பதில் சொன்னேன்?
“என் நண்பர் ‘குழந்தை யாருடையது’ என்று கேட்டாரே, அப்பொழுது ‘வீட்டு வேலைக்காரியின் பிள்ளை’ என்று சொல்லிவிட்டு, ‘போடா, போ இங்கென்ன செய்கிறா’யென்று கடிந்து அனுப்பிவிட்டேனே, அது ஏன்?
“அந்தச் சம்பவத்தைப் பற்றி நான் அப்பொழுதொன்றும் பிரமாதமாக நினைக்கவில்லை. நினைப்பதற்குத்தான் நேரம் எது?
“மறுபடி திரும்பி நான் ஊருக்கு வந்தவுடன் என்ன செய்தியைக் கேட்டேன்? அந்தச் செய்தி என் வாழ்வின் வழியை வேறு சாலையில் திருப்ப முயன்றதா? அதைப் பற்றி யொன்றும் எனக்குத் தெரியாது. ஆனால் நேர்ப்பாதையைக் கண்டும் கூட நான் அந்த வழியாகப் போக விரும்பவில்லை...
“நமக்கு முன்னால் விசாலமாகப் பரந்து கிடக்கிறதே நீலக்கடல், இதில் அவன் எங்கே இருக்கிறான்? என் குழந்தையைப் பற்றித்தான் சொல்லுகிறேன். இந்த விடத்தில் குதித்து விட்டதாகப் பார்த்திருந்த
சிறுவர்கள் சொல்கின்றார்களே, அவன் இங்கேதான் இருக்கின்றானா? அல்லது சமுத்திரத்தின் அந்தக்கரையில் நிற்கின்றானா?
“நான் இங்கு புலம்புகிறேன். இந்த பூமியும் ஆகாயமும் கடலும் எப்பொழுதும் போலவேதான் மௌனம் சாதித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் எனக்குப் பதில் சொல்பவர் யாருமில்லை... கற்பனைக்கு மெட்டாத மரணத்தின் பின்விளைவு என்னவென்பதைக் கண்டுகொள்ளப் போகிறேன்.
‘இந்த அலறும் அலைகள் அவனை எங்கு மறைத்து வைத்திருக்கின்றன வென்பதைத் தேடப்போகிறேன்.”
இந்தச் சமயத்தில் திடீரென்று பேரலை ஒன்று கிளம்பிக் கரையை நோக்கி வந்தது. நான் பின்னால் நகர்ந்தேன். அவள் அந்த அலைகளுக்குள்ளே புகுந்துவிட்டாள். சமுத்திரத்தில் மறைந்துவிட்டாள்.
மணிக்கொடி, 15 அக்டோபர் 1937