இங்கு இருப்பதே கலை
ரோஹிணி மணி / செந்தூரன்
இங்கு இருப்பதே கலை
2012ஆம் ஆண்டிலிருந்து தமிழ் அச்சு/பதிப்புச் சூழலில் நூல் முகப்பு, கோட்டோவியங்களை உருவாக்கிவருகிறேன். அச்சில் வெளிவந்த எனது அட்டை ஓவியங்களுக்காகவும் கணவர் கணேசனின், குழந்தைகளின் வாசிப்புக்காக நூல்கள் வாங்கவும்தான் முதன்முறையாகப் புத்தகக் காட்சிக்குச் சென்றேன்.
2014 ஆம் ஆண்டு காலச்சுவடு பதிப்பகம் தன் புத்தக அரங்கை ஒழுங்கு செய்யவும் வடிவமைத்துத் தரவும் என்னை அணுகியது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் சென்னை புத்தகக் காட்சியில் நான் கவனித்தவை- இங்கு ஒரு பெரிய மக்கள் கூட்டம் வருகிறது, எல்லா வயதினரும் வருகிறார்கள், புத்தகங்களை வாங்குகிறார்கள், நூல்களைப் பற்றிப் பேசுகிறார்கள், ஒரு பட்டியலைக் கொண்டுவந்து அதிலிருக்கும் நூல்களை ஆர்வத்துடன் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்தபோது ‘Art Fair’ஐப்போல சென்னை புத்தகக்காட்சி தோற்றமளித்தது.
மக்கள் ஒரு புத்தகக் காட்சியில் இவ்வளவு ஆர்வத்துடனும் கொண்டாட்டத்துடனும் கலந்துகொள்வார்களா என்பது எனக்கு ஆச்சரியம் அளித்தது. இந்த இடத்தை நான் பயன்படுத்தலாம் என்று எண்ணினேன். அதற்கேற்றாற்போல காலச்சுவடும் வழி ஏற்படுத்தித் தந்தது. காலச்சுவடு பதிப்பக அரங்குகளை வடிவமைத்தேன். அப்போதும் சில கலைப்பொருட்களை அரங்கில் வைக்கப் போகிறேன் என்பதைக் கூறவில்லை. அரங்குக்கு நடுவில் ‘Art Installation’ ஒன்றைக் காட்சிப்படுத்தினேன். மக்கள் பார்வையிட்டார்கள். ஆனால் ஒரு கலைப்பொருளை எங்கு வைக்கிறோம், எதற்கு மத்தியில் இருக்கிறது, அதைச் சூழ்ந்து என்ன இருக்கிறது என்பதெல்லாம் முதன்மையானவை. இந்தக் கலைப் பொருளைத் தனியான அரங்கில் வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் பல வண்ணங்களில் இருக்கும் நூல்களுக்கு நடுவில் கலைப்பொருட்கள் கவனிக்கப்படும் விதத்தை அந்தப் புத்தக காட்சியில் தெரிந்துகொண்டேன். அந்தக் கலைச் செயற்பாடு மக்களால் பெருமளவு கவனிக்கப்படாததை உணர்ந்தேன்.
சிற்பம், ஓவியம், பொம்மை என்று அறியப்பட்ட சூழலில் ‘Art Installation’ -ஐப் புத்தகக் காட்சிக்கு வந்தவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றே நினைத்தேன். கற்றவர்களும் வருகிறார்கள், எளிமையான பின்னணியைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். எனவே அந்தக் கண்காட்சி மூலம் சில படிப்பினைகளும் ஏற்பட்டன. 2015ஆம் ஆண்டு புத்தகக் கண்காட்சியில் ஒரு பெரிய கலைப் பொருளைக் காட்சிப்படுத்த வேண்டும் என எண்ணினேன். காலச்சுவடு இந்த முறையும் அரங்கை ஒழுங்கு செய்து தரக் கேட்டுக் கொண்டது. அதன்படி இந்த முறை மக்களோடு விவாதிப்பதற்கான, இடையீடு செய்வதற்கான, குறுக்கீடு நிகழ்த்துவதற்கான, உரையாடுவதற்கான வழியை உருவாக்க நினைத்தேன்.
இதற்கு முன்னான கண்காட்சியில் வைத்த கலைப் பொருட்களை மக்கள் பார்த்தார்கள்; ஆனால் அத்தோடு எவ்விதமான குறுக்கீடுகளையும் / இடையீடுகளையும் அவர்கள் செய்யவில்லை. ஆகவே இந்த முறை மக்கள் குறுக்கீடு / இடையீடு செய்வதற்கான வெளியை உருவாக்க விரும்பினேன். அதன்படி இந்தப் புத்தகக் காட்சியில் சணல் சிற்பம் ஒன்றை உருவாக்கி அது பிரமாண்டமாகவும் பெரிய வடிவத்திலும் தோற்றத்தில் எல்லோ ருக்கும் தெரியும்படியும் காட்சிக்கு வைத்தேன். குழந்தைகள் அந்தச் சிற்பத்தோடு விளையாடினார்கள், அதைக் கிள்ளிப் பார்த்தார்கள், அது என்னவென்று கேட்டு விசாரித்தார்கள், ரசித்தார்கள், செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். இப்போது படைப்பு அவர்களுக்கு நெருக்கமாக மாறி இருக்கிறது. படைப்போடு ஒரு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த இடத்திற்கு வந்தால் ஏதோ ஒன்று இருக்கும் என்ற எண்ணம் அவர்கள் மனத்தில் வலுவடையும். இன்றைக்கு வரைக்கும் சணல் சிற்பம் பலரின் மனத்தில் நிலைத்து நிற்கிறது. குழந்தைகள் அந்தச் சிற்பத்தைக் கிள்ளிப் பார்த்து அது செய்தித்தாளும் சணலும் என்று தெரிந்துகொண்டார்கள். அடுத்த முறை அவர்கள் பழைய செய்தித்தாள்களைப் பார்க்கும்போது சிற்பத்தை அவை ஞாபகப்படுத்தும்; கலையும் அவ்வளவுதான். நம்மைச் சுற்றி இருப்பவையே கலை. ஏதோ ஒரு உலகத்திலிருந்து கலை கீழே இறங்கி வருவதில்லை. ஏற்கெனவே சூழலில் இருப்பவற்றை வைத்தே கலை உருவாகிறது. மக்கள் அந்தச் சிற்பத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்கள். அதுவே எனக்குப் பெரிய முழுமையை அளித்தது.
2016 ஆம் ஆண்டிலும் காலச்சுவடு அரங்கில் அதே சணல் சிற்பத்தை மீண்டும் காட்சிக்கு வைத்தேன். ஆனால் புதிதாகக் கருப்பு, பழுப்பு ஆகிய இரண்டு வண்ணங்களில் முகமூடிகளோடு சேர்த்துக் காட்சிப்படுத்தினேன். சென்ற வருடம் சிற்பத்தைப் பார்த்தவர்கள் அதே சிற்பத்தைத்தானே வைத்திருக்கிறீர்கள் என சலித்துக் கொள்ளவில்லை. மாறாக இந்த முறை முகமூடிகள் இருக்கின்றன என நேர்மறையாகச் சொல்லிச்செல்வதை அவதானிக்க முடிந்தது
கலைக்கூடங்களில் நடைபெறும் கண்காட்சிக்கு வருபவர்கள் மீண்டும் அதே ஓவியத்தை/சிற்பத்தை வைத்திருக்கிறீர்களே என்று குறைபடச் சாத்தியங்கள் உள்ளன. ஆனால் இந்தப் புத்தகக் காட்சியில் அவ்வாறான எந்தக் கேள்விகளும் எழவில்லை.
2018 புத்தகக் காட்சியில் ஐந்தரை அடி உயரத்தில் ஒரு நாற்காலி செய்தேன். செய்தித்தாள்களில்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. ‘Lust for Power’ (அதிகாரத்துக்கான வேட்கை) என்ற தலைப்பில் அதை உருவாக்கினேன்; இதுவும் இன்ஸ்டாலேஷன்தான்.
நான் கலந்துகொண்ட நான்கு கண்காட்சிகளுமே தனிப்பட்ட முறையில் மக்களோடு ஒருவிதமான இடையீடுகளைச் செய்தன. கண்காட்சிக்கு வந்த 80 வயதான ஒருவர் என்னிடம் காட்சிக்கு வைக்கப்பட்ட சிற்ப இன்ஸ்டாலேஷன் பற்றிப் பேசியது என் நினைவில் உள்ளது. பலர் தனிப்பட்ட முறையில் அழைத்துக் கலைப்பொருட்களுடனான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
2021ஆம் ஆண்டு புத்தகக் காட்சியில் தடாகம் அரங்கில் ஒரு சிற்பத்தைக் காட்சிக்கு வைத்தேன். அது நாவல் ஒன்றில் வரும் கதாபாத்திரம்.
சணல் சிற்பத்தைப் பார்த்துவிட்டுத்தான் தடாகம் பதிப்பாளர் என்னை அழைத்தார். 2020இல் ‘உல்லாசத் திருமணம்’ என்ற நாவலுக்கான முகப்பு அட்டையை உருவாக்கி இருந்தேன். அதற்கு விருது கிடைத்தது. எனவே இந்த நாவலை முன்னிலைப்படுத்துவது மாதிரியாக ஏதாவது செய்யலாம் என்றார் பதிப்பாளர். நானும் அதற்கு ஒப்புக்கொண்டு சில யோசனைகளைக் கூறினேன். சிற்பம் உருவாக்கலாம் என்று முடிவெடுத்து அதன்படி இந்த நாவலில் உள்ள கதாபாத்திரம் ஒன்றைச் சிற்பமாகச் செய்யலாம் என்று பேசிக்கொண்டோம். நாவலில் வரும் முக்கியமான கதாபாத்திரம் மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த 50 வயதான ஒருவர். ‘உல்லாசத் திருமணம்’ நாவல் கொண்டாட்டமாக ஆரம்பித்து நிறவெறி/தேசியம் வரைக்கும் போகிறது. நான் உண்மையில் கதைசொல்லியின் சிற்பத்தை உருவாக்க விரும்பவில்லை. எனது சிற்பங்கள்/ஓவியங்கள் ஆகியவற்றின் உள்ளடக்கம் நிறவெறி பற்றியது. ஆகவே நாவலில் வரும் ஹசன் என்ற கதாபாத்திரம் மூலம் எனது உள்ளடக்கத்தையும் கொண்டுவரலாம் என்று எண்ணினேன்.
ஹசன் நிறத்தால் பல்வேறு இடங்களில் சித்திரவதைப் படுகிறான். எப்போதுமே நிறவெறிக்குத் தொடர்ந்து இலக்காகிறான். எனவே அவனை என்னுடைய உள்ளடக்கத்திற்குப் பாத்திரமாக வரித்துக்கொண்டு சிற்பம் ஆக்கினேன். அவன் வழியாக எனது அரசியலைப் பேசினேன். நானும் ஹசனும் வேறுவேறாக எனக்குத் தெரியவில்லை. நிறம் எப்போதுமே வேற்றுமைகளை உருவாக்குகிறது; ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கிப் பாதிப்புகளை நிகழ்த்துகிறது. ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் வெள்ளை நிறமாக இருப்பதைப் பொதுமனதால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அதேபோல் கருப்பாக ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர் இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ளவும் பொதுமனதால் முடியவில்லை. நிறத்தை வைத்து எனது சாதியையும் எனது பழக்கவழக்கங்களையும் பண்பாடுகளையும் முடிவு செய்துகொண்டு அந்தப் பாரத்தை என்மேல் சமூகம் சுமத்துகிறது. இந்த அனுபவத்தில் இருந்துதான் எனது படைப்புகள் உருவாகின்றன. அந்தப் படைப்புகளுக்கான களமாகவே புத்தகக் காட்சியைக் காண்கிறேன்
கவிதைகள், சிறுகதைகளுக்கு நான் வரைந்த ஓவியங்கள் மேலுமொரு கோணத்தை வழங்குவதாகவே இருக்கும். கவிதைகளை வாசிக்காவிட்டால்கூட ஓவியம் அர்த்தம் உள்ளதாகவே இருக்கும். எழுத்துக்குத் துணையாக ஓவியத்தைப் பார்க்கவில்லை. ஓவியம் ஒரு தனி ஊடகம், எழுத்து ஒரு தனி ஊடகம் என்கிற புரிதலோடு இயங்கிக் கொண்டிருக்கிறேன். கோடும் எழுத்தும் வெவ்வேறானவை.
அதேபோல் மொஸார்ட்டின் இசையில் உந்தப்பட்டு ஓவியம் வரைவதைப்போல என்னுடைய சமகாலத்தில் இயங்கும் எழுத்தாளர்களிடமிருந்தும் ஓவியத்துக்கான / சிற்பக்கலைச் செயற்பாட்டுக்கான ஊக்கத்தைப் பெற்றுக்கொள்கிறேன். ஒரு எழுத்து பல்வேறு விதமான கோணங்களையும் பரிமாணங்களையும் எனக்குக் காண்பிக்கிறது. எழுத்துக்கு ஓவியம் துணை இல்லை; ஓவியத்துக்கும் எழுத்து துணை இல்லை. எல்லாக் கலைகளும் அதன் ஊடகங்களும் தனித்துவமானவையே.
மின்னஞ்சல்: rohinimani2015@gmail.com