சிட்டுக்குருவி
மொழிபெயர்ப்புச் சிறுகதை
சிட்டுக்குருவி
உருதுமூலம்: குவாஜா அகமது அப்பாஸ்
தமிழாக்கம்: ஆர். ஷண்முகசுந்தரம்
அவன் பெயர் ரஹீம்கான். ஆனால் அவனைப் போலக் கொடியவனை எங்குமே காண முடியாது. அந்தக் கிராமத்தார் அனைவரும் அவன் பெயரைக் கேட்டாலே நடுங்குவார்கள். மனிதனிடமோ மிருகத்திடமோ எவ்வித ஈவு இரக்கமுமில்லாதவன். ஒருநாள் ராம ஆசாரி மகன் அவனது மாட்டின் வாலில் முள்ளைக் கட்டிவிட்டான். ரஹீம்கான் அந்தப் பையனை அடித்து அரை உயிராக்கிவிட்டான். இன்னொரு நாள் ஒரு சர்க்கார் உத்தியோகஸ்தரின் குதிரை அவனுடைய வயலில் நுழைந்துவிட்டது. அவன் தடிகொண்டு அடித்த அடியில் குதிரைக்கு ரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தது. இந்த முட்டாளுக்குத் தெய்வப் பயமே கிடையாது என்று ஜனங்கள் சொல்லுவார்கள். ‘ஒன்றும் அறியாத குழந்தைகளையும் அவன் மன்னிக்கமாட்டான். இவன் நரகத்துக்குத்தான் போவான்’ என்று சொல்லுவார்கள். ஆனால் இவைகளை எல்லாம் அவனுக்குத் தெரியாமல்தான் சொல்லுவார்கள். அவன் முன்னால் சொல்லுவதற்கு யாரும் துணியமாட்டார்கள். ஒருநாள் பிந்துவின் கெட்ட காலம், ‘அடே அப்பா! ரஹீம்கான்! நீ ஏன் குழந்தைகளை அடிக்கிறாய்? என்று கேட்டான். உடனே அவனுக்கு நேர்ந்த கதியைப் பார்த்துவிட்டு ஊரிலுள்ளோர் யாரும் அப்புறம் அவனிடம் பேசுவதைக்கூட நிறுத்திக்கொண்டார்கள். எந்தச் சமயத்தில் எதைக் கண்டு கோபிப்பானோ யார் கண்டார்கள்? அவன் மூளை கெட்டுவிட்டது. அவனைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டும் என்று சிலர் சொல்லுவார்கள். இனி யாரையாவது அடித்தால் அவனைப் போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று இன்னும் சிலர் சொல்லுவார்கள். ஆனால் போலீசில் அவனுக்கெதிராகச் சாட்சி சொல்லி யார் அவனுடைய விரோதத்தைச் சம்பாதித்துக்கொள்வார்கள்?
கிராமத்திலுள்ள அனைவரும் அவனிடம் பேச்சு வார்த்தை வைத்துக்கொள்வதை நிறுத்திக்கொண்டார்கள். ஆனால் அதனால் பலன் ஒன்றும் ஏற்படவில்லை. அதிகாலையில் கலப்பையைத் தோளில் வைத்துக்கொண்டு தன் வயலுக்குப் போவதைப் பார்க்கலாம். வழியில் யாருடனும் பேசமாட்டான். ஆனால் வயலுக்குப் போனபிறகு தன் உழவு மாடுகளுடன் மனிதர்களிடம் பேசுவது போலவே பேசுவான். ‘நத்துசித்து என்று இரு உழவு மாடுகளுக்கும் பெயர் வைத்திருந்தான். உழவு ஓட்டிக்கொண்டே பேசிக்கொண்டிருப்பான். ‘ஏண்டா நத்து! நீ நேராகப் போகமாட்டாய்? இந்த வயலை உங்கப்பனா உழப் போகிறான் சித்து? உனக்குக் கெட்ட காலம்தான்!’ என்பான். அப்புறம் உண்மையாகவே அவைகளுக்குக் கெட்ட காலம் வந்துவிடும். கயிற்றினால் இடைவிடாது அடிப்பான். மாடுகளின் முதுகில் தழும்புகள் இருக்கும்!
மாலையில் வீட்டுக்கு வந்ததும் தன் மனைவி குழந்தைகளிடம் கோபத்தைக் காட்டுவான். சாதத்திலோ கறிகளிலோ கொஞ்சம் உப்பு அதிகமாகப் போட்டுவிட்டாலும் அல்லது பற்றாது போனாலும் மனைவியின் முதுகுத் தோலை உரித்துவிடுவான். ஏதாவது குழந்தை பிடிவாதம் பிடித்ததானால் தலைகீழாகத் தொங்கவிட்டு மாட்டுக் கயிற்றினால் மயங்கிவிழும் வரையிலும் அடித்துவிடுவான். நாள் தவறாமல் வீட்டில் ஏதோ ஒன்று நடந்து கொண்டேயிருக்கும். அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் இரவு நேரத்தில் ரஹீம்கான் திட்டுவதையோ அல்லது அவனது மனைவி குழந்தைகள் அடி பொறுக்காமல் அலறுவதையோ கேட்காமலிருக்க முடியாது. ஆனால் பாவம், அந்த அப்பாவிகளால் என்ன செய்ய முடியும்? யாராவது தடுக்கப் போனார்களானால் அவர்களும் அடிபடுவார்கள். அடி வாங்கி வாங்கி மனைவிக்குப் பாதி உயிர் போய்விட்டது. நாற்பது வயதிலேயே எழுபது வயதடைந்த கிழவிபோலத் தோற்றமளித்தாள். சின்னக் குழந்தைகள் கூட மெலிந்துவிட்டார்கள். பன்னிரண்டு வயதுப் பையன் ஒரு நாள் அடிபட்டு ஓடிப் போனவன் மறுபடி திரும்பி வரவேயில்லை. பக்கத்துக் கிராமத்தில் மாமா உறவுக்காரர் ஒருவர் இருந்தார். பையனை அவர் தன்னிடமே வைத்துக்கொண்டார். மனைவி ஒருநாள் பயந்துகொண்டே, ‘ஹலாசாபூர் போய் நூருவை அழைத்து வரக்கூடாதோ?’ என்றாள். அவ்வளவுதான். அப்புறம் என்ன? மிகுந்த கொதிப்படைந்தான். ‘அந்த துஷ்டப் பயலைப் போய் அழைத்து வருவதா? அவனாக வந்தாலும் காலை ஒடித்துவிட மாட்டேனா?’ என்றான்.
அந்தத் துஷ்டப்பயல் இனி எதற்காக மரணத்தின் வாயிலுக்குத் திரும்பி வரப்போகிறான்? இரண்டு வருஷத்திற்குப் பிறகு இளைய பையன் பிந்து கூடத் தன் அண்ணனோடு போய்ச் சேர்ந்துகொண்டான். ரஹீம்கானுடைய கோபத்துக்குத் தாக்குப்பிடிக்க அவனுடைய மனைவி ஒருத்திதான் எஞ்சியிருந்தாள். அந்தப் பேதைதான் எத்தனை நாளைக்குத் தாங்க முடியும்? ஒருநாள் தாங்க முடியாதபடி ரஹீம்கான் அடித்துவிட்டான். அவள் சமயம் பார்த்து ரஹீம்கான் வயலுககுப் போயிருந்தநேரத்தில் தன் சகோதரனை அழைத்துக்கொண்டு தாய் வீடு போய்விட்டாள். ‘நான் என் தாய் வீட்டுக்குப் போய்க் கொஞ்ச நாள் இருந்துவிட்டு வருகிறேன் என்று கணவனிடம் சொல்லிவிடுங்கள்’ என்று பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
மாலையில் மாடுகளுடன் ரஹீம்கான் வந்ததும் பக்கத்து வீட்டுக்காரர் பயந்துகொண்டே அவன் மனைவி தாயார் வீட்டிற்குப் போயிருக்கும் விஷயத்தைச் சொன்னார். ரஹீம்கான் சுபாவத்திற்கு விரோதமாக மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். இனி தன் மனைவி ஒருநாளும் திரும்பி வரமாட்டாள் என்று திடமாக நம்பினான்.
மாட்டுத் தொழுவத்தில் மாடுகளைக் கட்டிவிட்டுத் தன் குடிசைக்குள் நுழைந்தான். ஒரு பூனை ‘மியாவ்! மியாவ்!’ என்று எதிரில் வந்தது. யாரும் எதிர்ப்படாததால் அந்தப் பூனையின் வாலைப் பிடித்துத் தூக்கிக் குடிசைக்கு வெளியில் எறிந்தான். அடுப்பு எரியாமல் கிடந்தது. அடுப்பு மூட்டி யார் ரொட்டி சுடுகிறார்கள்? ஒன்றும் சாப்பிடாமலேயே சுருண்டு படுத்துக்கொண்டான்.
அடுத்த நாள் காலையில் ரஹீம்கான் எழுந்திருக்கும் போது வெகுநேரமாகியிருந்தது. ஆனால் இன்று அவன் வயலுக்குப் போக அவசரப்படவில்லை. ஆட்டுப் பாலைக் கறந்து குடித்தான். ஹுக்காவைப் பற்ற வைத்துக்கொண்டு கட்டில்மீது உட்கார்ந்துகொண்டான். குடிசைக்குள் வெய்யில் விழுந்தது. ஒரு மூலையில் கூடு கட்டுவது தெரிந்தது. அதை ஒழுங்கு செய்யலாம் என்று நினைத்தான். ஒரு மூங்கிலை எடுத்துக்கொண்டு உயரப் பார்த்தான். சிட்டுக்குருவி முகட்டு வளையில் கூடுகட்டிக்கொண்டிருந்தது. இரண்டு சிட்டுக்குருவிகள் உள்ளே வருவதும் வெளியே போவதுமாக இருந்தன. அந்த மூங்கிலால் குருவிக் கூட்டை அழித்துவிடலாமென முதலில் எண்ணினான். ஆனால் ஏனோ ஒரு ஏணியைக் கொண்டு வந்து ஏறிக் கூட்டுக்குள் எட்டிப் பார்த்தான். இரண்டு குஞ்சுகள் தாய்க்குருவியை அணைத்துப் படுத்துக்கொண்டிருந்தன. கூண்டுக்குள் கையை நீட்டினான். தாய்க்குருவி தன் இறக்கையால் குஞ்சுகளை மறைத்தது.
‘அடே! கண்ணைக் கொத்திவிடுவாயா?’ என்று பயங்கரமாகக் கூறிக்கொண்டே ஏணியில் கீழிறங்கி வந்தான். சிட்டுக்குருவிக் கூடு அழியாமலிருந்தது.
அடுத்த நாளிலிருந்து அவன் வயலுக்குப் போக ஆரம்பித்தான். கிராமத்திலுள்ளோர் யாரும் அவனிடம் பேசுவது கிடையாது. நாள் முழுதும் வயலில் ஏர் உழுவான். தண்ணீர் பாய்ச்சுவான். களைபிடுங்குவான். ஆனால் பொழுது விழுமுன் தன் மாடுகளைப் பிடித்துக்கொண்டு வீடு திரும்பிவிடுவான். ஹுக்காவைப் பற்ற வைத்துக்கொண்டு குருவிக்கூட்டையே பார்த்துக் கொண்டிருப்பான். இப்போது குஞ்சுகளும் பறக்கும் சக்தியைப் பெற்றுவிட்டன. அந்த இரண்டு குஞ்சுகளுக்கும் தன் பிள்ளைகள் பேரான நூரு, பிந்து என்பதை வைத்துவிட்டான். இப்போது உலகத்தில் அவனுக்கு நண்பர்கள் இந்த நான்கு குருவிகளும்தான். ரொம்ப நாளாக அவனது மாடுகளை அவன் அடிக்காதிருப்பதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர். நத்தும் சித்தும் மகிழ்ச்சி அடைந்தன. அவைகள் முதுகில் இருந்த காயத்தின் தழும்புகள்கூட மறைந்துவிட்டன.
ரஹீம்கான் ஒருநாள் வயலுக்குப் போகும்போது சில குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டான். அவனைப் பார்த்ததும் குழந்தைகள் அனைத்தும் தலைதெறிக்க ஓடத் தலைப்பட்டன. ‘அடே! நான் யாரையும் அடிக்கமாட்டேன்!’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான். ஆகாயத்தில் மேகங்கள் நிறைந்திருந்தன. அவன் அவசரமாக மாடுகளை ஓட்டிக்கொண்டு வீடு திரும்பினான். அவைகளைக் கட்டுவதற்குள் மழை பலமாகப் பெய்ய ஆரம்பித்து விட்டது.
குடிசைக்குள் வந்து விளக்கு ஏற்றினான். கதவைத் தாழிட்டான். வழக்கம்போல ரொட்டித் துண்டுகளைக் குருவிக்கூடு இருக்குமிடத்தில் வைத்துவிட்டு, ‘அடே! பிந்து? அடே, நூரு!’ என்று கூப்பிட்டான். ஆனால் அவைகள் வெளியே வரவில்லை. கூட்டிற்குள் எட்டிப் பார்த்தான். நான்கும் தங்கள் இறக்கைக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தன. கூண்டிற்கு நேர் மேலே கூரையில் துவாரமிருந்தது. அதன் வழியாக மழைத் தண்ணீர் கூண்டின் மீது சொட்டுப் போட்டுக்கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சநேரம் இப்படியே தண்ணீர் ஒழுகிக்கொண்டிருந்தால் குருவிக்கூடு தண்ணீருக்கு இரையாகிவிடும். குருவிகள் பாடு திண்டாட்டமாகப் போய்விடும். இதை நினைத்ததும் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்து ஏணி வைத்து வீட்டுக்கூரை மீது ஏறினான். கூரையை அடைத்துவிட்டு அவன் கீழிறங்குவதற்குள் புயல் மழையால் நன்கு நனைந்துபோயிருந்தான். கட்டிலில் வந்து உட்கார்ந்ததும் பல தும்மல்கள் வந்தன. ஆனால் அவன் அவைகளைப் பொருட்படுத்தாமல் நன்கு போர்த்திப் படுத்துக்கொண்டான். மறுநாள் காலையில் எழுந்திருக்கும்போது உடம்பெல்லாம் வலித்தது. பலத்த காய்ச்சல் அடித்தது. இவனிடம் வந்து என்ன ஏது என்று விசாரிப்பாருமில்லை; மருந்து கொடுப்பாருமில்லை. இரண்டு நாள் அதே நிலையில் படுத்துக்கொண்டிருந்தான்.
இரண்டு நாளாக அவன் வயலுக்குப் போவதைக் காணாமல் போகவே கிராமவாசிகள் கவலை அடைந்தனர். ஜமீன்தாரும் இன்னும் சில கிராமவாசிகளும் மாலையில் அவனுடைய குடிசைக்கு வந்தார்கள். எட்டிப் பார்த்தார்கள். அவன் கட்டில்மீது படுத்துக்கொண்டு தனக்குத்தானே ஏதோ பேசிக்கொண்டிருந்தான். ‘அடே, பிந்து! அடே, நூரு! எங்கடா போய்த் தொலைந்தீர்கள்? இன்று உங்களுக்கு யாரடா இரைபோடுவார்கள்?’ என்ற சத்தம் கேட்டது. சில சிட்டுக்குருவிகள் குடிசைக்குகள் சிறகடித்துக்கொண்டிருந்தன.
‘ஐயோ! பாவம்! பைத்தியம் பிடித்துவிட்டது!’ என்றனர்.
ஜமீன்தார் தலையை அசைத்துக்கொண்டே, ‘காலையில் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போகச் சொல்லுங்கள்’ என்றார்.
அடுத்த நாள் காலை பக்கத்து வீட்டுக்காரர் ஆஸ்பத்திரி ஆட்களை அழைத்துக்கொண்டு வந்தார். குடிசையைத் திறந்து பார்த்தார்கள். அவன் இறந்துகிடந்தான். அவனது கால்மேட்டில் நான்கு சிட்டுக்குருவிகள் தலைகுனிந்தபடி மௌனமாக உட்கார்ந்துகொண்டிருந்தன.
நன்றி: சுதேசமித்திரன், 15 ஏப்ரல் 1962