‘இப்ப சரியாயிருச்சா?’
பொருநைப் பக்கங்கள்
ஆர். ஷண்முகசுந்தரம்
‘இப்ப சரியாயிருச்சா?’
பெருமாள்முருகன்
இப்பகுதி ஒருங்கிணைப்பு; பெருமாள்முருகன்
படங்கள்: சுந்தரன்
கோயம்புத்தூரில் வறுமையில் வாழ்ந்து கொண்டிருந்த ஆர்.ஷண்முகசுந்தரத்திற்கு அவ்வப்போது நண்பர்கள் உதவுவதுண்டு. பூசாகோ கலை அறிவியல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசுவதற்கு நண்பர்கள் அவரை அழைத்தார்கள். அதற்கெனச் சிறுதொகை அவருக்குக் கிடைக்கும் என்பதும் காரணம். கதர் வேட்டியும் சட்டையும் அணிவதையே வாழ்நாள் வழக்கமாகக் கொண்டிருந்தவர் அவர். அந்த உடையும் இடது தோளில் துண்டுமாகப் பேருந்தில் வந்திறங்கியவரை நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார்கள். அவரது வலது தோள்பட்டைப் பகுதியில் சட்டை கிழிந்திருந்தது. பார்ப்பவர்கள் எல்லோருக்கும் உடனே தெரியும்படியான பெரிய கிழிசல். அவருக்கோ அதைப் பற்றிய உணர்வு ஏதுமில்லை. எல்லோருடனும் சிரித்துப் பேசிக்கொண்டே வந்தார். அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் ‘கிழிஞ்ச சட்டையப் போட்டுக்கிட்டு வந்திட்டீங்களே’ என்று மெல்லச் சொன்னார். ‘அப்படியா? எங்க கிழிஞ்சிருக்குது?’ என்று சாதாரணமாகவே கேட்டார் அவர். வலது தோள்பட்டைக் கிழிசலைக் காட்டினார் நண்பர். ‘ஓ’ என்ற சிறுவியப்புக் குறிப்போடு அதைப் பார்த்தவர் சட்டென இடது தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து வலது தோளுக்கு மாற்றினார். ‘இப்ப சரியாயிருச்சா?’ என்று சிரித்தார்.
ஒருமுறை அவரைச் சந்திப்பதற்காக வீட்டுக்குச் சென்றார் நண்பர் ஒருவர். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது வீட்டுச் சூழல் நண்பருக்குப் பிடிபட்டது. உணவுக்கு வழியில்லாத நிலை. பதிப்பகங்களுக்கு இந்தியிலிருந்து நாவல்களை மொழிபெயர்த்துக் கொடுப்பதன் மூலம் வரும் வருவாயில்தான் குடும்பம் நடந்து கொண்டிருந்தது. சில நாள் உணவுக்கு வழி செய்யும் எண்ணத்துடன் தம் பையில் இருந்த நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்தார் நண்பர். ‘இந்தப் பணத்த என்னால திருப்பிக் கொடுக்க முடியுமான்னு தெரியலியே’ என்றார் அவர். ‘எப்ப முடியுதோ அப்பக் குடுங்க. முடியலீன்னாலும் பரவாயில்ல’ என்றார் நண்பர். ‘அப்பச் சரி’ என்றவர் வீட்டுக்குள் இருந்த தம் தம்பி மகளை அழைத்தார். ‘பள்ளிக்கூடத்துல சுற்றுலா போறதுக்கு நூறு ரூபா வேணும்னு கேட்டுக்கிட்டு இருந்தியே, இத வெச்சுக்க’ என்று மகளிடம் கொடுத்தார். சில நாட்களாகக் கேட்டு நச்சரித்துப் பார்த்தும் பயனில்லாததால் பணம் கிடைக்காது, சுற்றுலா போக முடியாது என்று வருத்தத்தில் இருந்த மகளுக்குப் பெருமகிழ்ச்சி. பணம் கொடுத்த நண்பருக்கோ கடுங்கோபம். ‘ஏங்க, சாப்பாட்டுக்கு வழியில்ல, அதப் பாக்காத சுற்றுலாவுக்குப் பணத்தத் தூக்கிக் குடுக்கறீங்க’ என்று கேட்டுவிட்டார். ‘படிக்கற காலத்துல சுற்றுலா போக முடியலீன்னா அந்த ஏக்கம் காலத்துக்கும் இருக்கும். கொழந்தைகள அப்படி ஏங்க விடக் கூடாது. சாப்பாட்டுக்கு என்ன, ஒருவேள இல்லீன்னா இன்னொரு வேளக்கிப் பாத்துக்கலாம்’ என்று இயல்பாக அவர் சொன்னார். ஆனாலும் பணம் கொடுத்த நண்பருக்கு மனம் ஆறவில்லை. ‘அது சரி, எனக்கு முன்னாலயேவா குடுப்பீங்க? நான் போனதுக்கப்பறம் குடுத்திருக்கலாமே’ என்று தம் ஆதங்கத்தையும் சொல்லிவிட்டார் நண்பர். ‘ஆமால்ல, எனக்கு அது தெரியல பாருங்க’ என்று சிரித்தார் அவர்.
இவை ஆர்.ஷண்முகசுந்தரத்தின் இயல்பை உணர்த்தும் சம்பவங்கள். இவற்றை ஒரு பேருந்துப் பயணத்தில் எனக்குத் தெரிவித்தவர் வானம்பாடிக் கவிஞர்களுள் ஒருவராகிய முல்லை ஆதவன் என்னும் பேராசிரியர் இரா.சந்திரசேகரன். காந்தியத்தில் பற்றும் கதராடையும் என வாழ்ந்த ஆர்.ஷண்முகசுந்தரம் (1917 – 1977) மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவர். ‘பாறையருகே’ (1937) என்னும் சிறுகதையின் மூலமாகத் தம் இருபதாம் வயதில் எழுத்தாளராக மணிக்கொடியில் அறிமுகமானார். அதன்பின் நாற்பதாண்டுகளில் அவர் எழுதிக் குவித்தவை ஏராளம். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம் எனப் பல வடிவங்களிலும் தம் படைப்புத் திறனை வெளிப்படுத்தியவர். அவர் எழுத்துலக வாழ்க்கை நாற்பது ஆண்டுகள். அதிலும் ஒரு பத்தாண்டு எழுத்தைத் துறந்திருந்தார். எழுதிய முப்பது ஆண்டுகளில் எத்தனை நூல்கள் வெளியாயின எனக் கணக்கெடுப்பது கடினம்.
‘நாகம்மாள்’ (1942) நாவல் மூலமாகத் தமிழ் படைப்புலகின் திசையைக் கிராமங்களை நோக்கித் திருப்பியவர். அவரை நாவல் எழுதத் தூண்டிய கு.ப.ராஜகோபாலன் தாமஸ் ஹார்டியின் நாவல்களோடு ஒப்பிட்டு ‘ஷண்முகசுந்தரத்தின் நவீனம் அந்த வகையில் முதல் நூல்’ என்கிறார். தமிழுக்கு மட்டுமல்ல, இந்தியாவிலேயே வட்டார நாவல் என்னும் வகைமைக்கு முன்னோடி ஆர்.ஷண்முகசுந்தரம்தான் என்பது க.நா.சுவின் துணிபு. தமிழ் நாவல்களிலேயே பாத்திரங்கள் தம் நிலவியல் சூழலுக்கேற்ற இயல்புப்படி வட்டார மொழியில் பேசியதும் தம் பண்பாட்டுக்குரிய சூழலில் பிரச்சினைகளை எதிர்கொண்டதும் முதன்முதலாக அவரது நாவல்களில்தான். கிராமங்களைப் புனிதப்படுத்தாமல் அங்குள்ள மனிதர்களும் மேன்மைகளும் கீழ்மைகளும் கலந்தவர்களே என்பதை அவர் நாவல்கள் காட்டின. குறைவான தகவல்கள், மிகச்சில தொடர்களாலான வருணனைகள், விளக்கம் தேவையில்லாத பேச்சு மொழி ஆகியவற்றின் வாயிலாகக் கிராமத்தையும் அதன் வாழ்வையும் கட்டி எழுப்பிக் காட்டியவர். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களாகிய கொங்குப் பகுதிப் பெண்களின் உழைப்பையும் சுய செயல்பாடுகளையும் இயல்பாகப் புனைந்தவர். தம் வாழ்வில் அனுபவித்த கசப்பின் துளிகளைத் துடைத்தெறியக் காந்தியத்தைப் பற்றுக்கோடாக்கிக் கொண்டார். காந்தியத்தின் தாக்கம் மென்மையாக இழையோடும் அவர் படைப்புகளை வாசிப்பது ஒரு பயிற்சி. ஒற்றை வாசிப்பில் தவிர்க்கத் தூண்டும் அப்படைப்புகள் அடுத்தடுத்த வாசிப்புகளில் துலங்கிப் பேரொளி காட்டும்.
நாகம்மாள், பூவும் பிஞ்சும், அறுவடை, தனிவழி, சட்டி சுட்டது உள்ளிட்ட இருபத்தொரு நாவல்கள் அவர் எழுதியனவாக இப்போது தெரிய வருகின்றன. ‘நந்தாவிளக்கு’, ‘மனமயக்கம்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகள். ‘புதுப்புனல்’ என்னும் நாடகம். இந்தி வழியாக அவர் மொழிபெயர்த்த வங்காள நாவல்களுக்குக் கணக்கில்லை. சரத்சந்திரர், பங்கிம் சந்திரர் ஆகியோரின் எல்லாப் படைப்புகளையும் அவர் மொழிபெயர்த்திருக்கிறார் போலும். விபூதி பூஷண் பந்தோபாத்யாயவின் ‘பதேர் பாஞ்சாலி’யும் அவரது மொழிபெயர்ப்பே. தாராசங்கர் பானர்ஜி, அம்ரிதா ப்ரீதம் உள்ளிட்ட பலருடைய படைப்புகள் அவர் வழியாகத் தமிழுக்கு வந்திருக்கின்றன. நூற்றுக்கு மேல் விரியும் மொழிபெயர்ப்புகளின் பட்டியல் நிறைவுறாதது. தம் தம்பி ஆர்.திருஞானசம்பந்தத்துடன் இணைந்து ‘வசந்தம்’ இதழையும் ‘புதுமலர் நிலையம்’ பதிப்பகத்தையும் நடத்தியுள்ளார்.
இத்தகைய இயக்கம் கொண்ட அவரது படைப்புகள் பல தொகுக்கப்படாமல் பத்திரிகைகளின் பக்கங்களில் பரவிக் கிடக்கின்றன. ‘நாகம்மாள்’ உள்ளிட்ட சில நாவல்கள் இன்றைய வாசகர்களின் வாசிப்புக்கும் உகந்தவையாக இருக்கின்றன. ஆனால் அவர் எழுதிய அனைத்துக்கும் ஆவண மதிப்புண்டு. ஆவண மதிப்பை அறியாத தமிழ்ச் சமூகம் அவற்றைக் காப்பாற்றி வைக்குமா?