நீலமும் வானமும்
சென்னை லலித் கலா அகாதெமியில், ஏப்ரல் 5 முதல் 11 வரை ‘கோபால்ட்’ என்ற தலைப்பில் நிய சீராவின் தனிநபர் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. ஏப்ரல் 12 முதல் 18 வரை ‘உள்மெய் – தலித் அழகியல் கலைக்காட்சி’ என்ற தலைப்பில் பல கலைஞர்களின் ஓவிய, சிற்பப் படைப்புகள் கொண்ட குழுக் கண்காட்சியும் நிகழ்ந்தன. இரண்டு ஓவியக் கண்காட்சிகளும் தனித்துவமான கலைப் பார்வைகளை முன்வைத்தன.
தமிழ்-மலையாளக் கலப்புப் பண்பாட்டுப் பின்னணியில் வளர்ந்த நிய சீரா, கேரளத்தின் மலைப்பகுதி, சென்னையின் கடற்கரை, திருச்சியின் சமவெளி ஆகிய இடங்களில் வாழ்ந்த அனுபவங்களைத் தனது கலைப் படைப்புகளின் ஊற்றாகக் கொண்டுள்ளார். இயற்கை வளங்களின் சுரண்டல், காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்புகள் போன்றவை அவரது படைப்புகளில் தீவிரமாகப் பிரதிபலிக்கின்றன. இந்திய, தென்னாப்பிரிக்கக் கலாச்சாரத் தாக்கங்களும் அவரது படைப்புகளில் இணைந்து காணப்படுகின்றன.
கண்காட்சியின் தொடக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நீலம் பண்பாட்டு மையத்தின் நிறுவனரும் திரை இயக்குநருமான பா. ரஞ்சித், ஓவியர்கள் நடராஜன், வெங்கடேசன், பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்துகொண்டார்கள். ஓவியர் விஜய் பிச்சுமணி, கண்காட்சிப் பொறுப்பாளராக இருந்து நிய சீராவின் தனிநபர்க் கண்காட்சியை ஒருங்கிணைத்தார்.
பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த மாதத்தை முன்னிட்டு, நீலம் பண்பாட்டு மையம் கடந்த சில ஆண்டுகளாக ‘வானம் கலைத் திருவிழா’ என்ற பரந்த தலைப்பின் கீழ் கலை, இலக்கிய, ஓவிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறது. அதில் 12 முதல் 18 வரை ‘உள்மெய் – தலித் அழகியல் கலைக்காட்சி’நடைபெற்றது. பாபாசாகேப்பின் புகழாளுமையை இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் செல்லவே நீலம் பண்பாட்டு மையத்தின் வானம் ஏப்ரல் மாதம் முழுமைக்கும் தலித் கலை விழாவை ஒருங்கிணைக்கிறது.
வரலாற்றுக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, ஓவியக் கண்காட்சி போன்ற முன்னெடுப்புகளுடன், மலையாளத் திரைப்படத்தின் முதல் நடிகையான பி.கே. ரோஸியை நினைவுகூரும் திரைப்பட விழா, சக மனித வாழ்வில் சமூக அறத்தை முன்மொழியும் புத்தரின் தம்மத்தை அடியொற்றி ‘தம்மா’ நாடக விழா போன்றவையும் இடம்பெறுகின்றன. வெவ்வேறு தலைப்புகளில் ‘வேர்ச்சொல் கலை இலக்கியக் கூடுகை’ என்ற விரிவான நிகழ்வுகளும் மாதம் முழுவதும் நடத்தப்படுகின்றன.
இந்தியாவின் பல மொழிப் பின்னணிகளிலிருந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் இதில் பங்கேற்கிறார்கள். இவ்வாறு, கடந்த ஆண்டுகளில் இவ்விழா முக்கியமான இந்தியப் பண்பாட்டு இயக்கமாக உருவெடுத்துள்ளது.

சித்தேஷ் கௌதமின் ‘என் பிறப்பு ஒரு கொடிய விபத்து’
SIDDESH GAUTAM - ROHIT - MY BIRTH IS MY FATAL ACCIDENT
சமூகவெளி என்பது அதிகாரத் தடையரண்களின் அடுக்குகளால் சூழப்பட்டதாகும். உலகமயமாக்கல் “உலகமே ஒரு கிராமம்” எனச் சொன்னாலும், இந்தியச் சூழலில் அந்த ‘கிராமம்’ பல்வேறு வர்ணங்களாலும், அடக்குமுறைகளாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த அடக்குமுறைகள் பல நூற்றாண்டுகளாகக் கலாச்சார மரபாகப் பதிந்துள்ளன. பண்பாடு மனித நாகரிகத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்தாலும், அதே பண்பாட்டின் உள்ளேயே ஒரு சமூகக் குழு மற்றொன்றைத் தாழ்த்தும் மனப்பான்மை தொடர்ந்து நிலைத்துவருகிறது.
இந்த மரபின் மையத்தில் உடைவை ஏற்படுத்தும் முயற்சியாகவே திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் தலைமையிலான ‘நீலம் பண்பாட்டு மையம்’ அறக்கட்டளை கலை, இலக்கியத் தளங்களில் இவ்வாறான விழாக்களை முன்னெடுக்கிறது.
‘உள்மெய்’ கலைக்காட்சியில் பல ஆண்டுகளாகக் கலைத் துறையில் இயங்கிவரும் ஓவியர்கள், சிற்பிகள் பங்கேற்றார்கள். சந்ரு, நடராஜன் கங்காதரன், புருஷோத்தமன், பிரபாகரன் சுவாமிநாதன், அஜய் குமார், ராம்குமார் கண்ணதாசன், அனிதா உள்ளிட்ட பலரும் இதில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தார்கள். கடந்த ஒரு தசாப்தமாகச் செயல்படும் இளம் முற்போக்குக் கலைஞர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.
பொருளாதார அறிஞரும் ஆய்வாளருமான பேரா. சுக்தேவ் தோரட் ஓவியக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். ஓவியர் நடராஜன் கங்காதரன், கண்காட்சிப் பொறுப்பாளராக இருந்து இந்தக் குழுக் கண்காட்சியை ஒருங்கிணைத்தார்.

சுருஜனா ஸ்ரீதரின் ’நீரும் சாதியும்’ SRUJANA SRIDHAR - WATER AND CASTE
சாதி, பாலினம், மதம், இனம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உடைக்கும் முக்கியக் கருவி கல்வி என்று வலியுறுத்தியவர் அம்பேத்கர். கல்வி மட்டுமே சமூக, அரசியல் அதிகாரத்தை நோக்கி விளிம்புநிலை மக்களை நகர்த்தும் என்பதையும் வலியுறுத்தினார். அடக்குமுறைக்கு எதிராக அனைத்துத் தளங்களிலும் போராடிய புரட்சியாளர் என்ற முறையில் அவரது சிந்தனை இவ்விழாவின் அடித்தளமாக இருக்கிறது.
இந்த விழா வெறும் கலை நிகழ்வாக இல்லாமல் சமரசமற்ற உரைகள், விவாதங்கள், விமர்சனங்கள் மூலம் தலித் சமூகத்தின் குரலாக ஒலிக்கிறது. சமூக மனநிலைகளில் ஆழமாகப் பதிந்துள்ள சாதி ஆதிக்கத்தைச் சிதைக்கும் முயற்சி இது.
சாதிய மனநிலை சமூகத்தில் உள்ளார்ந்தும் புறமாகவும் வலுவாகப் பதிந்திருக்கிறது. அதைத் தளர்த்துவதற்கு இவ்வாறான குரல்கள் அவசியம்; அவை தொடர்ந்து ஒலிப்பதே ஆரோக்கியமான சமூகத்தின்அடையாளம்.
மின்னஞ்சல்: enathu.payanam@gmail.com
