நியூயார்க்கில் நவீனத் தமிழ்
தமிழ் மொழியின் மிகச் சிறந்த படைப்புகளையும் படைப்பாளிகளையும் உலக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் ‘வாழும் தமிழ் இலக்கிய விழா’ ஏப்ரல் மாதம் 3, 4 ஆகிய இரு நாட்களில் நியூயார்க் தி எஜிகேஷனல், கான்பரன்ஸ் சென்டர், அகாதெமி ஆஃப் மெடிஷன் எனும் பழைமையான கல்விக்கூடத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் அமெரிக்காவின் பல மாநிலங்களிலிருந்து இலக்கிய ஆர்வலர்களும் வாசகர்களும் கலந்துகொண்டார்கள். தமிழ்நாட்டிலிருந்து முப்பதுக்கும் மேற்பட்ட படைப்பாளிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
நிகழ்வுகள் இரண்டு அரங்குகளில் தனித்தனியாக நடைபெற்றன. ஒவ்வோர் அரங்கிலும் மும்மூன்று ஆளுமைகள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த, தமிழ்க் குடும்பத்தைச் சார்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் ஆளுமைகளின் சிறப்புகளை விளக்கியதோடு அவர்களது படைப்புலகத்தை முழுமையாக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடு கேள்விகள் கேட்டார்கள். தமிழில் உரையாற்றியவர்களின் உரையை உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்கள்.
கவிைத, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, சினிமா, பெண்ணியம், அரசியல், அழகியல், தத்துவம், பதிப்புத்துறை, இலக்கியத்தின் சமகாலப் போக்கு, தமிழ் இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு, மொழிபெயர்ப்புச் சிக்கல்கள், விளிம்புநிலைக் கதையாடல்கள், மானுடத்தின் அறம் குறித்த நிலைப்பாடுகள், இன்றைய கவிதைகள் குறித்த தலைப்புகளில் படைப்பாளர்கள் கலந்துகொண்டு உரை யாற்றினார்கள். விழா தொடக்கத்தில் புதுமைப்பித்தன் அரங்கில் நிகழ்ச்சியின் தொடக்க உரை நிகழ்ந்தது. டேமியன் சியர்ல்ஸ், ஆஸ்டின் செளந்தர், ஜெயமோகன், ஜெகதீஷ்குமார், பழனிஜோதி ஆகியோர் உரையாற்றினார்கள். இவர்களது உரையின் மையம் வாழும் தமிழ் இலக்கியத் திருவிழாவின் உருவாக்கத்தைப் பற்றியதாக இருந்தது.
சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட நிகழ்வு க.நா.சு. அரங்கம், சு.ரா. அரங்கம் என இரண்டு அரங்கத்திலும் அமர்வுகள் நடந்தன. முதல்நாள் முதல் அமர்வில் ‘பண்பாட்டு உருவாக்கமும் நவீன இலக்கியமும்’ எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடந்தது. எஸ்தர் ஆலன், கிரிதரன் ராஜகோபாலன், சுனில் கிருஷ்ணன் கலந்துகொண்ட நிகழ்வை ஆர். எஸ். சாஹா நெறிப்படுத்தினார்.
‘காலத்தை மிஞ்சிய மானுடம்’ எனும் தலைப்பில் பீட்டர் கான்ஸ்டன்டைன், சயந்தன், அஜிதன் உரையாற்றிய நிகழ்வை பிரணவ் ரவிக்குமார் நெறிப்படுத்தினார்.
‘கவிதை இன்று: இசைமை, எதிர்ப்பு, மறுகண்டுபிடிப்பு’ எனும் தலைப்பில் பெருந்தேவி, ரெமிதா, கரீம் ஜேம்ஸ் அபு-ஜெயிட் ஆகியோர் உரையாற்றினார்கள். ஆர். எஸ். சாஹா நெறிப்படுத்தினார்.
‘செவ்வியலின் வருகை’ எனும் தலைப்பில் டேமியன் சியர்ல்ஸ், ஜெயமோகன், சுசித்ரா ராமச்சந்திரன் உரையாற்றினார்கள். மேகனா குமார் நெறிப்படுத்தினார். ‘கவிதை: நேற்று, இன்று’ எனும் தலைப்பில் விவேக் நாராயணன், இளங்கோ கிருஷ்ணன், வெய்யில் உரையாற்றினார்கள். வைஷாலினி மைலப்பன் நெறிப்படுத்தினார். ‘அவளது பார்வையில்’ எனும் தலைப்பில் பத்மா விஸ்வநாதன், அ. வெண்ணிலா, சந்திரா தங்கராஜ் கருத்து வழங்க சஹானா குமார் நெறிப்படுத்தினார்.
‘உண்மையின் திரைகள்: சமகால இலக்கியத்தின் அடையாளம் தேடுதல்’ எனும் தலைப்பில் ஜெரால்டின் ஜென்கின்ஸ், அனிருத்தன் வாசுதேவன், சைதன்யா உரையாற்ற நெறியாள்கை ஜோஷிதா மகேந்திரராஜன். ‘மாறும் உலகின் இலக்கியம்’ எனும் தலைப்பில் ஜானிகா ஓசா, எம் நவின், செந்தில் ஜெகநாதன் பேசினார்கள். காயத்ரி பாலாஜி நெறிப்படுத்தினார்.
‘மாறும் இந்தியா: உணவு, உணர்வு’ எனும் தலைப்பில் ரோஹன் கமிச்சேரில், சி. சரவண கார்த்திகேயன், லஷ்மி சரவணகுமார் கருத்து வழங்க பாரதி காளிராஜ் நெறிப்படுத்தினார். ‘களத்திலிருந்து கதைக்கு’ எனும் தலைப்பில் சு. வேணுகோபால், காலம் செல்வம், அரவின்குமார் பேசினார்கள். அன்னி கஸ்தூரி சவேரிமுத்து நெறிப்படுத்தினார்.

ஒருங்கிணைப்பாளர்கள்: பத்மநாபன், ஆஸ்டின் சௌந்தர், டாக்டர் அருட்செல்வம், முத்து காளிமுத்து, பாலாஜி
‘தமிழ் அரசியல், அழகியலில் பெண்ணிய எழுத்து’ எனும் தலைப்பில் ரம்யா, கலைச்செல்வி, அழகுநிலா உரைக்கு நெறியாள்கை அபிராமி ரவிக்குமார், விக்ரம் வெங்கட். ‘பின்னிலிருந்து முன்னுக்கு: விளிம்புநிலைக் கதையாடல்’ எனும் தலைப்பில் தமிழ்ப்பிரபா, எஸ். செந்தில்குமார், சாம்ராஜ் உரைக்கு நெறியாள்கை நிவேதா ஸ்ரீ சேகர்.
‘சமகால அழகியல் நோக்கி’ எனும் தலைப்பில் சாட் டபிள்யூ போஸ்ட், பாவண்ணன், திருச்செந்தாழை உரையாற்ற அஞ்சலி பிரசாத், ஸ்ரேயா சந்திரன் நெறிப்படுத்தினார்கள். ‘மொழி மூலம் பண்பாட்டை மறுவரை செய்தல்’ எனும் தலைப்பில் ஜெஃப்ரி ப்ரோக், யுவன் சந்திரசேகர், ஐஸ்வர்யா. வி ஆகியோர் கருத்து வழங்க சாம்பவா ஸ்ரீகாந்த் நெறிப்படுத்தினார்.
‘மாற்றத்திற்கான மொழிபெயர்ப்பு’ எனும் தலைப்பில் தாமஸ் ஹிடோஷி ப்ரூக்ஸ்மா, என். கல்யாண்ராமன், பிரியம்வதா ராம்குமார் உரையாற்ற சித்தார்த் செந்தில்வேல் நெறிப்படுத்தினார்.
ஒவ்வொரு நிகழ்வின் தொடக்கத்திலும் பிரபலமான கவிஞர்களின் கவிதையிலிருந்து நான்கு நான்கு வரிகள் பாடப்பட்டன. கவிஞர் தேவதேவனின் ’அசையும்போது தோணி அசையாதபோது தீவு’ என்னும் கவிதை வரியை ராலே ராஜன் இசையுடன் பாடியது சிறப்பாக அமைந்திருந்தது.
தமிழ்ப் படைப்பாளிகள் எதிர்காலத்தில் தங்களது ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களை, பதிப்பாளர்களைக் கண்டடைவதற்கும் ஆங்கில வழி வாசிக்கும் வாசகர்களைச் சந்திக்கும் சூழலையும் இந்த இலக்கிய விழா முன்னெடுத்தது. இந்த நிகழ்விற்கு அடுத்தபடியாக அடுத்த ஆண்டு லண்டனில் வாழும் தமிழ் இலக்கிய விழா நடைபெறுமென அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை நிகழ்வில் வெளியிட்டனர். நூலைத் திரு பதிப்பகம் பதிப்பித்திருக்கிறது.
விழாவிற்கு முந்தைய நாளும் இந்தியாவிற்குத் திரும்புவதற்கு முதல் நாளும் நியூயார்க் லிபர்ட்டி தீவிலுள்ள சுதந்திரதேவி சிலையையும் நியூயார்க் மியூசியத்தையும் காணும் வாய்ப்பு தமிழ்ப் படைப்பாளிகளுக்குக் கிடைத்தது. செளந்தர், பழனி, பத்மநாபன், பாலாஜி, ஜெகதீஷ்குமார், பிரபு ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்ததோடு தமிழ்ப் படைப்பாளிகளை வரவேற்று உபசரிப்பதில் ஆர்வத்தோடு இருந்தனர். நியூஜெர்சி கோர்ட் யார்ட் விடுதியின் புல்தரையையும் அதைச் சுற்றியிருந்த சாலைகளையும் மெட்ரோ ரயில் பயணத்தையும் தமிழ்ப் படைப்பாளிகள் என்றும் மறக்க மாட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை.
