மனிதனுக்கும் தொன்மத்துக்குமான உரையாடல்

தொன்மம் தொட்ட கதைகள்
(இதிகாசம், புராணம் தொடர்பான சிறுகதைகள் குறித்த கட்டுரைகள்)
சுப்பிரமணி இரமேஷ்
வெளியீடு:
இந்து தமிழ் திசை
கே.எஸ்.எல். மீடியா லிமிட்.,
கஸ்தூரி மையம்,
124 வாலாஜா சாலை
சென்னை-2
தொடர்புக்கு: 74012 96562
பக். 256
ரூ. 300
தொன்மக் கால இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரதமும் ஆயிரக்கணக்கான கிளைக் கதைகளை உள்ளடக்கியவை. தொன்மத்தையும், தொன்மம் சார்ந்த கதாமாந்தர்களையும் நவீனயுக எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் வழி வேறு கோணத்தில் அணுகியுள்ளனர். அவர்கள் அப்புனைவுகளினூடே தொன்மம் குறித்த மாறுபட்ட பார்வையைக் கொண்டு காத்திரமான உரையாடல்களையும், கதாமாந்தர்களையும் ஊடாடவிட்டுள்ளனர். நவீன இலக்கியங்கள்தான் இராமாயண, பாரத இதிகாசங்களின் ஒரு சார்புத் தன்மையைக் கட்டுடைத்து அதற்கு எதிரான கதையாடலை முன்வைக்கின்றன. இதிகாசத்தில் இடம்பெறும் துணைமை மாந்தர்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்று எதிர்நிலைக் கதாமாந்தர்களாகக் காலந்தோறும் கற்பிக்கப்பட்ட பாத்திரங்களின் அகமனத்தையும் ஊடறுத்துச் சென்று அலசி ஆராய்ந்துள்ளன.
இத்தகைய தொன்மத்தை உள்ளடக்கிய கதைகளை மீள்வாசிப்பு செய்யும் நோக்கில் ஆராயப்பட்டு எழுதப்பட்ட நூல்தான் சுப்பிரமணி இரமேஷின் ‘தொன்மம் தொட்ட கதைகள்’ என்னும் கட்டுரைத் தொகுப்பு. கு. அழகிரிசாமி, தி.ஜா. முதலிய எழுத்தாளர்கள் தொடங்கி சு.ரா., அசோகமித்திரன் வழியாக ஜா. தீபா, மதிஅழகன் பழனிச்சாமி வரையிலான புதிய தலைமுறை எழுத்தாளர்கள் ஈறாகவுள்ள நாற்பது எழுத்தாளர்களின் கதையை இந்நூல் மீள்வாசிப்புச் செய்துள்ளது.
தொன்மத்தைப் புனைவாக்குதலில் வல்லவர் புதுமைப்பித்தன். இந்நூலின் ‘அகக்காட்சியில் விரியும் நிலம்’ என்னும் கட்டுரை. கூட்டு நனவிலி மனதில் அனைவருக்கும் சேகரமாகியிருந்த கபாடபுரம் குறித்து, படைப்பாளர்கள் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டேயிருக்கும் சூழலில், அது அவர்களின் அடிநிலை மனதில் கனவாக விரிகிறது. அகக்காட்சியில் விரிந்த இந்நிலத்தையே ‘கபாடபுரம்’ புனைவாக புதுமைப்பித்தன் மாற்றியுள்ளார் என்கிறார் நூலாசிரியர். மேலும் இக்கதை நிகழ்கால மனிதனுக்கும், தொன்மத்திற்குமான உரையாடலாக நீள்வதையும் தொட்டுக்காட்டி, நிமலன் என்ற சிவபெருமான் தொன்மத்துடன் இணைத்து, சிவபெருமானை நினைவூட்டும் படிமங்களைப் புனைவு முழுக்க புதுமைப்பித்தன் கையாண்டுள்ளமையையும் விளக்கிக் காட்டுகிறார். இதன் தொடர்ச்சியாக கு. அழகிரிசாமியின் ‘திரிபுரம்’ கதை குறித்த ‘அந்தச் சிரிப்பு’ என்னும் கட்டுரையையும் கூறலாம். இக்கதையில் வரும் பாத்திரமான வெங்கட்டம்மாவை கு. அழகிரிசாமி திரிபுரம் எரித்த சிவபெருமான் தொன்மத்துடன் ஒப்பிட்டு நவீனத்திற்கு உட்படுத்தியிருப்பதைக் காட்டுகிறார்.
கற்பு என்பது தொன்ம மதிப்புடையது. இது பெண்களுக்கு வழிவழியாகக் கற்பிக்கப்பட்டு வரும் கற்பிதங்களில் ஒன்று. கற்பைப் பெண்களுக்குரிய குணங்களில் ஒன்றாக இலக்கியங்கள் தொடர்ந்து வலியுறுத்திப் பேசியிருக்கின்றன. இந்நூலில் இடம்பெற்றுள்ள ‘நெருப்பை அணைத்த நீர்’ கட்டுரை, சீதைக்கு நடந்த அக்னிப் பிரவேசத்தின் மீது மீள்வாசிப்பு செய்து எழுதப்பட்ட ஜெயகாந்தனின் ‘அக்னிப் பிரவேசம்’ கதையின் தொன்ம மதிப்பீட்டைத் திறனாய்வு செய்கிறது. இக்கதையில் கற்பை நிரூபிக்க பெண்கள் ஆயுதமாகக் கைக்கொள்ளும் நெருப்பை விடுத்து நீரைக் குறியீடாக்குகிறார். இக்கதையின் திருப்பம் சுவாரசியமானது. பாலியல் சிக்கல்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ள கதை கு.ப.ரா.வின் ‘விபரீதக் காதல்’. இக்கதையை அசோகர் வரலாற்றுடன் இணைத்துத் தொன்மப்படுத்தியுள்ளார்.
சீதை குறித்த தொன்மத்தை நவீனத்திற்கு உட்படுத்தி அம்பை எழுதியுள்ள கதை ‘அடவி’. இக்கதையை ஆராயும் நோக்கில் அமைந்த கட்டுரை ‘நிகழ்காலத்துச் சீதைகள்.’ சீதையின் வனப்பிரவேசம் தொடர்பான தொன்மத்தை நிகழ்காலத்துடன் பொருத்தி மறுவாசிப்பு செய்துள்ளதை விளக்குகிறார். தேன்மொழியின் ‘நாகாபரணம்’ கதை முக்கியமானது. இக்கதை முழுக்க சூர்ப்பணகையின் குரலாகவே ஒலிக்கிறது. சூர்ப்பணகையின் கனத்த கேள்விகள் உற்றுநோக்கத்தக்கது. இராமனின் அந்திமக் காலத்தை உணர்ச்சிக் கொந்தளிப்புடன் எடுத்துக்காட்டும் கதை எழுத்தாளர் கல்யாணராமனின் ‘ஜலசமாதி’. யாராய் வேண்டுமானலும் பிறக்கலாம்; ஆனால் இராமனாய் மட்டும் பிறக்கக் கூடாது எனப் புனைவை முடிப்பதன் மூலம் இராமன் என்ற தொன்மப் பெயருக்குள்ளே இருக்கும் நெருக்கடிகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த வகையில் இத்தொகுப்பில் அடங்கியுள்ள சுவாரசியத் தன்மையைக் கூட்டக்கூடிய தி.ஜா.வின் ‘ராவணன் காதல்’ கதை பற்றிய கட்டுரை முக்கியமானது. பிரம்மனிடத்து இராவணன் கேட்கும் காத்திரமான கேள்விகளால் புனைவு உச்சத்தை அடையும் விதத்தை ‘காதலுக்கு விளக்கம் சொன்ன இராவணன்’ கட்டுரையில் சுப்பிரமணி இரமேஷ் எடுத்துக் காட்டியுள்ளார். சீதை என்னும் தொன்மப் பாத்திரத்தை வணிகப்பொருளாக்கி எழுதிய சு.ரா.வின் ‘சீதை மார்க் சீயாக்காய்த்தூள்’, எழுத்தாளர் பிரேமின் ‘தண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப் பாதை’ முதலிய தொன்மக் கதைகள் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் யாவும் முக்கியமானவை.
மகாபாரதம் குறித்த தொன்மத்தை உள்ளடக்கிய கதைகளாக இந்நூலில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் பல்வேறு சுவாரசியமான திறப்புகளைக் காட்டுவதாய் அமைந்திருக்கின்றன. மகாபாரதத் தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு ‘யௌவனம் தந்த யுவன்’ என்ற சிறுகதையை எம்.வி. வெங்கட்ராம் எழுதியுள்ளார். இக்கதையில் யயாதி, சர்மிஷ்டை இருவருக்குமிடையே பிறந்த புருவின் வழித்தோன்றல்களே பாண்டவ, கௌரவர்கள் என்னும் தொன்மக் கதையின் மீது எம்.வி.வி. மறுவாசிப்பை நிகழ்த்தியிருக்கிறார். தருமன் சூதாட்டத்தில் கைவல்லவன் அல்ல. அவனுக்கு அதில் போதிய பயிற்சியும் இல்லை. இத்தருமனின் சூதாட்டக் கலையை அசைத்து பார்த்து எஸ். ராமகிருஷ்ணனால் எழுதப்பட்ட சிறுகதை ‘பகல் விளையாட்டு’. கதையினை மறுவாசிப்பு செய்யும் விதமாக அமைந்துள்ள கட்டுரை ‘சூதாடத் தெரியாத தருமன்.’ ‘தன்னை வருத்திக்கொண்ட காந்தாரி’ என்னும் கட்டுரை மகாபாரதத்தில் தன் கணவன் பார்வையற்றவன் எனத் தெரிந்து தன் கண்களைக் கட்டிக்கொண்டு வாழும் காந்தாரியின் தொன்மப் பாத்திரத்தை உட்கொண்டு ஜா. தீபாவால் படைக்கப்பட்ட ‘திரை’ என்னும் கதையை ஆராய்வதாய் அமைந்திருக்கிறது.
சிலப்பதிகாரம் குறித்த தொன்மக் கதையினையும் இந்நூலில் நுட்பமாக ஆராய்ந்திருக்கிறார். சிலப்பதிகாரத்தின் துணைமைப் பாத்திரமான தேவந்தி தொன்மத்தை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ள எம்.ஏ. சுசீலாவின் ‘தேவந்தி’ சிறுகதையில் பாசண்டச்சாத்தன்மீது இளங்கோவடிகள் கட்டியிருந்த அமானுஷ்யத்தை விலக்குவது குறித்தும், புனைவு முழுக்க தேவந்தி பக்கம் நின்று ஆறுதல் அளிக்கும் சுசீலாவின் பெண்ணிய மனதையும் ‘கடவுளுக்கு மனைவியான தேவந்தி’ கட்டுரை வாயிலாகத் திறந்துகாட்டியுள்ளார். புராணத் தொன்மத்தை நவீன கண்கொண்டு நோக்கிய எழுத்தாளர்களின் கதையை ஆராய்ந்து எடுத்தாளப்பட்டுள்ள சிறப்பான கட்டுரைகளையும் இந்நூல் கொண்டிருக்கிறது. பதிணென் புராணங்களில் மார்க்கண்டேயன் புராணத்தின் தொன்மத்தைக் கொண்டு க.நா.சு. எழுதிய ‘ரயிலில் சிரஞ்சீவி’ கதையின் தொன்மத்தை விவரிக்கிறது ‘மரணமெனும் விடுதலை’ என்ற கட்டுரை. இயல்புக்கு முரணான வாழ்க்கைத் தத்துவத்தைக் கூற மார்க்கண்டேயனைப் பயன்படுத்துகிறார் க.நா.சு. ஒட்டுமொத்தமாக இப்புனைவு, வரத்தைத் திருப்பி அளிக்கும் எளிய முடிவு என்கிறார். அழகைத் துறத்தலைப் புனைவுக்குள்ளே புகுத்தி, காரைக்காலம்மையாரின் தொன்மத்தின்மீது மறுவாசிப்பு செய்து எழுதிய அ. வெண்ணிலாவின் ‘என்புதோல் உயிர்’ சிறுகதையை ஆராயும் கட்டுரை, சிறுதொண்டர் புராணத்தை மீள்வாசிப்பு நோக்கில் அணுகியிருக்கும் எழுத்தாளர் ம. இராசேந்திரனின் ‘மகாமகம்’ சிறுகதையை மதிப்பீடு செய்யும் கட்டுரையும் கவனிக்கத்தக்கது.
இன்னும் பல முக்கியமான எழுத்தாளர்களின் கதைகளையும் கவனத்தில் கொண்டிருக்கிறது இந்நூல். இதிகாசங்கள், புராணங்கள் போன்றவை மாந்தர்களின் புறமனதைச் சித்திரிப்பவை. ஆனால் நவீனப் படைப்புகள் தாம் அவர்களின் அகமனதைச் சித்திரிக்கின்றன. அந்த வகையில் சுப்பிரமணி இரமேஷ் ஒவ்வொரு எழுத்தாளர்களின் கதைமாந்தர்களையும் தொன்மத்துடன் இணைத்துப் படைப்பாக்கிய விதத்தைக் கூர்ந்து அவதானித்து மொழிப்படுத்தியிருக்கிறார். இராவதி கார்வே, நீட்சே, ஃபிராய்ட், யூங், அ.கா. பெருமாள், அ.அ. மணவாளன் போன்ற அறிஞர்களின் கருத்துகளைத் தேவைப்படும் இடங்களில் எடுத்தாண்டிருப்பதன் மூலம் இவ்வாய்வு நூலின் நேர்த்தியை உணர முடிகிறது.
ம. சோனியா: முனைவர்பட்ட ஆய்வாளர், மாநிலக் கல்லூரி, சென்னை.
மின்னஞ்சல்: msoniya118@gmail.com
