ரித்விக் கட்டக் எனும் மேதை

தாதா:
ரித்விக் கட்டக் (1925-2025)
(வாழ்க்கை வரலாறு)
எஸ். வாசுதேவன்
வெளியீடு:
சால்ட் வெளியீடு
115, எம்.ஏ.எஸ். ரெசிடென்சி அபார்ட்மெண்ட்ஸ்,
S3, 2ஆவது தளம், கோடம்பாக்கம்,
சென்னை-600 024.
மின்னஞ்சல்: saltpublications@gmail.com
தொலைபேசி: 89394 09893
பக். 166 ரூ. 250
கடந்த ஆண்டு பெங்களூர் இன்டர்நேஷனல் சென்டரில் ரித்விக் கட்டக் இயக்கிய ‘திதாஷ் ஏக்தி நாதிர் நாம்’ (நதியின் பெயர் தீதாஷ் 1974) என்ற படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதை முதன்முதலில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்தேன். இப்போது பார்த்தது வங்காள இயக்குநர் கெளதம் கோஷால் புதுப்பிக்கப்பட்ட பிரதி. பங்களாதேஷில் ஓடும் இந்த நதியின் கரையில் வாழும் மாலோ எனும் மீனவ சமூகத்தில் நடக்கும் கதை. நதியில் செல்லும் பாய்மரப் படகுகள்போல் பிம்பங்கள் நிதானமாக நகர்கின்றன. அற்புதமான அனுபவம்.
இந்தியத் திரை வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை இயக்குநர் ரித்விக் கட்டக். அவரைப் பற்றி, அவரது சினிமாபற்றிப் பல ஆங்கில நூல்கள் வெளிவந்திருந்தாலும், எஸ். வாசுதேவன் எழுதியிருக்கும் ‘தாதா: ரித்விக் கட்டக்’ கட்டக் பற்றித் தமிழில் வரும் இரண்டாவது நூல். தனது முந்தைய நூல்கள், கட்டுரைகள் மூலம் சினிமாவின் மீது தனக்கிருக்கும் ஆழமான புரிதலை வாசுதேவன் வெளிப்படுத்தியிருக்கிறார். சினிமாபற்றிய அவரது கவனிப்பு அந்த ஊடகத்தின்பால் அவருக்கு இருக்கும் ஈர்ப்பையும் புரிதலையும் காட்டுகிறது. ஒரு காட்சி ஊடகத்தைப் பற்றிச் சொற்களில் விளக்குவதற்குத் தேவையான திறமை இவரிடம் இருக்கின்றது. இந்த நூல் வெறும் வாழ்க்கை வரலாறு அல்ல. இது கட்டக்கின் சினிமா பற்றியது. அதன் அழகியல் பற்றியது. அவரது சித்தாந்தம் பற்றியது. ஆகவே சினிமாவின் இயல்புபற்றி இதில் படிக்க நிறையவே இருக்கிறது.
கட்டக்கின் சினிமாவை அது உருவாகிய பின்புலத்துடன் நமக்கு அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். வங்காளப் பிரிவினை, வங்காளப் பஞ்சம் இவை கட்டக்கை மிகவும் பாதித்த நிகழ்வுகள். இவரது படைப்புகளில் இந்த இரு வரலாற்று நிகழ்வுகளின் தாக்கத்தை உணரலாம். “என் மக்களின் துயரங்களையும் அல்லல்களையும் பார்த்து என் கோபத்தையும் இயலாமையையும் வெளிப்படுத்த சினிமா என்ற கலை வடிவத்தைத் தேர்வு செய்தேன்” என்கின்றார். கலைஞர்களுக்குச் சமூகப் பொறுப்பு உண்டு என்று கட்டக் உறுதியாக நம்பினார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் கலாச்சாரப் பிரிவாக இயங்கிய இந்திய மக்கள் நாடக மன்ற (Indian People Theatre)த்தில் கட்டக் இணைகிறார். நாடக உலகிலிருந்து சினிமாவிற்கு வருகிறார். ஆனால் இந்த இரண்டு ஊடகங்களின் வேறுபாட்டை நன்கு உணர்ந்திருக்கிறார் என்பது அவரது படைப்புகளிலிருந்து தெரிகிறது. நிமாய் கோஷ் ‘சின்ன மூல்’ (1950) என்ற வங்கப் படத்தை எடுத்தபோது அவருக்கு உதவியாளராகத் திரையுலகில் நுழைந்து அதில் சிறு பாத்திரத்தில் நடிக்கவும் செய்தார். (நிமாய் கோஷ், தமிழ்நாட்டிற்குப் புலம்பெயர்ந்து ‘பாதை தெரியுது பார்’ படத்தை 1960இல் இயக்கியவர்.)
கட்டக்கிற்கு சினிமா பற்றிய அடிப்படைக் கோட்பாடுகள் ரஷ்ய இயக்குநர்களான ஐசன்ஸ்டீன், புடொவ்கின் ஆகியோரின் படங்கள், எழுத்துக்கள் மூலம் கிடைக்கின்றன. தனக்கு மிகவும் பிடித்த படம் ‘பேட்டில்ஷிப் பொடெம்கின்’ (Battleship Potemkin 1925) என்கின்றார். சினிமா கட்புல ஊடகம். மொழியறிவைத் தாண்டிச் செல்லக்கூடியது என்ற சினிமாவின் இயல்பை ரஷிய இயக்குநர்களின் படைப்புகள் மூலம் அறிந்துகொண்டார். கட்டக்கின் மேதமை என்னவென்றால் மேற்கத்தியப் படைப்பாளிகளிடமிருந்து புரிந்துகொண்டதைத் தனது நாட்டின் வாழ்வியல் மணம் மாறாது படங்களில் பயன்படுத்திக்கொண்டதுதான்.
புனாவில் திரைப்படக் கல்லூரி தோன்றியபோது அங்கு பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அவரது ‘அஜந்த்ரிக்’ படம் 1958இல் வெளியான பின் அவரது திறமை கண்டுகொள்ளப்பட்டது. ஜான் ஆபிரகாம் போன்ற பல இளம் மாணவர்கள் அவரது கலைப்பார்வையால் ஈர்க்கப்பட்டார்கள். 1970களின் இந்திய சினிமாவில் தோன்றிய புதிய அலைக்குக் காரணமான மணி கவுல், குமார் சாஹினி போன்ற இளம் இயக்குநர்கள் கட்டக்கின் அழகியலால் பாதிக்கப்பட்டதைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். திரைப்படக் கல்லூரி மாணவர்கள் அவரைத் திருவுருவாகப் போற்றினர்.
கட்டக் மற்ற இந்தியப் படைப்பாளிகளைப் புகழ்ந்தே பேசுகிறார். எவரையும் குறைத்துப் பேசுவதில்லை. பிமல்ராய், சத்யஜித் ராய் இவர்களுடைய திறமைமீது பெருமதிப்புக் கொண்டிருந்தார். கட்டக் வாழ்ந்த காலத்தில் அவருக்கும் சத்யஜித் ராய்க்கும் போட்டி என்ற கருத்து பரவலாக இருந்தது. மாறாக இருவரும் மற்றவரின் திறமையின் மீதும் படைப்புகளின் மீதும் நன்மதிப்புக் கொண்டிருந்தார்கள் என்பதை ஆசிரியர் விளக்குகிறார்.
கட்டக்கின் படங்களில், ஆசிரியர் ‘மேகே தாக்க தார’வை (1960) தனிக் கவனிப்பிற்கு எடுத்துக்கொள்கிறார். வறுமையால் வாடும் தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேலை செய்யும் பெண் நீதாவைப் பற்றிய மனதை உலுக்கும் கதை. இந்தக் கதையைத் தழுவி நம்மூர் இயக்குநர் ஒருவர் ஒரு படம் எடுத்தார். எப்போதும்போல் மூலக்கதையைப் பற்றி ஒரு குறிப்பும் இல்லை.
கட்டக் யதார்த்த பாணியையும் நாடகீயத்தையும் இணைத்துப் படமெடுத்தார். இது ஒரு அரிய கலவை. ‘சுவர்ணரேகா’ (1968)வில் இதை நன்றாகக் கவனிக்கலாம். நம் படங்களில் பாட்டுகள் (பின்னணி இசை அல்ல) பெரும் பிரச்சினை. அவை கதை சொல்லலில் தொய்வை ஏற்படுத்துகின்றன. அவை தனி அங்கங்களாக வெளிப்படுகின்றன. திரைப்படத்தில் பாட்டுகளை எவ்வாறு கதை ஓட்டத்தோடு இழைந்தோடச் செய்யலாம் என்ற நுட்பத்தைக் கட்டக் ‘ஜுக்தி தக்கோ ஆர் கப்போ’ (1974) படத்தில் காட்டுகிறார்.
அவரது இளம் வயதில் உஸ்தாத் அலாவுதீன் கானிடம் சரோட் வாசிக்க முறையாகக் கற்று இசை பற்றிய கூருணர்வை வளர்த்துக்கொண்டார். ஒலி, ஓசை, இசை, நிசப்தம் இவற்றைத் தனது படங்களில் மிகத்திறமையாகக் கையாண்டார். பல இடங்களில் ஒலியில்லாமலே படம் நகரும். இந்த உத்தி காட்சிப் பிம்பங்களின் தாக்கத்தைக் கூட்டுவதை உணரலாம்.
இறப்பதற்குச் சில மாதங்களுக்கு முன் அவர் அளித்த நேர்காணலும் நூலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. சிறப்பான பதிவு. சினிமாபற்றி கட்டக்கின் சிந்தாந்தம் இதில் நேர்த்தியாக விளக்கப்பட்டுள்ளது. கடைசிவரை அவர் இடதுசாரி நிலைப்பாட்டிலிருந்து விலகவே இல்லை.
ஐம்பது வயதே நிரம்பிய கட்டக் குடிப்பழக்கத்தால் இறந்தார். அவரது மனைவி சுராமா அவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்தார். கட்டக்கின் தனிவாழ்வைப் பற்றிக் கருத்து எதுவும் கூறாமல் நடந்ததை ஆசிரியர் பதிவு செய்கிறார்
புத்தகம் நேர்த்தியாக, கைக்கு அடக்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கட்டக் தொடர்புடைய திரைப்படங்களின் பட்டியலைத் துல்லியமாக ஆசிரியர் பதிவு செய்துள்ளார். அரிய ஒளிப்படங்களைத் தேடிப்பிடித்துச் சேர்த்துள்ளார். ஆனால் ஏனோ ஒளிப்படங்களுக்கு எந்தவிதத் தலைப்பும் கொடுக்கப்படவில்லை. அதேபோல் சொல்லடைவை (Index) விட்டுவிட்டார். இந்த அங்கம் நூலுக்கு இன்றியமையாதது. புத்தகத்தின் பயனை இது பன்மடங்கு அதிகரிக்கும்.
சினிமாபற்றித் தமிழில் வந்திருக்கும் படைப்புகளில் இந்த நூலுக்குச் சிறப்பிடம் உண்டு.
மின்னஞ்சல்: theodorebaskaran@gmail.com
