மொழிபெயர்ப்பில் மனித இயந்திரம்

படஉதவி: சுருதி டிவி
காலச்சுவடு பதிப்பகம் சென்னை கவிக்கோ மன்றத்தில், ஏப்ரல் 19ஆம் தேதி (ஞாயிறு) அன்று காலை 10 மணிமுதல் 1 மணிவரை ‘அரவிந்தன் நினைவேந்தல்’ எனும் நிகழ்வை ஒருங்கிணைத்தது.
மௌன அஞ்சலியோடு தொடங்கிய இந்நிகழ்வில், வரவேற்புரையும், அரவிந்தன் பற்றிய குறிப்புகளையும் ஊடகவியலாளர் ச. கோபாலகிருஷ்ணன் வழங்கினார். தொடர்ந்து எழுத்தாளர் பிரேமா ரேவதி, கிழக்குப் பதிப்பக ஆசிரியர் மருதன், ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி, ஆய்வாளர் பழ. அதியமான், ஆவணப்பட இயக்குநர் கவிஞர் ரவி சுப்பிரமணியன், எழுத்தாளர் ஜோ.டி. குரூஸ், புதிய தலைமுறை ஆசிரியர் சமஸ், எழுத்தாளர் க. நாகப்பன், மண்குதிரை, ஓவியர் சந்தோஷ் நாராயணன், எழுத்தாளர் திருக்குமரன் கணேசன், மொழிபெயர்ப்பாளர் பயணி தரன் உள்ளிட்டோர் அரவிந்தன் உடனான தங்களது நினைவுகளைத் துயரத்துடன் பகிர்ந்துகொண்டார்கள்.
மருதன், மொழிபெயர்ப்பிற்குள் தன்னை உள்ளிழுத்த ஆளுமைகளுள் மிக முக்கியமானவர் அரவிந்தன் என்று பதிவுசெய்தார்.
மண்குதிரை, அரவிந்தனுக்கு வந்த அஞ்சலிக் குறிப்புகளில், கட்டுரைகளில் அவரின் ஆளுமைப் பண்பைப் பற்றிப் பேசியளவிற்கு, அவரின் இலக்கியப் படைப்புகள் குறித்துப் பேசவில்லை என்றார். அரவிந்தன் தன்னைப் படைப்பாளியாக வெளிப்படுத்த முயன்ற காலகட்டமாக அவரது இறுதி காலங்கள் இருந்தன. இன்றைக்கு இருக்கும் தமிழ் இந்துவின் அமைப்பு அவர் ஏற்படுத்தியதுதான். செம்மையாக்கத்தில் பிழைகளைச் சுட்டிக் காண்பிக்கும்போது நயத்தோடு எடுத்துரைப்பார். அவரது தலைமையில், பணியாற்றுபவர்களுக்குச் சுதந்திரமும் தனித் திறமைகளை வெளிப்படுத்த முன்னுரிமையும் அளிப்பார் என்று பதிவு செய்தார்.
ஆர்.என்.ஜோ.டி.குரூஸ் பேசுகையில், கொற்கை நாவலுக்கு எழுதிய முன்னுரையின் பின்னரே அரவிந்தன் தனக்கு அறிமுகம் என்றார். அவருடன் நட்புரீதியாக நெருங்கிப் பழகவில்லை. காலச்சுவடு இதழுக்காக என்னை நேர்காணல் செய்ய அண்ணாநகர் இல்லத்திற்கு வந்தார். அந்தக் குறுகிய சந்திப்பில் பேச்சுகளின் தாக்கம், அவரது மரணம் என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது என்றார்.
பிரேமா ரேவதி, அரவிந்தனின் எழுத்துகளை வாசித்ததில்லை என்பதில் எனக்குக் குற்றவுணர்வு அதிகமுள்ளது என்றார். நான் அதிகமாக எழுதியதில்லை. அவற்றில், பெரும்பாலானவற்றை அவரால்தான் எழுதினேன். பல்வேறு விசயங்களைப் பற்றி அறிவார்ந்த தன்மையில் தரவுகளைப் பயன்படுத்தி உரையாடுபவர் அரவிந்தன். அவரைப் போல மற்றவர்களை முன்னிலைப் படுத்தித் தன்னைப் பின்னணியில் வைத்துக் கொண்டவர்கள் மிக அரிதுதான் என்று பேசினார்.
பழ. அதியமான், அரவிந்தன் நம்மை நோக்கி நீட்டிய நட்பு கரத்தைப் பற்றிக்கொள்ளவில்லை என்ற குற்றவுணர்வு எனக்கும் உள்ளது என்றார். அவரிடம் அதிகமாகப் பழகவில்லை. குறைந்த காலமே பழகினாலும் அவர்களிடம் ஒருவித மன நெருக்கத்தை ஏற்படுத்திவிடுகிற ஆற்றல் அவருக்கு உண்டு. அவரைக் குறித்த அஞ்சலிக் குறிப்புகளை எழுதியவர்கள் வெவ்வேறு சித்தாந்தம் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் எல்லாம் பத்திரிகை தொடர்பிலானவர்கள். மற்றவர்கள் அவர் குறித்துப் பேசவில்லை. அவர் எழுத்து சிந்தனைகளால் உதித்தது. கட்டுரையில் எல்லோரும் எதிர்பார்க்கும் அம்சங்களை அளிப்பவர். பல துறையில் கவனம் பெறும்படி எழுதிய எழுத்தாளர்களில் அபூர்வமானவர் அரவிந்தன். மொழி வல்லுநராகத் திகழ்ந்த அரவிந்தன் மொழிபெயர்ப்பில் மனித இயந்திரம். அவர் ஓய்வெடுக்காமல் ஓயாது உழைப்பவர் என்று கூறினார்.
எழுத்தாளர் க. நாகப்பன், இந்து தமிழில் பணியாற்றியபோது அரவிந்தன் வேறுபிரிவுக்குத் தலைமைப் பொறுப்பில் இருந்தார். இருப்பினும் ஒருநாள் நடிகர் தனுஷ் குறித்து அவரிடம் பேசினேன். அப்போது, அதனை இந்து டாக்கீஸ்க்கு எழுதித் தரச் சொன்னார். சினிமா குறித்து முதன்முதலாகக் கட்டுரை எழுத வாய்ப்பளித்தார். அவரது முக்கியமான நூல் ‘ஒரு சொல் கேளீர்’. இந்நூலை அடிப்படையாகக் கொண்டு இந்து தமிழ் திசையில், ‘தமிழ் அறிவோம்’ என நூறுக்கும் மேற்பட்ட காணொளிகளைக் காட்சிப்படுத்தினோம். அவரது தொடர்பைச் சரிவர பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை என்ற மனக்குறையும் வருத்தமும் எனக்கு உள்ளது.
ஆ.இரா. வேங்கடாசலபதி 1990களிலிருந்து அரவிந்தனுடன் நெருக்கம் ஏற்பட்டது என்றார். அந்தக் காலத்தில் ஆட்களை மதிப்பீடு செய்ய என்னைப் போன்றோரின் உரைகல் ‘ஜே.ஜே: சில குறிப்புகள்.’ அந்த நாவலில் உள்ள எந்த வரிகளை எல்லாம் சரியான தருணத்தில் ஒப்பிக்க முடியும் என்பதுதான் ஓர் அளவுகோல். இந்த அளவுகோலில் அவர் எங்களைவிட அதிக மதிப்பெண்ணைப் பெறக்கூடியவராக இருந்தார். சு.ரா. இல்லாமல் நாம் அவரை முற்றிலும் புரிந்துகொள்ள முடியாது. அரவிந்தன் எனும் ஆளுமையை உருவாக்கியதிலும் அவரது இலக்கியப் பார்வையை, உலகக் கண்ணோட்டத்தைச் சமைத்ததிலும் சு.ரா.விற்கு இருந்த பங்கை நாம் மறுக்க முடியாது. சுந்தர ராமசாமியின் தாக்கத்திலிருந்து சற்று விடுபட்டிருந்தால் அவர் மேலும் சிறந்த ஆளுமையாகப் பரிணமித்திருக்கக் கூடுமோ என்ற ஐயம்கூடத் தோன்றும். ஆனால் அதுதான் அரவிந்தன். ஒரு வகையில் அவரை சு.ரா.வின் நடமாடும் ஆவணக்காப்பகம் என்று சொல்லலாம். அவரது கல்வி குறித்துக் கவனிக்க வேண்டும். அரவிந்தன், மருதன், தேவிபாரதி, களந்தை இவர்களையெல்லாம் பார்க்கும்போது ஓர் ஆசிரியனாக வெட்கப்பட வேண்டிய நிலையில்தான் என்னைப் போன்றோர் இருக்கிறோம். நம்முடைய கல்விமுறையிலிருந்து இப்படிப்பட்ட ஆளுமைகளை உருவாக்கவே முடியவில்லை. முறையான கல்விமுறைக்கு வெளியேதான் தமிழினுடைய மிக முக்கியமான எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் எல்லாம் உருவாகியிருக்கிறார்கள். தமிழ், ஆங்கில மொழிகளில் நல்ல புலமை பெற்றவர். மொழியை மிக நுட்பமாகப் புரிந்துகொண்டு மொழிபெயர்க்க வேண்டும் என்று கவனம் கொண்டவர். எப்போதும் புதிய செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கும் வாசிப்பதற்கும் நட்புகொள்வதற்கும் இடமளித்தவர். திட்டமிட்ட பயனுள்ள உழைப்பைச் செலுத்தியிருக்கிறார் அரவிந்தன். அவரின் இழப்பு ஒரு கை இழந்ததைப் போன்ற நிலை என்று தன் உரையை நிறைவு செய்தார்.
ஓவியர் சந்தோஷ், கலைப் பணியில் இருந்த என்னை எழுத்துப் பணிக்கு அழைத்துச் சென்றவர் அரவிந்தன். தன்னைச் சுற்றியிருப்பவர்கள்மீது அவர் செலுத்தும் அக்கறை மிக முக்கியமானது. அது அலாதியானது. சென்னையில் சுவையான தின்பண்டம் எங்கு கிடைக்கும் என்று சரியாகச் சொல்வார். தீவிரமான இலக்கியவாதியான அவர், சினிமா பார்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர். அச்சினிமாவையும் அதில் வரும் பாட்டுகளைப் பற்றியும் நுட்பமாகக் கவனித்து உரையாடுபவர். தீவிரமான இலக்கியவாதியின் இறுக்கத்தை அவரிடம் பார்க்க முடியாது. சமநிலையில் அனைத்தையும் எடுத்துச் செல்பவர். பணி செய்யும் இடத்தில் சீனியர், ஜூனியர் என்ற மனநிலையே அவரிடம் இருக்காது. இதனைப் பலர் பதிவு செய்திருந்தனர். அது உண்மையே. தலைமுறை இடைவெளியைக் குறைத்துப் பழகியவர். அதிக திறன் கொண்ட நேர்மையான ஊடகவியலாளர் எனக் கூறினார்.
மொழிபெயர்ப்பாளர் பயணி தரன், தன் படைப்புகள் குறித்து அரவிந்தனுடன் விவாதித்ததில்லை. அவர் மொழிபெயர்ப்பு, செம்மையாக்கலில் மிக ஆழமாகச் சென்றவர் என்பதை அனுபவத்தின் அடிப்படையில் அறிந்தேன். வேற்றுமொழியாளர்கள் வியக்குமளவிற்கு ஆழமாகச் சென்றவர் என்றார்.
எழுத்தாளர் திருக்குமரன் கணேசன், 2022இல் மதுரை புத்தகக் காட்சியில் என்னுடைய முதல் நூல், ‘கறி விருந்தும் கவுளி வெற்றிலையும்’ வெளியானது. அதன் அட்டைப்படம் மாற்றம் செய்வது குறித்து அரவிந்தனிடம் தெரிவித்தேன். அப்போது, ஒரு நூலுக்குக் கருவும் மொழிநடையும்தான் மிக முக்கியம். அவை உங்கள் நூலில் உள்ளன. அட்டைப்படம் கவனம் பெறவில்லை என்றாலும் நூல் கவனம் பெறும் என்றார். அதுபோலவே என்னுடைய நூல் கவனமும் விருதுமும் பெற்றது என்றார்.
இந்நிகழ்வில் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்கள், அரவிந்தனின் குடும்பத்தார் எனப் பலரும் கலந்துகொண்டனர். பலராமன் சுப்புராஜ், ச. கோபாலகிருஷ்ணன், கிருஷ்ண பிரபு ஆகியோர் ஒருங்கிணைத்தார்கள். நிகழ்ச்சியைப் பலராமன் சுப்புராஜ் தொகுத்து வழங்கினார்.
குறிப்பு: நிகழ்வினை, ‘சுருதி இலக்கியம்’ யுடியூப் தளத்தில் காணலாம். நன்றி: சுருதி டிவி. https://youtube.com/live/bLZ12VI_VgY?feature=share
மின்னஞ்சல்: balaramanaavin@gmail.com
