வெறும் இதழாளர் அல்லர்; படைப்பூக்கம் கொண்ட எழுத்தாளர்
ஆரம்பக் காலத்தில் பிழைப்பின் நிமித்தம் வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தாலும் ஆயுளின் பெரும் பகுதிக் காலம் அரவிந்தன் எழுத்தைச் சார்ந்தே வாழ்க்கையை நடத்தியிருக்கிறார். முதன்மையாக இலக்கியவாதியாகவும் இதழாளராகவுமே மிளிர்கிறார். இது ஒரு சவாலான தேர்வு. புதுமைப்பித்தன் தமது அந்திம நாட்களில் அவரது நண்பர் சிதம்பரத்திற்குப் பின்வருமாறு அறிவுரை கூறுகிறார். “இலக்கியத்தைத் தொழிலாகக் கொண்டுவிடாதே. அது உன்னைக் கொன்றுவிடும். இலக்கியம் வறுமையைத்தான் கொடுக்கும். அதைப் பொழுதுபோக்காகவே வைத்துக்கொள்.”
தமிழ்ச் சூழலில் பிழைப்புக்கு ஆதாரமாக எழுத்தைக் கொள்வது ஆபத்தானது. எனினும் எழுத்தின் மீது தீவிர நாட்டம் கொண்ட எவரும் அந்த ஆபத்தைத் தெரிந்தே எதிர்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் அரவிந்தன்.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரச்சார இதழான விஜயபாரதத்தில் அவருடைய எழுத்து வாழ்க்கை தொடங்குகிறது. அந்த அமைப்பின் உறுப்பினராகவும் சில ஆண்டுகள் இருந்திருக் கிறார். பின்னர் ஏற்பட்ட இலக்கியத் தொடர்புகளும் பணி மாற்றங்களும் இலக்கியம் தொடர்பாக உருவாக்கிக்கொண்ட பார்வையும் அதிலிருந்து விலக்கின. விலக்கியது மட்டுமின்றி அந்த அமைப்பின் கடும் விமர்சகராகவும் மாற்றின.
இந்தியா டுடே இதழில் பணியாற்றிய நாட்கள் அரவிந்தனின் அணுகுமுறைகள் கூர்மையடைந்த காலம். எழுத்தாளனாகவும் இலக்கியவாதியாகவும் தன்னைத் தகவமைத்துக்கொண்டார். தொடர்புகளையும் தோழமைகளையும் பெருக்கிக்கொண்டார், அந்த இதழ்ப் பணியே அவரை அறியப்படச் செய்தது. அறியப் படும் தகுதிகளிலான பணிகளையும் திறம்படச் செய்தார். இந்தியா டுடே என்ற செய்தி இதழில் இலக்கியத்துக்கும் இடம் கண்டளித்ததில் அரவிந்தனின் பங்கும் குறிப்பிடத்தகுந்தது. அந்த இதழ் வெளியிட்ட இலக்கிய மலர்கள், அதில் வெளிவந்த புத்தக மதிப்புரைகள், அதன் வாயிலாகப் புதிய எழுத்தாளர்கள் அறிமுகமானது ஆகிய செயல்பாடுகளில் அவருக்கும் எடுத்துச் சொல்லத் தகுந்த பங்களிப்பு உண்டு. அவர் தீவிர இலக்கியச் சார்பாளராகவும் கூர்ந்த இதழியலாளராகவும் தன்னை வளர்த்துக்கொள்ளவும் செய்தார்.
அச்சிதழில் பெற்ற பட்டறிவின் பின்புலத்தில், அன்று அறிமுகமான மின்னணு ஊடகத்திலும் பணி மேற்கொண்டார். காலச்சுவடு நிறுவனத்தின் துணையுடன் உருவான உலகத் தமிழ். காம் மில் இதழியலிலும் இலக்கியத்திலும் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து வினையாற்றினார்.
சுந்தர ராமசாமியின் ஆசிரியப் பொறுப்பில் வெளிவந்த காலச்சுவடு எட்டு இதழ்களுடன் நின்றது. 1994இல் கண்ணனின் பொறுப்பில் இருமாத இதழாக மீண்டும் வெளிவரத் தொடங்கியது. புதிய நோக்கிலும் தளத்திலும் செயல்படத் தொடங்கியது. முன்பைவிடப் பொதுக்கவனத்திற்கு உள்ளானது. ஒருவேளை காலச்சுவடு இதழின் ஆவேசப் பாய்ச்சல் நிகழ்ந்த காலம் அதுவாகவே இருக்கும். இந்தச் செயல்பாடே அதை ஓர் இயக்கமாக முன்னிருத்தியது. அந்த இயக்கத்தில் அரவிந்தனும் பங்கேற்றார். 2002 ஜூலை - ஆகஸ்ட் இதழிலிருந்து அவரது பங்களிப்பு ஆரம்பமானது. இருமாத இதழாக (வெளிவந்தபோது) பதினோரு இதழ்களும் மாத இதழாக மாறிய பின்னர் 26 இதழ்களும் அவரது ஒத்துழைப்புடன் வந்திருக்கின்றன.
இதழாளராக அரவிந்தன் தனது சிறகுகளை எல்லாத் திசைகளிலும் விரித்தது காலச்சுவடு பருவத்தில்தான். ஐயமில்லை. இதழ்த் தலையங்கங்கள், நேர்காணல்கள், செய்திக் கட்டுரைகள், இலக்கிய, திரைப்பட, அரசியல் விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள் என இதழ் கோரும் எல்லா வகைமைகளிலும் எழுதியிருக்கிறார். அவை இதழுக்கும் எழுதியவருக்கும் வாசகக் கவனத்தைப் பெற்றுத் தந்தன. சர்ச்சைகளையும் ஏற்படுத்தின. அவரது அரசியல், திரை விமர்சனங்கள் மாற்றுக் கருத்துக்களை முன்வைத்தன.
காலச்சுவடு 89ஆம் இதழுடன் அரவிந்தனின் பொறுப்பாசிரியத்துவம் ‘தற்காலிகமாக’ நிறைவடைந்தது. ஆனால் காலச்சுவடு அணியின் இன்றியமையாத அங்கமாகத் தொடர்ந்தார்.
இந்து குழுமத்தின் தமிழ் நாளிதழில் இணைப்பிதழ்களின் ஆசிரியர் பொறுப்பை ஏற்ற அரவிந்தன் கற்ற வித்தையைச் கசடறச் செயல்படுத்தினார். வெகுசனத் தளத்தில் நவீனத் தமிழுக்கான முக்கியத்துவத்தை நிறுவினார். முன்கால அனுபவங்களிலிருந்தும் புதிய தேடல்களிலிருந்தும் பகுதிகளை உருவாக்கினார். அவற்றைத் திறம்பட எழுத்தில் கையாளும் அணியைக் கட்டமைத்தார். வழக்கமான இதழியல் நடவடிக்கைகளுக்கு அப்பால் மொழி மீதான அக்கறையை வலுவாக்கினார். இது இதழியலில் அரிய முயற்சி.
ஓர் இதழாசிரியரின் பணி தனது எழுத்துக்கான தனி அரங்கைக் கட்டி நிமிர்த்துவது அல்ல; பல்வேறு கருத்துக்களைப் பரிமாறும் பொதுவெளியை நிர்மாணிப்பது. இந்தப் பொறுப்பை அரவிந்தன் சரியாகவே நிறைவேற்றினார் என்பதை அவரது மறைவுக்குப் பின்னர் அறிய முடிகிறது.
“எழுத்தில் ருசி ஏற்பட்ட பிறகு, எழுத முடியும் என்று நம்பிக்கை வந்த பிறகு, நிறைய எழுதணும்னு ஆசையும் வந்தது. நிறைய கதைகள், நாவல்கள் என்று திட்டங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. ஆனால் ஆசைப்பட்ட வேகத்தில் அதையெல்லாம் செய்ய முடியவில்லை” என்று நேர்ப்பேச்சில் அரவிந்தன் குறிப்பிட்டார். தான் வெறும் இதழாளன் அல்லன்; படைப்பூக்கம் கொண்ட ஓர் எழுத்தாளன் என்று நம்பியவரின் ஆதங்கம் அது.
2022இல் அரவிந்தன் மீண்டும் காலச்சுவடு நிறுவனத்தில் பணியமர்ந்தார். பதிப்பாசிரியர் பணி. அவர் சுதந்திரமாகவும் படைப்பூக்கம் மிகுந்தும் பணியாற்றிய சில நாட்கள் இவை. மாமூலான பதிப்பக வேலைகளைத் தாண்டிப் படைப்பெழுத்திலும் தீவிரமானார். ஒரே இருப்பில் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியது ஓர் எடுத்துக்காட்டு. “இப்போதுதான் எழுத்து தொழிலாக இல்லாமல் ஃபாஷனாக ஆகியிருக்கிறது” என்று பெருமிதம் கொண்டார்.
அரவிந்தன் காட்சிக்கு எளியவர். கடுஞ்சொல் அற்றவர். எனவே கணிசமான நண்பர்களைப் பெற்றிருந்தவர். அது எழுத்தின் வாயிலாக அடைந்தது. அதேபோல எழுத்தின் முகாந்திரம் ‘பகைவர்க’ளையும் பெற்றிருக்கிறார். அந்தப் பகைவர்கள் எழுத்தாளர்கள் அல்லது இலக்கியவாதிகள் என்பதே முரண். எழுத்தாளர்களில் பலரும் இதழியல் நடைமுறைகளை அறியாதவர்கள் அல்லது அறிந்தும் பொருட்டாகக் கொள்ளாதவர்கள். தமது படைப்பு ஓர் இதழில் ஏற்கப் படாமைக்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதன் பொறுப்பில் உள்ளவரின் பாரபட்சமே காரணம் என்று எழுத்தாளர்கள் பிராது சொல்கிறார்கள்; வன்மத்தைக் கக்குகிறார்கள். அரவிந்தன் மறைவையொட்டி அதுபோன்ற சில பதிவுகளைச் சமூக ஊடகங்களில் காண நேர்ந்தது. ஒருவேளை அரவிந்தன் இருந்து அவற்றைப் பார்த்திருந்தால் அந்த அற்பத்தனத்தை எண்ணிப் புன்னகைத்திருப்பார். அது மிக அழகான புன்னகையாகவும் இருந்திருக்கும்.
வாழ்ந்த நாட்களில் அரவிந்தன் பெரிதும் கொண்டாடப் பட்டவர் அல்லர். ஆனால் கொண்டாடப்படத் தகுதியானவர் என்பதை அவரது மரணம் எடுத்துக் காட்டியிருக்கிறது. அவரை அறிந்தவர்கள் அவரது இன்மையை ஈடுசெய்ய முடியாத இழப்பாகவே உணர்கிறார்கள். காலச்சுவடு நிறுவனம் தனித்துவமான ஆளுமையையும் குன்றாத துணையையும் இழந்திருக்கிறது.
ஆளுமையும் செயல்திறனும் பங்களிப்பும் மிகுந்த எவருக்கும் இன்னொருவர் பதிலியாக மாட்டார். அவர்கள் தம்மளவிலேயே நிகரற்றவர்களாகத் தம்மை நிலைநாட்டுவார்கள். அவ்வாறானவர்களில் ஒருவர் அரவிந்தன்.
- பொறுப்பாசிரியர்
மா. அரங்கநாதன் இலக்கிய விருது 2026

விருதுபெற்ற விட்டல்ராவும் அம்ஷன்குமாரும்
2026ஆம் ஆண்டுக்கான மா. அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் ‘முன்றில் இலக்கிய அமைப்பு’ சார்பில் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு கவின்கலை, விமர்சனம் என இலக்கியத் துறைகளில் பங்காற்றியவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் இவ்விருது இந்த ஆண்டு எழுத்தாளர் கி. விட்டல்ராவ், இயக்குநர் அம்ஷன்குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. விருதாளர்களுக்குக் காலச்சுவடின் வாழ்த்துக்கள்!
