கடிதங்கள்
‘தேவையற்ற அதிர்ச்சியும் தேவையான செயல்பாடுகளும்’ தலையங்கம் படித்தேன். வைரமுத்து சிறந்த திரைப்படப் பாடலாசிரியர்களில் ஒருவர். திரைப்பாடல்களில் இலக்கியநயங்களைச் சேர்த்தவர். அவ்வளவுதான். மற்றபடி நவீன இலக்கியத்துக்கு அவர் பங்கு பூஜ்யம்தான். ஞானபீட விருதை வழங்கியவர்களிடமிருந்து எந்தவித வினையாற்றலும் வெளிப்படாததற்கு என்ன காரணமோ? ஐம்பதாண்டுகளுக்கு முன் சு.ரா. எழுதியது இன்றும் பொருந்துவது தமிழுக்கு நேர்ந்த சாபமோ? தலையங்கம் குறிப்பிட்டிருப்பதுபோல தமுஎகச மௌனம் சாதிப்பதன் பொருள் புரியவில்லை. அது ஒரு கண்டனக் கூட்டமே நடத்தியிருக்க வேண்டும். ஓர் எழுத்தாளரின் நேர்மை எழுத்தில் மட்டும் இருந்தால் மட்டும் போதாது, அவரின் வாழ்விலும் இருக்க வேண்டும்.
வளவ.துரையன்
முகலிவாக்கம்
•••
ஈரான் போர் ‘எப்படித் தொடங்கியது, எவ்வாறு முடியும்’ என்கிற தலைப்பில் கட்டுரையாளர் இராமநாதன் மிக ஆழமாக அலசி எழுதியிருந்தார். ஈரானை வெகு எளிதாக, சீக்கிரத்திலே சரணடையச் செய்துவிடலாம் என்ற கணக்கு தப்புக் கணக்காகப் போய்விட்டது. கட்டுரையாளர் எழுதியிருப்பதுபோல் போரின் முதல் நாளிலேயே உச்சத் தலைவர் கொல்லப்பட்டபோது, அடுத்த தலைவராக ஒருவரை அடுத்த நாளே தேர்ந்தெடுத்துவிட்டார்கள். எனவே ஈரானும் எளிதில் விடுவதாக இல்லை. இதையெல்லாம்விட அட்டைப்படம் ஆயிரம் எண்ணங்களையும் கதைகளையும் சொல்கிறது. இரண்டு கன்னங்களிலும் ரத்தக் கறைகள். கையில் ஒரு பொம்மை. அழுகிறானா சிரிக்கிறானா என்று தெரிந்துகொள்ளாத அல்லது புரிந்துகொள்ளாத நிலை. யாருக்காகக் காத்திருக்கிறான்? போருக்குச் சென்ற தன் தந்தைக்காகவா? அவனுக்குப் பின்னால் இராணுவ வீரர்கள், துப்பாக்கியுடன். அதற்குப் பின்னால் இராணுவ வாகனம், குண்டுவெடிப்பு கண்கலங்கவைக்கிறது அட்டைப்படம். ஈரான் போர் எப்படித் தொடங்கியது என்பது ஒருபுறம் இருக்கட்டும். எப்போது முடியும்?
என். பாபு அருள் ஜோஷி
களக்காடு
•••
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கப் போர் உலகிலுள்ள அனைத்து மக்களையுமே பாதிக்கிறது. ‘போர் வேண்டவே வேண்டாம்.’ வாழும் நாட்கள் குறைவு, இதில் போரின் வெற்றி தோல்வி இரண்டுமே மக்களுக்குத் தேவையில்லாத ஒன்றுதான். விரிவான விளக்கமான கட்டுரை. எப்போது போர் முடியும் எனக் காத்திருக்கிறார்கள் உலக மக்கள். ‘காசியில் பெரியார்’ கட்டுரை, அன்றைய பெரியாரின் மனநிலையைப் படம் பிடித்துக் காட்டியது, ‘அறத்துக்குச் சாட்சியானவர்’ மறைந்த தோழர் ஆர். என். கே. இதுதான் உண்மை.
ஞா. சிவகாமி
சென்னை
•••
‘இந்துத்துவத்தின் மொழி: பாரதீய பாஷா பரிவார் என்னும் ஒட்டு வேலை’ கட்டுரை இந்தியா, இந்திய மக்கள், இந்திய மொழிகள் குறித்த சரியான புரிதல்களை ஏற்படுத்த முயன்றிருக்கிறது. ஜி. என். தேவி எழுதிய மூலக் கட்டுரை அழகாகவும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலும் தமிழாக்கம் செய்யப்பட்டிருப்பது சிறப்பு. கட்டுரையின் உள்ளடக்கம் மிகவும் கடினமான பொருள் சார்ந்தது என்றாலும் மிகவும் நேர்த்தியாக விளக்கப்பட்டுள்ளது.
சிந்துவெளி நாகரிகத்தின் எழுத்துரு ‘சமஸ்கிருத மூலம்’ என்ற இந்துத்துவவாதிகளின் அண்மைக்கால சர்ச்சை மிகுந்த கோட்பாட்டைத் தர்க்கரீதியில் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இந்தியா என்ற இன்றைய தேசம் பல்லாயிரமாண்டுகளாகவே பல திசைகளிலிருந்தும் உள்ளே வந்து சேர்ந்த மானுட இனக்குழுக்களின் படிப்படியான கலப்பு, கூட்டு உரையாடல்களின் கலாச்சார விளைச்சல் என்ற காலங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாக்கத்தை நொறுக்கிப் புறந்தள்ளிவிட்டு முழுமையும் ‘இந்துத் தன்மை’ மட்டுமே கொண்டுள்ள ஒரு மத அடிப்படையிலான தேசியம் என்று நிறுவ ‘பாரதீய பாஷா சமிதி’ அமைப்பு மூலம் எடுக்கப்படும் ரகசிய முன்னெடுப்புகளை நுணுகி ஆய்ந்திருப்பது போற்றுதலுக்குரியது. பல்வேறு அண்மைக்காலத் தொல் அகழாய்வுகளின் அடிப்படையில் சிந்துவெளி எழுத்துக்கள் திராவிடத்தின் மூலமாக இருக்கலாமோ என்ற மிக முக்கியமான கேள்வி எழுப்பப்பட்டுவரும் இந்தக் காலகட்டத்தில், மேற்சொன்ன அமைப்பின் நகர்வுகள் இதற்கெதிராக உள்ளதோ என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது.
கரு. பாலகிருஷ்ணன்
மதுரை.
•••
