கானகத்திலிருந்து ஒரு கூக்குரல்
பெங்களூரில் பணிசெய்துகொண்டி ருந்தபோது நாங்கள் நடத்திய அஞ்சல்தலைக் கண்காட்சியைத் திறந்து வைக்க மாதவ் காட்கிலை அழைத்திருந்தோம். விதான் சௌதா முகப்பில் குறிப்பிட்ட வேளையில் காத்திருந்தோம். ‘புர்’ரென ஒரு மொபட் எங்கள் முன் வந்துநின்றது. பின்னிருக்கையிலிருந்து மிகவும் இயல்பாக பத்ம பூஷண் மாதவ் காட்கில் இறங்கினார். வண்டியை ஓட்டிவந்தது அவருடைய மகள். அரசுத் துறைகளின் பந்தாக்களிலும் படிநிலையிலும் ஊறிப்போயிருந்த எங்களுக்கு அதிர்ச்சியிலிருந்து விடுபடச் சில வினாடிகள் பிடித்தன.
சூழலியல் அறிவியல் மையம் (Centre for Ecological Sciences) என்ற பிரசித்திபெற்ற நிறுவனத்தை உருவாக்கி உலகப் புகழ்பெற்ற காட்கில் எளிமையின் உருவமாகத் திகழ்ந்தார். அந்த மையத்தில் அவரது அறையில் எந்தப் படாடோபக் குறியீடும் இருக்காது. ஒரு மேசை, அதன் முன் இரு நாற்காலிகள். தொலைபேசிகூடக் கிடையாது. அவருடைய மாணவர்களையும் சக ஊழியர்களையும் தன்னை ‘மாதவ்’ என்றே பெயர் சொல்லி அழைக்கப் பழக்கியிருந்தார். விளிம்பு நிலை மக்கள்பால் அவருக்கிருந்த கரிசனத்தாலும் சூழலியல் சீரழிவால் அவர்கள் படும் பாட்டை மனதில் கொண்டிருந்ததாலும் ‘மக்களின் சூழலியலாளர்’ என்று போற்றப்பட்டார். சூழலியல் பேணலில் மக்களின் பங்களிப்பு முக்கியம் என்பது அவர் நிலைப்பாடு.
தனது பதினைந்தாவது வயதில் இந்தியாவின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கவனிக்கத் தொடங்கினார். பின்னர் அந்தத் தளத்தையே தனது வாழ்க்கைப் பணியாகத் தெரிந்துகொண்டார். இந்தத் துறையில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றபோது மக்கள் தொகை சார்ந்த சூழலியல்பற்றிக் கோட்பாட்டளவில் இவர் செய்த ஆய்வு அறிவியலாளர்களை ஈர்த்தது. அங்கு முனைவர் பட்டம் பெற்றுத் தாய்நாடு திரும்பிவந்த இவர். இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.
அந்தக் காலகட்டத்தில் சுற்றுச் சூழலுக்கென்று தனி அமைச்சகம் இல்லை. இந்திய அரசு இந்தத் தளம் பற்றிய ஆலோசனைகளை காட்கிலிடமிருந்துதான் பெற்றுக்கொண்டது. பின்னர் ஓர் தனி அமைச்சகம் உருவாகவும் (Ministry of Environment and Forests) அவர் உதவினார்.
அரசு, கல்விப்புலம், தன்னார்வக் குழுக்கள் எனப் பல தளங்களில் சுற்றுச்சூழல் சார்ந்த தனது கருது கோள்களை விதைத்தார். அவற்றில் சிறப்பாகக் கவனிக்கப்பட்டவை பல்லுயிரியம் பற்றிய அவரது கருத்துக்களும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் பற்றிய அக்கறையும். சுற்றுச்சூழல் பற்றித் தனது கருத்துக்களை ராமச்சந்திர குஹாவுடன் இணைந்து 1992இல் எழுதிய ‘தி ஃபிஸ்ஸர்ட் லாண்ட்’ (The Fissured Land) என்ற நூலில் முதன்முதலில் பதிவுசெய்தார்.
இந்தியாவின் பல்லுயிரியம் வியப்பூட்டும் ஒன்று. அதிலும் மேற்குத் தொடர்ச்சி மலை உலகிலுள்ள 18 பல்லுயிரியச் சிறப்புகளில் ஒன்று. மலைகளில் மட்டுமல்ல. வரையாடு, சோலைமந்தி, இருவாசிப் பறவை என அரிய உயிரினங்கள் கொண்ட வாழ்விடம் இது. சமவெளிகளிலும் நதிகளிலும் புல்வெளிகளிலும் புதர்க் காடுகளிலும் உயிரினங்கள் பலுகிப் பெருகியுள்ளன. அவற்றைப் போற்றிப் பாதுகாக்க வேண்டுமென்று காட்கில் விரும்பினார். இதில் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் ஒன்றும் செய்ய இயலாது என்று உணர்ந்தார். மக்களின் பல்லுயிரின ஆவணத்தை (Peoples Biodiversity Register) பல ஊர்களில் உருவாக்கினார். அது மட்டுமல்ல, இந்திய அரசு பல்லுயிரியச் சட்டத்தை (Biological Biodiversity Act) உருவாக்கியபோது காட்கில் அதில் முக்கியப் பங்காற்றினார்.
‘வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி’முதல் தென்னாட்டு எல்லா நதிகளுமே காடுகளில், சிறப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளில்தான் உற்பத்தியாகின்றன. பிரிட்டிஷார் நாட்டுக்குள் நுழைந்த பின் மனிதக் காலடி படாமலிருந்த இந்த மழைக்காடுகள் அழிக்கப்பட்டன. தேயிலை, காப்பி போன்ற பணப் பயிர்களுக்காகவும், வெட்டுமரத் தொழிலுக்காகவும் கட்டுப்பாடின்றி அழிக்கப்பட்டன. நாடு சுதந்திரமடைந்த பின், அணைக்கட்டுகள் கட்டப் பரந்துபட்ட காடுகளை விலையாகக் கொடுத்தோம். மலைகளைக் குடைந்து சுரங்கப் பாதைகள் உருவாக்கப்பட்டன. இதுவரை மனிதர் ஊடுருவல் இல்லாத வனாந்தரங்களில் சாலைகள் பாவப்பட்டன.
ஆகவே இந்த மலைத்தொடரைக் கவிந்திருக்கும் எஞ்சியிருக்கும் வனங்களைக் கண்போலப் பாதுகாக்க வேண்டுமென காட்கில் வலியுறுத்தினார். நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் (Nilgiri Biosphere Reserve) என்ற கருதுகோளை முன்னிருத்தி அதை உருவாக்கினார். 1986இல் அறிவிக்கப்பட்ட இதுதான் இந்தியாவின் முதல் உயிர்க்கோளக் காப்பகம். யுனேஸ்கோ (UNESCO) வின் சிறப்பு அங்கீகாரம் பெற்றது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின்பால் அவர் காட்டிய அக்கறை பல்வேறு கோணங்களில் வெளிப்பட்டது. 1973இல் அமைதிப் பள்ளத்தாக்கில் அணைகட்டும் திட்டத்திற்கு எதிராக எழுந்த போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். திட்டம் கைவிடப்பட்டது. சுற்றுச்சூழலைக் காப்பாற்ற இந்தியாவில் எழுந்த முதல் இயக்கம் என அந்த எழுச்சி வரலாற்றில் இடம் பெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பிரசித்திபெற்ற மேற்குத் தொடர்ச்சி மலை அறிக்கையின் விளைவாக அதிரப்பள்ளியில் சாலக்குடி நதியில் கட்டப்படவிருந்த நீர்மின் திட்டம் கைவிடப்பட்டது.
மன்மோகன்சிங் அரசின் காலத்தில் ‘தென்னிந்திய மலைகளிலுள்ள காடுகளின் மேம்பாடு’ என்ற பெயரில் நாசமாக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு (Western Ghat Ecology Expert Panel) ஒன்று அமைக்கப்பட்டு அதற்குத் தலைவராக காட்கில் நியமிக்கப்பட்டார். சூழலியல் அழிவிலிருந்து இந்த அரிய இயற்கைச் செல்வத்தைப் பாதுகாக்க அவரது அறிவுரையை அரசு கேட்டது. தனக்குப் பரிச்சயமான அந்த மலைகளில் சுற்றிப் பயணித்து, பழங்குடியினரையும் மற்ற மலைவாழ் மக்களையும் சந்தித்து உரையாடினார். இந்தக் களப்பணியில் அவருக்கு உறுதுணையாக நின்றது யானையைப் பற்றி ஆய்வு செய்திருந்த ராமன் சுகுமார், காட்கில் அறிக்கை என்ற இவரது பரிந்துரைகளில் கானகச் சூழல் 64 விழுக்காடு பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார். கம்பெனிகளும் வணிக நிறுவனங்களும் வெகுண்டெழுந்து இவ்வறிக்கையை எதிர்த்தன. அரசும் தன் பங்கிற்கு காட்கில் அறிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டு இன்னொரு அறிவியலாளரை, விண்வெளி விஞ்ஞானி கஸ்தூரிரங்கனை நிபுணர்குழுத் தலைவராக அறிவித்தது. “Shifting the goal post” என்ற ஆங்கிலச் சொலவடைதான் நினைவிற்கு வருகின்றது. இந்த இரண்டாம் குழு தனது அறிக்கையில் கானகச் சூழல் 37 விழுக்காடு பாதுகாக்கப்பட வேண்டும் என்றது. ஆனால் அதுகூட இன்றும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சுற்றுச்சூழல் தளத்தில் அரைக் கிணறு தாண்டலுக்கு இடமில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின்னர், 2024 ஜூலை மாதத்தில் கேரளாவில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப் பேரிடரில் 400 பேர் உயிரிழந்தனர். பல இதழ்களும் அறிஞர்களும் காட்கிலின் அறிக்கையை நினைவுகூர்ந்தனர்.
மாணவர்கள் அவரைப் போற்றுகின்றனர். காட்கில் அவர்களைச் சமமாக நடத்திப் போதிப்பார். பன்னாட்டளவில் இன்று போற்றப்படுகின்ற யானை நிபுணர் ராமன் சுகுமார் காட்டுயிரியியலாளர்கள் நன்கறிந்த பெயர். இன்னொரு மாணவர் விஜய குமரன் நாயர் வளர்ப்பு யானைகளின் மேல் தனது பார்வையைச் செலுத்தினார். மலைகளில் மூங்கில் குறைந்துகொண்டே போகின்றது என்பதைக் கவனித்த காட்கில் தனது மாணவர் என்.எஸ். பிரசாத்தை இந்த ஆய்வை மேற்கொள்ளச் சொன்னார். அந்தக் களப்பணி மூங்கில் பயன்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் உதவியது. காட்கிலின் கருதுகோள்கள் அவரது மாணவர்கள் மூலம் இன்றும் விதைக்கப்பட்டுவருகின்றன.
நம் நாட்டில் காட்கில் போன்ற சூழலியலாளர்களின் எச்சரிக்கைகளும் கூக்குரல்களும் கேட்கப்படாமல் போவதுதான் அவலம். இன்றும் மேற்குத் தொடர்ச்சி மலை ஆபத்தில்தான் இருக்கின்றது. ஆரவல்லித் தொடரைப் பாருங்கள். மேம்பாடு என்ற பெயரில் நிக்கோபர் தீவின் பரந்த மழைக்காடுகள் அழிவை எதிர்நோக்கியுள்ளன.
மின்னஞ்சல்: theodorebaskaran@gmail.com
