எளிமையின் ரசவாதம்

இளவரசரின் கனவு
(கதைகள்)
குல்பீர் சிங் ஸூரி
ஹிந்தியில்: ஜஸ்பீர் கவுர்
தமிழில்: அலமேலு கிருஷ்ணன்
வெளியீடு:
சாகித்திய அகாதெமி
சென்னை
பக். 72
ரூ. 75
பஞ்சாபி மொழியில், ‘ராஜ்குமார் தா ஸப்னா’ என்கிற தலைப்பில் எழுதப்பட்டு, பால சாகித்திய புரஸ்கார் பெற்ற சிறார் கதைகளின் தொகுப்பு இந்நூல்.
பஞ்சாபி மூலத்தின் ஆசிரியரான குல்பீர் சிங் ஸுரி தலைசிறந்த பஞ்சாபி எழுத்தாளர். பஞ்சாபி மொழியில் சிறார் இலக்கியத்திற்கான முக்கியப் பங்காற்றியவர். ஹிந்தியில் மொழி பெயர்த்த ஜஸ்பீர் கவுர் பேராசிரியராகப் பணியாற்றியதுடன் எழுத்து, மொழிபெயர்ப்பு போன்ற துறைகளில் பரிமளிக்கிறவர்.
தமிழில் மொழிபெயர்த்த அலமேலு கிருஷ்ணன், பணி நிறைவு பெற்ற ஆசிரியை. பன்மொழிப் புலமை உடையவர். பல மொழிகளிலிருந்து சிறந்த கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக விருதுகளை வென்றவர்.
இந்தச் சிறார் கதைத் தொகுப்பில் மொத்தம் 19 கதைகள் இடம் பிடித்துள்ளன. இந்தக் கதைகளின் எளிமைதான் முதலில் என்னைக் கவர்ந்தது. சிறார் கதைகளில் நீதிகளை மறைமுகமாகத் தர வேண்டும் என்கிற இன்றைய போக்கிற்கு எதிராக, ஆசிரியர் ஒவ்வொரு கதையின் இறுதியிலும் நீதியை வெளிப்படையாகவே வைத்திருப்பது எனக்கு ஆச்சர்யத்தைத் தந்தது.
தெளிவான நடையில் மிகவும் எளிமையாக வழங்கப்பட்டுள்ள கதைகள் இவை. சிறார்களிடம் ஒருமுறை சொன்னாலேயே பசுமரத்தாணிபோலப் பதிந்துவிடக்கூடிய கதைகள். நாம் வாசித்துப் புரிந்துகொண்டு குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் நேரடியாகவே குழந்தைகளிடம் வாசிக்கும் விதத்தில் எளிமையாக அமைந்திருப்பதே இந்தக் கதைகளின் சிறப்பு.
புத்தகத்தின் தலைப்புக்கான முதல் கதையே அரசன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புகிறது. வழிவழியாகத் தொடர்கின்ற போர், வீரம், இரத்தக் களரி போன்ற விஷயங்களைத் தவிர்த்து அன்பு, மனிதநேயம், இயற்கையைப் போற்றுதல், கருணை, பரிவு ஆகிய அனைத்து நல்ல விஷயங்களையும் கொண்ட நல்லாட்சியை நாட்டில் மலரச் செய்வதே இளவரசனின் கனவு. பாரம்பரியமாக வழக்கத்தில் உள்ளவற்றை எதிர்த்துப் புரட்சிகரமான மாறுதல் கொண்டுவர நினைக்கும் இளவரசனின் கனவுதான் எவ்வளவு உன்னதமானது என்று மனம் சிலிர்த்துப் போகிறது.
யானையின் தோற்றத்தை ஏளனம் செய்கிறது பட்டாம்பூச்சி. வண்ணமயமான இறக்கைகளைப் பெற்று அழகின் இலக்கணமாக இருக்கும் தன்னுடைய தோற்றத்தோடு ஒப்பிட்டு ஆணவத்துடன் பேசுகிற பூச்சி, பலமாக வீசும் காற்றில் நிலைகுலைந்து இறக்கைகளை இழந்து உயிரையும் இழக்கிறது. பூச்சியின் கதியைக் கண்டு பரிதாபப்படுகிறது யானை. அதேபோலவே மற்றொரு கதையிலும் கழுகிற்குத் தண்டனை தரும் மனிதன் தன்னுடைய தவறுகளை உணர்வதில்லையே என்று வருந்துகிறார் ஒரு துறவி. இரண்டிலுமே எளிமையான கதைகளுக்குள் வலிமையான கருத்துகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
ஆமை, தேள் கதையின் மூலம் ஒவ்வொரு உயிரினத்தின் இயல்பான குணம் மாறுவதில்லை என்று காட்டும் ஆசிரியர், இயற்கையின் படைப்பில் ஒளிந்துள்ள தனித்தன்மையை வேறொரு கதையில் வலியுறுத்துகிறார். ஒற்றுமையின் வலிமையை உணர்த்த ஒரு கதை, தவறான சகவாசத்தின் பலனைக் காட்ட ஒரு கதை என்று ஒவ்வொரு நீதியையும் ஒவ்வொரு கதையில் நிலைநாட்டுகிறார் ஆசிரியர்.
குறும்பு, பொய் போன்ற தீய குணங்களைக் தவிர்க்க வேண்டும், நேர்மை, துணிச்சல் போன்ற நற்குணங்கள் வாழ்க்கைக்குத் தேவை என்றெல்லாம் கதைகளின் வழியாகச் சொல்லப்படுகின்றன. ஏழை மக்களுக்குப் பொருளுதவி செய்யும் அரசனை ரஸவாதக் கல் என்று உருவகப்படுத்தியது நல்ல கற்பனை.
உடல் வலிமையைவிட நுண்ணறிவே வெற்றிக்கு வழிவகுக்கும் என்று காட்டிய கதையில் யானையும், பறவையும் மோதுவதாகக் காட்சிப்படுத்தப்பட்ட விதம் புதுமை. ஆமை, முயல் கதையையே கேட்டுப் பழகியிருக்கிறோம். இங்கு ஒரு சிறு பறவை, வலிமை மிகுந்த யானையை வெல்லும் கதையை வாசிக்கும்போது மனம் குதூகலிக்கிறது. உழைப்பின் பெருமையை உணர்த்தும் இறுதிக் கதை சரியான முத்தாய்ப்பாக அமைந்து இந்தத் தொகுப்பிற்கு அழகு சேர்க்கிறது. ஆழமான கருத்துகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லும் இந்தத் தொகுப்பின் கதைகள், ஒவ்வொரு குழந்தையும் கண்டிப்பாக வாசிக்க வேண்டியவை. ஒவ்வொரு நூலகத்திலும் இடம்பெற வேண்டியவை. குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் படித்து மகிழத்தக்கவை இந்தக் கதைகள்.

ஆனந்தம்
(நீதிக்கதைகள்)
தாசரி வெங்கட்ரமணா
ஹிந்தியில்: பாரனந்தி நிர்மலா
தமிழில்: வி. பத்மாவதி
வெளியீடு:
சாகித்திய அகாதெமி
சென்னை
பக். 120
ரூ. 150
சாகித்திய அகாதெமியின் பால சாகித்திய புரஸ்கார் பெற்ற தெலுங்குச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு இந்த நூல். தாசரி வெங்கட்ரமணாவின் அற்புதமான சிறார் கதைகளின் மொழியாக்கத்தைத் தமிழில் வி. பத்மாவதி நேர்த்தியாக வழங்கியுள்ளார். இதனை ஹிந்தியில் மொழி பெயர்த்தவவர் பாரனந்தி நிர்மலா.
தாசரி வெங்கட்ரமணா தெலுங்கில் முதுகலைப் பட்டம் பெற்றதோடு ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் தேர்ச்சி பெற்றவர். சிறார் இலக்கியத்திற்காகப் பல்வேறு விருதுகளைப் பெற்றவர். தமிழ் இலக்கியத்தில் ஒப்பாய்வு, மொழிபெயர்ப்பு போன்ற பன்முகத்திறமை வாய்ந்தவர்.
மனித நேயத்தையும், வாழ்க்கைப் பாடங்களையும் மறைமுகமாக வைத்து ஒழுக்கம், நற்பண்புகளைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதில் சிறார் இலக்கியம் பெரும் பங்கு வகிக்கிறது. அதைத் தேர்ந்த முறையில் வழங்குவது சிறார் கதைகள் எழுதுவோரின் கடமையாகிறது. அந்தக் கடமையைச் செவ்வனே ஆற்றுகிறார் இந்நூலின் ஆசிரியர். புத்தகத்தின் தலைப்புக்குக் காரணமான முதல் கதையிலேயே உண்மையான ஆனந்தம் என்ன என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கும் பாங்கு மனதைக் கவர்கிறது. கிராமத்தில் நெசவுத் தொழில் செய்துகொண்டு, இயற்கையை இரசித்தபடியே வாழ்கிறான் சுலக்ஷன். குறைந்த வருமானமே போதுமானது என்கிற மனநிறைவுடன் எளிய வாழ்க்கை நடத்துபவனை நகரத்தில் ஆடம்பரமாக வாழும் அவனுடைய மாமனார் சீண்டுகிறார். ஆட்டு வாலைப் போன்று எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் வாழ்வதாகப் பரிகாசம் செய்கிறார். அவருடைய சொற்களால் காயப்படும் சுலக்ஷன், அவருடைய விருப்பப்படி முன்னேற எண்ணி ஓய்வின்றி உழைக்கிறான். வசதிகள் கூடுகின்றன. தொழில் பெருகுகிறது. நகரத்திற்குக் குடும்பத்தோடு இடம் பெயர்கிறான். ஆனால், உண்மையில் அவன் ஆனந்தம் அடைந்தானா என்ற கேள்விக்கான விடையில் கதையின் கருத்து மறைந்திருக்கிறது. பணத்தின் பின்னே ஓடிக்கொண்டே இருந்து வாழ்க்கையின் இனிமையான தருணங்களைத் தொலைக்கும் அனைவருக்கும் பாடம் புகட்டுகிறது இந்தக் கதை. ஆரம்பமே அதிரடியாக அமைந்து ஆசிரியரின் எழுத்துத் திறமையை நிரூபிக்கிறது.
அழுத்தமான கருத்துடன் ஆரம்பமாகும் இந்தத் தொகுப்பில் மொத்தம் 22 கதைகள் உள்ளன. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சிறப்பைக் கொண்டுள்ளது. ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்புப் பாடத்திட்டத்தில் இந்தத் தொகுதியின் ஏழு கதைகள் சேர்க்கப்பட்டுள்ள தகவல் ஒன்றே ஆசிரியரின் திறமையைப் பறைசாற்றப் போதுமானது.
‘சுப்ரதீக்கின் கேள்வி’ என்கிற சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது. பழைய அரசர் காலக் கதையாக இருந்தாலும் சிறார்களுக்கு ஏற்ற கதை. இரத்தினகிரியின் அரசவையில் இருக்கும் பண்டிதர்களை, எங்கிருந்தோ வரும் கங்கணம் என்கிற பண்டிதர் வாத, விவாதத்தில் தோற்கடித்துவிடுகிறார். அரசர் பெருமையுடன் கட்டியிருந்த மணியையும், எண்ணற்ற பொற்காசுகளையும் பரிசாகப் பெற்றுப் பல்லக்கில் ஆணவத்துடன் ஊர்வலமாகத் திரும்புகிறார். ஆடு மேய்க்கும் சிறுவனான சுப்ரதீக்கால் நாட்டிற்கு ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியவில்லை. பண்டிதரைத் தோற்கடிக்க விரும்புகிறான். அவரிடம் மூன்று கேள்விகளைக் கேட்டுத் திணறடிக்கிறான். மூன்று கேள்விகளும் அற்புதமானவை. விடை தெரியாமல் முழிக்கும் பண்டிதரின் செருக்கு அழிகிறது. அரசரிடம் பெற்ற பரிசுகளை நிபந்தனைப்படி கங்கணம், திரும்பக் கொடுக்கும் தருணத்தில் வாசகர்களின் மனங்களிலும் மகிழ்ச்சி பொங்கி எழுகிறது.
பணத்தால் நட்பு பாதிக்கப்படக் கூடாது என்று காட்ட ஒரு கதை, பொறாமையென்னும் தீய குணத்தைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்த ஒரு கதை, உழைப்பின் பெருமையைச் சொல்ல ஒரு கதை என்று பல கதைகள் சரியான திசைகளில் பயணிக்கின்றன. தந்தையின் சுருட்டுப் பழக்கத்தை நிறுத்த மகன் முயற்சி செய்யும் கதையும் இதில் இடம்பிடித்திருக்கிறது. ஆசிரியரின் அசாத்தியமான எழுத்துத் திறமையைப் பாராட்டாமல் கடக்க முடியவில்லை. எழுத்து வன்மை, சொல்ல வந்த கருத்தைத் தெளிவாகக் கொடுத்த விதம், கதைகளில் ஒளிந்திருந்த நீதி, மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்திய மொழி என்று அனைத்துமே போற்றத்தக்கவை.
புவனா சந்திரசேகரன்: மதுரையில் வசிக்கிறார். பூஞ்சிட்டு சிறார் மின்னிதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார். சிறார் கதைகள், நாவல்கள், சிறுகதைகள் என 36 நூல்கள் வெளிவந்துள்ளன. ‘ஞான சரஸ்வதி’ விருது பெற்றுள்ளார்.
மின்னஞ்சல்: cagpuvana@gmail.com
