தற்புகழ்ச்சியற்ற எழுத்து
எனது அரசியல் நினைவலைகள்
(தன்வரலாறு)
மு. அப்பாத்துரை
வெளியீடு :
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
எண் 9, பிளாட் எண் 1080 கி,
ரோஹினி பிளாட்ஸ் முனுசாமி சாலை,
கே.கே. நகர் மேற்கு, சென்னை - 600 078
தொடர்புக்கு: 99404 46650
பக். 280 ரூ. 320
நாடாளுமன்ற உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செயல்பட்டுள்ள தோழர் அப்பாத்துரையை நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வரலாற்றிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாது. அவருடைய சாதனைகளை அறியும்போது அவர் தன் இயல்புக்கும் அப்பால் அகில இந்திய மீனவர் சங்கத் தலைவராகவும் பதவி வகிக்கக்கூடிய அளவில் தன்னுடைய முத்திரைகளைப் பதித்துள்ளார். அவர் பட்டியல் வகுப்பு இளைஞர். அவருடைய வகுப்புக்கும் மீனவர் சங்கத்திற்குமான அந்த உறவுகளை உரசிப் பார்க்கும்போதுதான் அவரின் ஆளுமையைக் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டின் அரசியல், சூடாகத் தகித்திருந்த காலங்களில் அதன் விசைகளை இயக்கியவர்களில் அப்பாத்துரையின் கைகளும் இருந்துள்ளன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி அவர் வந்த விதம் ஏதோ தற்செயலாய் அமைந்திருப்பதைப் போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் உறுதியான நம்பிக்கையுடனேயே அவர் அந்தக் கட்சியைத் தேர்ந்தெடுத்தார் என்று அறியும்போது ஒரு லட்சியப் பயணத்திற்கான தோழராக அவர் உருவெடுத்திருப்பதை வியக்காமல் இருக்க முடியவில்லை.
அப்பாத்துரையின் வரலாற்றை அறிந்துகொள்ளும்போது வேறு சில கட்சித் தோழர்களின் அர்ப்பணிப்புகளும் நம்மை வியப்புக்குள்ளாக்கும். தூத்துக்குடி கனநீர் ஆலையின் ஏ.ஐ.டி.யூ.சி.யின் தொழிற்சங்கத்தை நிறுவுவதற்கான பணியில் கட்சியின் முதுபெரும் தோழர் கே.டி.கே. தங்கமணியைத் தலைவராகவும், அப்பாத்துரையைத் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்தார்கள். அதன் தொடக்கப் பணிக்காக தங்கமணி தூத்துக்குடிக்கு வந்திருந்தபோது துணி துவைப்பது போன்ற அவருக்கான சொந்தப் பணிகளை அப்பாத்துரை தயக்கமில்லாமல் செய்ய முனைந்துள்ளார். அதனை கே.டி.கே. விரும்பவில்லை. இருப்பினும் கே.டி.கே. தூங்கிக்கொண்டிருந்தபோது அப்பாத்துரை அப்பணிகளைச் செய்து முடித்துள்ளார்.
ஒவ்வோர் அரசியல்வாதியின் வரலாறும் ஏதாவதொரு வகையில் சுவையாகத்தான் இருக்கும்; ஆயினும் கம்யூனிஸ்ட்டாக இருப்பவரின் வரலாறுகளில் பொதுப்போக்கிற்கு மாறான நடப்புகளும் சிந்தனைகளும் இருப்பதில் ஆச்சரியமில்லை.
அப்பாத்துரை இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியப் பொறுப்புகளுக்கு வந்திருக்கிறார். இதற்கும் முன்னர் அவர் திமுக ஆதரவாளராக இருந்திருக்கிறார். ஒரு சில முக்கிய விசயங்களை மறைக்காமல் சொல்லியிருக்கிறார். கீழ்வெண்மணிப் படுகொலையைக் கண்டித்துத் தூத்துக்குடியில் தா. பாண்டியன் பேச வருகிறார். அந்தக் கூட்டத்திற்குத் தன் நண்பன் அப்பாத்துரையை வற்புறுத்தி அழைக்கிறார் அவருடைய நண்பர் பாரதி. அப்பாத்துரைக்கு தா.பாண்டியனின் பேச்சு திசைமாற்றத்தை உருவாக்கிவிட்டது.
அப்பாத்துரையின் குடும்பம் திருச்செந்தூர் ஒன்றியத்திலிருந்த தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ மக்கள் வாழ்ந்த கிராமமாகும். வாரந்தோறும் சர்ச்சிற்குச் செல்ல வேண்டியது கட்டாயம். ஆனால் அப்பாத்துரையின் நாத்திகக் கொள்கையும் சர்ச்சிற்குப் போக மறுத்த நிலையும் குடும்பத்தில் கசப்பை உருவாக்கியது. இதனால் அவருடைய கல்லூரிக் கல்வியைத் தொடர இதற்குமேல் தான் உதவப் போவதில்லை என்று அவருடைய தந்தை மறுத்தார். கல்வியைத் தொடரும் ஆர்வத்தில் அப்பாத்துரை சென்றது நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரான பேரா. ஆ. சிவசுப்பிரமணியனிடம். தன் குடும்பப் பிரச்சினையை எடுத்துக் கூறியதும் அப்பாத்துரையின் கல்வி தொடரத் தானே உதவிசெய்து அவரைப் பட்டதாரியாக்கினார் பேரா. சிவம்.
விடாப்பிடியான கொள்கைப் பிடிப்புதான் அப்பாத்துரையைத் தமிழ்நாட்டுச் சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் வெற்றிபெற வைத்தது என்று சொல்ல வேண்டும். பதினான்காவது நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிலிருந்து அதிகக் கேள்விகளைக் கேட்ட உறுப்பினர்களில் ஒருவராக அப்பாத்துரை செயல்பட்டார். அது மட்டுமல்லாமல் தமிழில் முதல் கேள்வியைத் தொடுத்தவராகவும் அவரே இருந்திருக்கிறார். இதற்காகக் கலைஞர் கருணாநிதி மறுநாள் அதிகாலையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அப்பாத்துரையைப் பாராட்டியுமிருக்கிறார். நாடாளுமன்றத்தில் 99% வருகைபுரிந்தவராகவும் அப்பாத்துரை செயல்பட்டுள்ளார்.
ஒரு கம்யூனிஸ்ட்டாகக் கண்டிப்புணர்வைக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் செயல்படுத்தியுள்ளார். 1986ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. விவாதங்களுக்கு அப்பாத்துரை தலைமையேற்கிறார். “நிறையப் பேர் பேச வேண்டியிருப்பதால் ஒவ்வொருவரும் ஐந்தே ஐந்து நிமிடங்கள்தான் பேச வேண்டும்; அதற்குள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பது சிறப்பு,” என்று அறிவித்தார். கட்சியின் அப்போதைய முதுபெரும் தலைவராகயிருந்த எம். கல்யாண சுந்தரம் ஐந்து நிமிடங்களில் பேச்சை முடிக்கவில்லை; உரை நீண்டது. உடன் மணியடித்தார் அப்பாத்துரை. அதை எதிர்பாராத எம்.கே., அப்பாத்துரையைத் திரும்பிப் பார்த்தார். “தோழர் இது கம்யூனிஸ்ட் கட்சி,” என்று சொல்லியிருக்கிறார் அப்பாத்துரை. பேச்சை நிறுத்திய எம்.கே. அரங்கிலிருந்து வெளியேறியதாகக் கூறுகிறார். இவ்வாறாகக் கட்சியின் நெறிமுறைகளை விட்டுக் கொடுக்காமல் செயல்பட்டவர் அப்பாத்துரை.
இவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும்போது தான் நெல்லை மாவட்டம் (இன்றைய தென்காசி மாவட்டம்) மீனாட்சிபுரத்துக் கிராம மக்கள் இஸ்லாம் மதத்தில் தம்மை இணைத்துக்கொண்டார்கள். இது இந்தியப் பிரச்சினையாக இருந்து பின்னர் சர்வதேசப் பிரச்சினையாக மாறியது. மீனாட்சிபுரம் சென்ற அப்பாத்துரை அக்கிராமத்தினர் இஸ்லாத்திற்கு மாறிச் சென்றதற்கான காரணத்தை விரிவாகத் தெரிந்துகொண்டார். இதைக் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் கொண்டுவந்தார். ஆனாலும் அதற்குப் பொறுப்பான அமைச்சர், உண்மைக்குப் புறம்பான செய்தியை அப்பாத்துரையும் வாசுதேவநல்லூர்ச் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணனும் கூறியதாக அவையில் சொல்லித் தீர்மானத்தை ரத்துசெய்யவைத்துவிட்டார். ஆட்சியாளர்களின் புறக்கணிப்புதான் அம்மதமாற்றத்திற்குக் காரணமாக இருந்ததை இந்நூலில் தோழர் விவரிக்கிறார்.
அப்பாத்துரை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது சுவாரசியமான கதை. ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் நிறுத்த வேண்டிய கட்சியின் வேட்பாளரைத் தேர்வுசெய்வதற்கான கூட்டத்திற்குத்தான் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினராகச் சென்றார் அப்பாத்துரை. கட்சி தேர்வுசெய்த வேட்பாளராக ஆசிரியராய்ப் பணியாற்றிய சுப்பையா என்பவர் இருந்தார். ஆனால் அவரோ தேர்தலில் தான் தோற்றுப்போய்விட்டால், தனக்கு வருமானமே இல்லாமல் போய்விடுமென்று கூறிப் போட்டியிட மறுத்தார். அதனால் அப்பாத்துரையின் பெயரை ஒரு தோழர் முன்மொழிய, பிற தோழர்களும் வழிமொழிந்துவிட்டார்கள். இப்படியாகத்தான் அவர் தேர்தல் களத்திற்கு வந்தார். ஆனாலும் போட்டியிடும் அளவில் அவருடைய பொருளாதார நிலையும் சிறப்பாக இல்லை. இந்தத் தேர்வு குறித்து அப்போதைய மாவட்டச் செயலாளராயிருந்த வி.எஸ்.காந்தி மிகவும் நகைச்சுவையாகப் பேசினார். “நாம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குக் கடா வெட்ட வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டோம். தோழர் அப்பாத்துரை நல்ல இளம் கடாதான்,” என்று அவர் சொல்லவும் அப்பாத்துரையும் தன்னை அப்படித்தான் நினைத்துக்கொண்டாராம். ஆனால் அவர் வெற்றிபெற்றுச் சாதனை படைத்தார்.
நாட்டுப்புற ஆய்வுக்கென்று நெல்லை மாவட்டத்தில் பலப்பல தோழர்களை உருவாக்கியவர் பேரா. நா. வானமாமலை. அப்படிப்பட்ட மாணவர்களில் ஒருவர்தான் அப்பாத்துரை. ஆனாலும் அரசியல் களத்தில் எந்தக் காற்றும் எவரையும் தூக்கிச் செல்லலாம் அல்லது அப்படியே கீழே போட்டுவிடலாம். தொடர்ந்து இலட்சிய வேகத்திலேயே இருந்ததாலும் அவருடைய சுற்றுச் சூழல்கள் மட்டுமல்லாமல் குடும்பச் சூழல்களும் அவருக்கு விரோதமாக இருந்ததாலும் அப்பாத்துரை அவற்றைச் சவாலாக ஏற்றுக்கொண்டு தன் கட்சிப்பணியை ஆற்றிவந்ததால் அவர் நினைத்துப்பார்க்காத பதவிகளும் அவரை நாடிவந்தன.
அப்பாத்துரை வேறெந்தப் புத்தகமும் எழுதிய அனுபவமற்றவர். ஆனால் இந்த நூலை அவர் மிகுந்த நேர்த்தியுடன் எழுதியிருக்கிறார். அவருடைய இளமைக் காலம்தொட்டு நாடாளுமன்ற உறுப்பினரான காலம்வரை அவரை அலைக்கழித்த பிரச்சினைகள் பல. இந்தியாவில் ஒருவருடைய சகல பெறுமானங்களையும் அவருடைய சாதியே தீர்மானிக்கிறது. அவ்வகையில் அப்பாத்துரை பொறுப்பான பதவிகளில் புகழ்பெற்றவராய் இருந்தாலும் அவர் எதிர்கொண்ட சாதீய அவலங்களும் பல உண்டு. கூடவே பெரும் பெரும் தலைவர்களையும் சந்திக்கின்ற, தனிமையில் பேசுகின்ற வாய்ப்புகளும் அவருக்கிருந்தன. அவர் அரசியல் களத்தில் இருந்தபோதுதான் தனிப்பெரும் தலைவர்களாக எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் இருந்தனர். சட்டமன்றத்திலும் அப்பாத்துரையின் திருமண விழாவையொட்டியும் எம்ஜிஆர், கருணாநிதியுடன் அவர் கொண்டிருந்த நட்புணர்வுகள் தனியாக இருந்துள்ளன. ஆனாலும் எந்தவொரு வரியையும் அவர் பரவசமாகவோ உணர்ச்சி மேம்பாட்டில் நின்றோ எழுதவில்லை. எல்லாவற்றையும் ஒரு செய்தியாளர் போலவே சொல்லிச் செல்கிறார். தன்னையே எழுத்துக் களத்திலிருந்து வேறுபடுத்தி யாரோ ஒருவரைப் பற்றிப் பேசுவதைப் போல நடுநிலைத் தன்மையில் எழுதுகிறார். தன்னை வியக்கக்கூடிய பல சந்தர்ப்பங்களையும் கைநழுவவிடுகிறார். இது வாசகரை எந்தவிதத்திலும் தொந்தரவுப் படுத்தாமல் இருக்கிறது. தற்புகழ்ச்சியை மேற்கொள்ளாத ஓர் எழுத்துமுறை இந்தக் காலத்தில் அரிதினும் அரிதல்லவா? இவற்றையெல்லாம் மிகச் சாதாரணமாகக் கையாண்ட திறன் வியக்க வைக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் அர்ப்பணிப்பு உணர்வைக் கொடுக்கக்கூடிய நூலாக இது இருக்கிறது.
மின்னஞ்சல்: kalanthaipeermohamed@gmail.com