சமச்சீரான கடவுள் அருள்
விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத் திரௌபதி அம்மன் கோயிலில் தலித் மக்களை வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன் பின்னர் காவல்துறையின் பெரும் பாதுகாப்புடன் அம்மக்கள் சென்று வழிபட்டார்கள். அதற்கு அக்கிராமத்தில் வசிக்கும் ஆதிக்க சாதியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். சட்டப் பாதுகாப்பு இருந்ததால் தடுக்க முடியவில்லை. அடுத்தடுத்த நாட்களில் கோயில் முழுக்கக் காவலர்கள்தான் நிறைந்திருந்தனர். வழிபட யாருமே வரவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்கள் சாதிக் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. குறிப்பாகக் கிராமத்துக் கோயில்களில் பொதுவானவை என்று எதையுமே சொல்ல முடியாது. ஊர்க்கோயிலாக இருப்பினும் குலதெய்வக் கோயிலாக இருப்பினும் சாதிக்கோ சாதிக் குழுக்களுக்கோ உட்பட்டவைதான். ஒவ்வொரு கோயிலும் சிறு நிறுவனம்போலச் செயல்படுகின்றது. அதை நிர்வகிக்க ஊர்ப்பெரியவர்களைக் கொண்ட குழு இருக்கின்றது. அக்குழுவுக்கு இப்போது ஆண்டு முழுதும் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா, வெள்ளிக்கிழமைகளில் சிறுபூசை என்றிருந்த கோயில்கள் இப்போது மக்களின் பொருளாதார முன்னேற்றத்தின் காரணமாகவோ பக்திப் பெருக்கினாலோ அன்றாடப் பூசையைப் பெறுகின்றன. அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை, சஷ்டி, பூரம் என்று பஞ்சாங்கம் சொல்லும் நாட்களில் பெரும்பூசைகள் நடக்கின்றன. ஊர் மக்கள் கோயிலில் கூடுகிறார்கள். பூசைக்குப் பொறுப்பெடுத்துக் கொள்கிறார்கள். சுண்டல் தருகிறார்கள். அன்னதானம் கொடுக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு ஒருமுறை பல கோயில்கள் குடமுழுக்குப் பெறுகின்றன.
இவற்றை நடத்தும் கோயில் நிர்வாகக் குழுவில் இடம்பெறுவதைப் பெருமதிப்புக்கு உரியதாக மக்கள் கருதுகிறார்கள். அக்குழுவில் இருப்போருக்கு உள்ளூரில் அங்கீகாரம் கிடைக்கிறது. பணத்தைக் கையாளும் அதிகாரம் கிடைக்கிறது. ஆகவே அதற்கு ஊரில் போட்டி ஏற்படுகிறது. ஆண்டு வரவுசெலவுக் கணக்கு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. யாருக்கு முன்னுரிமை, யாருக்குக் கௌரவம் என்பதிலும் பிரச்சினைகள் உருவாகின்றன.
கோயில் சார்ந்து இன்னும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. கிராமத்துக் கோயில் திருவிழாக்களில் கலைநிகழ்ச்சி நடத்த வேண்டுமானால் இப்போது காவல்துறையின் அனுமதி பெற வேண்டும். காவல்துறையின் பாதுகாப்பு இல்லாமல் எந்தத் திருவிழா நிகழ்ச்சிகளும் நடப்பதில்லை. ஒரே சாதிக் குழுக்களுக்கு இடையிலோ வெவ்வேறு சாதிகளுக்கு இடையிலோ பிரச்சினை ஏற்பட்டுக் கலவரம் ஆகிவிடும் என்னும் அச்சம் ஒவ்வொரு திருவிழாவின் பின்னும் இருக்கின்றது. கோயிலில் யாருக்கு உரிமை, எந்தளவு உரிமை என்பதில் தகராறுகள் இருக்கின்றன. கோயில் சொத்துக்கள் சார்ந்த சிக்கல்கள் பல இருக்கின்றன.
கோயில்கள் ஊர்ப் பொது இடத்தில் அமைந்திருப்பவை. பொதுஇடம் என்றால் அரசுக்குச் சொந்தமானது. அரசு நிலத்தில் அமைந்திருக்கும் கோயில் அனைத்து மக்களுக்கும் உரியதுதானே? சமூக வளர்ச்சியும் விழிப்புணர்வும் உருவாகி எல்லாச் சாதியினரும் கோயில் வழிபாட்டிலும் நிர்வாகத்திலும் உரிமை கோரும் காலம் வந்திருக்கிறது. குறிப்பாகத் தலித் மக்கள் தம் உரிமைக்காகப் பல வழிகளில் போராடுகிறார்கள். ஆதிக்க சாதியினர் கோயில் சார்ந்த தம் அதிகாரத்தை இழக்கத் தயாரில்லை. உரிமை கோருபவர்களுக்கும் ஆதிக்கம் செய்பவர்களுக்கும் இடையிலான முரண்பாடு பலவிதங்களில் இன்று வெளிப்படுகின்றது.
கோயில் நுழைவுப் போராட்டம் பழங்காலப் பெருங்கோயில்களில் இருந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் கிராமங்களை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறது. வழிபாட்டு உரிமையைப் பெற்றுவிட்டால் நிர்வாகத்திலும் உரிமை கொடுக்க வேண்டி வரும் என்று ஆதிக்க சாதியினர் அஞ்சுகிறார்கள். பிறப்பாலேயே உயர்வு தாழ்வு பாராட்டும் சமூகம் இத்தகைய உரிமை கோரலுக்கு அத்தனை எளிதாகச் சம்மதிக்காது. உடைமை மனோபாவமும் ஆதிக்கக் குணமும் கொண்டோர் எளிதில் அவற்றை இழக்கச் சம்மதிக்க மாட்டார்கள். ஆதிக்கச் சாதியினரிடம் மனமாற்றம் ஏற்படும் என்று காத்திருக்க இயலாது. சில விஷயங்கள் மாற வேண்டுமானால் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவதுதான் சரியான வழி.
இச்சூழலை அரசு கையாளும் முறை ஆரோக்கியமானதாக இல்லை. ஒடுக்கப்பட்டவர்களுக்கு உரிமையை மறுக்கும் வகையில் வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகவே இதைக் கையாளுகிறது. கோயிலைப் பூட்டுவதும் காவலர்களைக் குவித்து நிறுத்துவதும் அதைத்தான் காட்டுகின்றன. நீதிமன்றம் தலையிட்டால் அந்தத் தீர்ப்பை அமல்படுத்துவதுபோல அரசு பாவனை செய்கிறது. யார் பக்கமும் இல்லாமல் நடுநிலை வகிப்பதாகக் காட்டிக்கொள்கிறது. சமூகநீதி அரசு சாதி ஒழிப்பில் எப்படி நடுநிலை வகிக்க முடியும்? இன்றைய சூழலில் எந்தக் கொள்கையைக் கொண்ட கட்சியாக இருப்பினும் சாதியை வெளிப்படையாக ஆதரிக்க இயலாது. அது அரசியல் சாசனத்திற்கு விரோதமாகும்.
ஆகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இத்தகைய பிரச்சினைகளைச் சாதி ஒழிப்புக் கோணத்தில் முக்கியமானதாகக் கருத வேண்டும். அந்நோக்கில் தீர்வு காண முயல வேண்டும். பல விஷயங்களுக்குக் குழு அமைத்து அறிக்கை கோரும் அரசு தமிழ்நாடு முழுதும் இருக்கும் அனைத்துக் கோயில்கள்பற்றிய விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அவற்றில் இருக்கும் பிரச்சினைகளைத் தீர ஆராய்ந்து அறிக்கை பெற வேண்டும். அவ்வறிக்கையின் அடிப்படையில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
நீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டியே ஒவ்வொரு கோயிலும் எல்லாருக்குமானது என்று ஆணையிடலாம். அதைப் படிப்படியாக நடைமுறைப்படுத்தலாம். அரசு நிலத்தில் இருக்கும் கோயில்கள் அனைத்திலும் முதலில் அமல்படுத்தலாம். அனைவருக்கும் அனுமதி இல்லை என்றால் கோயில் அரசுக்குச் சொந்தமாகிவிடும் என்பதை அறிவுறுத்தலாம். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் சட்டப்படி இத்தகைய கோயில்களில் பூசாரிகளை நியமிக்கலாம். அவர்களுக்கு இடமாறுதலும் வழங்கலாம். அறநிலையத் துறை நிர்வகிக்கத்தக்கக் கோயில்களை அதன் கீழ் கொண்டு வரலாம். பல்லாயிரம் கோயில்களை அத்துறை நிர்வகிப்பது கடினம் என்றால் உள்ளாட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் கோயில்களையும் கொண்டு வரலாம்.
அரசு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க, அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இதுபோன்ற பிரச்சினைகளில் என்ன செய்கின்றன என்னும் கேள்வியையும் எழுப்ப வேண்டியிருக்கிறது. சமூக நீதி பேசும் எந்த அரசியல் கட்சியும் கிராமத்துக்குக் கோயில்களுக்குள் அனைவரும் சென்று வழிபடும் உரிமைக்காகப் போராடுவதில்லை. ஆதிக்கச் சாதிகளின் ஓட்டை இழக்க எந்தக் கட்சியும் தயாராக இல்லை. சாதி ஒழிப்பைத் தீவிரமாக முன்னெடுத்த வரலாறு உடைய திராவிடர் கழகங்கள் இதுபோன்ற சாதிய அநீதிகளுக்கு எதிராக இன்று களமிறங்கிப் போராடுவதில்லை. இந்துக்கள் அனைவரும் ஒன்று என்று முழங்கும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகளும் இந்துக் கோயில்களில் கடைப்பிடிக்கப்படும் இதுபோன்ற பாரபட்சங்களைக் களைய எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. இவர்கள் கோரிக்கைப்படி கோவில்களைத் தனியாரிடம் ஒப்படைப்பது இதுபோன்ற அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தை மேலும் பலவீனப்படுத்தவே செய்யும். சமத்துவம், சமூக நீதி, ஒற்றுமை ஆகிய அனைத்து விழுமியங்களும் சாதிப் பெரும்பான்மையின் முன் காணாமல்போய்விடும் அவல யதார்த்தத்தின் சாட்சியாக இருக்கின்றன கிராமத்துக் கோயில்கள். இந்தப் பொதுப்போக்குக்கு விதிவிலக்காக இருப்பவை இடதுசாரிக் கட்சிகள். இவைதாம் இதுபோன்ற பிரச்சினைகளை முன்னிட்டுக் களத்தில் இறங்கிப் போராடிவருகின்றன.
கோயில்களை அனைவருக்கும் பொதுவானதாக மாற்றுவது சாதாரண விஷயமல்ல. அதற்கு ஆதிக்க சாதியினர் கடும் எதிர்வினைகள் புரிவர். மதவாத, சாதியவாதக் கட்சிகளும் பல தடைகளைப் போடுவர். ஆனால் சாதி ஒழிப்பு நடவடிக்கையில் இதுவும் ஒன்று என்று கருதிப் படிப்படியாக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டால் சமூகநீதி வெற்றி பெறும்.