மக்களுக்கான மொழியில் ஆய்வு நூல்களை எழுதிய அறிஞர்
பொருளியல் துறையில் ஆழ்ந்த புலமையும் சுயேச்சையான சிந்தனைகளும் கொண்ட பொருளியல் அறிஞர் எஸ். நீலகண்டன் மார்ச் 19 அன்று காலமானார். நீலகண்டன் 1935இல் கரூர் அருகே அமராவதியின் கரையிலுள்ள செட்டிப்பாளையத்தில் பிறந்தவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பொருளியல் பேராசிரியராகப் பணியாற்றினார். பிறகு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நோபல் பரிசு பெற்ற பொருளியலாளர் டக்ளஸ். சி. நார்த்திடம் பணியாற்றினார். இந்தியா திரும்பிய பின் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIDS) இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற பிறகு ‘ஒரு கிராமமும் ஒரு நகரமும்’ என்னும் நூலை வெளியிட்டார். உலகமயமாக்கலுக்குப் பிறகு நகரமான கரூரும் கிராமமான செட்டிப்பாளையமும் அடைந்த சமூக, பொருளியல் மாற்றங்களைப் பற்றிப் பேசும் நூல் இது. கல்விப்புலம் சார்ந்த பின்னணியைக் கொண்டவராக இருந்தாலும் இந்த நூலைப் பொது வாசகர் படைக்கக்கூடிய நடையில் சுவையாக எழுதியிருந்தார். கல்விப் புலத்தைச் சேர்ந்தவர்கள், பொது வாசகர்கள் ஆகிய இரு தரப்பினரையும் கவரும் வகையில் இந்த நூலின் உள்ளடக்கமும் எழுத்துமுறையும் அமைந்தன. மக்கள் வாழ்வுசார்ந்த ஆய்வு நூல்கள் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான முன்மாதிரியாகவும் இந்த நூலைக் குறிப்பிடலாம். பொது வாசகர்களின் அறிதலை விரிவாக்கும் நோக்குடன் ‘ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ்வரை’, ‘செவ்வியல் அரசியல் பொருளாதாரம்’, ‘நவ செவ்வியல் பொருளியல்’ ஆகிய நூல்களை எழுதினார். இந்த நூல்கள் பொருளியல் அறிவினை விரிவாக்கப் பெருமளவில் உதவக்கூடியவை.
நீலகண்டன் தன்னுடைய இறுதிக் காலத்தில் செட்டிப்பாளையத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தார். தொடர்ந்து ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் உரையாடிவந்தார். அவருடைய மறைவு தமிழ் அறிவுலகில் நிரப்ப இயலாத வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. காலச்சுவடு சார்பில் அவருக்கு மனமார்ந்த அஞ்சலியைச் செலுத்துகிறோம்.