கலை என்னும் பதுங்கு குழி
திரைப்படப் பாடலாசிரியர் வைரமுத்து, இதழாளர் எம்.ஜே. அக்பர், நாடக இயக்குநர் பார்த்திபராஜா, அரசு அதிகாரியும் எழுத்தாளருமான பூ.கோ. சரவணன், எழுத்தாளர் கோணங்கி. இவை அண்மைக் காலங்களில் பாலியல் குற்றச்சாட்டுக்களில் அடிபட்ட பெயர்கள். இவர்களைத் தவிரக் கர்னாடக இசையுலகில் ராஜேஷ் வைத்யா, மேண்டலின் ராஜேஷ், ரவிகிரண், சசிகிரண், ஓ.எஸ். தியாகராஜன், மன்னார்குடி ஏ. ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜா ராவ், திருவாரூர் வைத்யநாதன், நாகை ஸ்ரீராம் உள்ளிட்ட சிலர்மீதும் இதே குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
பாதிக்கப்பட்டவர்கள் ‘மீடூ’ என்னும் இயக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு மிகுதியும் சமூக வலைதளங்கள் மூலமாக இவற்றை முன்வைத்தார்கள். உடல் வலிமையைப் பயன்படுத்தி, பெண் அல்லது ஆண்மீது வலுக்கட்டாயமாக மேற்கொள்ளும் வன்புணர்வு தவிர இதர பாலியல் அத்துமீறல்கள் தொடர்பில் ஆதாரம் எதையும் கொடுப்பது கடினம். ஏனென்றால் இத்தகைய அத்துமீறல்கள் பெரும்பாலும் தெரிந்தவர்களால் நுட்பமான வழிகளில் முன்னெடுக்கப்படுபவை. பிற வழிகளில் பலன் கிடைக்கும் என ஆசை காட்டுதல், அதிகாரத்தை வைத்து மிரட்டுதல், புறக்கணிப்பு உள்ளிட்ட ஆயுதங்களைப் பிரயோகித்தல் முதலானவை இதன் வழிமுறைகள். எனவே இவற்றுக்கு ஆதாரங்களைக் காட்டுவது கிட்டத்தட்ட அசாத்தியமானது. எனினும் பாலியல் அத்துமீறல்களுக்கு ஆளானவர்கள் அது தொடர்பான மன உளைச்சல்களிலிருந்தும் அதனால் வரும் உடல், மனச் சிக்கல்களிலிருந்தும் வெளியேறுவதற்கான வழியாகத் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்ல முடிவெடுக்கிறார்கள். இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டவர்களை அம்பலப்படுத்தி, சமுதாயத்தில் மதிப்பிற்குரிய ஆளுமைகளாக அவர்கள் வலம்வருவதைக் கேள்விக்குள்ளாக்கி, இன்னும் பலர் பாதிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பது அவர்களில் பொதுவான நோக்கம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நபர்களுள் அக்பரைத் தவிர்த்து யாரும் இது குறித்த விசாரணைக்கு ஆளாகவில்லை; யாருக்கும் எவ்விதமான தண்டனையும் கிடைக்கவில்லை. வைரமுத்துவுக்குத் திரைத்துறையிலும் ஊடகங்களிலும் ஓரளவு வாய்ப்புகள் குறைந்தாலும் பொது வெளியில் மதிப்புக்குரிய ஆளுமையாக அவர் வலம்வருவதற்கு எந்தத் தடையும் இல்லை. அரசியல், இலக்கிய மேடைகளில் அவர் வழக்கம்போல முழங்குவதும் பிறர் அவரைப் போற்றிப் பேசுவதும் தொடர்கின்றன. தமிழக முதல்வர் அவருடன் மேடையைப் பகிர்ந்துகொள்கிறார். நாடகக் கலைஞரான பார்த்திபராஜா தன்னுடன் நாடகக் குழுவில் பங்குபெற்ற ஒரு பெண்ணிடம் பாலியல் அத்துமீறலைச் செய்திருப்பதாகப் புகார் எழுந்தது. தமுஎகச அமைப்பில் உறுப்பினராக இருக்கும் இவர்மீது அந்த அமைப்பு இந்தப் புகாரை ஒட்டி நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டபோது பார்த்திபராஜாவே அமைப்பிலிருந்து விலகிவிட்டார் எனத் தெரிகிறது. குற்றச்சாட்டுக்கு உள்ளான கர்னாடக இசைக் கலைஞர்களைக் கச்சேரிக்கு அழைப்பதை அந்த இசையுலகின் மையங்களில் ஒன்றான மியூசிக் அகாடமி நிறுத்திக்கொண்டது. இதர சபாக்கள் இவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்துக்கொண்டுதான் இருக்கின்றன. மிகச் சமீபத்தில் கிளம்பிய கோணங்கி விவகாரத்தில் பலரும் அவரின்மீது கண்டனம் தெரிவித்தாலும் அவருக்காக வழக்காடுபவர்களின் எண்ணிக்கை, பின்புலம், ஆவேசம் ஆகியவற்றைப் பார்க்கும்போது கோணங்கியும் இந்தக் குற்றச்சாட்டைச் சட்டைமீது படிந்த மணல்போலத் தட்டி எறிந்துவிட்டு ‘மண்சார்ந்த மகத்தான கலைஞன்’ என்னும் படிமத்துடன் கம்பீரமாக வளையவரும் நாள் தொலைவில் இல்லையென்றே தோன்றுகிறது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் யாருமே இதுவரை வருத்தம்கூடத் தெரிவிக்கவில்லை.
வைரமுத்து, பார்த்திபராஜா, கோணங்கி ஆகியோர்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு வரும் எதிர்வினைகள் குற்றத்தின் தன்மை குறித்தவையாக அல்லாமல் இவர்களுடைய பின்புலம், குற்றம்சாட்டியவர்களின் பின்புலம் ஆகியவற்றைப் பொருத்து மாறுகின்றன. எடுத்துக்காட்டாக, வைரமுத்துவுக்கு ஊடகங்களிலும் அரசியல் களத்திலும் கிடைத்துவரும் ஆதரவுக்கு அவருடைய திரை, அரசியல் பின்புலம் மட்டுமின்றி அவருடைய பெரும்பான்மை சாதியும் அவர்மீது குற்றம்சாட்டிய சின்மயி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டவர்களின் பிராமண சாதிப் பின்புலமும் முக்கியக் காரணம். வைரமுத்துவைக் கண்டிக்கத் தயங்கிய பலரும் கோணங்கியைக் கண்டிக்கத் தயக்கம் காட்டாததற்குக் காரணம், குற்றம் சுமத்தியவர்களின் பின்புலங்களில் இருக்கும் வேறுபாடுதான் என்ற உண்மையை அறியப் பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை; அந்த அளவுக்குப் பொதுவெளியில் சாதியின் நிழல் அழுத்தமாக விழுந்துள்ளது. பொது அறிவுஜீவிகளில் மிகச் சிலரே சின்மயியின் சாதியைப் பாராமல் பாதிக்கப்பட்ட பெண்ணாக அவருக்கு ஆதரவு தெரிவித்தார்கள். வைரமுத்து குற்றச்சாட்டின் நிழலிலிருந்து விலகிப் பழையபடி பொதுவெளியில் முக்கிய ஆளுமையாக உலாவருவதற்கு ஊடகங்களும் ஒத்துழைத்தன. தீவிர இலக்கியம், அறம், காந்தியம் எல்லாம் பேசுபவர்கள்கூடப் பொது ஊடகங்களில் அவருடைய ‘கவித்துவ ஆளுமை’யை விதந்தோதினார்கள்.
கோணங்கி விஷயத்தில் இந்த விவகாரம் சாதி எல்லையைத் தாண்டி வேறொரு தளத்திற்குச் சென்றுள்ளது. அவருக்கு ஆதரவான குரல்கள் அவர் குற்றம் செய்திருக்க மாட்டார் என்னும் நம்பிக்கையை அழுத்தமாக முன்வைக்கவில்லை. மாறாக, அவருடைய கலைத்திறனை முன்வைத்து அவருக்கு முட்டுக்கொடுத்தன. அவருடைய வயது, கலைக்காக அவர் செய்துவரும் ‘தியாகம்’, கலைஞர்களுக்கு இருக்கக்கூடிய ‘இயல்பான’ பிறழ்வுகள், ‘நிதி நெருக்கடி’ ஆகியவற்றை முன்வைத்து அவருக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன.
கோணங்கியைக் கலையின் முகமாகவும் அவரை விமர்சிப்பவர்களைக் கலைக்கு எதிரானவர்களாகவும் முன்னிறுத்தும் அளவுக்கு இந்த அணுகுமுறை சென்றது. இந்த விவகாரத்தை வைத்து எழுத்தாளர்களை மொத்தமாக இழிவுபடுத்தி அவர்கள் மதிப்பைக் குறைக்க அனுமதிக்க முடியாது என்னும் முழக்கங்கள் எழுந்தன. கோணங்கியைக் கண்டித்தவர்கள் யாருமே அவருடைய எழுத்தைக் குறிவைக்கவில்லை என்ற நிலையிலும் இந்தக் குரல் எழுந்ததுதான் விசித்திரம். இத்தனைக்கும் கோணங்கியின் எழுத்துப் பாணிமீது விமர்சனமும் ஒவ்வாமையும் கொண்டவர்கள்கூட இந்தச் சமயத்தில் அதைப் பேசவேயில்லை. எழுத்தாளர்களைச் சுற்றி உருவாக்கப்படும் பிம்பக் கட்டமைப்புகள், அதனால் உருவாகும் அதிகாரம் ஆகியவை இத்தகைய மீறல்களுக்குத் துணைபுரிவதையும் மீறல்கள் வெளியே தெரியாமல் தடுக்கும் அரணாக விளங்குவதையும் சிலர் சரியாகவே குறிப்பிட்டிருந்தார்கள். இதுவே கோணங்கியை ஒட்டுமொத்த எழுத்தாளர்களின் அடையாளமாகக் கொள்வதற்கான நியாயத்தைச் சிலருக்கு அளித்துவிட்டது.
கலைக்கும் படைப்புக்கும் எதிராக அல்லாமல், கலையின் பெயரால் எழும் அதிகாரத்துக்கும் அத்துமீறல்களுக்கும் எதிரான குரல்கள் எழுத்துத் துறைக்குள்ளிருந்தே எழ வேண்டும். அதிகாரம் உருவாவது சில சூழல்களில் இயற்கையாகவும் சில சூழல்களில் திட்டமிட்ட வகையிலும் நடக்கலாம். சுதந்திரப் போக்குள்ள கலைஞர்கள் எப்போதும் அத்தகைய அதிகாரத்தைத் தவிர்ப்பவர்களாகவும் அதை விமர்சிப்பவர்களாகவுமே இருப்பார்கள். கலைகளை முன்னெடுக்க இயக்கங்களும் அமைப்புகளும் தேவைதான். அந்த அமைப்புகளுக்கென்று அதிகாரம் உருவாவதும் இயற்கைதான். ஆனால் அந்த அதிகாரம் குறித்த சுயவிமர்சனமும் அது அத்துமீறல்களுக்கு இட்டுச்சென்றுவிடக் கூடாது என்னும் கவனமும் அந்த அமைப்பாளர்களுக்கு இருக்க வேண்டும். கலைஞர்களின் பிறழ்வுகளுக்கு முட்டுக்கொடுப்பதற்காகக் கலையின் பேரால் நிகழ்த்தப்படும் அதிகார வன்முறை களுக்கு எழுத்தாளர்கள் துணைபோகக் கூடாது. குற்றச்சாட்டுக்களுக்கு எதிரான பாதுகாப்பாகக் கலையை முன்னிருத்தக் கூடாது.
கோணங்கி விஷயத்தில் ஒன்பது இளைஞர்கள் வெளிப்படையாகத் தங்கள் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்கள். மேலும் பலரும் தனிப்பட்ட முறையில் பலரிடமும் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்திவருகிறார்கள். கோணங்கியின் தம்பி முருக பூபதி நடத்தும் நாடகக் குழுவான மணல்மகுடியில் இணைந்து பணிபுரிந்த இளைஞர்கள் இத்தகைய அனுபவங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். மீறல்கள் எப்படி நடந்தன, ஏன் தங்களால் மறுக்கவோ விலகியிருக்கவோ முடியவில்லை என்பதையெல்லாம் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். மணல்மகுடி குழுவைச் சேர்ந்த சில பெண்களும் தோழமையுணர்வுடன் கூடிய ஆதரவை இவர்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள். இந்தக் குற்றங்களுக்குப் பின் இருக்கும் கலை சார்ந்த பாவனைகளும் இவர்கள் கூற்றில் அம்பலமாகின்றன. இதை இப்போது வெளியில் சொல்வதன் காரணத்தைக் கூறி கோணங்கியிடம் தங்கள் கோரிக்கை என்னவென்றும் சொல்லியிருக்கிறார்கள். அவர்களோடு கலந்துரையாடியவர்களின் பதிவுகளும் பொதுவெளியில் காணக் கிடைக்கின்றன. இவ்வளவுக்குப் பிறகும் குற்றமே நடக்கவில்லை என்று வாதிடவும் ‘குற்றம் செய்திருந்தால்...’ என்று பேசுவதற்கும் ஏன் அப்போதே சொல்லவில்லை எனக் கேட்பதற்கும் விசேஷமான தடித்தனம் வேண்டும்; அல்லது அறியாமையின் இருளில் மூழ்கியிருக்க வேண்டும்.
கோணங்கி, முருக பூபதி ஆகியோரின் செயல்பாடுகள், அவர்களுடைய ஆக்கங்களின் உள்ளடக்கம், கலை இலக்கியச் செயல்பாடுகளை ஒட்டி உருவாகும் / உருவாக்கப்படும் அமைப்புகள், அவை நாளடைவில் மடங்களைப் போன்ற அதிகார மையங்களாக மாறுதல் ஆகியவற்றுக்கும் இதுபோன்ற அத்துமீறல்களுக்கும் தொடர்பு இருக்கிறது. பழைமையை விமர்சனமின்றி மீட்டுருவாக்கம் செய்தல், தொன்மையான பண்பாட்டின் பெயரால் சமூகப் படிநிலைகளைத் தொடரச்செய்யும் முயற்சிகள், குரு-சிஷ்யப் பாரம்பரியத்தை மீட்டெடுத்தல், கீழ்ப்படிதலை வலியுறுத்துதல் ஆகியவற்றோடு அதிகாரத்தைக் கட்டமைக்கிறார்கள்; அதன் விளைவாய் வெளியில் சொல்ல முடியாத அத்துமீறல்களை நிகழ்த்துவதற்கும் வழிவகுத்துவிடுவதை மறுத்துவிட முடியாது.
கோணங்கியின் மன உளைச்சலுக்காக அனுதாபம் தெரிவிப்பவர்கள் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் தரப்பில் நின்று ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கலையின் மீதுள்ள தீராத வேட்கையால் கோணங்கியைத் தேடிச் சென்று அவருக்கு நெருக்கமானவர்கள் இவர்கள். மணல் மகுடி நாடகக் குழுவின் கலைச் செயல்பாடுகள்மீது பெருமதிப்புக் கொண்டு அதில் பங்கேற்றவர்கள். கலைமீதான ஈடுபாடே இந்த இளைஞர்களை இத்தகைய நிலைக்குக் கொண்டுவிட்டிருக்கிறது. இந்நிலையில் சக கலைஞர்களின் அனுதாபமும் ஆதரவும் இவர்களுக்குத் தேவை. ஆதரவு தெரிவிக்காவிட்டாலும் கலைஞர்களின் மீறல்களுக்குக் கலையின் பெயரால் சலுகை கோருவது அதற்கு இழைக்கப்படும் துரோகமாகும்.