கேட்டிருப்பாய் காற்றே
தமிழ் நாட்டில் இருக்கும் ஈழ அகதிகள் முகாம்களைப் பற்றிய சேதிகள் அவ்வப்போது நாம் அறிந்தவைதாம். நாற்பது ஆண்டுகளாக அவற்றின் சோக வரலாறு எம்மோடு உள்ளது. அந்த முகாம்களில் வாழ்கிற கவிஞர்களின் இலக்கிய, அரசியல் படிமங்கள் எவை? அவர்களின் குரலுக்கும் நுண்ணுணர்வுக்கும் எங்கள் சமகாலக் கவிதையியலில் என்ன இடம் உள்ளது? கனடாவுக்கும் ஐரோப்பாவுக்கும் வளம் மிக்க வேறு நாடுகளுக்கும் அகதிகளாக, அரசியல் தஞ்சம் கோருபவர்களாகப் புலம் பெயர்க்கப்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்களுக்குக் கிடைக்கிற வாய்ப்பும் கவனமும் ஊடகப் பதிவுகளும் ஏன் இந்த அகதி முகாம் கவிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் கிடைப்பதில்லை?
இந்தக் கேள்விகள் முக்கியமானவை. அவற்றுக்கான சில மறுமொழிகளை இந்தச் சிறப்புப் பகுதியில் வெளியாகியிருக்கும் கவிதைகளூடாக நீங்கள் உணர முடியும்.
தூத்துக்குடியில் இருக்கும் தாப்பாத்தி அகதி முகாமில் வாழும் அருள் ராஜும், அகதி முகாம்கள் பலவற்றில் ‘விழிப்புணர்வுக் குழு’ என்ற அமைப்பின் மூலம் இலக்கிய, அரசியல், சமூகச் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் நண்பர் ம. மகாதேவனும் முகாம்களில் வாழும் மக்களுக்கும் மாணவர்களுக்கும் கவிதைப் போட்டி ஒன்றை நடத்தினார்கள். அந்தப் போட்டியில், எல்லோரும் கலந்துகொண்ட பொதுப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட அறுபது கவிதைகளை எனக்கு அனுப்பிவைத்து அவற்றில் தரமான முதல் பதினொரு கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தரும்படி அன்போடு கேட்டிருந்தனர், இவர்களை என்னோடு இணைத்துவிட்டவர் இலங்கையின் மலையகக் கவி எஸ்தர்.
இந்தக் கவிதைகள் எனக்குள் கிளர்த்திய உணர்வுகள் துயரும் கவலையும் ஓர்மமும் இடைவிடா முயற்சியும் சார்ந்தவை. இவற்றை எழுதிய கவிஞர்கள் பலருக்கு, விருப்பமிருந்தாலும் தமிழை ஆழமாகக் கற்க வாய்ப்புகள் இல்லை. இக்கவிதைகளில் இருந்து நான் தெரிவு செய்த சில கவிதைகள் இந்தச் சிறப்புப் பக்கங்களில் வெளியாகின்றன. கவிஞர்களின் அனுமதியோடு கவிதைகளை ஓரளவு செப்பமிட்டிருக்கிறேன்.
பல ஆண்டுகள் முன்பு றுவாண்டாவில் டூட்சி அகதிகள் வாழ்ந்து வந்த அகதி முகாம்களில் அவர்கள் எழுதிய பல பிரெஞ்சு, ஆங்கிலக் கவிதைகளை அவர்களே நிகழ்த்திய அரங்குகளில் கேட்டிருக்கிறேன். அவர்களின் ஆங்கிலக் கவிதைகளைப் போட்டிகளுக்காக மதிப்பிட்டிருக்கிறேன்.
ஈழ இனப்படுகொலையில் சொல்லொணாத் துயரங்களையும் எல்லா வகையான வன்முறைகளையும் தாங்கி ஐரோப்பாவுக்குத் தப்பிவந்த பெண்களும் தாய்மாரும் தமது ஆறாவடுக்களை ஆற்றுவதற்காகவும் ஆறுதல் பெறுவதற்காகவும் எழுதிய கவிதைகள் பலவற்றை அவர்களோடு கூட இருந்து கேட்டிருக்கிறேன்; வாசித்திருக்கிறேன். அவர்களோடு கவிதைப் பட்டறைகளில் இணைந்து கவிதையியல், சொல்வளம், கவிதையைச் செப்பனிடும் பல்வேறு முறைமைகள் பற்றிக் கலந்துரையாடி இருக்கிறேன்.
மிகுந்த உணர்வுத் தோழமையுடனும் கவிஞர்களின் குரலைப் பறித்தெடுத்துப் பேசாமலும் ஆழமாக அவர்களுடைய அனுபவங்களையும் குரலையும் கேட்டும் அவர்களுக்கு அணுக்கமாக நின்று அவர்கள் கவிதைகள் பற்றிப் பேசுவது இன்னொரு வாழ்வை நாம் பெறுவது போல; எல்லா நேரங்களிலும் இது சாத்தியப்படாது.
மிகுந்த அவதானத்துடனும் அஞர் எழுப்பும் எல்லா வகைத் துயர அதிர்வுகளோடும், இவர்களின் கவிதைகளை நான் புரிந்துகொள்ள முயன்றுள்ளேன்.
வாசகர்களும் அத்தகைய மனோநிலையில் இக் கவிதைகளை அணுக வேண்டும் என்பது என் விருப்பு.
மின்னஞ்சல்: cheran@uwindsor.ca