இனவாதமாகப் பார்க்க வேண்டாம்
‘தமிழர் இனவாதம்’ என்ற காலச்சுவடின் தலையங்கம், யார் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருக்கிறது. வடவர் தொடர்பாகத் தலையங்கம் விவரிக்கும் பல்வேறு கூறுகளும் யதார்த்த நிலையை அறிந்துகொள்ளாமல் மேஜையில் அமர்ந்து எழுதும் மேட்டிமைக் கருணையின் வெளிப்பாடாக இருக்கிறது.
இந்தியா ஒற்றை நாடு, யாவருக்கும் அங்கு சம உரிமை இருக்கிறது என்று சொல்லப்படுவது உண்மையா? ஒரு ‘இந்திக் குடிமகனும் தமிழ்க் குடிமகனும்’ இந்தியாவில் சமமான வாய்ப்பில்தான் இருக்கிறார்களா? தேசிய இன அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது ஏன்? அந்தந்த இன மக்களின் மொழி - நிலம் - பண்பாடு - தொழில் - வணிகம் - வேலை வாய்ப்பு - வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தானே? இப்போதுள்ள எந்த ஒரு நிலப்பரப்பிலும் ஒரே ஒரு தேசிய இனம் மட்டுமே இருப்பது சாத்தியமில்லைதான். ஆனால் ஒரு தேசிய இனத் தாயகத்தில் வேறு தேசிய இன மக்கள் வரைமுறையற்றுக் குவிவது அந்தந்தத் தேசிய இன மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதில்லையா?
நிலவுடைமைக் காலத்தில் ஒரு படி நெல் அதிகமாகக் கூலி உயர்வு கேட்டு விவசாயத் தொழிலாளர்கள் போராடியபோது, பண்ணையார்கள் வேறு ஊரிலிருந்து விவசாயக் கூலிகளை இறக்கி அறுவடை செய்தனர். அதற்கு எதிராக வீரியமான போராட்டத்தை அப்போது இடதுசாரிகள் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்தைக் கூலி உயர்வு கேட்ட தொழிலாளிக்கு ஆதரவானதாகப் பார்ப்பீர்களா? வேறு ஊரிலிருந்து வயிற்றுப் பாட்டிற்காக அறுவடை செய்ய வந்த கூலித் தொழிலாளர்களுக்கு எதிரானதாகப் பார்ப்பீர்களா? அதன் விரிந்த வடிவம்தான் இப்போது நடக்கும் வடவர் குவிப்பு.
தமிழர் செய்ய முடியாத அல்லது செய்ய மறுக்கும் வேலைகளுக்குத்தான் வடவர் வருகின்றனர் என்கிறீர்கள். இம்முடிவிற்கு வருவதற்குக் கள ஆய்வு எதுவும் செய்தீர்களா? நான் வசிக்கும் ஓசூர் பகுதியில் வடவர் குவிவதற்கு முன், அசோக் லேலேண்ட், டிவிஎஸ், டைட்டன் போன்ற பெருந் தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் செக்யூரிட்டிகளாகவும் உணவகப் பணியாளர்களாகவும் வேலை செய்தனர். இன்று அவ்வகைப் பணிகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில்தான் தமிழர்கள் இருக்கிறார்கள். என்ன காரணம்?
தமிழர்கள் இந்த வேலைகளைச் செய்ய மறுத்து வெளியேறினார்களா? இல்லை; வெளியேற்றப் பட்டார்கள்; அதை நாங்கள் கண்முன் பார்த்தோம்.
செக்யூரிட்டிகளாக - உணவகப் பணியாளர்களாகத் தமிழர்கள் இருந்தபோது அவர்களின் வேலை நேரம் பத்து மணி. பதினைந்து நாட்களுக்கு அல்லது பத்து நாட்களுக்கு ஒரு நாள் விடுமுறை. ஆனால் முகவர்கள் மூலம் வந்து குவிந்த வடவர்களின் வேலை நேரம் பன்னிரண்டு மணி; வார விடுமுறை கிடையாது. பத்து மணி நேரம் வேலை, முறையான வார விடுமுறையில்லை எனத் தமிழக தொழிலாளர்கள் பணிபுரிந்ததே சுரண்டலான நிலை.
தமிழகத் தொழிலாளர்களைவிட எங்களைச் சுரண்ட அனுமதிக்கிறோம், தமிழகத் தொழிலாளர்களை விரட்டிவிட்டு அந்த இடத்தில் எங்களை அமர்த்துங்கள் என்று வடவர் வருவது இயல்பான வருகையா? தமிழக உழைக்கும் தொழிலாளியின் மீதான தாக்குதலா? வடவர் குவிப்பு முதலாளியின் சுரண்டலையும் தமிழகத் தொழிலாளர்களின் வேலையிழப்பையும் அதிகமாக்கிக் கொண்டிருக்கிறது.
ஓசூருக்கு அருகில் டாடா மின்னணுத் தொழிற்சாலையில் பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கே முன்னுரிமை என்றார்கள். பெயரளவில் தமிழ்ப் பெண்களை வேலைக்கு எடுத்துவிட்டு, ஆயிரக்கணக்கான வடவர் பெண்களைச் சிறப்புத் தொடர் வண்டி - விமானத்தின் மூலம் அழைத்துவந்தார்கள். டாடா நிறுவனத்தின் நிரந்தர வேலைகளில் தமிழ்ப் பெண்கள் சேர மறுத்தார்களா என்ன? அவர்கள் நடத்தும் வேலை வாய்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கான இளம்பெண்கள் வேலை மறுக்கப் பட்டுக் கண்ணீரோடு வெளியேறி னார்கள். +2க்கு மேல் பெண்கள் படித்திருக்கக் கூடாது என்ற விசித்திரமான நிபந்தனையை டாடா நிறுவனம் விதித்தது. அதைக் காரணம் காட்டியே தமிழ்ப் பெண்களுக்கு வேலைவாய்ப்பை மறுத்தது; வட நாட்டிலிருந்து இளம் பெண்களைக் கொண்டுவந்து குவித்தது.
இதைத் தமிழ் இளம்பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பீர்களா? வடவர் பெண்களுக்கான உரிமை என்பீர்களா? நாங்கள் அநீதி என்று உணர்ந்தோம்; மக்களைத் திரட்டிப் போராடினோம்; நிலையை மாற்றியிருக்கிறோம்.
உண்மையில் அடிக்கப்படுபவர்களாகத் தமிழ்நாட்டில் தமிழர்கள் இருக்கிறார்கள். ஆனால் அடிப்பவர்களாக சித்திரிக்கிறீர்கள். இது நியாயமன்று; அறமன்று. சிங்களவர்கள் - மலையாளிகள் - வடவர்கள் என்று யாரையாவது எதிரியாக வரித்துக்கொண்டு தமிழர்கள் வெறுப்பு மனநிலையில் இருந்துவருகிறார்கள் என்ற தலையங்கத்தின் குற்றச்சாட்டு, மிதி மிதி மிதியென்று மிதிபடுவன்மீது மிதிக்கும் மற்றுமொரு மிதியாகும்.
காலச்சுவடு ஒரு தமிழ் இதழ். தமிழர்கள் வாசிக்கும் இதழ். காலச்சுவடு தமிழிதழாகவும் தமிழர்கள் வாசிக்கும் இதழாகவும் இருப்பதாலேயே அது வேறுமொழிகளுக்கும் அந்தந்த மொழியின மக்களுக்கும் எதிரானது என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் வாழ்வுரிமைக்காக எழும் குரலை இனவாதம் என்று சொல்வது. தமிழர்களும் பல்வேறு மாநிலங்களில் பிழைப்பிற்காகப் பரவியிருப்பது உண்மைதான். தமிழ்நாட்டில் வரலாற்று வழியில் வந்து இங்கு நிலை பெற்றுள்ள மொழிச் சிறுபான்மையினரைப் போன்று, கர்நாடகம் - மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் நிலைகொண்டவர்கள் அவர்கள். தமிழ்நாட்டில் வரலாற்று வழி வந்து இருக்கும் பிற மொழியினர் எப்படி இந்த மண்ணின் குடிகளோ, அதே போன்று அப்படி அந்தந்த மண்ணின் குடிகளாகத் தமிழர்கள் இருக்கிறார்கள். அது தவிர்த்து இதுபோன்று படையெடுத்து வருவதுபோல் தமிழர்கள் செல்கிறார்களா?
தமிழர்கள் வேறு ஒரு மாநிலத்திற்கு அம்மாநில மக்களின் இருப்பைப் பாதிக்கும் வகையில் செல்வதாக ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டால், அம்மாநிலங் களிலிருந்து அப்படிச் செல்லும் தமிழர்கள் தடுக்கப்பட்டுத் திருப்பியனுப்பப்பட வேண்டும். அதுவே சரியானது. அது போல் பல்வேறு நாடுகளுக்கும் தமிழர்கள் பிழைப்பிற்காகச் செல்கிறார்கள். அப்படிச் செல்பவர்கள் அந்தந்த நாடுகளின் அனுமதியோடு செல்கிறார்கள்; அனுமதிக் காலம்வரை இருக்கிறார்கள். அனுமதிக் காலம் முடிந்து ஒருநாள் இருந்தாலும் அவர்கள் சிறையில்தான் இருக்க வேண்டும்.
ஏதோ சில திரைப்படங்களில் மார்வாடி களை வேடிக்கையாகச் சித்திரிப்பதைக் கண்டிக்கிறீர்கள். தமிழகத்தின் தங்கம் - இரும்பு - ஜவுளி - மின் பொருட்கள் - மஞ்சள் - மளிகை என்று ஒட்டுமொத்தப் பொருளா தாரமும் அவர்கள் பிடியில் இருப்பதை இருட்டடிப்புச் செய்கிறீர்கள். தமிழ்நாடு, நிலப்பரப்பின் அளவில் குறுகிய பகுதி. மக்கள் நெருக்கம் உலக சராசரியைவிட இங்கு பல மடங்கு அதிகம்; இயற்கை வளங்கள் வரையறுக்கப்பட்டவை. அப்படியுள்ள ஒரு மாநிலத்தில் வகைதொகையில்லாமல் அன்னியர் வந்து குவிவதால் ஏற்படும் சமூக - பொருளாதார - பண்பாட்டு - அரசியல் சீர்குலைவை அல்லவா தலையங்கம் சுட்டியிருக்க வேண்டும்? அதை நீக்கும் வழிமுறைகளை அல்லவா பரிந்துரைத்திருக்க வேண்டும்?
உ.பி, ம.பி, பீகார், ஒரிசா வடக்கு மாநிலங்களில் அரசுகள் இல்லையா? ஏன் அந்த அரசுகள் தம் மக்கள் தன் நிலத்தை விட்டு வெளியேறும் நிலையில் அவர்களை வைத்திருக்க வேண்டும்? பெருந் தொழிற்சாலைகளை வடக்குப் பகுதியில் அமைப்பதற்கான அரசியல் பலம் அந்த அரசுகளுக்கு இல்லையா?
இந்திய அரசே ‘இந்தியால்’ நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் போது, இந்திக்காரர்கள் பிழைப்பிற்காக இடம் பெயர்வது தற்செயலானதா? பன்மைத்துவத்தை அழித்து ஒற்றைத்துவத்தை இந்தியா முழுவதும் நிறுவும் வேலைத் திட்டத்தின் செயலாக்கமா? ஒரு சிங்களக் குழந்தையின் முத்தம், ஒரு இந்திக் குழந்தையின் முத்தம் கசக்கவா செய்யும் என்று கேட்டார் கவிஞர் இன்குலாப். அவர்தான் சிங்கள - இந்திப் பேரினவாதங்களுக்கு எதிராகப் போராடினார். இரண்டும் முரண்பாடல்ல. தற்காப்பிற்கும் வெறுப்பிற்குமான வேறுபாட்டைத் தெளிந்த புரிதல். அந்தப் புரிதலின் தேவை முன்பு எப்போதையும்விட இப்போது பன்மடங்கு தேவையாயிருக்கிறது.
வடவர் குவிப்பை மனிதாபிமானம் என்ற பெயரில் சமூகப் புரிதலற்று ஆதரிப்பது இம்மண்ணின் மக்களுக்கான நீதியாகாது. அழிக்கும் அநீதி என்று சொல்வதற்கு வரலாறு பல சாட்சிகளை வைத்திருக்கிறது.
ப. செம்பரிதி: (ஒருங்கிணைப்பாளர்) தமிழ் மைந்தர் மன்றம், ஓசூர்.
மின்னஞ்சல்: sudarthamizh@gmail.com