ஈழ அகதிகளின் கவிதைகள்
Courtesy: Jogen Chowdhury
1.
போகப் போகப் பழகி விடுகிறது
எல்லாப் பெற்றோருக்கும்
தம்மைப் போல் குழந்தைகளும்
அகதியாய் வாழ்ந்தால் போதுமென்று.
க. ஆசாத்
திருவாதவூர் முகாம், மதுரை
2. புளிய மரத்தின் வேரில்
சடை விழுந்த கூந்தல் காற்றில் பாம்புகள் என நெளிய
போவோர் வருவோரைப் பார்த்து
உடைந்த காரைப் பற்கள் தெரிய சிரிக்கிறாள்
அவள் உடல் முழுதும் ஆடையாக பாலிதீன் பைகள்
கம்பீர நடை
பாதை முழுதும் பைகள் உரசும் சத்தம்
தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
யாரிடமும் அவள் கையேந்துவது இல்லை
எல்லாத் தழைகளையும் ஒடித்துத் தின்றுகொண்டே
ஊர் முழுதும் பாலிதீன் பைகளைப்
பொறுக்கிக்கொண்டு திரிகிறாள்
மூட்டை மூட்டையாகப் புளிய மரத்தடியில்
தனது உடைகளை அடுக்குகிறாள்
மரக்கிளையில்
தோரணமாகக் கட்டித் தொங்கவிடப்பட்ட பைகள்
யாரையோ வரவேற்க
அல்லது ஏதோ ஒரு வெற்றியைக் கொண்டாட
காற்றில் அசைகின்றன
வெயில் காயும் பொழுது
தார்ச் சாலையில் அமர்ந்து
குச்சியில் தாரை எடுத்து ஒட்டி ஒட்டிப்
புதிய புதிய ஆடைகள் நெய்து
கணக்கில்லாமல் உடுத்திக்கொள்கிறாள்
எப்போதும் பூதாகரமான தோற்றத்துடனே அலையும் அவளை
ஒருவராலும் நெருங்க முடிவதில்லை
எங்கிருந்து வந்தாள் யார் அவள்
ஒருவருக்கும் தெரியாது
பட்டாசுச் சத்தம் கேட்டால்
புளிய மரத்தின் வேரின் கீழ் பதுங்கிக்கொண்டு அழுகிறாள்
என்று இந்த கவிதையை முடிக்கிறேன்
நான்.
ப. ஜீவராணி
புழல் முகாம், சென்னை
3. நம்பிக்கையின் குரல்
குடியுரிமையை நோக்கிய
என் நம்பிக்கை:
இரவு நிலவின் மீது வைப்பது போல்
தென்றல் காற்றின் மீது வைப்பது போல்
கண்கள் இமையின் மீது வைப்பது போல்
சொல் நாவின் மீது வைப்பது போல்
செடி மண்ணின் மீது வைப்பது போல்
ஓவியம் வண்ணம் மீது வைப்பது போல்
பறவை சிறகின் மேல் வைப்பது போல்
குழந்தை தாயின் மீது வைப்பது போல்
படகு நதியின் மீது வைப்பது போல்
பூமிகா
ஊத்தங்கரை முகாம், கிருஷ்ணகிரி
4. எங்கள் வானம் எது?
அம்மா
அப்பா
அகதி
தம்பி
தங்கை
தணிக்கை
பாட்டி
படிப்பு
சம்பளம்
நீ
நான்
முகாம்
கூண்டில் அடைபட்ட எனக்கு
வரையறுக்கப்பட்ட வானம்.
ம. ஹரிஹரன்
திருவாதவூர் முகாம், மதுரை
5. நம்பிக்கைச் சுடராக நான்
எறும்பு போல் நான் ஊர்ந்து சென்றாலும்
என் வாழ்வு ஏணி போல்
ஏற்றம் பெறும் என்ற நம்பிக்கையில் ஊர்ந்து செல்கிறேன்
ஆமை போல் நான் நகர்ந்தாலும்
இறுதியில் வெற்றி எனக்கென்ற நம்பிக்கையில்
நான் நகர்ந்து செல்கிறேன்
மாட்டு வண்டியில் கட்டப்பட்ட காளையாக நான் இருந்தாலும்
வாங்கும் ஒவ்வொரு சாட்டை அடியும்
சாதனை படைக்க என்ற நம்பிக்கையில்
நான் கடந்து செல்கிறேன்
கடந்தது நான் மட்டுமல்ல
என் கனவுகளும்
காலங்களும்தான்
மூன்று தலைமுறை அகதி வாழ்க்கை
முற்றுப்பெறும் என்ற நம்பிக்கையில்
ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையோடு கடக்கிறேன்
நம்பிக்கையின் சுடர் நான்.
சங்கீதா
குறுக்குப்பட்டி அட்டை முகாம், சேலம்
6.நாடற்றவனின் நாட்குறிப்புகளில்
என்ன இருக்கப்போகிறது,
துயரங்கள் வழிந்தோடும்
கவிதைகளைத் தவிர.
க. பிஸ்மி
திருவாதவூர் முகாம், மதுரை
7. முகாம்
கனவுகள் அடக்கம் செய்யப்படும்
கல்லறைத் தோட்டத்திற்குப் பெயர்
அகதி முகாம்
கல்லறைத் தோட்டத்
தடுப்புகள் உடைந்தால்
வகைவகையாய்
வண்ணக் கனவுகள் காணலாம்
உடைப்பிற்கான கோரிக்கை
பழைய தடுப்புகளின் விரிசல்களை
நவீனத்தால் பலப்படுத்துகிறது
இறக்கைகளின் இருப்பை
அறியாத பறவைகள்
கூண்டுக் கம்பிகளின்
இடைவெளி வழியே
வானத்தை அளக்கின்றன
ஆஸ்பெட்டாஸ் கூரைகளுக்குள்
தேடிக் கிடைக்காத அண்டங்கள் விரியும் வாழ்வை
கான்கிரீட் கூரைகளுக்குள்
தேடித் தொலையத் தயாராகிறது
இன்னுமொரு தலைமுறை
ஆயுளை இழந்தா
உரிமை வாழ்க்கை?
விரலை இழந்தா வில்வித்தை ?
ஏகலைவன்களா ஏதிலிகள் ?
மூன்றாம் தலைமுறையின்
முதுகிலும் அகதிச் சாயம்
பிணமாகி
நால்வர் தோளில் கனமாகி
தீ தின்ற போதும்
காற்றில்கூட வான் பறக்காத
அகதியின் சாம்பலில் இருக்கிறது
வாழ்ந்த வாழ்க்கையின்
பெருஞ்சுமை
தீராக் கனவுகளுடன்
இறந்தவனின்
மனைவி
பிரசவிக்கிறாள் புதியதோர் அகதியை
தணிக்கை செய்யும்
கத்திரியின் வாய்களுக்கு நடுவே
வாழ்க்கை வாய்த்தால்
சிரச்சேதம் என்பது
இயல்பு வாழ்க்கை
இறுதிச் சொட்டு இரத்தம்வரை
இறைத்துப் பார்த்தாலும்
இந்திய இறையாண்மைதான்
இறுதியில் தங்கும்
ஆயுள்வரை
அகதியே என்றாலும்
அந்நியன் அல்ல:
இந்தியன் என்றே
இதயமும் விம்மும்
அ. ரிசானா
தாப்பாத்தி முகாம், தூத்துக்குடி