அரியதொரு களஞ்சியம்
செம்மொழித் தமிழ் இலக்கணக் கலைச் சொற்களஞ்சியம்
சி. சுப்பிரமணியம், சு. இராசாராம்
வெளியீடு:
செம்மொழித் தமிழாய்வு
மத்திய நிறுவனம்
சென்னை
எழுத்ததிகாரம் (விலை ரூ.1100, பக்.475)
சொல்லதிகாரம் (விலை ரு.1700, பக்.703)
பொருளதிகாரம் (விலை ரூ.2600, பக்.1084)
மொத்த விலை ரூ.5400 பக்.2265
செம்மொழித்தமிழ் இலக்கிய வரிசையில் தொல்காப்பியம், இறையனார் களவியல் உரை இரண்டும் இலக்கண நூல்கள். தொல்காப்பியம் எழுத்ததிகாரம், பொருளதிகாரம், சொல்லதிகாரம் என்னும் மூன்று அதிகாரங்களையும் 1595 நூற்பாக்களையும் இறையனார் களவியல் உரை 58 நூற்பாக்களையும் கொண்டன.
தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர், சேனாவரையர் (கி.பி. 13ஆம் நூற்றாண்டு), பேராசிரியர் (கி.பி.12ஆம் நூற்றாண்டு), நச்சினார்க்கினியர் (கி.பி. 14ஆம் நூற்றாண்டு), தெய்வச்சிலையார் (கி.பி.12ஆம் நூற்றாண்டு), கல்லாடனார் (கி.பி. 15ஆம் நூற்றாண்டு) ஆகிய அறுவர் உரை எழுதியுள்ளனர். இறையனார் அகப்பொருள் அல்லது களவியல் நூலுக்கு நக்கீரர் (கி.பி. 7ஆம் நூற்றாண்டு) உரை கண்டுள்ளார்.
இந்த உரையாசிரியர்களின் கருத்துக்களின் அடிப்படையில் தொல்காப்பியம், இறையனார் அகப்பொருள் உரை என்னும் இரண்டு இலக்கண நூல்களின் கலைச்சொற்களைத் தொகுத்துத் தருபவை இந்த மூன்று நூல்களும்.
பழந்தமிழகத்தின் உலகியல் வாழ்க்கை, சமூகச் செயல்பாடுகள், செய்யுள் வழக்கு, பொதுவான இலக்கண வழக்கு ஆகியவற்றைப் புரிந்துகொள்ள இன்று தமிழில் கிடைக்கும் ஆதாரங்கள் தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியமும் களவியல் என்கிற இறையனார் களவியல் உரையும்தான். இவை தவிர தமிழகத்தில் குகைகளிலும் பாறைகளிலும் கிடைத்த தமிழ் பிராமி அல்லது தமிழ்க் கல்வெட்டுகளும் அகழாய்வுப் பொருட்களும் உதவுகின்றன.
பழைய இலக்கண நூல்கள் இரண்டும் நூற்பா (சூத்திரம்) வடிவில் உள்ளன. இவற்றிற்குப் பழைய உரைகள் உள்ளன. இந்த இலக்கணங்களின் நூற்பாக்கள் புரிந்து கொள்ளச் சிரமமானவை. இவற்றின் மீமொழியும் கலைச்சொற்களும் முறையாகத் தமிழ் கற்றவர்களுக்கும் புரிந்துகொள்ளச் சிரமமாய் இருப்பன. இந்நூல்களைப் படிப்பதும் படிப்பிப்பதும் ஆய்வு செய்வதும் கடினமான காரியம். இதைக் களையும்பொருட்டுச் செவ்வியல் இலக்கணக் கலைச்சொற்களை அறிதல், அவற்றின் கருத்தியல் வளர்ச்சிப் படிநிலைகளை உரையாசிரியர்கள் வழி விரிவாக அறிதல் ஆகியனவற்றை அறிய விரும்பும் வாசகரின் நோக்கில் இக்கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளது.
மூன்று தொகுதிகளைக் கொண்ட இக்கலைச்சொற் களஞ்சியம் சிறிய கட்டுரைகள் பலவற்றின் தொகுப்பு என்று கூறலாம். எடுத்துக்காட்டாக, குற்றியலுகரம், எழுத்ததிகாரம் பற்றி 6 பக்கம், வினைத்தொகை, சொல்லதிகாரம் பற்றி 5 பக்கம், பொருளதிகாரம், தோழி பற்றி 38 பக்கம் உள்ளன. தொல்காப்பியக் களஞ்சியம் பற்றி வந்த முந்தைய நூற்களிலிருந்து வேறுபடும் இடமும் இதுதான்.
இக்கலைச் சொற்களஞ்சியத்தின் போக்கைப் பின்வருமாறு வகை செய்யலாம். தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் ஆகியவற்றின் செய்திகளைத் தனித்தனியாக விளக்குகிறது. களவியல் உரை பொருளதிகாரத்தில் விளக்கப்படுகிறது.
ஒவ்வொரு தொகுப்பின் கலைச்சொற்களும் அகரவரிசையில் உள்ளன. இந்தக் கலைச்சொற்கள் நூற்பா, அதிகாரம், இயல், அதன் கருத்தியல் வளர்ச்சிப் படிநிலை, உரையாசிரியர்களின் விளக்கம் என்னும் முறையில் அமைந்துள்ளது.
தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர், நச்சினார்க்கினியர், சேனாவரையர், பேராசிரியர், தெய்வச்சிலையார், கல்லாடனார் ஆகியோரின் உரைகளை இக்கலைக்களஞ்சியத்தில் எடுத்தாண்டிருக்கிறார். இறையனார் களவியல் உரைக்கு நக்கீரர் உரையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தொல்காப்பியத்தின் ஆசிரியர் பெயர் தெரியாத பழைய உரையையோ பிற உரைகளையோ இக்களஞ்சியத்தில் மேற்கோள் காட்டவில்லை. இந்த இறையனார் களவியல் உரையாசிரியரான நக்கீரர் கி.பி. 7ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவர். பிற உரையாசிரியர்களில் கல்லாடர் கி.பி.15ஆம் நூற்றாண்டினர். பிறர் கி.பி. 11, 12, 13ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள். இவர்களின் பழைமை கருதியும், ஆழ்ந்த புலமையைக் கருதியும் இவர்களை இக்களஞ்சியம் மேற்கோள் காட்டுகிறது.
இந்தக் களஞ்சியம் கலைச்சொற்களும் கருத்தியல் விளக்கம், நூற்பா, எழுத்துப் பெயர்ப்பு, மொழி பெயர்ப்பு, பொருள் உரை என்னும் உள்ளமைப்புடன் அமைந்துள்ளது. எழுத்ததிகாரத்தில் 359, சொல்லதி காரத்தில் 275, பொருளதிகாரத்தில் 672 எனவாக 1306 தலைச் சொற்கள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் அந்தந்தத் தொகுதியில் உள்ள தலைச் சொற்களில் பெயரடைவு பக்க எண்ணுடன் முன்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. கலைச்சொற்களைத் தேடுவதற்கு இது எளிதாக உள்ளது.
தொல்காப்பியம், களவியல் உரை இலக்கண நூற்களின் கலைச் சொற்கள் இக்களஞ்சியத்தில் அதிகம் பயன்பட்டிருந்தாலும் சில இடங்களில் உரையாசிரியர்கள் அறிமுகப்படுத்தும் கலைச்சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இச்சொற்கள் அளவில் குறைவு. தலைச் சொற்களுக்குரிய விளக்கம் ஏழு உரையாசிரியர்களின் உரைகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.
தொல்காப்பிய உரையாசிரியர்கள் அறுவரும் தொல்காப்பிய நூற்பாக்களின் எண்ணிக்கையைக் கூறுவதில் முரண்படுகின்றனர். இக்களஞ்சியம் இளம்பூரணரைப் பின்பற்றுகிறது. களவியல் உரையில் நூற்பா எண் மாறுவதில்லை. நக்கீரர் உரை அப்படியே பின்பற்றப்படுகிறது.
கலைச்சொற்களில் மேற்கோள் காட்டப்படும் தொல்காப்பிய நூற்பாலிற்குச் சொற்பெயர்ப்பு, மொழிபெயர்ப்பு உண்டு. பெரும்பாலும் வி. முருகன், பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி, குளோரியா சுந்தரமதி, இந்திரா மேனுவல், கமில்சுவலபில், இலக்குவனார், ஆல்பர்ட் ஆகியோரின் தொல்காப்பிய மொழிபெயர்ப்புகளே எடுத்தாளப்பட்டுள்ளன.
இக்கலைச் சொற்களஞ்சியம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வுத் திட்டத்தின் கீழ் (2009-2011) ஆய்வு செய்யப்பட்டது.
மின்னஞ்சல்: perumalfolk@yahoo.com