சு.ரா. கடிதங்கள்
ஓவியம்: றஷ்மி
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
18.7.88
அன்புள்ள சிவராமன்,
நேற்று ஒரு கடிதம் எழுதினேன். கிடைத்ததா?
இன்று காலைத் தபாலில் டில்லியிலிருந்து பதிவெண்* வந்து சேர்ந்தது.
அன்புடன்
சுரா
* காலச்சுவடின் பதிவெண்.
***
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
ஜனவரி 12. 1990.
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 5.1.90 கடிதம். இன்று இரவுதான் நீங்கள் சென்னைக்குப் போகிறீர்கள். நீங்கள் சென்னைக்குப் போவதற்கு முன் சில விவரங்கள் தெரிவித்து நான் உங்களுக்கு எழுதியிருக்க வேண்டும். அதற்குச் சந்தர்ப்பம் இல்லாமல் போய்விட்டது.
நீங்கள் எப்போது இங்கு வர முடியுமோ அப்போது வாருங்கள். அதிகம் தள்ளிப் போடாமல். 26ஆம் தேதி நீங்கள் வருவதும் வசதிதான்.
ஏமாற்றங்கள், பிரச்சினைகள், கஷ்டங்கள், நஷ்டங்கள் இவற்றின் தொடர்ச்சியால் மனச்சோர்வு அடைந்திருக்கிறேன். இவற்றில் ஒரு சிலவற்றையேனும் நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். நாம் சந்தித்துப் பேசிக்கொள்வதன் மூலம் எனக்கு நம்பிக்கையும் சிறிது தெளிவும் ஏற்படலாம்.
திரு. செல்வராஜ் அவர்கள் எழுதியிருந்ததுபோல் பிரதிகள் எல்லாம் அனுப்பியாயிற்று.
திருமதி பவானியிடமும் குழந்தைகளிடமும் என் அன்பைத் தெரிவியுங்கள்.
அன்புடன்,
சுரா.
பி.கு: தங்கள் 10.1.90 கடிதம் இப்போது கிடைக்கப்பெற்றேன்
***
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
பிப்ரவரி 25 1990.
அன்புள்ள சிவராமன்,
மதுரை வந்தும் உங்களைச் சந்திக்க முடியவில்லை. உடனடியாக ஊருக்கு வரும்படி அவசரம் இருந்தது. வீமனின் நண்பரை நாகராஜன் * வீட்டில் சந்திக்கும்போது 2.3.90இல் கூட்டம் வைத்துக்கொள்ளலாம் என்ற செய்தியை உங்களுக்குச் சொல்லி அனுப்பினேன். ஊர் திரும்பியதும் அது சாத்தியமில்லை என்று ஆகிவிட்டது. இப்போது 9.3.90 என்று தீர்மானித்திருக்கிறேன். பின்னர் உறுதிப்படுத்தி எழுதுவேன். முன்கூட்டி எதைத் தீர்மானித்தாலும் அது தட்டிப் போகும்படி ஏதாவது ஒரு பிரச்சினை உருவாகிவிடுகிறது. நண்பர்களை அசௌகரியப்படுத்துகிறேனோ என்று தோன்றுகிறது.
வீட்டில் திருமதி சிவராமனிடமும் குழந்தைகளிடமும் எங்கள் அன்பைத் தெரிவிக்க வேண்டும்.
அன்புடன்,
சுரா
* சு.ரா.வின் தம்பி.
***
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
மார்ச் 21 1990.
அன்புள்ள சிவராமன்,
நேற்று ராமகிருஷ்ணனுக்குச் சிறுகதைத் தொகுப்பைப்* பற்றிய முழு விவரமும் தெரிவித்துக் கடிதம் எழுதினேன்.
சீனிவாசன்**, கதைத் தொகுப்புக்குப் பின்னுரை எழுதப் போவதில்லை என்றும் அதற்கான தகுதி தனக்கு இல்லையென உணருவதாகவும் சொன்னான். நான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. தரமான கட்டுரை ஒன்றை நிச்சயமாக அவனால் எழுத முடியும். தொகுப்பு மொட்டையாக வெளிவருவதில் எனக்கு விருப்பமில்லை. நீங்கள் சீனிவாசனுக்கு எழுதுவது நல்லது.
திருமதி சிவராமனுக்கும் குழந்தைகளுக்கும் எங்கள் அன்பு.
வீமனை நெய்தல் கூட்டத்தில் கலந்துகொள்ளக் கேட்டுக்கொண்டு இன்று/நாளை கிருஷ்ணன் அவருக்கு எழுதுவார். ஒப்புக்கொள்ளச் சொல்லுங்கள். ஜூலை மாதம்தான். அப்போது நீங்களும் வரலாம்.
அன்புடன்,
சுரா
* சுந்தர ராமசாமி சிறுகதைகள் (1990க்கு முன்பு எழுதிய கதைகளின் மொத்தத் தொகுப்பு); க்ரியா வெளியீடு
** தி.அ. ஸ்ரீநிவாசன்.
***
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
டிசம்பர் 10 1990.
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 8.11.90 கடிதம். உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் இருக்கிறது. உணவு கால்பங்குதான். அன்றாடம் இரண்டு மணிநேரம் நடக்க வேண்டும். அது என்னால் முடிவதில்லை. ஒரு மணிநேரம் வரையிலும் நடக்கிறேன்; மருந்துகளும் சாப்பிட்டுவருகிறேன்.
அடுத்த வாரத்திலிருந்து அன்றாடம் ஒரு மணிநேரம் கடைக்குப் போய்ப் பார்க்கலாம் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார். இந்த மாதம் கடைசி வாரத்தில் திருவனந்தபுரம் போய் கொலஸ்ட்ரால் பார்க்க வேண்டும். ஒரு மாதத்திற்கு ஒரு முறை பார்க்க வேண்டும்.
நான் வராததை உங்களுக்குத் தெரிவித்துத் தந்தி கொடுத்திருக்க வேண்டும். தைலா புறப்படும் நேரம். அவளுடன் போவதாக இருந்தேன். என் பயணம் தடைபடவே ஏக களேபரம் ஆகிவிட்டது. உங்களுடன் வீமனும் காத்திருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
பாக்கியம் பிள்ளைக்கு ரூபாய் 2500 தந்திருக்கிறேன். வேலை நடந்துகொண்டிருக்கிறது. 350 பக்கங்கள் அச்சேறியிருக்கின்றன. கதைகள் முக்கால் பங்கிற்கும் குறைவாகத்தான் அச்சேறியிருக்கின்றன. புத்தகத்தை ஒரு வாரத்திற்குள் முடிந்துக் கொடுக்கும் பேச்சுக்கே இடம் இல்லை.
இப்போது காகிதம் இல்லை. காகிதம் ஒரு வாரத்திற்கு வரும் என்ற நிலையிலேயே ராமகிருஷ்ணனுக்கு எழுதினேன். அவரிடமிருந்து விவரம் கிடைக்கவில்லை.
முடிந்தால் டிசம்பர் 29/30 தேதிகளில் நாம் சந்தித்துக்கொள்ளலாம். சனியும் ஞாயிறும் பார்ப்போம். என் உடல்நிலை சற்றுத் தேறிவிட்டால் நான் அங்கு வர முடியும். ரயிலில் வரலாம்.
அன்புடன்
சுரா
***
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
ஜனவரி 23 1991.
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 22.1.91 கடிதம்.
அங்கு நீங்களும் பவானியும் குழந்தைகளும் சுகம் என்று நம்புகிறேன்.
இங்கு நாங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறோம். என் உடல்நிலையில் மிகுந்த முன்னேற்றம் கண்டிருக்கிறது. டிசம்பர் இறுதியில் மேற்கொண்ட சோதனைகளின் விளைவுகளில் டாக்டர் திருப்தி தெரிவித்தார். மருந்தும் குறைக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி இறுதியில் மீண்டும் சோதனை செய்ய வேண்டும்.
அச்சகத்தில் வேலை சரியாக நடந்துகொண்டிருக்கிறது. இப்போது சுமார் 600 பக்கங்கள் முடிந்திருக்கின்றன. சுமார் 625 பக்கங்களில் புத்தகம் முடிந்துவிடும். படிவங்களை பண்டில் போடும் வேலை நடந்துகொண்டிருக்கிறது. இந்த மாத இறுதியில் சென்னைக்கு அனுப்பிவைத்துவிடலாம். தொடர்ந்து காகிதம் வாங்கிக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். காகிதத்துக்குரிய பணத்தை ராமகிருஷ்ணன் அனுப்பிக்கொண்டிருக்கிறார். எல்லாமே நல்லபடியாக நடந்துகொண்டிருக்கிறது. பிழைகள் மட்டும் சற்று அதிகமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. என் சூழ்நிலை காரணமாக நான் எம்.எஸ்*.ஸுக்குச் சிறிதும் உதவ முடியவில்லை. இதனால் இந்தக் குறைக்கு நானும் பொறுப்பு என்றே நினைக்கிறேன்.
காலச்சுவடுக்கு மாட்டர் கிடைப்பதில் இருந்த மந்தம் குறைந்திருக்கிறது. சில நல்ல விஷயங்கள் கிடைத்திருக்கின்றன. மேலும் சில கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. நீங்களும் வீமனும் இணைந்து ஒரு தரமான மாட்டர் தயார் செய்துதர வேண்டும். எது பொருத்தமாக இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
பிச்சமூர்த்தி பற்றி இலக்கியச் சிந்தனைக்கு ஒரு நீண்ட கட்டுரை எழுதுவதற்கான தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறேன். பிப்ரவரி மாதம் இறுதிக்குள் இந்தக் கட்டுரையைக் கொடுத்தாக வேண்டும். முழுத்தாளில் நூறு பக்கம் தட்டச்சில் இருக்க வேண்டும். என்பது என் உத்தேசம். மார்ச் மாதம் காலச்சுவடுக்கான மாட்டர்களை உறுதிசெய்து ஏப்ரலில் மலரை அச்சேற்ற வேண்டும். அதோடு பட்டுக்கொண்டிருக்கும் வேலைகள் எல்லாம் ஒரு வழியாகத் தீர்ந்துவிடும்.
மே மாதத்திலிருந்து என் நாவலை எழுத வேண்டும் என்று இருக்கிறேன். 91 இறுதிக்குள் அந்த நாவலின் முதல் பிரதியைத் தயாரித்து முடிக்க வேண்டும். 92இல் தாஸ்தயேவ்ஸ்கியைப் பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும். தாஸ்தயேவ்ஸ்கியைப் பற்றி ‘கல்குதிரை’க்காக ஒரு கட்டுரை எழுதியபோது இந்தப் பழைய ஆசை வலுப்பட்டது. 93இலிருந்து அதிகமும் கவிதை மட்டும் எழுத வேண்டும் என்று இருக்கிறேன். படிக்க வேண்டும் என்ற ஆசைதான் அரித்துப் பிடுங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் செய்து முடிக்க வேண்டிய வேறு வேலைகளின் கனம் சுதந்திரமாகப் படிக்கவிடுவதாக இல்லை. இந்த இக்கட்டு இரண்டொரு மாதங்களில் தீர்ந்துவிடும் என்று நினைக்கிறேன்.
அன்புடன்
சுரா
* எம். சிவசுப்பிரமணியன், சு.ரா. வின் நீண்டகால நண்பர்; பிரதி மேம்படுத்துநர்.
***
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
ஏப்ரல் 2 1991.
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 14.3.91 கடிதம்.
நான், கமலா, தங்கு* மூன்று பேரும் 4ஆம் தேதி பெங்களூர் போகிறோம். அங்கிருந்து 8ஆம் தேதி சென்னை போகிறோம்.
அப்பல்லோவைச் சேர்ந்த மாத்யு சாமுவேல் களரிக்கல் என்ற டாக்டர் அவரை ஏப்ரல் பத்தாம் தேதி சந்திக்கச் சொல்லியிருக்கிறார். அவர் மேற்கொள்ளும் சோதனைக்குப் பின் நிலைமை மேலும் தெளிவுபெறும். அப்பல்லோவில் எனக்கு ஆஞ்சியோகிராஃபி நடைபெறலாம்.
இப்போது நன்றாகவே இருக்கிறேன். அன்றாட காரியங்களைக் கவனிப்பதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை. ஆறு மணிக்குக் கடைக்குப் போய்விட்டு ஒன்பது மணிக்குத் திரும்புகிறேன்.
சென்னை போவதற்கு முன் மதுரை வந்து டாக்டர் ராஜாமணி அவர்களைச் சந்தித்து என் நோய் பற்றி விவாதிக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆவல் கொண்டிருந்தேன். ஆனால் அது சாத்தியமில்லாமல் போயிற்று.
சென்னை போய்விட்டு வந்து உங்களுக்கு எழுதுகிறேன்.
எளிய பயணங்களுக்கேனும் தடையில்லை என்று டாக்டர் சொல்லிவிட்டால் நான் மதுரை வரலாம்.
திருமதி பவானிக்கும் குழந்தைகளுக்கும் எங்கள் அன்பு.
அன்புடன்,
சுரா.
* சுராவின் கடைசிக் குழந்தை.
***
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
ஏப்ரல் 29 1991.
அன்புள்ள சிவராமன்,
சென்ற வெள்ளிக்கிழமை நானும் கமலாவும் சென்னையிலிருந்து இங்கு வந்தோம். மூன்று வாரங்கள் வெளியூரில் இருக்கும்படி ஆகிவிட்டது.
அப்பல்லோவில் எனக்கு ஆஞ்சியோகிராஃபி நடந்தது. எவ்விதப் பிரச்சினையும் இல்லை. அப்பல்லோவில் கிடைத்த முடிவுகளோடு திருவனந்தபுரம் டாக்டரை இந்த வாரம் போய்ப் பார்ப்பதாக இருக்கிறேன்.
என் மருத்துவக் குறிப்புகளை மதுரை டாக்டர் ராஜாமணியிடம் காட்டிப் பொதுவாக யோசனைகளைப் பெற வேண்டும் என்று ஆசை உண்டு. நான் அங்கு வர நேரும்போது அவற்றைக் கொண்டுவருகிறேன்.
தங்குவை யு.எஸ்.ஏ. அனுப்பி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து தைலா எழுதிக் கொண்டேயிருக்கிறாள். சென்ற வருடம் முயன்றபோது விசா கிடைக்கவில்லை. இப்போது நாங்கள் சென்னையிலிருந்தபோது முயன்றோம். விசா கிடைத்தது. குருட்டு அதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். தங்கு 18.5.91 அன்று நியூயார்க் போகிறாள். நாங்கள் மூவரும் – நான், கமலா, தங்கு – 14ஆம் தேதி சென்னை போகிறோம்.
மே இரண்டாவது வாரத்திற்கு மேல் நீங்கள் சென்னையில் இருக்க வாய்ப்பு உண்டா?
திருமதி சிவராமனுக்கும் குழந்தைகளுக்கும் எங்கள் அன்பு.
அன்புடன்
சுரா
***
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
ஜூன் 19 1991.
அன்புள்ள சிவராமன்,
நீங்களும் பவானியும் குழந்தைகளும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
என் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம். தங்குவிடமிருந்து கடிதங்கள் வந்தன. போனிலும் பேசினாள். படிப்பை அமெரிக்காவில் தொடர அவளுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று தோன்றுகிறது.
காலச்சுவடு மலர் அச்சாகிக்கொண்டிருக்கிறது. சிவகாசியிலிருந்து முதல் நாற்பது பக்கங்கள் பார்வைக்கு வந்தன. அச்சின் வடிவம் மிக நேர்த்தியாக இருக்கிறது.
‘ந. பிச்சமூர்த்தியின் கலை-மரபும் மனித நேயமும்’ நூலுக்குக் காலச்சுவடு மலரில் சேர்க்க உங்கள் மதிப்புரை தேவை. அச்சில் சுமார் இரண்டு பக்கங்கள் வரலாம். இரண்டு வாரங்களுக்குள் நீங்கள் மதிப்புரையை அனுப்பிவைத்து உதவ வேண்டும். சிரமம் பாராமல் எழுதுங்கள். மதிப்புரையே போதும் என்று எண்ணாமல் வேறு படைப்பு ஒன்றையும் உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
காலச்சுவடின் கடைசி இதழ் என்பதாலும், மலர் என்பதாலும் உங்களுடைய எழுத்தும் வீமனுடைய எழுத்தும் அவசியம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதுபற்றி மதுரையில் வீமனைச் சந்தித்தபோதும் சொல்லியிருந்தேன்.
உங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை (கறுப்பு-வெள்ளை) ஒரு வார காலத்திற்குள் அனுப்பிவைத்து உதவுங்கள்.
அன்புடன்
சுரா
***
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
ஜூன் 27 1991.
அன்புள்ள சிவராமன்,
உங்கள் கடிதம். உங்கள் சிரமங்களைப் புரிந்துகொண்டேன். வீமனிடம் சொல்லவும். ஆஃப்செட்டில் அச்சாவதால்தான் புகைப்படங்களையும், வரைபடங்களையும் சேர்த்துக்கொண்டிருக்கிறேன். தரமாக அமையும் என்ற எண்ணம் இருக்கிறது.
தங்குவைத் தன்னுடன் வைத்துக்கொள்ளத் தைலா விரும்புகிறாள். எங்களுக்கும் தனிமைதான். மிகக் கஷ்டமாக இருக்கிறது. குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் எதிர்காலம் உருவாகட்டும் என்று நினைக்கிறோம்.
எப்போது அகராதி* அச்சேற்றம் முடியும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
சிங்கப்பூரிலிருந்து எனக்கும் இன்னும் தகவல் வரவில்லை. அதற்கு முன் அவசியம் சந்திக்கலாம்.
திருமதி பவானிக்கும் குழந்தைகளுக்கும் எங்கள் அன்பு.
அன்புடன்
சுரா
* க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி
***
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
ஜூலை 3 1991.
அன்புள்ள சிவராமன்,
என் முன் கடிதம் கிடைத்திருக்கும். காலச்சுவடு வேலை மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. கல்குதிரை தாஸ்தயேவ்ஸ்கி இதழில் முதல் விளம்பரமும் வெளியாகியிருக்கிறது.
நேற்று பாரதி அச்சகம் திரு. பாக்கியம் பிள்ளை போனில் பேசினார். உங்கள் பொறுப்பில் ‘க்ரியா’ புத்தகங்களை அச்சேற்ற விரும்புகிறார். மேற்கொண்டு இதுபற்றி நேரில் நாம் பேசிக்கொள்ளலாம்.
இந்த மாதம் 9ஆம் தேதி நானும் கண்ணனும் சென்னை போகிறோம். கடை விஷயமாக. 12ஆம் தேதி நான் மட்டும் சென்னையிலிருந்து பெங்களூர் போகிறேன். ஊர் திரும்பியதும் உங்களுக்கு எழுதுகிறேன். அப்போது நீங்கள் வரலாம்.
என் உடல்நிலை நன்றாக இருக்கிறது.
அன்புடன்
சுரா
***
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
ஆகஸ்ட் 16 1991.
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 13.8.91 கடிதம். காலச்சுவடுக்குக் கட்டுரை எழுதுவதை விட்டுவிடுங்கள். அதிக சிரமம் வேண்டாம்.
காலச்சுவடு மிகச் சிறந்த முறையில் வெளியாகும் என்று நினைக்கிறேன். சுமார் 300 பக்கங்கள். நல்ல காகிதம், நல்ல அச்சு, நல்ல மேலட்டை. மூவாயிரம் பிரதிகள். சிவகாசியில் ஆஃப்செட் அச்சேற்றம். செல்வராஜ் சாரைச் சந்தித்துச் சில விளம்பரங்கள் பெற முயல வேண்டும். அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று எழுதுங்கள். நான் நேரில் வர வேண்டும் என்றாலும் வருகிறேன்.
இந்த மாதம் இறுதிக்குள் காலச்சுவடு வேலை முக்கால் பங்கு முடிந்துவிடும். நான் செப்டம்பர் முதல் தேதி சிங்கப்பூர் போய்விட்டுப் பத்தாம் தேதி வருகிறேன். ஒரு எழுத்தாளர் மாநாடு. இதனால் வேலை சிறிது பிந்தி செப்டம்பர் இறுதிக்குள் மலர் வெளிவரும் என்று நினைக்கிறேன்.
இந்த முறை கடையில் மலிவு விற்பனை மிக நன்றாக நடந்துகொண்டிருக்கிறது. திட்டமும் செயல்பாடும் அதிகமும் கண்ணனுடையதுதான். நான் ஏதோ உதவி செய்துகொண்டிருக்கிறேன். தங்குவை யு.எஸ்.ஏ.க்கு அனுப்பிவைத்ததிலும் என் மருத்துவச் செலவினாலும் மிகுந்த பணமுடை ஏற்பட்டிருந்தது. இப்போது நிலைமை மிகவும் லகுவாகிவிட்டது.
தங்குவிடமிருந்து கடிதங்கள் வருகின்றன. அவள் அங்கு நன்றாகப் படித்துக்கொண்டு இருக்கிறாள்.
நாம் எப்போது நேரில் சந்திக்கலாம்? உங்களையும் வீமனையும் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.
அன்புடன்
சுரா
***
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
ஆகஸ்ட் 24 1991.
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 23.8.91 கடிதம். சுபமங்களாவில் தொடர்ந்து எழுதும்படி திரு. கோமல் வற்புறுத்திக் கூறியிருக்கிறார். பார்ப்போம்.
வரும் சுபமங்களாவில் என் ‘யந்திரத் துடைப்பான்’ என்ற ஓரங்க நாடகம் வெளியாகிறது. ஆகஸ்ட் இதழையும் படித்துப் பாருங்கள். தொ.மு.சி.யின் பேட்டி முதலியன.
செப்டம்பர்1ஆம் தேதி சென்னையிலிருந்து சிங்கப்பூர் போகிறேன். சிங்கப்பூர் அரசு நடத்தும் ‘எழுத்தாளர் வார’த்தில் கலந்துகொள்ள. 10ஆம் தேதி திரும்புகிறேன். இம்மாதம் 28ஆம் தேதி சென்னை போகிறேன் (திருவனந்தபுரம் வழியாக). விசா, டிக்கெட் ஆகியவற்றைக் கவனிக்க.
நான் ஊர் திரும்புவதற்கு முன்னரே விளம்பரக் கட்டணம் உங்களுக்குக் கிடைக்க ஒழுங்கு செய்துவிட்டுப் போகிறேன்.
செப்டம்பர் இரண்டாவது வாரம் நாம் சந்தித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். ஊர் திரும்பியதும் உங்களுக்கு எழுதுகிறேன்.
நாகர்கோவிலில் புத்தக அச்சேற்றம் பற்றி ராமகிருஷ்ணனிடமிருந்து தகவல் ஒன்றும் இல்லை. நேரில் சந்திக்கும்போது விசாரிக்க வேண்டும்.
நேற்று முன்தினம் திருவனந்தபுரம் டாக்டரிடம் வழக்கமான பரிசோதனையை முடித்துக்கொண்டு வந்தேன். சிங்கப்பூர் பயணம் மேற்கொள்ளலாம் என்று சொன்னார். என் ஆரோக்கியம் நன்றாக இருப்பதை நானே உணர்கிறேன்.
வீட்டில் திருமதி பவானியும் குழந்தைகளும் சுகம் என்று நம்புகிறேன்.
நண்பர் வீமனுக்கு என் வாழ்த்துக்கள்.
அன்புடன்
சுரா
***
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
16 செப்டம்பர் 1991.
அன்புள்ள சிவராமன்,
உங்கள் 10.9.91 கடிதம் இன்றுதான் கிடைத்தது. படிவத்தில் கையெழுத்திட்டுச் சென்னைக்கு இப்போது அனுப்புகிறேன்.
சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் ஊர் வந்து சேர்ந்தேன். பயணம் நன்றாக அமைந்தது. உடல்நிலையில் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படவில்லை.
நான் இங்கு இல்லாத நிலையில் விளம்பரக் கட்டண விகிதத்தைத் தயாரித்து அனுப்ப இயலவில்லை. உடனடியாக அந்த வேலையைக் கவனிக்கப்போகிறேன்.
கர்நாடக அரசாங்கம் நடத்தும் கலை விழா ஒன்றுக்கு அழைப்பு வந்திருக்கிறது. ஆனால் நான் போவது நிச்சயமில்லை. எனது பயணங்களால் காலச்சுவடு வேலை தடைபடுகிறது. மலர் வேலையை முடித்துவிட்டு நான் அக்டோபர் கடைசி வாரம் யு.எஸ்.ஏ. போக வேண்டும். நாட்கள் மிகவும் நெருங்கிவிட்டன.
நாம் எப்போது நேரில் சந்தித்துக்கொள்ளலாம்?
அன்புடன்
சுரா
***
சுந்தர ராமசாமி
நாகர்கோவில்
24.4.92
அன்புள்ள சிவராமன்,
நடுவில் ஒருநாள் நீங்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகக் கமலா சொன்னாள்.
க்ரியா கூட்டத்தில் கலந்துகொள்ள 8ஆம் தேதி காலையில் நான் நெல்லை எக்ஸ்பிரஸில் எக்மோர் போய்ச் சேருகிறேன். நீங்களும் வருவீர்கள் என்று ராமகிருஷ்ணன் சொன்னார்.
என் புத்தகங்களின் வெளியீடுகள்/என் படைப்புக்களின் மொழிபெயர்ப்புகள் என் புத்தகங்கள் நூல் நிலையங்களில் இடம் பெற வேண்டியதின் அவசியம்/எனக்குக் கிடைக்க வேண்டிய ராயல்டி தொகை இந்த விஷயங்களைச் சார்ந்து இன்று/நாளை ராமகிருஷ்ணனுக்கு விரிவாக ஒரு கடிதம் எழுத இருக்கிறேன். 8ஆம் தேதி அவருடன் நேரில் நான் கலந்து பேசுவதற்கு அனுசரணையாக இருக்கும் பொருட்டு. இந்தக் கடிதத்தை நீங்கள் பார்த்து உங்கள்ஆலோசனைகளையும் ராமகிருஷ்ணனிடம் தெரிவிக்க வேண்டும்.
கோவையில் காலச்சுவடு மலர் பற்றிய விமர்சனக் கூட்டம் ஒன்றை நடத்த ஞானி முயன்று கொண்டிருக்கிறார். கூட்டம் மே 10 ஞாயிறு நடைபெற்றால் சென்னையிலிருந்து நான் கோவை போகக்கூடும்.
நேற்று எஸ்.டி. லஷ்மணனைப் பார்த்தேன். மே 15,16,17 தேதிகளில் மதுரையில் நாடகவிழா நடைபெற இருக்கிறது. இந்த நாட்களில் காலச்சுவடு மலரைச் சலுகை விலையில் விற்க நாம் ஒருவரை ஏற்பாடு செய்ய வேண்டும். விஷயத்தை சுரேஷுக்கும் முன்னர் எழுதியிக்கிறேன். செல்வராஜின் உதவி பெற்றுக்கொள்ளக்கூடியது. உங்களால் முடியாத நிலையிலும் அவரால் சுலபமாக ஒழுங்கு செய்ய முடியும். நான் தனியாக அவருக்கு எழுத அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். புத்தகங்களை இங்கிருந்து முன்கூட்டி அனுப்பிவைக்க வேண்டும். அதனால் விரைவில் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.
க்ரியாவிலிருந்து வந்த தாள்களில் கையெழுத்திட்டு நேற்று கூரியர் மூலம் திருமதி பவானி சிவராமனுக்கு அவற்றை அனுப்பிவைத்திருக்கிறேன். பெற்றுக்கொண்ட விவரத்திற்கு எழுதுங்கள்.
உங்கள் பதில்.
அன்புடன்
சுரா
***