‘மனுசங்கடா’
இந்திய அரசபீடத்தின் ஆதரவுடன் ‘தீண்டாமை’ இப்போதும் உயிருடன் இருக்கிறது என்பதற்கான சாட்சிதான் ‘மனுசங்கடா’ என்ற தமிழ்த் திரைப்படம்.
இத்துடன் ‘மனுசங்கடா’ சமநீதிக்கும் மனித உரிமைகளுக்குமான தலித்துகள் போராட்டத்தின் நேர்க் காட்சியும் கூட.
அகால மரணமடைந்த தந்தைக்கு நியாயமும் உரிமையுமான ஈமச் சடங்கு நடத்த தலித் இளைஞனொருவன் நடத்தும் போராட்டமும் அதைத் தொடர்ந்து எழும் கொந்தளிப்புமே திரைப்படம். இதில் இடம்பெற்றிருப்பது, உண்மைச் சம்பவம். சம்பவம் நடந்த கிராமத்தின் பெயரும் மனிதர்கள் பெயரும் படத்தில் மாற்றிச் சித்திரிக்கப்பட்டுள்ளன. ஆதிக்க சாதியினர் யார் என்பது வெளிப்படுத்தப்படுவதில்லை. ஆனால் சாதிவெறி தாண்டவமாடும் தமிழகத்தின் கிராமமொன்றில் நடந்த இந்த நிகழ்ச்சியை அறிந்தவர்களுக்குப் படத்தைப் பார்க்கும்போதே உண்மையான சித்திரம் மனத்தில் துலங்குகிறது. இந்தியாவின் சமகாலத்தில் திரைப்படங்களுக்கு நேரும் தடைகளும் எதிர்ப்புகளும் தங்களது படத்துக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுணர்வில் படத்தை இவ்வாறு எடுக்க அதன் பின்னணியில் இருந்தவர்கள் தீர்மானித்திருக்கலாம்.
சென்னையில் ஒரு ஸ்டீல் கம்பெனியில் தொழிலாளி
யாகப் பணிபுரியும் கோலப்பன், தந்தையின் மரணச் செய்தி அறிந்து ஊருக்கு வருகிறான். சிதம்பரத்தை அடுத்த அம்மியப்பன் என்ற கிராமத்தில் இரண்டு மயானங்கள் இருக்கின்றன. ஒன்று ஆதிக்க சாதியினருக்கும் மற்றது தாழ்த்தப்பட்டவர்களுக்கும். தலித்துகளான இவர்களுக்குப் பிணத்தை எடுத்துச் செல்ல தனிப் பாதை இருக்கிறது. இந்த வழி முள்ளும் புதர்களும் அடர்ந்துகிடப்பதால் இதில் செல்வது சிரமம். அதற்குப் பதிலாக இங்கிருக்கும் பொதுவழியில் பிணத்தை எடுத்துச்செல்ல கோலப்பனும் குடும்பத்தினரும் முடிவு செய்கிறார்கள். ஆதிக்க சாதியினர் அனுமதி மறுக்கின்றனர். தலித் பிணத்தைப் பொதுவழியில் எடுத்துச்செல்ல மேல் வருணத்தவர்கள் அனுமதி மறுப்பதன் காரணம், தலைமுறைகளாக இங்கே நிலவும் தீண்டாமையே. அது மட்டுமல்ல அவர்களுடைய கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுக்கக் கூடாது, ஆலயங்களில் சடங்குகளும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தவும் கூடாது.
இந்த அநீதியையும் சமூக ஏற்றத்தாழ்வையும் கேள்விக்குட்படுத்திக் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். காவல்துறையினரும் அதிகாரிகளும் நடைமுறை வழக்கத்தைக் கடைப்பிடிக்குமாறு கோலப்பனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் வற்புறுத்துகிறார்கள். ஆனால் கோலப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூலம் பொதுவழியில் பிணத்தை எடுத்துச்செல்ல அனுமதிக்கும் ஆணையைப் பெறுகிறான். இறுதிச் சடங்கு அமைதியாக நடப்பதற்குரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் ஆணையில் குறிப்பிட்டுச் சொல்கிறது. ஆனால் ரத்த ஆறு ஓடுவதை அனுமதிக்க முடியாது என்று காவல்துறையும் ஆர் டி ஓவும் கூறி மூன்று நாட்களாக மொபைல் மார்ச்சுவரியில் வைக்கப்பட்டிருக்கும் பிணத்தை எடுத்துச் செல்ல முற்படுகிறார்கள். இதைத் தொடர்ந்து நிகழும் நாடகீயமான சம்பவங்களினூடே சினிமா முன் நகர்கிறது.
இன்னொரு தீவிரமான பிரச்சனையையும் சினிமா எடுத்துக் காட்டுகிறது. ஒரு ஜனநாயக நாட்டில் உயர் வருணத்தவருக்கும் தாழ்ந்த வருணத்தவருக்கும் எதற்காகத் தனித்தனி மயானங்கள்? பொதுச் சுடுகாட்டில் எல்லாருக்கும் சடங்கு நடத்தலாமே? அங்கே தலித்துகளுக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? இவற்றுக்கு எதிராகவும் போராட வேண்டிய தேவை இருக்கிறது என்பதை சினிமாவில் கோலப்பனே முன்வைக்கிறான். இந்த விஷயங்களை நீதிமன்றத்தில் எடுத்துச்சொல்ல முடியாமற் போனது பற்றிய வேதனையை, நீதிமன்ற ஆணை பெற்று ஊருக்குத் திரும்பும் பயணத்தில், ஒதுக்கப்பட்டவர்களோடு இணைந்து செயல்படும் அண்ணனிடம் கோலப்பன் பகிர்ந்துகொள்கிறான். இதை இன்னொரு போராட்டத்தின் வெடிமருந்தாகப் பார்க்கலாம்.
தலித்துகளுக்கு எதிரான நீதிமறுப்பின் குறுக்குவெட்டுத் தோற்றம் இந்தத் திரைப்படம் அநீதிக்குப் பணிய மறுக்கிற, சாதிய அதிகாரத்துக்கு எதிரான தலித்துகளின் கலகம், போராட்டம் ஆகியவற்றின் பிரதிபிம்பமாகவும் ஆகிறது.
எதார்த்தமான சித்திரிப்பு. ஆனால் ஓர் ஆவணப் படம் என்ற நிலையிலிருந்து கற்பனை நிரம்பிய கதைப்படத்தின் நிலைக்குப் பார்வையாளனை உலுக்கிக் கொண்டு செல்லும் இரண்டு நினைவுக் காட்சிகள் இயக்குநரின் பிரக்ஞைபூர்வமான குறுக்கீடு என்று தோன்றுகிறது.
அம்ஷன்குமார், ‘மனுசங்கடா’ படத்தைத் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். இவருடைய முதல் கதைப் படமான ‘ஒருத்தி’யும் ‘யாழ்ப்பாணம் தெட்சிணாமூர்த்தி’ என்ற ஆவணப்படமும் தேசிய, சர்வதேசிய விருதுகளைப் பெற்றுள்ளன. சுரண்டலுக்கு எதிராகப் போராடும் தலித் பெண்ணின் துயரங்கள்தாம் ‘ஒருத்தி’.
உயர்நீதிமன்றக் காட்சிகளைத் தவிர்த்துப் பிற காட்சிகள் எல்லாவற்றிலும் கையில் கேமராவைச் சுமந்திருக்கும் நிலையிலான ஜெர்க்கிங் சித்திரிப்பும் பின்னணியில் குழப்பமான ஒலிகளும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. “அவர்களுடைய எல்லா அசைவுகளையும் நான் காமிரா மூலம் காட்ட விரும்பினேன். இதுபோன்ற சித்திரிப்பின் பின்னணியில் இருப்பது கதாப் பாத்திரங்களின் நிச்சயமற்ற நிலையே. சற்று நிச்சயிக்கப்பட்ட பின்புலம் என்று தெரிவது நீதிமன்றக் காட்சியில்
தான். அங்கே மட்டுமே முக்காலியில் காமிராவை வைத்துப் படம் பிடிக்கப்பட்டது,’’ என்று காரணத்தைச் சொல்கிறார் அம்ஷன்குமார். ஆவணப்பட எதார்த்தமே படத்தில் பின்பற்றப்பட்டுள்ளது. “தமிழ்த் திரைப்படங்களில் கீழானவர்கள் என்ற உயர் வருணக் கண்ணோட்டத்தில்தான் தலித்துகள் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனாலேயே தலித்துகளின் கண்ணோட்டத்திலான சித்திரிப்பாகவே மனுசங்கடா படத்தின் உருவாக்கம் அமைந்திருக்கிறது” என்கிறார் அம்ஷன் குமார்.
இந்தப் படத்தின் முடிவில் தோல்வியுறும் தலித்து களின் இறுதி, சினிமாவை எதிர்நிலைக்குத் தள்ளு வதில்லையா என்ற யோசிக்க நேரும். ஆனால் அம்ஷன் குமார் அப்படிச் சிந்திப்பதில்லை. “உண்மையில் மைய நீரோட்டப் படங்களில் வருவதுபோல அவர்கள் வெற்றி பெறுவதில்லை. போராட்டம் கடினமானது; தொடர்ச்சி யானது. இந்தக் களத்தில் தோல்வி. ஆனால் இந்தப் போர் வெற்றியடையும் என்று நம்பலாம்” என்கிறார்.
வலுவானதும் சமகாலப் பொருத்தப்பாடு கொண்டதுமான சாதியத்தை மையப்பொருளாகக் கையாளும் படம் கோவாவில் அண்மையில் நடந்த உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தமிழிலிருந்து இந்தியன் பனோரமாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே படமும் இதுவே. நிறைந்த அரங்காக இருந்தபோதும் கட்டுரையாளரைத் தவிர மலையாளிகள் எவரும் இந்தப் படத்தைப் பார்க்கவில்லை. அதுமட்டுமல்ல, நமது ஊடகங்களிலும் இதைப்பற்றி எந்தச் செய்தியும் இல்லை. காரணம் வேறு ஒன்றுமில்லை. ‘சாதிப் பிரிவினை கேரளத்தில் பிரச்சனை அல்லவே’ என்ற மூடநம்பிக்கைதான். இந்த மனப்பான்மைமீது விழுந்த பேரிடிகள்தாமே கலைஞனான அசாந்தனின் இறுதிச் சடங்கும் வடயம்பாடியில் எழுந்த சாதிச் சுவரும்.
‘மனுசங்கடா’ திரைப்படம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவுக்கு அனுப்பப்பட்டது; ஆனால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது எவருடைய கவனத்திலும் பதியாத சீரிய பிரச்சனை. காரணம் என்னவென்று தெரியவில்லை என்று இயக்குநர் அம்ஷன்குமார் சொல்கிறார். அசாந்தன் மரணமடைவதற்கு ஒன்றரை மாதம் முன்பே படவிழா நடந்தது. திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கும் கமிட்டியின் மேல்வருண அதிகாரத்தால், தேசிய சர்வதேசிய திரைப்பட விழாக்களில் பங்கேற்ற படைப்பான ‘மனுசங்கடா’ என்ற சினிமா கைவிடப்பட்டிருக்கலாமோ?
மாத்யமம் வார இதழ் 2018 ஏப்ரல் 9
தமிழில்: என்னெஸ்