சக்தியோகம்
சமையலறை வாசலில் தேங்கிக் கிடந்த மழை நீரைப் பழந்துணியால் நனைத்து ஒடுங்கிய வாளியில் பிழிந்துகொண்டிருந்த மாதங்கி புறக்கடை வாசலில் சிதம்பரத்தின் தலை தெரிந்ததும் குரலெடுத்தாள், “மழை இப்பிடியே பத்து நாளக்கி பேஞ்சுதுன்னா ஒண்ணும் மிஞ்சாதுப்பா. எப்ப எப்பன்னு நிக்குது இந்த சொவுரு.”
தலையைத் துவட்டியபடி அண்ணாந்து பார்த்தார். வரிசை கலைந்த தட்டோடுகளைத் தாங்கியிருந்த கருத்த பனைமரக் கைகள் தொய்ந்து தொங்கின. பளீரென்று உள்ளிறங்கிய வெயில்கற்றை கண்களைக் கூசத் தலையைக் குனிந்தவர் சுண்ணாம்புப் பூச்சுதிர்ந்த செம்மண் சுவரைத் தொட்டார். உள்ளங்கையில் சில்லிட்டது ஈரம்.
ஆட்டுக்கல்லுக்கும் சுற்றுச் சுவருக்கும் நடுவில் ஈரமாய்ப் பாசிபடிந்த இடுக்கில் தலை தூக்கிப் பார்த்து நின்ற தவளையை ஈர்க்குச்சியால் விரட்டிக்கொண்டி ருந்த கமலாதேவி சிரித்தாள். “ராத்திரி பூரா ஒரே சத்தம். கொர கொரன்னு. தூங்கவே விடலே இது. இப்பப்