உப்பு முத்தம்
பிற்பகலைப் பாடாமல்
இருக்க முடியவில்லை
துயரம் பிழியும் குரலுடன்
பாலைவனத்தில் அலைபவன் பாடகன் அல்லன்
அவனுடைய நடைபாதையில்
வெயிலின் பளிங்குக் கண்ணீரும்
பட்டிப் பூவும்
வழிபட வா என அழைக்கும்
பள்ளிவாசலின் அமுதக் குரலில்
ரூமியின் கவிதையின் கனிவு
அவற்றை விட்டு விட்டு
பனிப்பாறையில் நொறுங்கும் கப்பலில்
வீடு திரும்புகிறேன்
வீட்டின் முன் தெரு
பனியில் தோயு முன்பே
உப்பை வீசிச் செல்பவன் யார்?
பகலில்
எல்லாத் தெரு விளக்குகளையும்
அணைத்தவன் கடவுளா?
விசித்திரமான எமது படுக்கையில்
காதலின் ஈரலிப்புடன்
வெப்பம் ததும்பினாலும்
அவிழ்ந்த கூந்தலுடன் திருப்பிப் படுப்பவள்
திருப்பித் தரும் உப்பு முத்தத்தை
எப்படி அழைப்பது?
(துபாய், 2018)
மின்னஞ்சல் - cheran@uwindsor.ca
<