தவிர்க்கத்தக்க சுகாதார நெருக்கடி
பல மருந்துகளுக்கும் கட்டுப்படாத காசநோய்க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அதிக நிதியும் சிறந்த திட்டங்களும் தேவை.
மனிதர்களை ஒடுக்கும் இந்தியாவில் காசநோய் பலமாக வேரூன்றியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிபரம் கூறுகிறது. இந்நிலையில் இந்த மாதத் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி 2025இல் ‘டிபி முக்த் பாரத்’ (காசநோய் இல்லாத இந்தியா) என்று முழங்கியிருக்கிறார். உலக சுகாதாரக் கழகத்தின் 2016ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பு உலகம் முழுவதிலுமுள்ள ஒரு கோடி காசநோயாளிகளில் 28 லட்சம் பேர் இந்தியாவில்தான் இருப்பதாகத் தெரிவிக்கிறது. இவர்களில் 1,40,000 பேர்கள் விஷயத்தில் மருந்துகள் பலனளிப்பதில்லை. இதே ஆண்டில் 4,23,000 நோயாளிகள் இறந்தனர். பல மருந்துகள் பலனளிக்காததுபோலவே எந்த மருந்துமே பலனளிக்காது என்கிற நிலையில் ஏராளமான காசநோயாளிகள் இருப்பது இந்நோய் இந்தியாவில் எந்த அளவிற்குப் பரவியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அரசாங்கத்தின் சமீபத்திய தரவுகளின்படி மொத்த நோயாளிகளில் நான்கில் ஒரு பகுதியினருக்கு மருந்துகள் பலனளிப்பதில்லை. பெரும்பாலும் இது ஏழைகளைப் பாதிக்கிறது என்றாலும் இந்த நோய் வேறு வடிவங்களில் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரைப் பாதிப்பதும் அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோய், உடலின் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் தொற்று அல்லாத நோய்கள் அதிகரித்து வருவதும் இதற்கான காரணமாகும். எச்.ஐ.வி / எய்ட்ஸ் நோய் இருப்பவர்களைக் காசநோய் எளிதில் தாக்குகிறது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள், நோய் கண்டறியப்படாதவர்கள், நோய் இருப்பது அறிவிக்கப்படாதவர்கள் போன்றவர்களை அரசாங்க அறிக்கை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இத்தகைய சூழலில் எந்த அற்புதத்தாலும் இந்தியாவை அடுத்த ஏழாண்டுகளுக்குள் ‘காசநோய் அற்றதாக’ ஆக்கிவிட முடியாது.
நோயின் காரணமாக மக்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு ஏற்படும் சமூக, பொருளாதாரப் பாதிப்பு மிகவும் கொடூரமானது. இந்த நோய் பற்றி சமூகத்திலிருக்கும் தவறான கருத்தால் இந்த நோயைத் தொடக்கத்திலேயே கண்டறிவதும் குணப்படுத்துவதும் இயலாது போகிறது. இந்த நோயைப் பற்றி நாம் அறிந்துகொள்ளவும், அதற்குச் சிகிச்சையளிக்கவும் நமக்குப் பெரிதும் உதவிய ‘தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்’ திருத்தப்பெற்ற தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் என்று இப்போது மாற்றப்பட்டுள்ளது. இந்தத் திருத்தப்பட்ட திட்டத்தின் வடிவமைப்பிலும் அமலாக்கத்திலும் பல கோளாறுகள் உள்ளன. ஆறு மாத காலத்திற்கு நோயாளிக்கு நேரடியான கவனிப்பின் கீழ் சிகிச்சையளிப்பது இத் திட்டத்தின் மையமான அம்சம். ஆனால் போதுமான மருத்துவப் பணியாளர்களும் மருந்துகளும் இல்லாமை இத் திட்டத்தின் அமலாக்கத்தைப் பாதிக்கிறது. இந்தத் திட்டம் பொதுச் சுகாதார அமைப்புடன் முறையாகப் பிணைக்கப்படவில்லை. இதன் காரணமாக, நோயிருப்பதை இலவசமாகக் கண்டறியவும், சிகிச்சை பெறவும் இத்தகையதொரு திட்டம் இருப்பதை அறியாமலேயே பெரும்பாலான நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளை நாடுகின்றனர். உண்மையில் சொல்லப்போனால் 60% நோயாளிகள் தனியார் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுகிறார்கள். இந்த மருத்துவர்களில் பலர் நோய்க்குச் சிகிச்சையளிப்பதற்கான அடிப்படைப் பயிற்சியோ, நோயாளிகளைக் கையாள்வதற்கான தகவல் அறிவோகூடப் பெறாதவர்கள். இந்த விஷயத்தில் சில தனியார் மருத்துவர்கள் மிகச் சிறப்பான சிகிச்சை அளிக்கிறார்கள் என்பது உண்மைதான். சிகிச்சை இடையில் தடைபடுவது, நோயை அறிவதில் ஏற்படும் தவறு, நோய்க் கிருமி எதிர்ப்பு மருந்துகளை வரைமுறைகளின்றிப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பல மருந்துகள் அல்லது எந்த மருந்துக்குமே கட்டுப்படாத காசநோய் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
பொதுச் சுகாதாரத்திற்குப் பெரும் ஆபத்தாக முடியக்கூடிய இந்தச் சூழலை எப்படிக் கையாள்வது என்பது குறித்த ஆலோசனைகளுக்குக் குறைவில்லை. இந்த ஆலோசனைகள் பலவும் நோய் கண்டறிதலில் கடைபிடிக்கப்பட வேண்டிய சரியான முறை, சரியான சிகிச்சை போன்ற விஷயங்களை வலியுறுத்த வேண்டும்; அதை விடுத்து நாட்டின், பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய உள்கட்டுமான வசதிகளிலும் சமூக, பொருளாதாரக் காரணிகளிலும் காணப்படும் வேறுபாடுகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு திட்டம் வகுப்பதைப் பற்றியே பேசுகின்றன. சளியை ஆய்விற்குட்படுத்தி நோயைக் கண்டறியும் பழைய முறையை நாம் பெரிதும் சார்ந்திருக்கிறோம். இதை மீள்பார்வைக்கு உட்படுத்தியாக வேண்டும். இந்த நோய்க்குக் காரணமான பயங்கரமான பாக்டீரியாவைக் கண்டறிய ஜீன் எக்ஸ்பர்ட் எனப்படும் மூலக்கூறு ஆய்வை முதலில் செய்ய வேண்டிய ஆய்வாக மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
நோய் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவது, நோயை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவது ஆகிய விஷயங்களில் சமூகநல சுகாதாரப் பணியாளர்களைத் தீவிரமாகப் பயன்படுத்துவது என்பது அரசாங்கம் கருத்தில்கொள்ள வேண்டிய மற்றொரு ஆலோசனை. இந்தத் தொற்றுநோய் வேகமாகப் பரவுவதைத் தடுப்பதற்கு நோயாளிகள் இருக்கும் வீட்டிலுள்ள குழந்தைகளைப் பரிசோதனைக்கு உட்படுத்துவதும் சிகிச்சையளிப்பதும் மிகவும் பிரதானமானது. சர்க்கரை நோயுள்ளவர்கள், எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்கள் இந்நோய்க்கு ஆளாவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். திட்டமிடல் இல்லாது நடக்கும் வேகமான நகரமயமாக்கத்தால் உண்டாகும் நெரிசல், துப்புரவுப் பிரச்சனைகள் போன்ற மருத்துவமல்லாத காரணிகளும் உள்ளன. கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் தனியார் மருத்துவத் துறையைக் கட்டுப்படுத்துவதுடன் இந்த நோய் பற்றி நிலவும் தப்பெண்ணங்களும் களையப்பட வேண்டும்.
காசநோய் பரவுவதற்கான முதன்மையான காரணங்கள் ஊட்டச்சத்துக் குறைபாடும் வறுமையுமே. நேரடியான கவனிப்பின் கீழ் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குச் சிறப்பான பலனளிக்கும்படியாக நல்ல ஊட்டச்சத்து அளிக்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்தின் பகுதியாக மாநில அரசாங்கங்களும் ஊட்டச்சத்துள்ள உணவை அளிக்க வேண்டும்.
சிறந்த கருவிகள் கொண்டு நோயைக் கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதுடன் ஊட்டச்சத்தும் வழங்கப்பட வேண்டும்; துப்புரவையும் பேண வேண்டும். இவை அந்நடவடிக்கைகளில் ஓர் அங்கமாகும். இது மிக எளிய தீர்வாகத் தோன்றக்கூடும். ஆனால் இந்த அடிப்படை வசதிகள்கூட மிகப் பெரும்பகுதி நோயாளிகளுக்குக் கிடைக்காதிருப்பதே யதார்த்தமாக இருக்கிறது. மருத்துவத்திற்காக அரசு செலவிடும் நிதியின் அளவு முக்கியமான விஷயமாகும். 2025இல் காசநோயை இல்லாது ஆக்குவோம் என்பதற்கான தேசிய உத்திசார் திட்டத்தை அரசு அறிவித்திருக்கும் வேளையில் மருத்துவத்திற்காக அது செலவிடும் மொத்த நிதி நாட்டின் மொத்த உற்பத்தியில் 1.4% என்ற நிலையில் இருக்கிறது. இந்த நோய் பரவுவதைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தாலும் காசநோயாளிகளின் எண்ணிக்கை, அவர்களுக்கான சிகிச்சைக்கான செலவைப் பார்க்கின்றபோது அரசு இரண்டு விஷயங்களில் அரசியல் உறுதியைக் காட்டியாக வேண்டும். ஒன்று, மருத்துவத்திற்கான நிதி ஒதுக்கல், குறிப்பாக காசநோய்க்கு எதிரான திட்டங்களுக்கான நிதி ஒதுக்கல் அதிகரிக்க வேண்டும். இரண்டாவதாக, இந்தியாவில் வர்க்க (ஜெனிரிக்) மருந்துகளைத் தயாரிப்பவர்கள் காசநோயாளிகளின் வாங்கும் சக்திக்கேற்ற மருந்துகளை, குறிப்பாக பல மருந்துகளை எதிர்க்கும் வல்லமை பெற்றுள்ள நோய்க்கிருமிகளைக் கொல்லும் வகையிலான இரண்டு அடிப்படை மருந்துகளை உற்பத்தி செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்.
தலையங்கம், எகனாமிக் அன்ட் பொலிட்டிகல் வீக்லி, மார்ச் 31 , 2018