பெண்மொழி
சார், உங்களுடையது பெண்மொழி
அத்தனை நெகிழ்வு, உணர்வுப்பூர்வம்
எழுத்தாளர் தாடியைத் தடவிக்கொண்டு
புன்னகைக்கிறார்
(முழுத் தாடி அல்ல
சவரக்கத்தி பட்டு நான்கு நாட்கள்
அவ்வளவே
அதிகம் தடவ ஒன்றுமில்லை)
நன்றி சொன்னால்
நெகிழ்வு பெண்களுக்கே
(என்றாகலாம்)
முகம் சுளித்தால்
ஆண்மையின் சீற்றம்
(என்றாகலாம்)
எழுத்தாளர் மீண்டும் தடவுகிறார்
முகமூடியை
இது போகவேண்டிய போரா
கடந்து செல்லவேண்டிய வம்பிழுப்பா
அவரது விரல்களின் கீழ்
நரை படர்கிறது
--
மின்னஞ்சல் - aniruddhan.vasudevan@gmail.com