கல்வித் தரகர்கள்
அருப்புக்கோட்டை, தேவாங்கர் கல்லூரிப் பேராசிரியர் நிர்மலா தேவி அக்கல்லூரி மாணவியரை உயர்நிலையில் உள்ளவர்களோடு பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட அழைத்த செல்பேசி உரையாடல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உயர் அலுவலர்கள், ஆளுநர் ஆகியோரின் பெயர்கள் இப்பிரச்சினையில் தொடர்புபடுத்தப்பட்டாலும் இதைத் தனிநபர் செயல்பாடாகக் குறுக்கிவிடும் பார்வைகள் பொதுத்தளத்தில் படிப்படியாக முன்வைக்கப்படுவதைப் பார்க்க முடிகிறது.
தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று நிர்மலா தேவிக்குக் ‘காமக்கொடுமுகி’ எனப் பட்டம் கொடுத்துள்ளது. அவர் கணவரோடு இணங்கி வாழவில்லை, ஒழுக்கம் (பெண்களைப் பொறுத்தவரை ஒழுக்கம் என்றால் கற்போடு மட்டுமே தொடர்புடையது) இல்லாதவர், குடும்பத்திற்குப் பொருத்தமில்லாதவர் என்பதான சித்திரிப்புகள் அவரைப் பற்றி உருவாக்கப்படுகின்றன. இப்படிப்பட்டவர் இத்தகைய செயலில் ஈடுபட்டது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல என்பதான மனநிலையைக் கட்டமைத்துத் தனிநபர் செயல்பாடாகக் குறுக்குவதன் மூலம் உயர்கல்வித் துறை தொடர்பாக ஏற்பட வேண்டிய விரிவான விவாதத்தையும் நடவடிக்கைகளையும் தவிர்க்கும் நுண்அரசியல் படிப்படியாக முன்வருகிறது.
உயர்கல்வித் துறை தரகர்களின் கைகளில் சிக்கிச் சில பத்தாண்டுகள் ஆகிவிட்டன. கடந்த இருபது ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களிலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் நிரப்பப்பட்ட பணியிடங்கள் பெரும்பான்மையும் பல லட்சங்கள் விலை நிர்ணயிக்கப்பட்டவை. அரசு கல்லூரிப் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்படுவதால் குறைவான முறைகேடுகளே நடக்க வாய்ப்பிருந்தன. ஆசிரியர் தேர்வு வாரியம் பற்றிய நம்பிக்கையையும் சமீபத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு குலைத்துள்ளது.
கோவை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர், பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆகியோர் இத்தகைய பண பேரத்தில் ஈடுபட்டுப் பிடிபட்டிருக்கிறார்கள். பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராக இருந்தவரின் முறைகேடுகள் தொடர்பான விசாரணை வந்தபோது தற்கொலை செய்துகொண்ட நிகழ்வும் சில மாதங்களுக்கு முன் நடந்தது. தரகர்களாகச் செயல்படக் கூடியவர்களே துணைவேந்தர், பதிவாளர் பணிகளைப் பெற முடியும் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினர் பதவி உட்பட அனைத்தும் அதிகமும் பண பேரத்தால் முடிவு செய்யப்படுபவை. அனைத்து நிலைப் பதவிகளும் பணத்தால் நிர்ணயிக்கப்படுபவை என்றான பிறகு அவ்விதம் பதவி பெற்றவர்கள் தரகர்களாக இருப்பதும் அல்லது படிப்படியாக மாறுவதும் இயல்பான செல்நெறிதான்.
மிகச் சிறந்த உதாரணம், சட்ட சிக்கல்களுக்காக பல்கலைக்கழகத்தின் பெயர் சிதம்பர ரகசியமாக இருக்கட்டும். அதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களும் ஆசிரியரல்லாப் பணியாளர்களும் தேவையின்றிப் பணத்திற்காக மட்டுமே பணியிடங்கள் உருவாக்கப்பட்டு நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் கொடுக்க வேண்டிய லஞ்சப் பணத்தைத் திரட்ட வங்கிகளில் கடன், தனிநபரிடம் வட்டிக்குக் கடன் ஆகியவற்றை நிர்வாகமே ஏற்பாடு செய்து கொடுத்தது. அதன் நிர்வாகம் ஸ்தம்பித்து ஊதியம் வழங்க இயலாத நிலை ஏற்பட்ட கடைசிக் கட்டத்தில் பேராசிரியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தொகை நாற்பது முதல் ஐம்பது லட்சம் வரையாகும். அவ்விதம் பணியில் சேர்ந்தவர்கள் தாம் கொடுத்த லஞ்சப் பணத்தைச் சம்பாதிக்கவும் கடனிலிருந்து மீளவும் தரகர்கள் ஆனார்கள். மாணவர்களைப் பிடித்துச் சேர்த்தால் கிடைக்கும் கணிசமான கமிஷன் தொகை, மாணவர்களைத் தேர்ச்சி பெற வைக்கப் பணம் பெறுதல், ஒரு நாளில் முந்நூறு, நாநூறு விடைத்தாள்களை மதிப்பிட்டு மதிப்பெண் வழங்குதல் உள்ளிட்ட ஏராளமான பணம் சம்பாதிக்கும் வழிகள் அங்கே இருந்தன. ஆகவே முழுநேரப் தரகர்களாகச் செயல்பட்டார்கள் ஆசிரியர்கள். இப்பல்கலைக்கழகம் பொருளாதாரச் சீர்குலைவைச் சந்தித்துக் கிட்டத்தட்ட திவாலானதும் அரசு ஏற்றுக்கொண்டது. அப்போது இந்த ஆசிரியப் தரகர்களுக்குப் பணிப் பாதுகாப்பை வழங்கி அரசு கல்லூரிகளில் சேர்த்துக்கொண்டது. முறையற்ற நியமனங்களை ரத்து செய்யாமல் அவற்றுக்கு அங்கீகாரம் வழங்கும் நடவடிக்கை இது.
பல சுயநிதிக் கல்லூரிகளில் ஒவ்வோர் ஆண்டும் இத்தனை மாணவர்களைப் பிடித்து வந்தால்தான் பணியில் நீடிக்க முடியும் அல்லது ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்னும் நிலை உள்ளது. அதிக மாணவர்களைப் பிடித்து வந்து சேர்க்கும் ஆசிரியரே அதிக ஊதியம் பெறுவார். ஆசிரியர்கள் மட்டுமல்ல, மாணவர்களும் தரகர்களாகச் செயல்படுகின்றனர். தனியான தரகர்களும் இருக்கின்றனர். பொறியியல், மருத்துவம், கலை அறிவியல் உள்ளிட்ட எல்லாவற்றிலும் தரகர் மயமான செயல்பாடே நிலவுகிறது.
உயர்கல்வித் துறையில் எடுக்கப்படும் ஒவ்வொரு சீர்திருத்த நடவடிக்கையும் வெகு எளிதாகக் குலைந்து மேலும் ஊழலுக்கே வழிவகுக்கின்றன. பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் நெட் தேர்வு அல்லது மாநில அரசு நடத்தும் ஸ்லெட் தேர்வில் வெற்றி பெறுவதுதான் ஆசிரியருக்கான தகுதி என்னும் விதி வந்தது. திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஸ்லெட் தேர்வைப் பொறுப்பேற்று நடத்தியபோது அப்போதிய தேர்வாணையர் பெரும்பணம் பெற்றுக்கொண்டு ஏராளமான பேர் தேர்ச்சி பெறக் காரணமானார் எனப் புகார் வந்தபோது அத்தேர்வை வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற்றியது தவிர அரசால் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
நெட் அல்லது ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் ஆசிரியர் தகுதி என்றிருந்ததோடு டாக்டர் பட்டம் பெற்றாலும் தகுதி என்னும் விதி மாற்றம் வந்த பிறகு எங்கெங்கும் டாக்டர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இப்போது ஒரு கையொப்பத்திற்கு இத்தனை ரூபாய் என்பது தொடங்கி முனைவர் பட்டக் குழுக் கூட்டம், வாய்மொழித் தேர்வு என ஒவ்வொன்றுக்கும் பணம் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.
ஆய்வேடு தயாரித்துக் கொடுக்கும் கம்பெனிகள் செயல்படுகின்றன. அவற்றில் ஆசிரியர்களும் ஆசிரியரல்லாதவர்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படுகின்றனர். கலைப்பாட முனைவர் பட்ட ஆய்வேடுகளுக்கு ஓரிரு லட்சம் விலையிருக்க அறிவியல் பாடங்களுக்கு ஐந்தாறு லட்சம் வரைக்கும் விலையேறிக் கிடக்கிறது. பணம் மட்டுமல்லாமல் அறிவுச் சுரண்டல், பாலியல் சுரண்டல் ஆகியவையும் இத்துறையில் அடக்கம். இத்தகைய செயல்பாடுகளில் பெரும்பான்மையாக இருதரப்புக்குமே புரிந்துணர்வு இருப்பதையும் காண வேண்டும்.
மனிதனின் அற்பங்கள் இன்றும் பணம், மது, பாலியல் ஆகியவற்றுக்குள்தான் அடங்கியிருக்கின்றன. பணமும் மதுவும் சகஜமானதாக மாறிவிட்டன. அதைத் தவறாகக் கருதாத சமூக மனநிலை உருவாகி அங்கீகாரம் கிடைத்துவிட்டது. இதுவரைக்கும் மறைமுகமாகவும் அச்சத்தோடும் நடைபெற்று வந்த பாலியல் சுரண்டல் இப்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் தேசியத் தர நிர்ணயக் குழுவினருக்குக் கல்லூரி மாணவியரை அனுப்பிய பழனியைச் சேர்ந்த கல்லூரி விவகாரம் பெரிதாகப் பேசப்பட்டது. அது மறைந்து போன இடம் தெரியவில்லை.
எல்லா அற மதிப்பீடுகளும் குலைந்து தரகர் மயமாகிவிட்ட உயர்கல்வித் துறையில் இப்போது பாலியல் சுரண்டல் பரவலாக வெளிப்படத் தொடங்கியிருக்கிறது. இதையும் தனிநபர் ஒழுங்கீனம் எனக் குறுக்கிச் சகஜமானதாக மாற்றிவிடாமல் இத்தகைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உயர்கல்வித் துறையைச் சீரமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. விவாதத்தை உயர்கல்வித் துறையின் எல்லா மோசடிகள் சார்ந்தும் விரிவுபடுத்த வேண்டிய அவசியம் கல்வியாளர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் இருக்கிறது.