நீங்கள் புலியா?
நான் கொஞ்சநாள் கார் வைத்திருந்தேன். ஒரு வருடம்கூட இருக்காது. பிறகு விற்றுவிட்டேன். காருக்கும் எனக்கும் இருந்த உறவு கர்நாடக அரசுக்கும் காவேரி ஆற்றுக்குமான உறவைப் போன்றது. ஆக்கினையையும் மன வேதனையையும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்யும் உபத்திரவம். என்னுடைய மூளை துவரம்பருப்பு அளவு என்று எண்ணியிருந்தவர்களுக்கு அவர்களுடைய பார்வையில் நான் செய்த இந்தப் பாதகமான செயல் என் மனம் சமநிலையற்றது என்பதை மேலும் உறுதிப்படுத்தியது. இவர்கள் எல்லோரும் ‘வாகனம் ஒரு தனி ஆளின் சுதந்திரச் சின்னம்’ என்ற மார்கிரட் தாட்சரின் முதலாளித்துவக் கருத்தியலினால் மூளை சலவைக் கல்லில் வைத்துச் சுத்தமாகத் துவைத்து எடுக்கப்பட்டவர்கள். ஏன் இந்த மடத்தனமான காரியத்தைச் செய்தாய் என்று கேட்டவர்களுக்குக் குற்ற உணர்ச்சியைத் துரிதமாகத் தூண்டிவிட ஓர் உயர்ந்த தார்மீகத் தொனியுடன் சூழலியலே காரணம் என்று கூறுவேன். இது முழுப் பொய். எனக்குச் சுற்றுப்புறத்தைக் காக்க வேண்டும் என்று அக்கறை உண்டு. ஆனால் என் காரை விற்றதற்குக் காரணம் எந்தவிதமான சீரிய சித்தாந்தமும் இல்லை. எனக்கு ஓட்டுவது பிடிக்கவில்லை. என்னைப் பொருத்தமட்டில் இந்