‘செந்தமிழ் பதிப்புச் செம்மல்’
உ.வே.சா. வாழ்விலும் வளர்ச்சியிலும் திருவாவடுதுறை ஆதீனத்திற்குப் பெரும் பங்குண்டு. அவரது வாழ்க்கையின் முக்கியக் கட்டத்தில் அவரை அணைத்து ஆதரித்தது இந்த ஆதீனம். உ.வே.சா.வும் செய்நன்றி மறவாமல் தனது எழுத்துக்களில் ஆதீனத்தைப் பற்றி உள்ளன்போடு குறிப்பிட்டுள்ளார். இந்தத் தொடர்பைப் போற்றும் வகையில் திருவாவடுதுறை ஆதீனம் புதிதாக இந்த ஆண்டு உ.வே.சா.வின் பெயரால் ‘செந்தமிழ் பதிப்புச் செம்மல்’ என்ற விருதை ஏற்படுத்தியுள்ளது. இதன் முதல் விருது முனைவர் ப. சரவணனுக்கு வழங்கப்பட்டது. திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் அவர்களின் ஜென்ம நட்சத்திரத் தின விழாவின்(8.6.2026) ஒரு பகுதியாக ‘செந்தமிழ் பதிப்புச் செம்மல்’ விருது வழங்கும் நிகழ்ச்சியும், இதையொட்டி ‘தண்டமிழ்த் துறைசை ஆதீனமும் தமிழ்த் தாத்தாவும்’ என்ற தலைப்பில் ப. சரவணனின் உரையும் நிகழ்ந்தேறின.
ப. சரவணன் தனது நீண்ட உரையில், ‘மகாவித்வான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் அவர்கள் சரித்திரம்’, ‘என் சரித்திரம்’ போன்ற உ.வே.சா.வின் நூல்களிலும் அவரது பிற எழுத்துகளிலும் ஆதீனத்தோடு அவருக்கு இருந்த உறவு பற்றிய பகுதிகளைத் தொகுத்தளித்து, அந்த உறவின் ஆழத்தை அறியத் தந்தார். உ.வே.சா. வின் குடும்பப் பின்னணி, மகாவித்வானிடம் தமிழ் கற்கச் சென்றது, மாயூரத்தில் தங்கியது இவை பற்றிய சுருக்கமான அறிமுகத்தை அளித்தார்; திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் மேலகரம் சுப்பிரமணிய தேசிகரை முதல்முறையாக உ.வே.சா. சந்தித்ததையும் அவர் இவரைப் பரிசோதித்ததையும் விவரித்தார். இந்த முதல் சந்திப்பு அவர்கள் இருவருக்குமிடையேயான நீண்ட காலப் பிணைப்பிற்கு விதையூன்றியதைத் தெரிவித்தார். திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பாக உ.வே.சா. தனது 23ஆவது வயதில் பதிப்பித்த ‘சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பும் வேணுவனலிங்கவிலாசச் சிறப்பும்’ என்ற நூல் பிற்காலத்தில் அவர் பல நூற்களைப் பதிப்பிப்பதற்குத் தூண்டுதலாக அமைந்ததையும் சரவணன் குறிப்பிட்டார்.
விருது வழங்கும் நிகழ்ச்சி ஆதீன நிறுவனர் ஸ்ரீ நமசிவாய மூர்த்திகள் சன்னதியின் முன் நடைபெற்றது. 24ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் ப. சரவணனுக்கு, ‘செந்தமிழ்ப் பதிப்புச் செம்மல்’ விருதையும் ரூபாய் ஐந்தாயிரத்திற்கான பொற்கிழியையும் வழங்கி, வெள்ளி உருத்திராக்க மாலையும் அணிவித்துக் கௌரவப்படுத்தினார்.
இந்த விருதோடு, ஆறுமுக நாவலரின் பெயரில் இவ்வாண்டு ஏற்படுத்தப்பட்டிருக்கும் ‘சைவநூல் பதிப்புச் சதுரர்’ விருது திருப்பரங்குன்றம் சிவதனுஷுக்கு இந்த விழாவில் வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சைவசமய ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
- தி.அ.ஸ்ரீ.
