இந்தியச் சிற்றிதழ்கள்

நீண்டகாலம் புழக்கத்தில் இருக்கும் மொழியும் பண்பாடும் இயல்பாகவே நிறுவனமயமாக்கப்படுகின்றன. காலப் போக்கில் இத்தகைய நிறுவனப் பிரதிகள் சூழலுக்குப் பொருந்தாமல் விலகும்போது அவற்றுக்கு எதிரான கேள்விகளும் மாற்று வழிகளுக்கான தேடலும் தொடங்குகின்றன.
நிறுவனப்படுத்தப்பட்ட ஒற்றைத்தன்மைக்கு எதிராக, உயிர்ப்புள்ள மாற்றுப் போக்குகளையும் புதிய மதிப்பீடுகளையும் உருவாக்கியவை. சிற்றிதழ்கள் இந்த உலகளாவியத் தத்துவார்த்த இயக்கத்தின் பின்னணியில் பெரும் பொருளாதாரப் பலமோ பரந்த வாசக ஏற்போ இருந்ததில்லை. இருப்பினும், தீவிரமான மாற்று மதிப்பீடுகளின் வலிமையால் அவற்றுக்கு வரலாற்றில் தனியிடம் உருவானது. சிற்றிதழ்களால் உருவான இந்த மாற்றுவெளிப்போக்கு இதழ்களையும் ஈர்த்தது, அவற்றின் சிந்தனைமுறையிலும் மாற்றங்கள் தோன்றின. ஒரு மொழியின் அறிவுச்சேகரமும் பன்முகத்தன்மையும் உறுதிப்படுவது இத்தகைய மாற்றுவெளியில்தான்.
இந்தியாவில் தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, வங்காளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தோன்றிய சிற்றிதழ்கள் கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல் தளங்களில் காத்திரமான இடையீடுகளை நிகழ்த்தியுள்ளன. இன்றும் புதிய அவதானிப்புகளுடன், புதிய திசைவழிகளை நோக்கி இவ்வியக்கம் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
தமிழ்க் கலை - இலக்கியச் சூழலில் மாற்றுச் சிந்தனைகளுக்கான உரையாடல் வெளியைத் தக்கவைத்துவரும் காலச்சுவடு, இந்தியச் சிற்றிதழ் இயக்கத்தின் வரலாற்றையும் பங்களிப்பையும் ஆவணப்படுத்தும் நோக்கில் சிற்றிதழ்ச் சிறப்பிதழைக் கொண்டுவருகிறது. உலகளவிலும் இந்திய அளவிலும் மையப்போக்குக்கு முரணாக இயங்கிய மாற்றுப் பத்திரிகைகளின் பங்களிப்பை அறிமுகப்படுத்தும் இப்பகுதி, புதிய விவாதங்கள் உருவாவதற்கான களமாகவும் அமையும்.
- பொறுப்பாசிரியர்
