கடிதங்கள்
அக்டோபர் இதழில் ‘அறப்பணிக்கு டெட் தேர்வா?’ என்ற சாரா அருளரசியின் பத்தியைப் படித்தேன். ஆசிரியர்கள் மீது இவ்வளவு கோபமா? தான் ஓர் ஆசிரியராக இருந்தும் களத்தில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பதை அவர் தனது கவனத்தில் கொள்ளவில்லை என்பதைக் கவலையுடன் நோக்குகிறேன். ஆசிரியர்களைப் பற்றித் தான் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு உண்மையில் யார் காரணம் என்பதை வசதியாக மறைத்துவிட்டிருக்கிறார்கள். நான் 70&71 கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி. பயின்றவன். ஒரு வகுப்பிற்கு ஓர் ஆசிரியர் இருந்த பள்ளியில் படித்தவன். நல்லாசிரியர்களிடம் பயின்றவன். இன்று ஆரம்பப்பள்ளியில் ஐந்து வகுப்புகளுக்கும் எத்தனை ஆசிரியர்கள் இருக்கிறார்கள்- ஓர் ஆசிரியரோ இரண்டு ஆசிரியர்களோ அனைத்துப் பாடங்களையும் முழுவதுமாக மாணவர்களுக்குக் கற்பித்துவிட முடியுமா?
ஆரம்பப் பள்ளியில் சரியாகப் பாடம் நடத்தாததால் மேல் வகுப்பிற்குச் செல்லும்போது சரியாக எழுதப் படிக்கத் தெரியவில்லை என்று ஆதங்கப்படுகிறாரே, இதற்கு ஆசிரியர்களா காரணம்? எட்டாம் வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சி எனக் கொண்டுவந்து மாணவர்களை எந்த நிலையிலும் தரப்படுத்த முடியாத நிலையை உருவாக்கியது ஆசிரியர்களா?
திறனற்ற ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் பணம் சம்பாதிக்கும் ஒன்றை நோக்குடனேயே புற்றீசல்போல் முளைத்தனவே இதற்கு எந்த ஆசிரியர் சமூகத்தைக் குற்றஞ்சாட்ட முடியும்? சமீபத்தில் கல்வித்துறை ஆய்வின்படி 6 முதல் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு அடிப்படைக் கல்வியான தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்களில் போதுமான புரிதல் இல்லை என்றும் அதற்கான சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பதை நாம் அறிவோமே!
‘டெட் தேர்வு’ எழுத வேண்டிய நிலையில் உள்ள 1.75 லட்சம் ஆசிரியர்கள் கற்பித்துத்தானே நல்ல ஆசிரியர்கள், நல்ல பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், நல்ல பொறியாளர்கள், நல்ல நீதிபதிகள், நல்ல மருத்துவர்கள், நல்ல அரசியல் தலைவர்கள் என்று உருவாகியிருக்கிறார்கள்! அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அவர்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில்தான் சேர்க்க வேண்டும் என்றும் அப்போதுதான் அரசுப்பள்ளிகளின் தரம் உயரும் என்றும் அவ்வப்போது கூச்சலிடும் கூட்டம் எத்தனை உயர்நிலை அலுவலர்களின் பிள்ளைகள், எத்தனை சட்டமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள், எத்தனை கோடீஸ்வர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் படிக்கிறார்கள் என்பதை எங்கேயாவது கேட்டதுண்டா?
சரியாகப் படிக்கவில்லையென்றால் லேசான பிரம்படிபட்டுப் படித்தவர்கள்தானே நாம். ஆனால் இப்போது ஆசிரியர்கள் அடித்தால் அவர்களைச் சிறைக்கு அனுப்புகிறார்களே, இது ஆசிரியர்களின் குற்றமா? அடித்தால் உள்ளே போய்விடுவாய் என்று மாணவர்களும் பெற்றோர்களும் (சினிமா பாணியில்) ஆசிரியர்களை மிரட்டுகிறார்களே, இதுவும் ஆசிரியர்களின் குற்றமா?
எட்டாம் வகுப்பு மாணவனைப் படிக்கவில்லை என்று ஆசிரியர் திட்டினால்கூட ஒன்று அவன் தற்கொலைக்குப்போகிறான். அல்லது சக மாணவர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டுக் கத்தியைக் காட்டி மிரட்டுகிறானே இதுவும் ஆசிரியர்களின் குற்றமா? இதில் பெற்றோர்களுக்கு எந்தவிதப் பொறுப்பும் இல்லையா? எந்த ஆசிரியர் மாணவர்களைக் குடிக்கச் சொல்லிக் கற்றுக்கொடுத்தார். எந்த ஆசிரியர் கத்தியைக் காட்டி மிரட்டச் சொல்லிக் கற்றுக்கொடுத்தார்? குடித்துவிட்டுப் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், மறுக்கவில்லை. மாணவர்களைக் கண்மூடித்தனமாகத் தாக்கும் ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மறுக்கவில்லை. தவறு செய்யும்போது திருத்தவும், தப்பு செய்யும்போது தண்டிக்கவும் வேண்டும், நிச்சயம் வேண்டும்.
அதற்காக ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் நிந்தனை செய்ய முடியாது. ஆசிரியர்களைக் குற்றவாளியாகப் பார்ப்பது, ஆசிரியர் சமூகத்தை ஒட்டுமொத்தமாக விமர்சிப்பது ஓர் அறம் சார்ந்த சமூகம் உருவாவதைத் தடுக்கும். ஏற்கெனவே அறம் சார்ந்த சமூகம் கைநழுவிப் போய்க்கொண்டிருக்கும் நிலையில் நடுநிலையிலிருந்து அவர்களின் குரலைக் கேட்க வேண்டும், பரிசீலிக்க வேண்டும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பையொட்டி ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர் கூட்டமைப்புகள், அரசிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. அவர்களும் உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளார்கள். தமிழக அரசும் அதற்கு ஆதரவாகச் சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது இவை பாராட்டுக்குரியவைதான்.
ஒரு நல்ல ஆசிரியரை உருவாக்குவதில் அரசுக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ அதற்கும் மேலாக இந்தச் சமூகத்தைச் சார்ந்த நமக்கும் இருக்கிறது என்பதை உணர வேண்டும். இப்போதுள்ள நமது கடமை ஆசிரியர் சமூகத்திற்குத் துணை நிற்பதே.
சு. அன்பழகன்
பாபநாசம்
•••
அறப்பணிக்கு டெட் தேர்வா? சாரா அருளரசி கட்டுரை படித்தேன். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இன்படி ஒன்றுமுதல் எட்டாம் வகுப்புவரை கற்பிக்கும் ஆசிரியர்கள் பணியில் சேர்வதற்குத் தகுதித் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2011இல் தமிழ்நாடு அரசு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2011க்குப் பிறகு பணியில் சேர்பவர்கள் தகுதித் தேர்வின் அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள். பதவி உயர்வுக்குத் தகுதித் தேர்வு அவசியமா என்பது பற்றி நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்றம் பதவி உயர்வுக்குத் தகுதித் தேர்வு அவசியம் எனத் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
ஆனால் இயற்கை நீதிக்கு முரணாகக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக முன்தேதியிட்டு 55 வயதுக்குள் உள்ளவர்கள் அனைவரும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்பது தீர்ப்பாக வெளியானது. ஓய்வு பெறுவதற்கு ஐந்து ஆண்டுகள் இருப்பவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஏற்கெனவே தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் உள்ளிட்ட பல்வேறு தேர்வு முறைகளைக் கடைப்பிடித்து ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்தது. 25, 30 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி தங்களின் தகுதியை மீண்டும் நிரூபித்தால் மட்டுமே பணியில் தொடர முடியும் என்பது எப்படிச் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை.
ஒரு சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக முன் தேதியிட்டு அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நீதிக்கு முரணாக உள்ளது. பழுத்த பணி அனுபவம் உள்ள ஆசிரியர்கள் இந்தத் தேர்வை எப்படி எதிர்கொள்வார்கள்? அதுவும் அவர்கள் நடத்துகின்ற பாடங்களில் தேர்வு என்றால் எந்தச் சிக்கலும் இருக்காது. ஆனால் அவர்கள் கற்பிக்கும் பாடங்களுக்குச் சம்பந்தமில்லாத பிற பாடங்களையும் தகுதித் தேர்வில் எழுத வேண்டிய நிலை உள்ளது.
ஆசிரியர்கள் சமீபகாலமாக மதிக்கப்படுவதில்லை என்ற கட்டுரையாசிரியர் குற்றச்சாட்டு மிகவும் வருந்தத்தக்கது. எங்கோ ஒரு சில ஆசிரியர்கள் செயல்படுவதை வைத்து ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் குற்றம் சாட்டுவது நியாயம் அல்ல. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற அடிப்படையில் குருவின் ஸ்தானத்திலிருந்து மாணவர்களை நல்வழிப்படுத்தி அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டுதலைச் செய்யக்கூடிய ஆசிரியர்கள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறார்கள்.
சமூகம் ஆசிரியர்கள்மீது மதிப்பை இழந்துவிட்டதாகக் கூறுவதையும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. மாணவர்களின் கல்வி என்பது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் இணைந்து பணியாற்றினால் சிறப்பாக அமையும். சமூகமும் மாணவர்களின் மீது ஈடுபாடும் அக்கறையும் கொண்டு வருங்காலத் தலைமுறை சிறக்க சிறந்த அறநெறிப் பண்புகளை மாணவர்களிடம் வளர்த்தெடுத்த வேண்டும். ஆசிரியர் சமூகத்தை மட்டுமே குறை சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் தங்களின் கருத்துக்களைப் பரிசீலனைசெய்து பார்க்க வேண்டும். கல்வி என்பது ஒரு கூட்டு முயற்சி. இதில் அனைவரின் பங்களிப்பும் ஒருங்கிணைந்து இருந்தால் மாணவர்களின் கல்வி சிறக்கும்.
கூத்தப்பாடி மா. பழனி
தருமபுரி
•••
ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘விலங்குப் பண்ணை’ நாவலின் 80 ஆண்டு நிறைவை முன்னிட்டு சச்சிதானந்தன் சுகிர்தராஜா எழுதிய கட்டுரையை காலச்சுவடு 2025 அக்டோபர் இதழில் படித்தேன். நாவலின் சமகாலப் பொருத்தப்பாடு, பாரதியின் கதையுடன் ஒப்பீடு, நாவலின் பதிப்பு வரலாறு எனப் பல கூறுகளை உள்ளடக்கி இருக்கிறது. இந்தக் கட்டுரை தமிழில் விலங்குப் பண்ணை வெளியானது பற்றியும் விவரித்திருக்கலாம்.
‘விலங்குப் பண்ணை’ நாவலுக்குக் குறைந்தது மூன்று தமிழ் மொழிபெயர்ப்புகள் வந்திருக்கின்றன. முதல் தமிழ் மொழிபெயர்ப்பை ஆடல்வல்லான் பிரசுரம் (சென்னை) 1956ஆம் ஆண்டில் வெளியிட்டது. ‘PUBLISHED BY ARRANGEMENT WITH Ms. HARCOURT BRACE & Co. NEW YORK’ என்ற அறிவிப்பும் உள்ளது. மிகவும் பிரபலமானதும் பல மறுபதிப்புகள் கண்டதும் இதுதான். மொழிபெயர்த்தவர் க. நா. சுப்ரமண்யம். ‘1984’, ‘விலங்குப் பண்ணை’ இரண்டையும் மொழிபெயர்த்ததால், கம்யூனிச விரோதி என்றும் சி.ஐ.ஏ. ஏஜெண்ட் என்றும் பழிதூற்றப்பட்டார். தொ.மு.சி. ரகுநாதன் ஒரு வசைப்பாடலும் எழுதினார். அந்தப் பழிச்சொற்கள் அப்போதே அவிந்து ஒழிந்தன. க.நா.சு.வின் மொழிபெயர்ப்புகள் இரண்டும் அவரது காலத்திலேயே மறுபதிப்பு கண்டன. இன்றும் நிற்கின்றன. இவ்வாண்டில் மூன்று சிறு பதிப்பகங்கள் க.நா.சு.வின் இவ்விரு மொழிபெயர்ப்புகளையும் புதிதாக வெளியிட்டிருப்பதைப் பார்த்தேன். க.நா.சு.வின் மொழிபெயர்ப்புகளுக்கும் ஆச்சி விளம்பரங்களில் வரும் கொச்சிக்காய்த் தூளைப் போலக் காலாவதித் தேதி இல்லை.
‘விலங்குப் பண்ணை’ நாவலின் இரண்டாவது தமிழ் மொழிபெயர்ப்பு 1967ஆம் ஆண்டில் வெளியானது. ஏ. குமாரசாமி செய்த இம்மொழிபெயர்ப்பை சேலத்தைச் சேர்ந்த தமிழகம் பதிப்பகம் பதிப்பித்தது. இந்த மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இரண்டு நூற்றொகைகள் வெளியீட்டை உறுதி செய்கின்றன.
2012ஆம் ஆண்டில் கிழக்கு பதிப்பகம் ஒரு பதிப்பை வெளியிட்டது. இது பி. வி. ராமஸ்வாமி செய்த மூன்றாவது தமிழ் மொழிபெயர்ப்பு. இதில் க.நா.சு.வின் மொழிபெயர்ப்பைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.
‘விலங்குப் பண்ணை’யின் 80 ஆண்டு நிறைவில் அந்நாவலின் தமிழ் மொழிபெயர்ப்புகளையும் மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டும்.
ஸ்ரீநிவாச கோபாலன்
கீழநத்தம், திருநெல்வேலி
