ஓவியச் சாதனையாளர்
உலக அளவிலான கவனமும் புகழும் பெற்ற இந்திய ஓவியர்களில் அண்மையில் காலமான ஏ. ராமச்சந்திரனும் ஒருவர். கேரளத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். எனினும் அந்த நிலவியல் எல்லையைத் தாண்டிய கலைஞராகவே செயல்பட்டார். சாந்தி நிகேதனில் நந்தாலால் போஸின் மாணவராகப் பயின்று ஓவியக் கலையும் தேர்ந்தார். கேரளக் கோவில்களிலும் அரண்மனைகளிலும் இடம்பெற்ற சுவரோவியங்களின் பாணியைத் தனதாக்கிக் கொண்டார். இயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்துவது என்பது மட்டுமே கேரள மரபிலிருந்து அவர் ஏற்றுக்கொண்ட அம்சம். அவரது கருப்பொருட்கள் ஆதிமனிதர்களை, குறிப்பாக சந்தால் மரபினரையும் அவரது வாழ்க்கையையும் ஆதாரமாகக் கொண்டவை.
ஏ. ராமச்சந்திரனின் கலை பற்றித் தமிழில் உரையாடலைத் தொடங்கியவர் விமர்சகர் வெங்கட்சாமிநாதன். யாத்ரா இதழ் 2இல் கிருஷ்ண சைதன்யா எழுதிய கட்டுரை யொன்றுக்கு அளித்த முன்குறிப்பில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:
ராமச்சந்திரன் இன்றைய இந்தியாவின் முன்னணி ஓவியர்களிலே ஒருவர். சாதனைகளின் சிறப்புகள் காரணமாக முக்கியமானவர். இவை சம்பிரதாயமாகக் கூறப்படும் வார்த்தைகள் அல்ல. ஒன்று சொல்லலாம். இந்தியாவிற்கு வெளியேயும், அகில உலக அரங்கில் தன் பெயரை ஸ்தாபித்துள்ள ஹுசேன் போன்றவர்கள்கூட, பெருங்காயம் வைத்த பாண்டமாக, கடந்த 10-15 வருடங்களாக வளர்ச்சியற்று, பழம் பெருமையின் தாங்கலிலேயே ஜீவித்திருக்கும்போது, இளைஞர்கள் ராமச்சந்திரனின் சாதனைகளும் சுயதேடலும் வளர்ச்சியும் ஹுசேனின் பேரும் விளம்பரமும் எப்படி இருந்தாலும், அவரைச் சற்றே கண்ணோட்டிவிட்டுத்தான் ராமச்சந்திரனைக் கவனிக்கக் கண்களையும் கால்களையும் விரையச்செய்யும் அளவுக்கு ராமச்சந்திரன் முக்கியமானவர்.
(சில கலை ஆளுமைகள் படைப்புகள் - வெங்கட்சாமிநாதன், பக்.12, சந்தியா பதிப்பகம் 2004)
கடந்த மாதம் ஏ. ராமச்சந்திரன் மறைந்தார். அவரை நினைவுகூரும் வகையில் இந்த இதழில் அவரது சிற்பத்தை முகப்பிலும் கோட்டோவியங்களை உள்ளேயும் பயன்படுத்தியிருக்கிறோம். அவரது கலை பற்றிய விரிவான கட்டுரை வரும் இதழ் ஒன்றில் வெளியாகும்.
- பொறுப்பாசிரியர்