சூதாட்டத் தந்திரங்கள்
திருமண ஆல்பம்
(நாடகம்)
கிரீஷ் கார்னாட்
தமிழில்: பாவண்ணன்
காலச்சுவடு பதிப்பகம்
669 கே.பி. ரோடு
நாகர்கோவில் - 1
பக்.160
ரூ.160
மாலையும் கழுத்துமாக மணமக்கள், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ அரங்கத்தில் புன்னகைக்கின்ற புகைப்படங்களின் தொகுப்பாக நம் மனக்கண்களில் பதிவான ‘திருமண ஆல்பம்’ எனும் வடிவத்தைப் புரட்டிப் போடுகிறது இந்தப் படைப்பு.
அரசு மருத்துவராகப் பல ஊர்களுக்குப் பணியிட மாற்றத்திற்குட்படும் சுய காலூன்றலற்ற குடும்பத் தலைவர், அவரைச் சார்ந்திருக்கும் மனைவி, அவர்களின் மூன்று குழந்தைகளின் (ஹேமா, ரோஹித், விதுலா) வளர்ப்பு, திருமணம், பிரிதல் ஆகியவற்றை மையமிட்ட நாடகப் பிரதி இது.
திருமண ஆல்பம் எனும் இந்நாடகத்தில் மையப் பாத்திரங்களாக இடம்பெறும் மருத்துவர் குடும்பத்தாரை விடவும் கிளைப்பாத்திரங்கள் (குறிப்பாகப் பணிப்பெண் ராதாபாய், பக்கத்து வீட்டுச் சிறுவன் விவான், ஸிரூர் குடும்பத்தார்) நாடகத்தைச் சுவாரஸ்யமாக்குகிறார்கள்.
வாய்ப்புகளும் வசதிகளும் கிடைக்கப்பெற்ற அண்ணனாக மருத்துவரையும் அவரை அண்டி வாழ்ந்தவராக தம்பி ராமதாஸ் நாடகர்ணியையும் அறிய முடிகிறது. குடும்பக் காரியங்களுக்குச் சகோதரனை ஏவுகின்றவராக அல்லது உதவி நாடுகின்றவராக மருத்துவர் இருந்திருக்கிறார். எனவே ராமதாஸ் இறப்பிற்குப் பின்னும் எந்த ஒரு காரியத்திலும் மருத்துவர், தம்பி ராமதாஸை நினைவுகூர்கிறார். ஆனால் அண்ணன்மீது ராமதாஸின் அபிப்ராயம் வேறாக இருக்கிறது. தன் அண்ணன் மகளின் பிறப்புச் சான்றிதழில் ராமதாஸ் தன் பெயரைத் தந்தையின் பெயராகக் கொடுத்துப் பழிதீர்க்கிறார். விதுலாவின் கடவுச்சீட்டிற்காகப் பிறப்புச் சான்றிதழ் பெற முயலும்போதே ராமதாஸின் சூழ்ச்சி தெரியவருகிறது. அவரது சகோதரர்க்குத் தெரியாமல் இந்த விஷயம் ரகசியமாக்கப்பட்டுச் சான்றிதழைச் சரிசெய்யும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ராமதாஸ் செய்கையையொட்டி எழும் அதிர்ச்சி அவரது சகோதரப் பாசத்தோடு மட்டும் தொடர்புபடுத்தப்படுவதில்லை. மருத்துவரின் மனைவி மீதான ராமதாஸின் பார்வையோடும் தொடர்புபடுத்தப்பட்டுப் பதற்றம் எழுகிறது. ஆணதிகார உலகில் இரண்டு ஆண்களுக்கிடையிலான வசவுமொழிகள்கூடப் பெண் உடல்சார் ஒழுக்கத்தை மையமிட்டமைவதைப் போல ஆணின் பழிதீர்த்தலுக்குமான முட்டுச் சந்தும் பெண்ணுடல் ஒழுக்கமாக அமைகிறது.
மருத்துவர் வீட்டில் சமையல் வேலை செய்கிறாள் ராதாபாய். அவளது மகள் சாவித்திரி ஒரு பணக்கார சேட்ஜிக்கு வைப்பாட்டியாக இருந்து அவரது மரணத்திற்குப் பிறகு நிராதரவான நிலையில் பைத்தியமாக, வீதியில் சிறுவர்களால் துரத்தப்படுகிறாள். மகளைக் கண்ட ராதாபாய் துரத்திச்சென்றும் அவள் பிடிபடவில்லை என்று எஜமானர் வீட்டில் ராதாபாய் கூறியிருக்கிறாள். ஆனால் உண்மையிலேயே மகளைக் கண்ட ராதாபாய் ஒளிந்துகொள்கிறாள். ராதா பாயின் கையறு நிலை அவளை உண்மையை மறைத்து வேறொன்றாகத் திரிக்கச் செய்கிறது.
கட்டமைக்கப்பட்ட ஒழுங்கு குலைக்கப்பட நேர்ந்ததால் பெண் இருப்பு குறித்து அச்சம் மேலிட்டு அது ரகசியமாக்கப்படுகிறது. (ஜெயகாந்தனின் ‘அக்னிப் பிரவேசம்’ சிறுகதையில் நாயகி வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு வந்ததையறிந்த அவளின் தாய் தண்ணீரை ஊற்றிப் புனிதப்படுத்தி அந்நிகழ்வை மறைத்த புனைவை நினைவுகூர்க.)
உண்மையில் அது பெண் இருப்பு குறித்த அச்சமன்று; ஒழுக்கத்தின் இருப்பு குறித்த அச்சமே.
விதுலாவின் பாலியல்சார் இணையதள உரையாடல், ஹேமா, விதுலாவிடம் நாகப்பாவின் எல்லை மீறல்கள், ஹேமா - விவான் இடையேயான கடிதப்போக்குகள், ஆகியன முறைப்படுத்தப்படாத உடல் குறுகுறுப்புகளை அடிப்படையாகக் கொண்டமைகின்றன. வகுக்கப்பட்ட திருமணம்வழி உடல் இணைவு என்ற சட்டகத்துக்குப் பாதிப்பு நிகழாத ரகசியங்களால்/ மீறல்களால் ஒழுங்கு கட்டிக் காக்கப்படுகிற நிலையை இந்தப் புனைவு நுட்பமாக உணர்த்துகிறது.
ஆஸ்திரேலியாவிலிருந்து தங்கை திருமணத்திற்காகப் பிறந்த வீட்டிற்கு வரும் ஹேமா தொலைபேசிவழி ஒரு மாயக்கண் கொண்டு கணவரையும் குழந்தைகளையும் கண்காணித்துக்கொண்டேயிருக்கிறாள். தம் பிள்ளைகள், வரையறுக்கப்பட்ட சமூக நெறியில் தவறிவிடக் கூடாதென்ற பதற்றம் நிறைந்த இந்தியத் தாயின் கண்காணிப்பு மனநிலையின் பிரதிபலிப்பாக விளங்குகிறாள் அவள். ஆனால் தன் மகனைவிட இளையவனான விவான் கொண்டுவரும் கடிதங்களை வெளியே மறுப்பவளாகவும், உள்ளூர ரசிப்பவளாகவும் இருக்கிறாள். ஹேமாவின் முரண்நிலை ‘இட்’டிற்கும் சூப்பர் ஈகோவிற்கும் இடைப்பட்ட லாவகமான பயணங்கள்.
மணம் செய்கிற இருவரது மனங் களின் ஒத்திசைவிற்கு அப்பாற் பட்ட சடங்காகத் திட்ட மிடப்பட்ட திருமண வைபவங்கள் இருக்கின்றன. அஷ்வின் கதாபாத்திரம் குறித்துச் சொல்வதானால் அவன் வாழும் அமெரிக்கப் பண்பாட்டில் பல பெண்ணுடல் நுகர்வுச் சோதனைகளை நடத்தி முடிக்கிறான். அதன் நீட்சியாக ஓர் அக்மார்க் பத்தினிப் பெண் தேடும் இந்திய இளைஞனின் மனநிலையாக அவனின் திருமண முன்னெடுப்பு இருக்கிறது. அஷ்வினுடனான வாழ்விற்குத் தயாராகும் விதுலா, அவளது சுய விருப்பு, வெறுப்பைக் கடந்து மணவாழ்விற்குத் தயாராதல் ஒரு சராசரி மனைவி எனும் சித்திரத்திற்குள் தகவமைந்து கொள்வதை உணர்த்துகிறது. அஷ்வின்-விதுலா இருவரிடையே யான உரையாடலில் மொத்தமாக அஷ்வின் குரல் மட்டுமே ஒலிக்கிறது. பெண் மீதான உடல், மனம் சார்ந்த நோவுகள் மட்டும் வன்முறைல்ல. அவளுக்கே அவளை அந்நியமாக்குதல், அதாவது அவள் தன் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுத் தகவமைந்துகொள்ள நிர்ப்பந்தித்தலும் ஒருவகை வன்முறையே. அப்படிப் பார்த்தால் விதுலா, விதுலாவின் சகோதரி ஹேமா, விதுலாவின் அம்மா மட்டுமன்று காலந்தோறும் பெண்கள் குறிப்பாக இந்தியப் பெண்கள் இப்படியான வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டே வருகிறார்கள்.
பெண் உடல், சுதந்திரம் சார்ந்து மதிப்புகளை உருவாக்குவதாக அல்லாமல் அவற்றின் மீதான ஒடுக்குமுறை களுக்குத் திருமணம் ஓர் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகிறது.
இவ்வமைப்பிற்கு உட்படாத மீறல்கள் மட்டுமல்ல, உடன்பாடுகளும் இழிவானதாகப் பார்க்கப்படுகின்றன. எனவே உறவுகள், சமூகம், மரபு என்ற புறக்காரணிகள் மனித உடல்களைத் திருமணச் சட்டகத்துக்குள் இழுத்துப்போட முனைகின்றன. இந்த முறைப்படுத்தல் கடிவாளங்களுக்குள் அகப்படாத மீறல்கள், அத்துமீறல்கள் நடவாமல் இல்லை. இருப்பினும் மரபார்ந்த பிரச்சாரங்கள் தொடர்ந்து வலியுறுத்தப்படுகின்றன.
இந்த நூலில் உணர்த்தப்படும் திருமணம் சார்ந்த இருபத்தோராம் நூற்றாண்டின் உச்சபட்ச நகைச்சுவை திருமணத்திற்குப் பிறகு விதுலாவை அமெரிக்காவிற்கு அனுப்பும்போது ஹேமாவும் ரோஹித்தும் வழங்கும் அறிவுரையில் அடங்கியிருக்கிறது.
அஷ்வினுடனான விதுலாவின் வாழ்வில் இடர்ப்பாடுகளிருந்தால் சகித்துக்கொண்டு வாழ வேண்டாம், பிரிந்து வந்துவிடுமாறும், “இது இருபத்தோராவது நூற்றாண்டு. டைவர்ஸ் வாங்கிக்கிறதுல எந்தவிதமான அவமானமும் இல்லை” என்றும் அறிவுறுத்துகிறார்கள்.
திருமணம் மூலம் முறைப்படுத்தப் படாத சாவித்திரியின் உறவு சேட்ஜி மரணத்திற்குப் பிறகு பிடிமான மற்று புறக்கணிக்கப்படுவதையும் விதுலா திருமணத்திற்குப் பிறகு பிரிந்து வந்தாலும் பாதிப்பில்லை என்று அவளின் உடன்பிறப்புகள் உறுதியளிப்பதையும் நாம் அவ தானிக்கையில் திருமணம் ஒரு பாதுகாப்புக் கூடாரமாகப் பாவிக்கப் படுவதை விளங்கிக்கொள்ள முடியும்.
திருமணம் ஒரு சூதாட்டம் (மருத்துவர், ரோஹித் கூற்று) என்று அறிந்தபடியே மருத்துவரின் பிள்ளைகள் மூவர்க்கும் திருமண ஏற்பாடுகள் மரபின்படியே அச்சுப் பிசகாமல் நடக்கின்றன. ரோஹித் இஸபெல்லை விரும்புவதற்கான சுதந்திரமுடையவன். விதுலா, அஷ்வின் உறவில் சிக்கல் எழுமானால் மணமுறிவு பெறுவதற்குச் சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. ஆனால் திருமணம் குறித்துச் சுயமுடிவு செய்ய யாருக்கும் சுதந்திரம் இருப்பதில்லை.
எளிதாகச் சொல்வதானால் காலங்கள் மாறிவிட்டன என்ற தோரணையோடு மாறாதிருக்கும் திருமணக் கட்டுப்பாடுகளும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் பொருந்திப் போதல்களுமே திருமண ஆல்பங்களில் பல்லிளிக்கிற நிகழ்வைப் பொட்டில் அறைந்தாற் போல் பிரதியில் சொல்லிவிட்டுப் புத்தகத்தின் அட்டைப் படத்தில் அழகாகப் புன்னகைக்கிறார் கிரிஷ் கர்னாட். மூலமொழியில் படிப்பதைப்போல மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறார் பாவண்ணன்.
மின்னஞ்சல்: naseemaanufa@gmail.com