அப்பாஸ் கியரோஸ்தமி கவிதைகள்
புகைப்படம்: அப்பாஸ் கியரோஸ்தமி
1.
வசந்தகாலக் காற்றில்
பள்ளிக் குறிப்பேட்டின் பக்கங்கள் படபடக்கின்றன-
ஒரு சிறுவன் உறங்குகிறான்
அவனது சிறிய கைகளில்.
2.
கொதிக்கும் கெட்டிலின் விசில்சத்தம்: முதியவர் ஒருவர்
தனியாகக் காலை உணவு அருந்துகிறார் .
3.
தொலைதூர மலைகளின்
இதயத்தில் இருக்கின்றன
நன்னீர் ஊற்றுகள்.
நீர் பருக யாரும் இல்லை,
ஒரு பறவை கூட.
4.
அது முளைத்தது
மலர்ந்து விரிந்தது
வாடித் தரையில் விழுந்தது
காண ஒரு ஜீவனுமில்லை.
அப்பாஸ் கியாரோஸ்தமி (1940-2016)
ஈரானிலுள்ள தெஹ்ரான் நகரில் பிறந்தவர். கல்லூரியில் ஓவியமும் வரைகலையும் பயின்றவர். குழந்தைகளின் புத்தகங்களுக்கான வடிவமைப்பாளராகப் பணியைத் தொடங்கினார். பிறகு விளம்பரத்துறையிலும் அங்கிருந்து திரைப்படத் துறைக்கும் நுழைந்து உலக அளவில் அறியப்பட்ட இயக்குநராக ஆனார். குறும்படங்கள், ஆவணப்படங்கள் உள்ளிட்ட நாற்பது படங்கள் இவரது பங்களிப்போடு உருவாகியிருக்கின்றன. திரைக்கதைகள், நாடகங்கள் எழுதுவதிலும் புகைப்படங்கள் எடுப்பதிலும் ஈடுபாடு கொண்ட இவர் கவிதைகளிலும் நாட்டம் கொண்டிருந்தார். இவர் எழுதிய இருநூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளைக் ‘காற்றுடன் நடைபயிலுதல்’ என்ற தலைப்பில் ஹார்வர்டு யுனிவர்சிட்டி பிரஸ் ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளது. இவருடைய கவிதைகளில் தவிர்க்கவியலாதபடி இடம்பெற்றிருக்கும் பருவகாலம் பற்றிய குறிப்புகளானவை இவருடைய கவிதைகளுக்கு ஒருவித ஹைக்கூ தன்மையை வழங்குகின்றன என விமர்சகர்கள் கருதுகின்றனர்.
5.
இலையுதிர்காலப் பிற்பகல்:
மெல்ல விழும் ஒரு அத்திமர இலை
ஓய்வெடுக்கிறது
அதன் சொந்த நிழலில்.
6.
பெயரறியாத சிறிய பூ
தனியே பூத்திருக்கிறது
பெரியதொரு மலைப்பிளவின் மத்தியில்.
7.
வயதான ஒரு கிராமவாசி மலைப்பாதையில்-
தொலைவிலிருந்து ஓர் இளைஞனின் அழைப்பு.
8.
இலையுதிர்கால சூரியவெளிச்சம் -
எச்சரிக்கை ஒலி எழுப்புகிறது பல்லி
பச்சை செங்கல் சுவர்மீதிருந்து
9.
வெகு தொலைவிலிருந்து வந்ததொரு மஞ்சள் மலர்
குளத்தில் குடிபுகுகிறது
நீரில் அலையெதுவும் எழுப்பாமல்.
10.
ஆலயத்தின் உள்ளிருக்கையில்
ஆயிரம் எண்ணங்கள் எனக்குள்
வெளியே வந்ததும்
பனி நிறைந்திருந்தது.
11.
தகைவிலான் குருவிகள்
எப்போதாகிலும் திரும்பி வருமோ
இந்த வருடமும்?
12.
எனது நிழல்
என்னைத் தொடர்கிறது
நிலவொளிரும் இம் முன்னிரவில்.
13.
குழந்தையின் அழுகுரல்...
பறவையொன்றின் பாடல் அதற்குத் துணை நிற்கிறது
அம்மா திரும்பும்வரை.
14.
சோர்வடைந்த அரிவாள்
இருண்ட களஞ்சியச் சாலையின்
சுவரில் தொங்குகிறது
நெடிய ஓய்வு வேண்டி.
15.
தெருநாய்
தனது வாலை ஆட்டுகிறது பார்வையற்ற வழிப்போக்கர்களுக்கு.
16.
கல்லறை தோண்டுபவர்
வேலையை நிறுத்துகிறார்
ஒரு வாய் ரொட்டி, பாலாடைக்கட்டிக்காக.
17.
பள்ளிக் குழந்தைகள்
காதுகளை வைத்துக் கேட்கிறார்கள்
கைவிடப்பட்ட தண்டவாளத்தில்.
18.
நெல் விவசாயிகளின் பாடல்கள்:
சில மகிழ்ச்சியானவை, சில சோகமானவை
அவற்றின் இனிமையோ
முற்றிலும் ஒத்தவை.
19.
யாரையோ சந்திக்கவிருப்பதைப் போலவே
எப்போதும் இருக்கிறேன்
அவரும் வருவதில்லை
பெயரும் நினைவில் இல்லை.
20
என்னால் அழுகையை அடக்க முடியவில்லை
இனி அழுவதற்கு
அவசியம் ஏதுமில்லை என்றானதும்
21.
பாட்டிக்கும் குழந்தைக்குமான
போட்டி விளையாட்டுகளில்
பாட்டி தோற்றுக்கொண்டே இருக்கிறாள்.
மின்னஞ்சல்: mohankrangan@gmail.com