பணமில்லாமல் பணியில்லை
பல்கலைக்கழகங்கள், அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் நடைபெறும் ஊழலின் அளவு கடந்த இருபது ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துப் ‘பணமில்லாமல் பணியில்லை’ என்னும் நிலையை இப்போது அடைந்திருக்கிறது. 2000க்குப் பிறகு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பணி நியமனங்கள் இதற்கு முக்கியமான சான்று. தேவையில்லாமல் புதிது புதிதாகப் பணியிடம் உருவாக்கப்பட்டு லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு நூற்றுக்கணக்கான ஆசிரியர்களைப் பணியமர்த்தினர். அதில் பல்கலைக்கழக நிர்வாகத்தினர், அப்போதைய ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்கள் ஆகிய எல்லாத் தரப்புக்கும் பங்கிருந்தது.
பணப் பரிமாற்றம் செய்வதற்குப் பலர் வெளிப்படையான முகவர்களாகச் செயல்பட்டனர். பணம் இல்லாதவர்களுக்கு வங்கிக் கடனுக்கு ஏற்பாடுசெய்து தந்ததும் நடந்தது. அவ்வாறு ஆசிரியப் பணியில் சேர்ந்தவர்கள் தாம் கொடுத்த பணத்தைத் திரும்ப எடுக்கும் நோக்கில் பல படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்த்துப் பணம் ஈட்டும் முகவர்களாக இயல்பாகவே மாறினர். கையூட்டுப் பணம் பல தரப்புக்கும் பயன் கொடுத்தது. தொடர்ந்து பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்த இந்த ஊழல் காரணமாக பல்கலைக்கழகம் திவாலானது. வேறு வழியில்லாமல் அரசே அப்பல்கலைக்கழகத்தை எடுத்துக்கொண்டது. தமது பங்கோடு பணி நியமனங்கள் நடந்ததால் பணியமர்த்திய ஆசிரியர்களை வெளியேற்ற முடியாமல் அவர்களை அரசு கல்லூரிகளுக்கு அனுப்பிவைத்தது அரசு.
பிற பல்கலைக்கழகங்களிலும் கடந்த இருபது ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு பணியிடம்கூடப் பணமில்லாமல் நிரப்பப்பட வில்லை என்பதே நிதர்சனம். தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட எங்குமே எந்தத் துறையிலும் பணமில்லாமல் பணியில்லை என்பதுதான் நிலை. கல்வித்துறை சார்ந்த சகல தரப்பினருக்கும் பணப் பங்கீடு நடந்துகொண்டேயிருந்தது; இருக்கிறது. சென்னை பச்சையப்பன் அறக்கட்டளைக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களில் அவ்வாறு பணியமர்த்திய இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பணி நியமனம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது. ஆசிரியர்கள் மேல்முறையீடு செய்து வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. அக்கல்வி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் நியமித்த அறக்கட்டளைக் குழுவினர் இப்போது காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு கொடுத்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்களைப் பணமில்லாமல் நிரப்ப ஒத்துக்கொள்ளாத உயர்கல்வித் துறை நிர்வாகம் பல தடைகளை விதித்துள்ளதாகத் தெரிகிறது. அறக்கட்டளையினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
கல்வித் துறையில் இவ்வாறு புரையோடிப் போயுள்ள ஊழலால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் பொருட்டு மாணவியருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அரசு கொண்டுவந்தது. இப்போதைய நிதிநிலை அறிக்கையில் பெண்கள் மட்டுமல்லாமல், அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரைக்கும் பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர் எண்ணிக்கையை இவ்வறிவிப்பு கூட்டப் போவதோடு உயர்கல்விக்குச் செல்பவர்களும் அதிகரிப்பர் என்பது உறுதி. மாணவர்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் அரசு, உயர்கல்வியின் தரத்தில் கவனம் கொள்வது அவசியம்.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினர் உயர்கல்விக்குத் திரளாக வந்துசேர்வதால் ‘தரமில்லை’ என்னும் குரல் எழுகிறது என்றொரு வாதம் வைக்கப்படுகிறது. உண்மையில் இவ்வாதம் உயர்கல்வியில் நடக்கும் ஊழலை மறைப்பதற்கும் நியாயப்படுத்துவதற்குமே பயன்படுகிறது. கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் பெருந்திரளாக உயர்கல்விக்கு வரும் காலத்தில் அதைத் தரமில்லாததாக மாற்றும் முயற்சிகளை முறியடிப்பதிலும் அக்கறை தேவை. நல்ல தரமான கல்விக்கு அடிப்படைத் தேவைகள் உள்கட்டமைப்பு வசதிகளும் ஆசிரியர்களுமே. உள்கட்டமைப்பு வசதிகள் எவ்வளவு மேன்மையாக இருப்பினும் ஊழல் மூலம் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள்தான் கற்பிப்பார்களென்றால் கல்வியின் தரம் எப்படி உயர்வானதாக அமையும்?
பணம் கொடுத்துப் பணிக்கு வரும் ஆசிரியர்கள் கற்பித்தலில் ஆர்வம் செலுத்துபவர்களாக இருக்க மாட்டார்கள். அதிகாரத்தில் உள்ளவர்களோடு தொடர்பு வைத்துக்கொண்டு தாம் கொடுத்த பணத்தை எந்தெந்த வழிகளில் திரும்பப் பெறலாம் என்று சிந்திப்பவர்களாகவே இருப்பர். விடைத்தாள் மதிப்பீட்டுக்குப் பணம் பெறுவது, ஆய்வு மாணவர்களிடம் பணம் பெறுவது, பல விஷயங்களில் முகவர்களாக மாறுவது, கந்துவட்டிக்காரர்களாவது என அவ்வாசிரியர்கள் மாறுகிறார்கள். மாணவர்களுக்கு அறம் சார்ந்த வழிகளை அவர்களால் பரிந்துரைக்கவும் இயலாது. குறுக்கு வழிகளைக் காட்டுபவர்களாகவும் ‘எல்லாம் பணம்தான்’ என்று சொல்லிக் கல்வியைத் துச்சமாக நினைக்கும் எண்ணத்தை விதைப்பவர்களாகவும் ஆகிறார்கள்.
அடித்தட்டிலிருந்து கல்வி கற்று மேலே வரும் மாணவர்கள் பலரும் கையூட்டுக் கொடுத்துப் பணிபெறும் வசதியுடையவர்களாக இருப்பதில்லை. இருக்கும் சொத்துக்களை விற்றும் கடன் வாங்கியும் எப்படியாவது பணி பெற்றுவிட வேண்டும் என்று முயல்கிறார்கள். இயலாதவர்கள் சோர்ந்து வாழ்வில் சலிப்படைகிறார்கள். தனியார் நிறுவனங்களில் குறைந்த ஊதியத்திற்குத் தம் வாழ்நாளைப் பணயம் வைக்கிறார்கள். உயர்கல்வி ஊழல் அடுத்தடுத்த தலைமுறையை அடித்தட்டு மாணவர்களை இப்படிப் பலவிதங்களில் பாதிக்கிறது.
அரசுக் கல்லூரிகளில் பணி நியமனம் செய்ய நேர்முகத் தேர்வு முறையே 2007ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது போட்டித் தேர்வுமூலம் தேர்வுசெய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு அப்படியே நிற்கிறது. தொடக்கப்பள்ளி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர், முதுநிலை ஆசிரியர் எனப் பள்ளிக் கல்வி சார்ந்த அனைத்து நிலை ஆசிரியர் பணியிடங்களும் ஆசிரியர் தேர்வு வாரியப் போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்படுகின்றன. அவற்றில் ஊழலுக்குப் பெரிதும் வாய்ப்பில்லை. ஆனால் உயர்கல்வித் துறையில் போட்டித் தேர்வுமூலம் பணியிடங்களை நிரப்புவதைத் தடுப்பது ஊழல்தான். அறிவிப்பு வெளியாகியும் தேர்வு நடத்துவதில் அரசு பெரிதாகக் கவனம் செலுத்துவதில்லை.
உயர்கல்வித் துறையில் அரசுக் கல்லூரிகள் மட்டுமல்லாமல், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகிய அனைத்து நிறுவனங்களின் பணியிடங்களை நிரப்புவதற்கும் போட்டித் தேர்வுகள் தேவை. பல்கலைக்கழக நிர்வாகம் தன்னாட்சி அமைப்புக் கொண்டதாய் இருப்பதால் அங்குள்ள பணியிடங்களை ஊழல் இல்லாமல் நிரப்புவதற்குரிய வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். முந்தைய காலத்தில் ஆராய்ச்சிப் பணிகள் நடைபெறும் இடமாகப் பல்கலைக்கழகங்கள் இருந்தன. இப்போது ஒரு கல்லூரியைப் போலத்தான் அவையும் செயல்படுகின்றன. மேலும் பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றிலும் ஊழல் என்னும் நிலையில் தரம் தாழ்ந்து சீரழிந்து கிடக்கின்றன. சேலம், பெரியார் பல்கலைக்கழகம் பற்றி வரும் செய்திகள் ஆளுநரின் தலையீட்டை மட்டும் காட்டவில்லை; ஊழல் மலிந்து கிடப்பதையும் காட்டுகிறது. ஆராய்ச்சிப் படிப்புகளுக்குரிய இடமாகப் பல்கலைக்கழகங்களை மாற்ற வேண்டுமென்றால் ஊழலற்ற, முறையான வகையில் ஆசிரியர் தேர்வு நடக்க வேண்டும்.
‘அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்னும் பாரதியின் கூற்றுப்படி அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களை ஒருகாலத்தில் நிறுவிய புரவலர் தலைமுறை மாறி இன்று அவற்றைப் பணமீட்டும் தொழில்கூடமாகக் காணும் தலைமுறை நிர்வாகத்திற்கு வந்துவிட்டது. அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என்றாலும் கல்லூரிகள் என்றாலும் இதுதான் நிலை. இந்நிறுவனங்களின் பணியிடங்களைப் பணமில்லாமல் நிரப்ப வேண்டுமென்றால் போட்டித் தேர்வு முறைக்குள் இவற்றைக் கொண்டுவர வேண்டும்.
நேர்மையாளர் கொண்ட குழு அமைத்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தற்போது நிலவும் நடைமுறைகளைத் தீர ஆய்வுசெய்து ஊழலை ஒழிக்க என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் எனப் பரிந்துரை பெற்று அதை நடைமுறைப்படுத்த வேண்டும். உயர்கல்வி பயில மாணவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் சமூக நீதி சார்ந்தவை என்று சொல்வது சரிதான்; அச்சமூக நீதி முழுமையாகப் பலன் கொடுக்க வேண்டுமானால் ஆசிரியர் பணி நியமனத்தில் ஊழலுக்குப் பழக்கப்பட்டுப் போயிருக்கும் உயர்கல்விச் சூழலை மீட்டெடுப்பதும் மிகவும் அவசியம்.