மகத்தான வாழ்வின் வீரியமிக்க பதிவு
புகழப்பட்டவர்
(நபிகள் நாயக வரலாறு)
அத்தாவுல்லா
இஸ்லாமிய இலக்கியக் கழகம்,
2 வடக்கு உஸ்மான் சாலை
(முதல் மாடி),
தி. நகர், சென்னை-17,
பக்.1008
ரூ.1000
இஸ்லாத்தின் அடிநாதம் ஏகத்துவம்; ஒரே இறைவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. ஆனால் முஸ்லிம் சமூகத்தின் உயிர்நாடியாய்த் திகழ்பவர் நபிகள் நாயகம்தான். அவருடைய நிழலின் விழுதுகளிலிருந்து அச்சமூகம் தன் உயிரின் வேரைக் கண்டடைந்திருக்கிறது. நாளதுவரை அவருடைய புகழ்பாடும் நூல்களோ கவிதை களோ வந்தபடியிருக்கின்றன. அவர் குறித்த சமூகத்தின் உணர்வுநிலைகளைச் சரியாகச் சொல்ல முயன்ற நூல் களிலொன்று அத்தாவுல்லா எழுதியிருக்கும் ‘புகழப்பட்டவர்.’
இவர் ஏற்கெனவே நபிகள்நாயகம் குறித்து ‘வாளின் சிறகுகள்’ கவிதை நூலை எழுதியுள்ளார். எவ்வளவு சொன்னாலும் இன்னும் சொல்லப்படாமல் இருக்கும் பல வாழ்வியல் அம்சங்களைக் நபிகளாரின் வாழ்வில் இருப்பதாகக் கருதி, ஆசிரியர் இந்நூலையும் தன் இலக்கியப் பங்காக ஆக்கியுள்ளார். இதற்கும் முன்னரும் நபிநாயகத்தின் வாழ்க்கை தமிழில் எழுதப்பட்டுள்ளது; கவிதை வடிவிலும் வந்துள்ளது. ஆனாலும் நபிநாயகத்தின் வாழ்வின் வகையை வைத்துப் பார்த்தால், இந்நூல்தான் தமிழின் ஆகப்பெரிய நூலாக இருக்கிறது. நபிகளின் வாழ்க்கையில் அமைந்துள்ள பல்வேறு செய்திகளும் வரிசைக் கிரமமாகச் சொல்லப்பட்டுள்ளன.
நபியின் வாழ்வைப் பேசும்போது அரபுலகின் நிலவியலும் பண்பாட்டு அம்சங்களும் அவ்வவற்றின் காலப் பொருத்தத்தோடு பார்க்கப்பட வேண்டியது அவசியம். அந்தப் பார்வைக் கோணத்தை முன்னெடுக்காமல் நபிகளாரின் வாழ்வையும் அவருடைய செயல்முறைகளையும் நாம் புரிந்துகொள்ள முடியாது. இதை உணர முடியாமலோ, வேண்டுமென்றே புறக்கணித்தோ நபிகளாரின் வாழ்வை அணுகுகிறவர்கள் ஏராளம். அதனுடைய வெளிப்பாடாக அந்தக் கருத்துக்கள் இன்றைய அரசியல், பண்பாட்டுச் சூழலுக்கேற்றபடிச் சித்திரிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் விளைவுகள் முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு பக்கம் விரும்பத்தக்கதாகவும் மறுபக்கம் விரும்பத்தகாததாகவும் மாறுகின்றன. நபிகளாரின் வாழ்க்கைமுறை பெரும்பாலும் அவருடைய சொந்த மண்ணான அரேபியப் பண்பாட்டின் அடிச்சுவட்டில்தான் நிகழ்ந்துள்ளன. அந்த இழையைப் பிடித்துவிட்டால் ஒரு பொதுப்புரிதலுக்கு வந்துவிட முடியும். துரதிர்ஷ்டவசமாக இருதரப்புகளிலும் அப்படியான சமூக நோக்குகள் இல்லை.
நபிநாயகத்தின் ஏற்ற, இறக்கங்கள் எவற்றினால் உண்டாயின என்ற தாத்பரியமான விளக்கத்தைச் சொல்ல இந்நூல் பெருமளவில் மெனக்கெடுகிறது. ஆங்காங்கே அதற்கான தெளிவுகளைக் கொடுப்பதற்கு ஆசிரியர் முயன்றிருக்கிறார். சமூகத்தின் தலைமைப் பாத்திரத்தைத் தாங்கிச் செல்லும் வாய்ப்பு நபியாகிய தனக்கு அமைந்திருக்கும்பொழுதும் தன்னுடைய மேலாதிக்கத்தை நிறுவ முயலாமல் அவர் விட்டுக்கொடுத்துச் செல்லும் பாங்குகள் கூர்மையாகக் கவனிக்க வைக்கின்றன. அடிப்படையில் அவர் இறைத் தூதராயிருந்தாலும் சாதாரண மானுட வாழ்வே அவருக்கு அமைந்தது. நாற்பது வயதில் அவர் இறைத்தூதராக அறியப்படுகிறார்; இந்நிலையில், அதற்கு முற்பட்ட காலத்தில் எவ்விதமான வாழ்க்கையை வாழ்ந்தாரோ அதே வாழ்க்கைதான் இறைத்தூதரான பின்னரும் அவருக்கு அமைந்தது. கடும் துயரங்கள், இழப்புகள், சோதனைகள், அவ்வப்போது அனுபவிக்கும் இனிமைகள் என எவையும் அவரை விட்டுவிடவில்லை. மனிதர்கள் சோதிக்கப்படுவதற்காகவே இப்பூமிக்கு அனுப்பப்படுவதாகப் பல்வேறு மதங்களும் கூறுகின்றன; இஸ்லாமும் அதைக் கூறுகிறது. இதனால் நபிநாயகமும் வாழ்வின் அலைபாய்தல்களிலிருந்து ஒதுக்கப்படவில்லை. உஹத் போர்க்களத்தில் அவருடைய எதிரி வீசிய ஒரு கல் நபிகளின் முகத்தில் பட, அதனால் தன்னுடைய இரண்டு பற்களை அவர் இழந்துவிடுகிறார். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் நபிநாயகத்தின் வாழ்க்கை இன்றைக்கும் அர்த்தச் செறிவுடன் இருக்கிறது. அவருடைய வாழ்வியலில் தாங்களும் இருப்பதாக வாசகர்கள் உணர்கிறார்கள்.
அவருடைய ஆன்மிக வெளிப்பாடு அக்காலத்தில் புரட்சி கரமான பங்கை ஆற்றியிருக்கிறது. தம் ஆன்மிகத் தேடல்கள் நபிகள் நாயகத்தின் வழிகாட்டலால் ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளதாகக் கருதியவர்கள் அரேபியாவுக்கு வெளியிலும் உருவாகியுள்ளனர். அதனால் அவருடைய காலத்திலேயே இந்தியாவின் மேலைத் திசையில் நபிநாயகத்தின் புகழ் பரவியிருக்கிறது; கூடவே இஸ்லாமும் பரவியுள்ளது. இந்நூலுக்கு முன்னோடியான முஹம்மத் ஹுஸைன் ஹைகல் எழுதியுள்ள ‘முஹம்மத் நபி (ஸல்)’ நூல் குளச்சல் யூசுஃப்பின் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது.
பொதுவாகவே தங்களுக்கு ஆதர்சம் தரும் ஆளுமைகளை எழுதும்போது ஏற்படும் விதந்தோதுதல்களை நாமே முன்மொழிவதைவிட வாசகர் தானாக உணர்ந்துகொள்ளும் அளவுக்கு எழுத்து முறையை அமைத்துக்கொள்வது சிறப்பு. இந்நிலை இருந்தபோதும் நபிகளின் வாழ்வை வண்ணமயமாகப் பார்க்கும்படி இடையிடையே நல்ல சொல்லாட்சிகளோடு, வீரியமான காட்சிப்படுத்தல்களோடு எழுதியுள்ளார் அத்தாவுல்லா. அது நூலைக் கவனிக்கவைக்கும் சிறப்புத் தகுதியைத் தருகிறது.