வாழ்க்கைக்குத் திரும்புதல்
ஓவியம்: ஏ. ராமச்சந்திரன்
வாழ்க்கைக்குத் திரும்புதல்
இடர் முற்றிய கனவுகளின் காடு
கைவீசி எரியும் தீ
இலைகளின் குளிர்த் துடிப்பு
மலர்கொள் காற்று
அசைந்து மலைப்பாம்பாக நகரும் நிலா
மலைகளின் விளிம்பில் பனிச் சித்திரம்
உறங்க நேரமற்ற கண்கள்
நரம்புகள் விரிந்து சிவக்க
ஒவ்வொரு பாடலாய் உதிர்ந்த பின்
அலைகளை மடித்து விட்டு
எதிர்ப்படும் கடல்
ஆமைகள் முட்டையிட்ட நினைவுகளுக்குள்
குஞ்சுகள் மணல் மூடியிருக்கின்றன
விடியும்போது வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்
படகை முறித்த பின்
காட்டை எரித்த பின்.
*
குற்றவுணர்ச்சிக்குக் கொழுகொம்பில்லை
பற்றிப் படர
அந்தரத்தில் எழுந்து புணர்ந்து
வீழும் நாகங்கள்
திரும்ப முடியாத தொலைவுகள்
பள்ளமாய் விழுந்துவிட்ட இதயம்
அசைவற்ற கண்ணில் பனிக்க இல்லாத நீர்
இம்முறை எனது நியாயங்கள் எனக்கே புளித்தன
எனது கசப்பை நானே அருந்தினேன்
குற்றங்கள் மறைந்தன
பாறையாய்த் திரண்டேன்
ஒரு வேர்ப் புல்லுக்கும் வழியில்லாது.
*
இல்லாமல் போனவர்கள்
பொழுதின் திக்கொன்றில்
ஒரு கடலின் மீன்போலத் துள்ளி விழுகிறார்கள்
அக்கணத்தின் எதிர்ப்படலுக்கு
ஒரு நினைவு
ஒரு தருணம்
ஒரு பொதிவு.
*
தர விரும்பிய
இனி தரப்பட முடியாத முத்தம்
ஒரு வெண்கல்லென நினைவில் வசிக்கும்
அலை புரளும் ஒரு நாளில்
ஒளிரும் அக்கல்லை எடுத்துவைப்பேன்
உள்ளங்கையில் உன் முகமென.
மின்னஞ்சல்: kirishanth300@gmail.com