முறைசாரா உறவை முறைப்படுத்த முனைவது ஏன்?
பாஜக அரசு உத்தராகண்ட் சட்டசபையில் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் பொதுக் குடிமைச் சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றி யிருக்கிறது. வயது வந்தோர் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் உறவு (Live-in relationship) தொடர்பான மசோதா இது. சேர்ந்துவாழும் உறவில் இணைவோர் தங்கள் மாவட்டப் பதிவாளரிடம் பதிவுசெய்து சான்றிதழ் பெற வேண்டும்; பதிவுசெய்யப்பட்ட தகவல்கள் உள்ளூர் காவல் துறையிடம் அளிக்கப்பட்டு அவர்கள் அதை அந்த இணையர்களின் பெற்றோரிடம் அளித்து உறுதிசெய்ய வேண்டும். அவர்கள் 21 வயதிற்கு மேற்பட்டோராக இருக்க வேண்டும். உறவிலிருந்து விலகுவதாக இருந்தால் அந்தச் சான்றிதழை மாவட்டப் பதிவரிடம் அளித்து விலகிக்கொள்ளலாம் என்பனபோன்ற விதிகள் இந்த மசோதாவின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பாலினம், மதம், சாதி ஆகிய வற்றுக்குப் பொருந்தும் வகையில் இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது. கூடவே ‘சேர்ந்து வாழும் உற’வைப் பதிவு செய்யாதவர்கள்மீது மூன்று மாத சிறைத் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த விதிமுறைகள் ‘சேர்ந்து வாழும் உற’வின் அடிப்படையையே நீர்த்துப்போகச் செய்கின்றன. திருமண உறவு தரும் பல்வேறு இறுக்கங்களுக்கு எதிராக இரு தரப்பினரின் சுதந்திரத்தையும் சுய மரியாதையையும் உறுதிசெய்யும் வகையில் உருவானதுதான் ‘சேர்ந்து வாழும் உறவு’. திருமணம் என்னும் சமூகப் பரிசோதனையில் காலப்போக்கில் ஏற்பட்டுவரும் மாற்றங்களில் ஒன்று இது. இதைத் திருமண உறவைப் போலவே முறைசார்ந்ததாக ஆக்குவது இதன் அடிப்படையையே அசைப்பதாக உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை சாதி, மத, பாலின ஏற்றத்தாழ்வுகள், சமூக அழுத்தம் ஆகியவை தனிமனிதர்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் சூழல் நிலவுகிறது. அதிலிருந்து விடுபடுவதற்கான தற்காலிக ஏற்பாடாகவும் ‘சேர்ந்து வாழும் உறவுமுறை’ பயன்படுகிறது. நகரங்களிலேயே இன்றைக்கு இந்த உறவுமுறை அதிகம் பின்பற்றப்படுகிறது என்றாலும் சிறு நகரங்களுக்கும் இது பரவிவருகிறது. இந்தியச் சமூகத்தில் இறுக்கமான, உறுதியான அமைப்புகளில் ஒன்றாக இருந்துவரும் மண உறவு என்னும் வலுவான கோட்டையில் விரிசல்களை ஏற்படுத்தும் இந்தச் ‘சேர்ந்து வாழும் உறவு’ சமூக அளவிலும் தனிநபர்கள் வாழ்விலும் பல விதமான நெகிழ்வுகளுக்கும் மாற்றங்களுக்கும் வழிகோலக்கூடியது. இத்தகைய உறவின்மீது பெரும் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய இந்தச் சட்ட மசோதாவை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. அரசுக்கும் தனிமனிதர்களுக்குமான உறவு குறித்துப் பல்வேறு தீர்ப்புகள் வெளி வந்திருந்தாலும் அரசு தனிமனித உறவுகள் சார்ந்த உரிமைகளின் மீது கை வைத்திருப்பது இன்றைய அரசின் அணுகுமுறையை வெளிக்காட்டுவதாகவே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
‘சேர்ந்து வாழும் உறவு’க்கு எதிரான அரசின் இந்த நடைமுறைகளைப் பெண்களின் பாதுகாப்புக்கானவை என நம்பிவிட முடியாது. ஒரு பெண்ணை ஒரு ஆண் வன்முறைக்கு உட்படுத்தினாலோ துஷ்பிரயோகம் செய்தாலோ அதற்கு உண்டான குற்ற வழக்குச் சட்டதிட்டங்கள் இந்தியச் சட்ட அமைப்பில் உண்டு. ‘சேர்ந்து வாழும் உற’வில் குழந்தைகள், பிரிவுக்குப் பிறகான நஷ்ட ஈடு போன்றவை குறித்து விரிவான விவாதங்கள் அவசியப்படும் வேளையில் இந்தச் சட்ட மசோதா மரபார்ந்த திருமண உறவின் சட்டதிட்டங்களுக்கு உட்படுத்தி இவ்வுறவுமுறையை நோக்கி நகருவதைச் சிக்கலாகக் கருத வேண்டியுள்ளது.
பெண்களின் பாதுகாப்பு, தனிமனித உரிமைகள் ஆகிய இரண்டுமே முக்கியமானவை என்கிற நோக்கத்திலிருந்து இந்த உறவுமுறை குறித்த விழிப்புணர்வை அரசு உருவாக்கியிருந்தால் இதை வரவேற்கலாம். ஆனால் மசோதாவின் அம்சங்களைப் பார்க்கும்போது மரபார்ந்த திருமண உறவை மறுவரையறை செய்யும் போக்கிற்கு எதிரான முயற்சியாக இது தெரிகிறது. தற்போது நடப்பிலுள்ள திருமண உறவுக்கு இணையான உறவுமுறையாக சேர்ந்து வாழும் உறவை வடிவமைக்கவும் ‘இந்திய’ கலாச்சாரப் பின்புலத்தின் அடிப்படையில் இந்த உறவுமுறையை வார்த்தெடுப்பதற்குமான முயற்சியாக இது நிகழ்ந்திருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது. சேர்ந்து வாழும் உறவு இரு தரப்பினருக்கும் தரும் சுதந்திரத்தின் சாத்தியங்களை மொண்ணையாக்கிவிடக்கூடிய மசோதா இது. எனவே, திருமண உறவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கு எதிரான முன்னெடுப்பாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு என்பது ஆண்களின் கைகளிலும் சமூகத்தின் கைகளிலுமே இருக்கிறது என்கிற நிலவுடமை சார்ந்த பார்வையையே உத்தராகண்ட் சட்டமன்றத்தில் நிறைவேறியிருக்கும் மசோதாவின் விதிகள் பிரதிபலிக்கின்றன. பெண்களைச் சுயமானவர்களாகவும் அவர்களது இருப்பையும் அவர்களது கல்வி, பொருளாதார வளர்ச்சியையும் ஏற்றுக்கொள்ளாத பிற்போக்கு மனநிலையையே இவ்விதிகள் காட்டுகின்றன. பெண்கள் சுயமான இருப்புக் கொண்டவர்கள், அவர்கள் சமூகத்தின் உடைமையல்ல என்கிற பார்வை கூர்மையடைய வேண்டியது அவசியமானதாகும். பெண்களின் பாதுகாப்பு என்னும் பெயரில் மரபார்ந்த உறவுக்குள் அவர்களைப் பொருத்திவைப்பதே அரசின் நோக்கமாகத் தெரிகிறது.
மாறிவரும் சமூகச் சூழல், இளம் தலைமுறையினரின் புதிய உறவுமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் நவீனமாகச் செயல்பட வேண்டிய அரசுகள் பழமைவாதக் கண்ணோட்டங்களை ஊக்குவித்து அதற்கான சட்டதிட்டங்களை உருவாக்கிக்கொண்டிருப்பது அரசு தனிமனித உரிமைகளின் மேல் அக்கறையற்றும் சர்வாதிகாரப் போக்குடனும் இருப்பதையே காண்பிக்கிறது. பெண்களின் பாதுகாப்பை முன்னிட்டு எடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்த சட்ட முறைகளும் விதிகளும் பாவனையானவை. திருமணம் என்னும் அமைப்பின் ‘புனித’த்தைக் கட்டிக்காக்கும் நோக்கம் கொண்டவை.
காதலர் தினக் கொண்டாட்டத்தை ஆர்எஸ்எஸ், பாஜக, பிஜே தலைமையிலான தவ்ஹீத் ஜமாத்தினர் போன்ற வகுப்புவாத, அடிப்படைவாதக் குழுக்கள் எதிர்த்ததையும் சேர்த்தே இந்தப் பிரச்சினை குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது. காதலர் தினத்தை இந்திய விலங்குகள் நலத்துறை ‘மாடு அணைப்பு’ நாளாகக் கொண்டாட அழைப்பு விடுத்தமை போன்ற அறிவுக்குப் பொருந்தாத விஷயங்களும் நிகழ்ந்தன.
சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆணவப் படுகொலை களைப் பரிசாக அளிக்கிற தேசமாக இந்தியா இருக்கிறது. அதிகாரமற்ற தனி மனிதர்களுக்குப் பாதுகாப்பில்லாத தேசமாகவும் இருந்துகொண்டிருக்கிறது. பசு வதையைத் தடுக்கும் பெயரால் படுகொலைகள் நிகழ்ந்துகொண்டிருந்த காலத்தில் வெளிநாட்டுப் பயணிகள் இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்ய வேண்டாம் எனச் சில நாடுகள் அறிவுறுத்தியதையும் நினைத்துப்பார்க்க வேண்டும். விளிம்புநிலையினர், பெண்கள், தலித்துகள், முஸ்லிம்கள் ஆகியோர் மீதான வன்முறைகளும் அவர்களை இரண்டாம்தரக் குடிமக்கள் ஆக்கும் போக்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உற்சாகம் அளிக்கும் அரசாக ஆளும் பாஜக இருக்கிறது. மத எல்லையைத் தாண்டித் திருமணம் செய்வதை லவ் ஜிகாத் என சங்கப் பரிவார அமைப்புகள் கூறுவதையும் இங்கே நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
சேர்ந்து வாழும் உறவின் தன்மைகளில் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய இந்தச் சட்ட மசோதா பால்புதுமை யினருக்கும் (LGBTQA+ சமூகத்தினர்) ஆபத்தை உருவாக்கும் போக்கு. இந்த மக்களைச் சமூகம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. திருமண உறவின்றிச் சேர்ந்து வாழ விழையும் இத்தகையோர் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அரசுக்கோ அல்லது பொதுச் சமூகத்தினருக்கோ அறியத்தர வேண்டியது கட்டாய மாக்கப்படுவது கவலையளிக்கக்கூடியது. இன்று LGBTQA+ சமூகத்தினர் திருமண உரிமைக்கான சட்டப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
மனிதர்களுக்குள் ஏற்படும் உறவுமுறைகள், பிணைப்புகள் ஆகியவற்றை இந்தச் சட்டம் கட்டுப்படுத்துகிறது. ஒரு மனிதர் தான் விரும்புபவருடன் சேர்ந்து வாழ்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால் இந்த மசோதா அந்தத் தீர்ப்பையே மறுப்பதுபோல் உள்ளது.
இந்தத் தான்தோன்றித்தனமான விதிகளும் சட்டங்களும் அரசின் பழமைவாதக் கண்ணோட்டத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. இவை மனிதர்களின் தனியுரிமைகள், அடிப்படை உரிமைகள்மீதும் சுதந்திரத்தின் மீதும் அத்துமீறலை நிகழ்த்துகின்றன. மாறிவரும் காலத்தையும் செழுமையடைந்துவரும் மனித உரிமைகளையும் மதிக்காமல் பழமைவாதச் சித்தாந்தங்களைப் புகுத்தும் முயற்சியாகவே இதைக் கருத முடிகிறது.
மின்னஞ்சல்: chenthuxe@gmail.com