கிளாம்பாக்கம்: பிரச்சினைகளும் தீர்வுகளும்
கடந்த இரண்டு மாதங்களாகச் செய்திகளிலும் சமூக ஊடகங்களிலும் தொடர்ந்து இடம்பெற்றுவருகிறது கிளாம்பாக்கம். சென்னை நகரிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து முனையத்திலிருந்து இயங்கி வந்தன. இந்த முனையம் கடந்த டிசம்பர் 30 அன்று வண்டலூருக்கு அருகிலுள்ள கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய முனையத்தைத் திறந்துவைத்தார். 88.52 ஏக்கர் பரப்பளவில், 200 நடைமேடைகள், மேலதிகமாக 300 பேருந்து தரிப்பிடங்கள், கார்களும் இரு சக்கர வாகனங்களும் நிறுத்திக்கொள்ள இரண்டு தாழ்தளத் தரிப்பிடங்கள், பணியாளர் ஓய்வறைகள், கடைகள் இன்ன பிறவற்றுடன் பயன்பாட்டுக்கு வந்திருக்கும் ‘கலைஞர் நூற்றாண்டுப் பேருந்து முனையம்’ ஆசியாவின் ஆகப் பெரிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக இருக்கும். ஆனால் வந்த நாள் முதல் இந்த முனையம் ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. பயணியரும் ஊடகரும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். அவற்றில் இரண்டு அதிகம் விவாதிக்கப்பட்டன.
முதலாவது, முனையத்திலிருந்து விடப்படும் தொலைதூரப் பேருந்துகள் போதுமானவையன்று. இரண்டாவது, முனையம் ந