சமகால மானுட அடையாளம்
மனித உரிமைத் தளங்களில் இந்தியா முழுவதிலும் நன்கு அறிமுகமான மதுரை சோக்கோ பாட்சா என்ற மகபூப் பாட்சா 14.02.2024 அன்று மாலை ஐந்து மணிக்குக் காலமானார்.
பாட்சா சார், சோக்கோ பாட்சா எனப் பலர் இவரை அழைத்தாலும் இவருக்குப் பிடித்த சொல், தோழர் என்பதே. தோழர் என நண்பர்கள் அழைத்தால் நெகிழ்ந்துவிடுபவர். இடதுசாரித் தோழர்கள், திராவிடக் கழக நண்பர்கள், மனித உரிமைத் தளங்களின் செயல்பாட்டாளர்கள் என எல்லோருக்கும் நெருக்கமானவர். ஏராளமானோருக்கும் இயன்றவரை தனது உதவிகளைச் செய்தார். மனித உரிமைத்தளச் செயல்பாட்டாளர்களுக்கும் சூழலியலாளர்களுக்கும் நெருக்கமாக இருந்தார். எனவே அவர்களது கூட்டங்கள் நடத்த முதல் தேர்வு வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கமாக இருந்தது. எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் கூறியதைப் போல மதுரையின் சமகால மானுட அடையாளங்களில் ஒன்றாக இருந்தார்.
முதலில் திமுகவில் இருந்த அவர் பிறகு தீவிர இடதுசாரி சிந்தனையாளராக மாறினார். நிஜங்கள் என்ற பத்திரிகையை நடத்திவந்த சோக்கோ பாட்சா மக்கள் போராட்டங்களில் இருமுறை சிறை சென்றார். அதில் ரிக் ஷா தொழிலாளிகளின் உரிமைகளுக்கான போராட்டமும் உண்டு.
மதுரைச் சிறையின் அன்றைய நிலை குறித்து இவர் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதங்கள் இவரை உச்ச நீதிமன்ற நீதிபதி பி. என் பகவதிக்கு நண்பராக்கியது. இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் கொடைக்கானலில் குடியமர்த்தப்பட்டபோது கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட வழக்கில் அவரது நெடுநாள் நண்பர்களான இந்தியன் எக்ஸ்பிரஸ் கோபாலன், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். உச்ச நீதிமன்ற ஆணையராக அவ்வழக்கில் நியமிக்கப்பட்டார். 1980களில் தொடங்கி இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு கொடைக்கானல் குண்டுபட்டியில் நிலம் வழங்க அன்றைய சார்ஆட்சியர் குர்னிகால் சிங் பிர்சாதாவுடனான இவரது பணிகள் குறித்து நீண்ட அத்தியாயமே எழுதலாம்.
அவரது நண்பர்கள் ராஜகோபால், ராஜ்குமார், மசினகுடி பிரான்சிஸ், சுப்பு, ஸ்ரீதர் ஆகியோருடன் தொடங்கிய சோக்கோ அறக்கட்டளை, கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி, அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கான பயிற்சி, பெண்களுக்கான பயிற்சி என மனித உரிமைச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் துணை நின்றது. பின்னாளில் பேராசிரியர் நாஸ்னீனும் அவருக்குத் துணை நின்றார்.
களப்பணிகளுக்கும் குறைவில்லை. பழங்குடியினப் பளியர் சமூக மக்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் செண்பகத் தோப்புப் பகுதிகளில் சிறுவனப் பொருள் சேகரிக்கும் குத்தகைதாரர்களிடம் கொத்தடிமை களாகப் பணிபுரிந்தனர். அவர்களை விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் முன்நின்றார்.
வட இந்தியாவில் முறுக்கு, இனிப்பு பலகாரங்கள் செய்யும் தொழில்களில் ஈடுபட்ட தமிழ்நாட்டுக் குழந்தைத் தொழிலாளர்களை சோக்கோவில் பயிற்சிபெற்ற வழக்கறிஞர்கள் அழகுமணி, பாபுலால், சமூகவியல் பயின்ற பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் உதவியுடன் மீட்டு மறுவாழ்வுப் பணி மேற்கொள்ளத் துணை நின்றார். அழகுமணி வழக்கறிஞராகவும், பாபுலால் மாவட்ட நீதிபதியாகவும் சேவியர் மனித உரிமைச் செயல் பாட்டாளராகவும் மாறினர். அவ்வாறு விடுவிக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமான கொத்தடிமைத் தொழிலாளர்கள் பலர் நல்ல நிலமைக்கு வந்து சோக்கோ அறக்கட்டளையின் நிரந்தர உறுப்பினர் களாயினர்.
இவருடைய நண்பர்களில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி. என். பகவதி, டி. ஏ. தேசாய், பி. பி. சாவந்த், சிவராஜ் பாட்டில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் சந்துரு, ஹரிபரந்தாமன் ஆகியோர் உள்ளடங்கிய நீண்ட பட்டியல் உண்டு. தற்போதைய இந்திய தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கட்ரமணியும் அவர் மனைவி வழக்கறிஞர் விஜயலட்சுமியும் அவரது 36 வருட நண்பர்கள். இது தவிர ஈரோடு மருத்துவர் ஜீவாவும் அவருடைய அனைத்து நண்பர்களும் இவரது நண்பர்களே. ஒய். டேவிட் சூளகிரி உஸ்மான், மதுரை உமாபதி, திண்டுக்கல் பால் பாஸ்கர், பீல் வின்சென்ட், பொறியாளர் மனோகரன், காவல்துறை பாலசுப்பிரமணியன் வழக்கறிஞர்களில் பொ. ரத்தினம், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி, எஸ்ஐஆர்டிஎஸ். ஜீவா, திருச்சி மார்ட்டின், கவிஞர் அகவன், சையது, பெரம்பலூர் பாபு, பிரான்சிஸ் ஆகியோருடன் 1983 மதுரை சட்டக்கல்லூரி ஐந்தாம் ஆண்டு மாணவர்களான இமாம், அஜ்மல், சோமு, கென்னடி, இமாம், பிரபு ஆகியோருடன் எங்கள் நெருங்கிய நண்பர்கள் வட்டாரமும் உண்டு. இது தவிர வழக்கறிஞர்கள் காந்தி, ஜின்னா, ஆறுமுகம் என நண்பர்களும் உண்டு. மும்பை அஸ்கர் அலி எஞ்சினீயர் அவரது நண்பர். மேற்சொன்ன நண்பர்கள் பட்டியல் முழுமையானதல்ல.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பொன். கிருஷ்ணசாமியுடன் இணைந்து நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் வாழ்க்கை வரலாற்றை எழுத பல மாதங்கள் அவருடைய சத்கமயா வீட்டின் பின்புறமுள்ள சிறு ஹோட்டல் அறையில் தங்கித் தினமும் கிருஷ்ணய்யருடன் நடைப்பயிற்சிக்குச் சென்று நீண்ட உரை யாடலை நிகழ்த்தியுள்ளார். சோக்கோ பாட்சா நீதிபதி கிருஷ்ணய்யரின் அனைத்துத் தீர்ப்புகளையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட வரலாறு தொடர்பாக, இவரது நீண்டகால நண்பர் ஜோனதன் ஞானதாசனின் தாயார் திட்டுவிளை ஜாய் ஞானதாசன் எழுதிய ‘A Forgotten History’ ஆங்கில நூலை ‘ஒரு மறக்கப்பட்ட வரலாறு’ என்ற பெயரில் பொன் கிருஷ்ணசாமி துணையுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அந்நூல் நல்ல வரவேற்பைப் பெற்றது.
வழக்கறிஞர். ஜின்னா, அழகுமணி, செல்வ கோமதி, கென்னடி என ஏராளமான நண்பர்களுக்கும் தன் மகன் ஃபாசிலுக்கும் எனக்கும் சாதி மறுப்புத் திருமணம் நடக்கக் காரணமாக இருந்த பாட்சா, திருமண நிகழ்வுகளில் பின் வரிசையில் அமைதியாக அமர்ந்திருப்பார். முன்வரிசைக்கு யாராவது அழைத்தாலும் புன்முறுவலுடன் மறுத்துவிடுவார். பெரும்பாலான கூட்டங்களிலும் அது போலத்தான்.
சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். தன் அலுவலகத்தின் பின்னால் இருக்கும் ரவீந்திரநாத் தாகூர் படத்தை அடையாளம் கண்டுகொள்ளாத சிலர் அது யார் என வினவும்போது முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு ‘சோக்கோ அடிகள்’ எனக் கூறுவதுண்டு. அதைக் கேட்ட எங்கள் கல்லூரித் தோழி சோக்கோ அடிகள் என்று ஒருவர் உண்டு என இன்றுவரை நம்பிக்கொண்டுள்ளார்.
ஈரோடு மருத்துவர் ஜீவா, ஈரோடு சிவானந்தம், பழங்குடி மக்கள் சங்க வி.பி. குணசேகரன், சிவகங்கை கம்யூனிஸ்ட் கட்சி குணசேகரன் எம்எல்ஏ ஆகியோருடன் வீரப்பன் பொது மன்னிப்பு தொடர்பாக அறிக்கை பெற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யரைப் பார்க்க எர்ணாகுளம் சென்ற நிகழ்வு இன்னும் பசுமையாக நினைவிருக்கிறது. அவருக்கும் நண்பர் இமாம், மருத்துவர் ஜீவா ஆகியோ ருக்கும் நடக்கும் உரையாடல்கள் சுவாரஸ்யம் நிறைந்தவை.
ஒய். டேவிட், சுப. உதயகுமார் உள்ளிட்ட அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டியக்க நண்பர்கள், நம்மாழ்வார் ஐயா, முன்னாள் துணை வேந்தர் மார்க்கண்டேயன், கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் கீதா, இடதுசாரித் தோழர்கள், திராவிட இயக்க நண்பர்கள் ஆகியோரது மக்கள் பணிகளிலும் துணை நின்ற இவருக்குத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்குகளில் நண்பர்களுண்டு. எங்களுக்கும் நண்பர்களுக்கும் அவர் செய்த உதவிகளுக்குக் கணக்கில்லை.
ஒரிசாவில் இறைப்பணியாளர் ஸ்டெயின்ஸ், தாரா சிங்கின் இந்துத் தீவிரவாத அமைப்பால் கொல்லப்பட்டதை எதிர்த்துக் கூட்டங்களை நடத்திய அவர் ஸ்டெயின்ஸ் நினைவுச் சொற்பொழிவுகளை மதுரையிலுள்ள கல்லூரியில் நடத்தியிருக்கிறார்.
கடந்த பல வருடங்களாகத் தன் உடல் நலம் சீர்குலைந்த போதிலும் சிவராஜ் பாட்டீல் அறக்கட்டளை மூலம் வழக்கறிஞர் செல்வ கோமதியைக் கொண்டு பெண்களுக்கான பயிற்சிகளை நடத்தினார்.
சொந்த வீட்டைத் தவிர எந்தச் சொத்துக்களையும் தமதாக்கிக்கொள்ளாத அவர் உடல்நலம் அனுப்பிய குன்றிய காலத்தில் 31.12.2023ஆம் நாள் எனக்குத் குறுஞ்செய்தியில்தான் நண்பர் பால்பாஸ்கரது அலுவலகக் கட்டடத்தில் தங்கியிருப்பதாகத் தெரிவித்தார். சட்டத்துறைச் செயலாளர் அலெக்ஸ், இமாம் ஆகிய இருவரும் பேருதவியாக இருந்தார்களெனவும் தோழர் அரிபரந்தாமன், டாக்டர் ரெக்ஸ், டாக்டர் அமலோற்பவநாதன், பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்ட தோழர்கள், வீட்டிலும் மருத்துவமனையிலும் தம்மைப் பார்த்துத் தைரியமூட்டுகிறார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மகன்கள் ஆத்திப், ஃபாசில் இருவரையும் சிறந்த வழக்கறிஞர்களாக உருவாக்கியவர், அதுகுறித்துப் பெருமிதம் அடைந்திருப்பார் .
மதுரை கம்யூனிஸ்ட் தோழர்களுடன் நட்போடு பழகியவர், பல மக்கள் திரள் போராட்டங்களில் கலந்துமிருக்கிறார்.
வீடு கொள்ளாத அளவிற்கு இவர் பெற்ற மனித உரிமை விருதுகளுண்டு. எனினும் இவரது இடதுசாரித் தோழர்கள் சக கம்யூனிஸ்டாகத் தோழர் என அழைக்கும் விருதையே எல்லா விருதுகளையும்விட மேம்பட்டதாகக் கருதினார்.
காலம், நம் எல்லோரையும் கடந்த காலமாக்கும் வல்லமை கொண்டதென அறிந்திருந்தால்கூட, மாணவர் பருவத்திலிருந்து இன்றுவரை எந்நேரம் அவரைப் பார்க்கச் சென்றாலும் அன்பான உரையாடலோடு இனிய தேநீருக்குப் பின் வாசல்வரை வந்து வழியனுப்பும் நல்ல மனிதரை இழந்த வருத்தம் இல்லாமலில்லை. மதுரைக்கும் பேரிழப்புதான்!